திருவருட்பா
நான்காம் திருமுறை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. அற்புதப்பொன் அம்பலத்தே ஆகின்ற அரசே
ஆரமுதே அடியேன்றன் அன்பேஎன் அறிவே
கற்புதவு பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே
கண்ணுதலே ஆனந்தக் களிப்பேமெய்க் கதியே
வெற்புதவு பசுங்கொடியை மருவுபெருந் தருவே
வேதஆ கமமுடியின் விளங்கும்ஒளி விளக்கே
பொற்புறவே இவ்வுலகில் பொருந்துசித்தன் ஆனேன்
பொருத்தமும் நின்திருவருளின் பொருத்தமது தானே.
2. நிறைஅணிந்த சிவகாமி நேயநிறை ஒளியே
நித்தபரி பூரணமாம் சுத்தசிவ வெளியே
கறைஅணிந்த களத்தரசே கண்ணுடைய கரும்பே
கற்கண்டே கனியேஎன் கண்ணேகண் மணியே
பிறைஅணிந்த முடிமலையே பெருங்கருணைக் கடலே
பெரியவரெல் லாம்வணங்கும் பெரியபரம் பொருளே
குறைஅணிந்து திரிகின்றேன் குறைகளெலாந் தவிர்த்தே
குற்றமெலாங் குணமாகக் கொள்வதுநின் குணமே.
3. ஆண்பனைபெண் பனையாக்கி அங்கமதங் கனையாய்
ஆக்கிஅருண் மணத்தில்ஒளி அனைவரையும் ஆக்கும்
மாண்பனைமிக குவந்தளித்த மாகருணை மலையே
வருத்தமெலாந் தவிர்த்தெனக்கு வாழ்வளித் வாழ்வே
நாண்பனையுந் தந்தையும்என் நற்குருவும் ஆகி
நாயடியேன் உள்ளகத்து நண்ணியநா யகனே
வீண்பனைபோன் மிகநீண்டு விழற்கிறைப்பேன் எனினும்
விருப்பமெலாம் நின்அருளின் விருப்பம்அன்றி இலையே.
4. சித்தமனே கம்புரிந்து திரிந்துழலுஞ் சிறியேன்
செய்வகைஒன் றறியாது திகைக்கின்றேன் அந்தோ
உத்தமனே உன்னையலால் ஒருதுணைமற் றறியேன்
உன்னாணை உன்னாணை உண்மைஇது கண்டாய்
இத்தமனே யச்சலனம் இனிப்பொறுக்க மாட்டேன்
இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணம் எந்தாய்
சுத்தமனே யத்தவர்க்கும் எனைப்போலு மவர்க்கும்
துயர்தவிப்பான் மணிமன்றில் துலங்குநடத் தரசே.
5. துப்பாடு திருமேனிச் சோதிமணிச் சுடரே
துரியவெளிக் குள்ளிருந்த சுத்தசிவ வெளியே
அப்பாடு சடைமுடிஎம் ஆனந்த மலையே
அருட்கடலே குருவேஎன் ஆண்டவனே அரசே
இப்பாடு படஎனக்கு முடியாது துரையே
இரங்கிஅருள் செயல்வேண்டும் இதுதருணங் கண்டாய்
தப்பாடு வேன்எனினும் என்னைவிடத் துணியேல்
தனிமன்றுள் நடம்புரியுந் தாண்மலர்எந் தாயே.
6. கண்ணோங்கு நுதற்கரும்பே கரும்பினிறை அமுதே
கற்கண்டே சர்க்கரையே கதலிநறுங் கனியே
விண்ணோங்கு வியன்சுடரே வியன்சுடர்க்குட் சுடரே
விடையவனே சடையவனே வேதமுடிப் பொருளே
பெண்ணோங்கும் ஒருபாகம் பிறங்குபெருந் தகையே
பெருமானை ஒருகரங்கொள் பெரியபெரு மானே
எண்ணோங்கு சிறியவனேன் என்னினும்நின் னடியேன்
என்னைவிடத் துணியேல்நின் இன்னருள்தந் தருளே.
7. திருநெறிசேர் மெய்அடியர் திறன்ஒன்றும் அறியேன்
செறிவறியேன் அறிவறியேன் செய்வகையை அறியேன்
கருநெறிசேர்ந் துழல்கின்ற கடையரினுங் கடையேன்
கற்கின்றேன் சாகாத கல்விநிலை காணேன்
பெருநெறிசேர் மெய்ஞ்ஞான சித்திநிலை பெறுவான்
பிதற்றுகின்றேன் அதற்குரிய பெற்றியிலேன் அந்தோ
வருநெறியில் என்னைவலிந் தாட்கொண்ட மணியே
மன்றுடைய பெருவாழ்வே வழங்குகநின் அருளே.
8. குன்றாத குணக்குன்றே கோவாத மணியே
குருவேஎன் குடிமுழுதாட் கொண்டசிவக் கொழுந்தே
என்றாதை யாகிஎனக் கன்னையுமாய் நின்றே
எழுமையும்என் றனை ஆண்ட என்உயிரின் துணையே
பொன்றாத பொருளேமெய்ப் புண்ணியத்தின் பயனே
பொய்யடியேன் பிழைகளெலாம் பொறுத்தபெருந் தகையே
அன்றால நிழல்அமர்ந்த அருள்இறையே எளியேன்
ஆசையெலாம் நின்னடிமேல் அன்றிஒன்றும் இலையே.
9. பூணாத பூண்களெலாம் பூண்டபரம் பொருளே
பொய்யடியேன் பிழைமுழுதும் பொறுத்தருளி என்றும்
காணாத காட்சியெலாங் காட்டிஎனக் குள்ளே
கருணைநடம் புரிகின்ற கருணையைஎன் புகல்வேன்
மாணாத குணக்கொடியேன் இதைநினைக்குந் தோறும்
மனமுருகி இருகண்ர் வடிக்கின்றேன் கண்டாய்
ஏணாதன் என்னினும்யான் அம்மையின்நின் அடியேன்
எனஅறிந்தேன் அறிந்தபின்னர் இதயமலர்ந் தேனே.
10. அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே
இந்தோங்கு சடைமணிநின் அடிமுடியுங் காட்டி
இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச்
சந்தோட சித்தர்கள்தந் தனிச்சூதுங் காட்டி
சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி
வந்தோடு184 நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி
மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மைஎவர்க் குளதே.
11. அன்பர்உளக் கோயிலிலே அமர்ந்தருளும் பதியே
அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
வன்பர்உளத் தேமறைந்து வழங்கும்ஒளி மணியே
மறைமுடிஆ கமமுடியின் வயங்குநிறை மதியே
என்பருவங் குறியாமல் என்னைவலிந் தாட்கொண்
டின்பநிலை தனைஅளித்த என்னறிவுக் கறிவே
முன்பருவம் பின்பருவங் கண்டருளிச் செய்யும்
முறைமைநின தருள்நெறிக்கு மொழிதல்அறிந் திலனே.
12. பால்காட்டும் ஒளிவண்ணப் படிகமணி மலையே
பத்திக்கு நிலைதனிலே தித்திக்கும் பழமே
சேல்காட்டும் விழிக்கடையால் திருவருளைக் காட்டும்
சிவகாம வல்லிமகிழ் திருநடநா யகனே
மால்காட்டி மறையாதென் மதிக்குமதி யாகி
வழிகாட்டி வழங்குகின்ற வகையதனைக் காட்டிக்
கால்காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே
காட்டியநின் கருணைக்குக் கைம்மாறொன் றிலனே.
13. என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே
என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும்
அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ
தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ
நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ
இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ
என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே.
14. பாடும்வகை அணுத்துணையும் பரிந்தறியாச் சிறிய
பருவத்தே அணிந்தணிந்தது பாடும்வகை புரிந்து
நாடும்வகை உடையோர்கள் நன்குமதித் திடவே
நல்லறிவு சிறிதளித்துப் புல்லறிவு போக்கி
நீடும்வகை சன்மார்க்க சுத்தசிவ நெறியில்
நிறுத்தினைஇச் சிறியேனை நின்அருள்என் என்பேன்
கூடும்வகை உடையரெலாங் குறிப்பெதிர்பார்க் கின்றார்
குற்றமெலாங் குணமாகக் கொண்டகுணக் குன்றே.
15. சற்றும்அறி வில்லாத எனையும்வலிந் தாண்டு
தமியேன்செய் குற்றமெலாஞ் சம்மதமாக் கொண்டு
கற்றுமறிந் துங்கேட்டுந் தெளிந்தபெரி யவருங்
கண்டுமகி ழப்புரிந்து பண்டைவினை அகற்றி
மற்றும்அறி வனவெல்லாம் அறிவித்தென் உளத்தே
மன்னுகின்ற மெய்இன்ப வாழ்க்கைமுதற் பொருளே
பெற்றுமறி வில்லாத பேதைஎன்மேல் உனக்குப்
பெருங்கருணை வந்தவகை எந்தவகை பேசே.
16. சுற்றதுமற் றவ்வழியா சூததுஎன் றெண்ணாத்
தொண்டரெலாங் கற்கின்றார் பண்டுமின்றுங் காணார்
எற்றதும்பு மணிமன்றில் இன்பநடம் புரியும்
என்னுடைய துரையேநான் நின்னுடைய அருளால்
கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே
கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே
பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே
பெரியதவம் புரிந்தேன்என் பெற்றிஅதி சயமே.
17. ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே
இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய
வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி
மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து
தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித்
தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார்
ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில்
உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே.
18. தருநிதியக் குருவியற்றச் சஞ்சலிக்கு மனத்தால்
தளர்ந்தசிறி யேன்தனது தளர்வெல்லாந் தவிர்த்து
இருநிதியத் திருமகளிர் இருவர்எனை வணங்கி
இசைந்திடுவந் தனம்அப்பா என்றுமகிழ்ந் திசைத்துப்
பெருநிதிவாய்த் திடஎனது முன்பாடி ஆடும்
பெற்றிஅறித் தனைஇந்தப் பேதமையேன் தனக்கே
ஒருநிதிநின் அருள்நிதியும் உவந்தளித்தல் வேண்டும்
உயர்பொதுவில் இனபநடம் உடையபரம் பொருளே.
19. அஞ்சாதே என்மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
ஆடுகநீ வேண்டியவா றாடுகஇவ் வுலகில்
செஞ்சொலி வயலோங்கு தில்லைமன்றில் ஆடுந்
திருநடங்கண் டன்புருவாய்ச் சித்தசுத்த னாகி
எஞ்சாத நெடுங்காலம் இன்பவெள்ளந் திளைத்தே
இனிதுமிக வாழியவென் றெனக்கருளிச் செய்தாய்
துஞ்சாதி யந்தமிலாச் சுத்தநடத் தரசே
துரியநடு வேஇருந்த சுயஞ்சோதி மணியே.
20. நான்கேட்கின் றவையெல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
நல்லவனே எல்லாமும் வல்லசிவ சித்தா
தான்கேட்கின் றவையின்றி முழுதொருங்கே உணர்ந்தாய்
தத்துவனே மதிஅணிந்த சடைமுடிஎம் இறைவா
தேன்கேட்கும் மொழிமங்கை ஒருபங்கில் உடையாய்
சிவனேஎம் பெருமானே தேவர்பெரு மானே
வான்கேட்கும் புகழ்த்தில்லை மன்றில்நடம் புரிவாய்
மணிமிடற்றுப் பெருங்கருணை வள்ளல்என்கண் மணியே.
21. ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
ஆனந்த நடம்புரியும் ஆனந்த அமுதே
வானந்த முதல்எல்லா அந்தமுங்கண் டறிந்தோர்
மதிக்கின்ற பொருளேவெண் மதிமுடிச்செங் கனியே
ஊனந்தங் கியமாயை உடலினிடத் திருந்தும்
ஊனமிலா திருக்கின்ற உளவருளிச் செய்தாய்
நானந்த உளவுகண்டு நடத்துகின்ற வகையும்
நல்லவனே நீமகிழ்ந்து சொல்லவரு வாயே.
22. ஆரணமும் ஆகமமும் எதுதுணிந்த ததுவே
அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டமென எனக்குக்
காரணமுங் காரியமும் புலப்படவே தெரித்தாய்
கண்ணுதலே இங்கிதற்குக் கைம்மாறொன் றறியேன்
பூரணநின் அடித்தொண்டு புரிகின்ற சிறியேன்
போற்றிசிவ போற்றிஎனப் போற்றிமகிழ் கின்றேன்
நாரணநான் முகன்முதலோர் காண்பரும்அந் நடத்தை
நாயடியேன் இதயத்தில் நவிற்றியருள் வாயே.
23. இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்
எனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக
உறைவதுகண் டதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்
உளவறியேன் அவ்வுளவொன் றுரைத்தருளல் வேண்டும்
மறைவதிலா மணிமன்றுள் நடம்புரியும் வாழ்வே
வாழ்முதலே பரமசுக வாரிஎன்கண் மணியே
குறைவதிலாக் குளிர்மதியே சிவகாமவல்லிக்
கொழுந்துபடர்ந் தோங்குகின்ற குணநிமலக் குன்றே.
24. சத்தியமெய் அறிவின்ப வடிவாகிப் பொதுவில்
தனிநடஞ்செய் தருளுகின்ற சற்குருவே எனக்குப்
புத்தியொடு சித்தியும்நல் லறிவும்அளித் தழியாப்
புனிதநிலை தனிலிருக்கப் புரிந்தபரம் பொருளே
பத்திஅறி யாச்சிறியேன் மயக்கம்இன்னுந் தவிர்த்துப்
பரமசுக மயமாக்கிப் படிற்றுளத்தைப் போக்கித்
தத்துவநீ நான்என்னும் போதமது நீக்கித்
தனித்தசுகா தீதமும்நீ தந்தருள்க மகிழ்ந்தே.
25. ஏதும்அறி யாதிருளில் இருந்தசிற யேனை
எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து
ஓதுமறை முதற்கலைகள் ஓதாமல் உணர
உணர்விலிருந் துணர்த்திஅருள் உண்மைநிலை காட்டித்
தீதுசெறி சமயநெறி செல்லுதலைத் தவிர்த்துத்
திருஅருண்மெய்ப் பொதுநெறியில் செலுத்தியும் நான்மருளும்
போதுமயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்
போக்கிஎனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே.
26. முன்னறியேன் பின்னறியேன் முடிபதொன்று மறியேன்
முன்னியுமுன் னாதும்இங்கே மொழிந்தமொழி முழுதும்
பன்னிலையில் செறிகின்றோர் பலரும்மனம் உவப்பப்
பழுதுபடா வண்ணம்அருள் பரிந்தளித்த பதியே
தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப்பேர் ஒளியே
தனிமன்றுள் நடம்புரியஞ் சத்தியதற் பரமே
இந்நிலையில் இன்னும்என்றன் மயக்கமெலாந் தவிர்த்தே
எனைஅடிமை கொளல்வேண்டும் இதுசமயங் காணே.
27. ஐயவிற் சிறிதும்அறிந் தனுபவிக்கக் தெரியா
தழுதுகளித் தாடுகின்ற அப்பருவத் தெளியேன்
மெய்யறிவிற் சிறந்தவருங் களிக்கஉனைப் பாடி
விரும்பிஅருள் நெறிநடகக விடுத்தனைநீ யன்றோ
பொய்யறிவிற் புலைமனத்துக் கொடியேன்முன் பிறப்பில்
புரிந்தவம் யாததனைப் புகன்றருள வேண்டும்
துய்யறிவுக் கறிவாகி மணிமன்றில் நடஞ்செய்
சுத்தபரி பூரணமாஞ் சுகரூபப் பொருளே.
28. அருள்நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
அற்புதப்பொன் அம்பலத்தே ஆடுகின்ற அரசே
தெருள்நிறைந்த சிந்தையிலே தித்திக்குந் தேனே
செங்கனியே மதிஅணிந்த செஞ்சடைஎம் பெருமான்
மருள்நிறைந்த மனக்கொடியேன் வஞ்சமெலாங் கண்டு
மகிழ்ந்தினிய வாழ்வளித்த மாகருணைக் கடலே
இருள்நிறைந்த மயக்கம்இன்னுந் தீர்த்தருளல் வேண்டும்
என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
29. மன்னியபொன் னம்பலத்தே ஆனந்த நடஞ்செய்
மாமணியே என்னிருகண் வயங்கும்ஒளி மணியே
தன்னியல்பின் நிறைந்தருளுஞ் சத்துவபூ ரணமே
தற்பரமே சிற்பரமே தத்துவப்பே ரொளியே
அன்னியமில் லாதசுத்த அத்துவித நிலையே
ஆதியந்த மேதுமின்றி அமர்ந்தபரம் பொருளே
என்னியல்பின் எனக்கருளி மயக்கம்இன்னுந் தவிர்த்தே
எனைஆண்டு கொளல்வேண்டும் இதுதருணங் காணே.
30. பூதநிலை முதற்பரமே நாதநிலை அளவும்
போந்தவற்றின் இயற்கைமுதற் புணர்ப்பெல்லாம் விளங்க
வேதநிலை ஆகமத்தின் நிலைகளெலாம் விளங்க
வினையேன்றன் உளத்திருந்து விளக்கியமெய் விளக்கே
போதநிலை யாய்அதுவுங் கடந்தஇன்ப நிலையாய்ப்
பொதுவினின்மெய் அறிவின்ப நடம்புரியும் பொருளே
ஏதநிலை யாவகைஎன் மயக்கம்இன்னுந் தவிர்த்தே
எனைக்காத்தல் வேண்டுகின்றேன் இதுதருணங் காணே.
31. செவ்வண்ணத் திருமேனி கொண்டொருபாற் பசந்து
திகழ்படிக வண்ணமொடு தித்திக்குங் கனியே
இவ்வண்ணம் எனமறைக்கும் எட்டாமெய்ப் பொருளே
என்னுயிரே என்னுயிர்க்குள் இருந்தருளும் பதியே
அவ்வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடஞ்செய்
ஆரமுதே அடியேனிங் ககமகிழ்ந்து புரிதல்
எவ்வண்ணம் அதுவண்ணம் இசைத்தருளல் வேண்டும்
என்னுடைய நாயகனே இதுதருணங் காணே.
திருச்சிற்றம்பலம்
1. அற்புதப் பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே
ஆர்_அமுதே அடியேன்-தன் அன்பே என் அறிவே
கற்பு உதவு பெரும் கருணை_கடலே என் கண்ணே
கண்_நுதலே ஆனந்தக் களிப்பே மெய்க் கதியே
வெற்பு உதவு பசும்_கொடியை மருவு பெரும் தருவே
வேத ஆகம முடியின் விளங்கும் ஒளி விளக்கே
பொற்புறவே இ உலகில் பொருந்து சித்தன் ஆனேன்
பொருத்தமும் நின் திரு_அருளின் பொருத்தம் அது தானே.
2. நிறை அணிந்த சிவகாமி நேய நிறை ஒளியே
நித்த பரிபூரணமாம் சுத்த சிவ வெளியே
கறை அணிந்த களத்து அரசே கண் உடைய கரும்பே
கற்கண்டே கனியே என் கண்ணே கண்மணியே
பிறை அணிந்த முடி மலையே பெரும் கருணை_கடலே
பெரியவர் எல்லாம் வணங்கும் பெரிய பரம்பொருளே
குறை அணிந்து திரிகின்றேன் குறைகள் எலாம் தவிர்த்தே
குற்றம் எலாம் குணமாகக் கொள்வது நின் குணமே.
3. ஆண்_பனை பெண்_பனை ஆக்கி அங்கம் அது அங்கனையாய்
ஆக்கி அருள் மணத்தில் ஒளி அனைவரையும் ஆக்கும்
மாண்பனை மிக்கு உவந்து அளித்த மா கருணை_மலையே
வருத்தம் எலாம் தவிர்த்து எனக்கு வாழ்வு அளித்த வாழ்வே
நாண்பனையும் தந்தையும் என் நல் குருவும் ஆகி
நாய்_அடியேன் உள்ளகத்து நண்ணிய நாயகனே
வீண் பனை போல் மிக நீண்டு விழற்கு இறைப்பேன் எனினும்
விருப்பம் எலாம் நின் அருளின் விருப்பம் அன்றி இலையே.
4. சித்தம் அனேகம் புரிந்து திரிந்து உழலும் சிறியேன்
செய் வகை ஒன்று அறியாது திகைக்கின்றேன் அந்தோ
உத்தமனே உன்னை அலால் ஒரு துணை மற்று அறியேன்
உன் ஆணை உன் ஆணை உண்மை இது கண்டாய்
இத் தமன் நேயச் சலனம் இனிப் பொறுக்க மாட்டேன்
இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் எந்தாய்
சுத்த மன் நேயத்தவர்க்கும் எனைப் போலும் அவர்க்கும்
துயர் தவிப்பான் மணி மன்றில் துலங்கு நடத்து அரசே.
5. துப்பு ஆடு திரு_மேனிச் சோதி மணிச் சுடரே
துரிய வெளிக்குள் இருந்த சுத்த சிவ வெளியே
அப்பு ஆடு சடை முடி எம் ஆனந்த_மலையே
அருள்_கடலே குருவே என் ஆண்டவனே அரசே
இப் பாடுபட எனக்கு முடியாது துரையே
இரங்கி அருள் செயல் வேண்டும் இது தருணம் கண்டாய்
தப்பாடுவேன் எனினும் என்னை விடத் துணியேல்
தனி மன்றுள் நடம் புரியுந் தாள்_மலர் எந்தாயே.
6. கண் ஓங்கு நுதல் கரும்பே கரும்பின் நிறை அமுதே
கற்கண்டே சர்க்கரையே கதலி நறும் கனியே
விண் ஓங்கு வியன் சுடரே வியன் சுடர்க்குள் சுடரே
விடையவனே சடையவனே வேத முடிப் பொருளே
பெண் ஓங்கும் ஒரு பாகம் பிறங்கு பெருந்தகையே
பெரு மானை ஒரு கரம் கொள் பெரிய பெருமானே
எண் ஓங்கு சிறியவனேன் என்னினும் நின் அடியேன்
என்னை விடத் துணியேல் நின் இன் அருள்தந்து அருளே.
7. திரு_நெறி சேர் மெய் அடியர் திறன் ஒன்றும் அறியேன்
செறிவு அறியேன் அறிவு அறியேன் செய் வகையை அறியேன்
கரு நெறி சேர்ந்து உழல்கின்ற கடையரினும் கடையேன்
கற்கின்றேன் சாகாத கல்வி நிலை காணேன்
பெரு நெறி சேர் மெய்ஞ்ஞான சித்தி நிலை பெறுவான்
பிதற்றுகின்றேன் அதற்கு உரிய பெற்றி_இலேன் அந்தோ
வரு நெறியில் என்னை வலிந்து ஆட்கொண்ட மணியே
மன்று உடைய பெரு வாழ்வே வழங்குக நின் அருளே.
8. குன்றாத குண_குன்றே கோவாத மணியே
குருவே என் குடி முழுது ஆட்கொண்ட சிவ_கொழுந்தே
என் தாதை ஆகி எனக்கு அன்னையுமாய் நின்றே
எழுமையும் என்றனை ஆண்ட என் உயிரின் துணையே
பொன்றாத பொருளே மெய்ப் புண்ணியத்தின் பயனே
பொய் அடியேன் பிழைகள் எலாம் பொறுத்த பெருந்தகையே
அன்று ஆல நிழல் அமர்ந்த அருள் இறையே எளியேன்
ஆசை எலாம் நின் அடி மேல் அன்றி ஒன்றும் இலையே.
9. பூணாத பூண்கள் எலாம் பூண்ட பரம்பொருளே
பொய் அடியேன் பிழை முழுதும் பொறுத்து அருளி என்றும்
காணாத காட்சி எலாம் காட்டி எனக்கு உள்ளே
கருணை நடம் புரிகின்ற கருணையை என் புகல்வேன்
மாணாத குணக் கொடியேன் இதை நினைக்கும்-தோறும்
மனம் உருகி இரு கண்ணீர் வடிக்கின்றேன் கண்டாய்
ஏண் ஆதன் என்னினும் யான் அம்மையின் நின் அடியேன்
என அறிந்தேன் அறிந்த பின்னர் இதயம் மலர்ந்தேனே.
10. அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன்
அறிவு அறியாச் சிறியேனை அறிவு அறியச்செய்தே
இந்து ஓங்கு சடை மணி நின் அடி முடியும் காட்டி
இது காட்டி அது காட்டி என் நிலையும் காட்டிச்
சந்தோட சித்தர்கள்-தம் தனிச் சூதும் காட்டி
சாகாத நிலை காட்டிச் சகச நிலை காட்டி
வந்து ஓடு நிகர் மனம் போய்க் கரைந்த இடம் காட்டி
மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளதே.
11. அன்பர் உளக் கோயிலிலே அமர்ந்து அருளும் பதியே
அம்பலத்தில் ஆடுகின்ற ஆனந்த நிதியே
வன்பர் உளத்தே மறைந்து வழங்கும் ஒளி மணியே
மறை முடி ஆகம முடியின் வயங்கு நிறை_மதியே
என் பருவம் குறியாமல் என்னை வலிந்து ஆட்கொண்டு
இன்ப நிலை-தனை அளித்த என் அறிவுக்கு அறிவே
முன் பருவம் பின் பருவம் கண்டு அருளிச் செய்யும்
முறைமை நினது அருள் நெறிக்கு மொழிதல் அறிந்திலனே.
12. பால் காட்டும் ஒளி வண்ணப் படிக மணி_மலையே
பத்திக்கு நிலை-தனிலே தித்திக்கும் பழமே
சேல் காட்டும் விழிக் கடையால் திரு_அருளைக் காட்டும்
சிவகாமவல்லி மகிழ் திரு_நட நாயகனே
மால் காட்டி மறையாது என் மதிக்கு மதி ஆகி
வழி காட்டி வழங்குகின்ற வகை-அதனைக் காட்டிக்
கால் காட்டிக் காலாலே காண்பதுவும் எனக்கே
காட்டிய நின் கருணைக்குக் கைம்மாறு ஒன்று இலனே.
13. என்னை ஒன்றும் அறியாத இளம் பருவம்-தனிலே
என் உளத்தே அமர்ந்து அருளி யான் மயங்கும்-தோறும்
அன்னை எனப் பரிந்து அருளி அப்போதைக்கப்போது
அப்பன் எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய்
நின்னை எனக்கு என் என்பேன் என் உயிர் என்பேனோ
நீடிய என் உயிர்_துணையாம் நேயம்-அது என்பேனோ
இன்னல் அறுத்து அருள்கின்ற என் குரு என்பேனோ
என் என்பேன் என்னுடைய இன்பம்-அது என்பேனே.
14. பாடும் வகை அணுத்துணையும் பரிந்து அறியாச் சிறிய
பருவத்தே அணிந்து அணிந்து பாடும் வகை புரிந்து
நாடும் வகை உடையோர்கள் நன்கு மதித்திடவே
நல் அறிவு சிறிது அளித்துப் புல்_அறிவு போக்கி
நீடும் வகை சன்மார்க்க சுத்த சிவ நெறியில்
நிறுத்தினை இச் சிறியேனை நின் அருள் என் என்பேன்
கூடும் வகை உடையர் எலாம் குறிப்பு எதிர்பார்க்கின்றார்
குற்றம் எலாம் குணமாகக் கொண்ட குண_குன்றே.
15. சற்றும் அறிவி இல்லாத எனையும் வலிந்து ஆண்டு
தமியேன் செய் குற்றம் எலாம் சம்மதமாக் கொண்டு
கற்றும் அறிந்தும் கேட்டும் தெளிந்த பெரியவரும்
கண்டு மகிழப் புரிந்து பண்டை வினை அகற்றி
மற்றும் அறிவன எல்லாம் அறிவித்து என் உளத்தே
மன்னுகின்ற மெய் இன்ப வாழ்க்கை முதல் பொருளே
பெற்றும் அறிவு இல்லாத பேதை என் மேல் உனக்குப்
பெரும் கருணை வந்த வகை எந்த வகை பேசே.
16. சுற்று அது மற்று அ வழி மா சூது அது என்று எண்ணாத்
தொண்டர் எலாம் கற்கின்றார் பண்டும் இன்றும் காணார்
எல் ததும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும்
என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால்
கற்றது நின்னிடத்தே பின் கேட்டது நின்னிடத்தே
கண்டது நின்னிடத்தே உட்கொண்டது நின்னிடத்தே
பெற்றது நின்னிடத்தே இன்புற்றது நின்னிடத்தே
பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே.
17. ஏறிய நான் ஒரு நிலையில் ஏற அறியாதே
இளைக்கின்ற காலத்து என் இளைப்பு எல்லாம் ஒழிய
வீறிய ஓர் பருவ சத்தி கைகொடுத்துத்
தூக்கி மேல் ஏற்றச்செய்து அவளை மேவுறவும் செய்து
தேறிய நீர் போல் எனது சித்தம் மிகத் தேறித்
தெளிந்திடவும் செய்தனை இச் செய்கை எவர் செய்வார்
ஊறிய மெய் அன்பு_உடையார் உள்ளம் எனும் பொதுவில்
உவந்து நடம் புரிகின்ற ஒரு பெரிய பொருளே.
18. தரு நிதியக் குரு இயற்றச் சஞ்சலிக்கும் மனத்தால்
தளர்ந்த சிறியேன் தனது தளர்வு எல்லாம் தவிர்த்து
இரு_நிதியத் திரு_மகளிர் இருவர் எனை வணங்கி
இசைந்திடு வந்தனம் அப்பா என்று மகிழ்ந்து இசைத்துப்
பெரு நிதி வாய்த்திட எனது முன் பாடி ஆடும்
பெற்றி அளித்தனை இந்தப் பேதமையேன்-தனக்கே
ஒரு நிதி நின் அருள் நிதியும் உவந்து அளித்தல் வேண்டும்
உயர் பொதுவில் இன்ப நடம் உடைய பரம்பொருளே.
19. அஞ்சாதே என் மகனே அனுக்கிரகம் புரிந்தாம்
ஆடுக நீ வேண்டியவாறு ஆடுக இ உலகில்
செஞ்சாலி வயல் ஓங்கு தில்லை மன்றில் ஆடும்
திரு_நடம் கண்டு அன்பு உருவாய்ச் சித்த சுத்தன் ஆகி
எஞ்சாத நெடும் காலம் இன்ப_வெள்ளம் திளைத்தே
இனிது மிக வாழிய என்று எனக்கு அருளிச் செய்தாய்
துஞ்சு ஆதி அந்தம் இலாச் சுத்த நடத்து அரசே
துரிய நடுவே இருந்த சுயம் சோதி மணியே.
20. நான் கேட்கின்றவை எல்லாம் அளிக்கின்றாய் எனக்கு
நல்லவனே எல்லாமும் வல்ல சிவ சித்தா
தான் கேட்கின்றவை இன்றி முழுது ஒருங்கே உணர்ந்தாய்
தத்துவனே மதி அணிந்த சடை முடி எம் இறைவா
தேன் கேட்கும் மொழி மங்கை ஒரு பங்கில் உடையாய்
சிவனே எம் பெருமானே தேவர் பெருமானே
வான் கேட்கும் புகழ்த் தில்லை மன்றில் நடம் புரிவாய்
மணி மிடற்றுப் பெரும் கருணை வள்ளல் என் கண்மணியே.
21. ஆனந்த வெளியினிடை ஆனந்த வடிவாய்
ஆனந்த நடம் புரியும் ஆனந்த அமுதே
வான் அந்தம் முதல் எல்லா அந்தமும் கண்டு அறிந்தோர்
மதிக்கின்ற பொருளே வெண் மதி முடிச் செங்கனியே
ஊனம் தங்கிய மாயை உடலினிடத்து இருந்தும்
ஊனம் இலாது இருக்கின்ற உளவு அருளிச் செய்தாய்
நான் அந்த உளவு கண்டு நடத்துகின்ற வகையும்
நல்லவனே நீ மகிழ்ந்து சொல்ல வருவாயே.
22. ஆரணமும் ஆகமமும் எது துணிந்தது அதுவே
அம்பலத்தில் ஆடுகின்ற ஆட்டம் என எனக்குக்
காரணமும் காரியமும் புலப்படவே தெரித்தாய்
கண்_நுதலே இங்கு இதற்குக் கைம்மாறு ஒன்று அறியேன்
பூரண நின் அடித் தொண்டு புரிகின்ற சிறியேன்
போற்றி சிவ போற்றி எனப் போற்றி மகிழ்கின்றேன்
நாரண நான்முகன் முதலோர் காண்ப அரும் அ நடத்தை
நாய்_அடியேன் இதயத்தில் நவிற்றி அருள்வாயே.
23. இறைவ நினது அருளாலே எனைக் கண்டுகொண்டேன்
எனக்குள் உனைக் கண்டேன் பின் இருவரும் ஒன்றாக
உறைவது கண்டு அதிசயித்தேன் அதிசயத்தை ஒழிக்கும்
உளவு அறியேன் அ உளவு ஒன்று உரைத்து அருளல் வேண்டும்
மறைவது_இலா மணி மன்றுள் நடம் புரியும் வாழ்வே
வாழ் முதலே பரம சுக_வாரி என் கண்மணியே
குறைவது_இலாக் குளிர் மதியே சிவகாமவல்லிக்
கொழுந்து படர்ந்து ஓங்குகின்ற குண நிமல_குன்றே.
24. சத்திய மெய் அறிவு இன்ப வடிவு ஆகிப் பொதுவில்
தனி நடம் செய்து அருளுகின்ற சற்குருவே எனக்குப்
புத்தியொடு சித்தியும் நல் அறிவும் அளித்து அழியாப்
புனித நிலை-தனில் இருக்கப் புரிந்த பரம் பொருளே
பத்தி அறியாச் சிறியேன் மயக்கம் இன்னும் தவிர்த்துப்
பரம சுக மயம் ஆக்கிப் படிற்று உளத்தைப் போக்கித்
தத்துவ நீ நான் என்னும் போதம்-அது நீக்கித்
தனித்த சுகாதீதமும் நீ தந்து அருள்க மகிழ்ந்தே.
25. ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை
எடுத்து விடுத்து அறிவு சிறிது ஏய்ந்திடவும் புரிந்து
ஓது மறை முதல் கலைகள் ஓதாமல் உணர
உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டித்
தீது செறி சமய நெறி செல்லுதலைத் தவிர்த்துத்
திரு_அருள் மெய்ப் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும்
போது மயங்கேல் மகனே என்று மயக்கு எல்லாம்
போக்கி எனக்குள் இருந்த புனித பரம் பொருளே.
26. முன் அறியேன் பின் அறியேன் முடிபு-அது ஒன்றும் அறியேன்
முன்னியும் முன்னாதும் இங்கே மொழிந்த மொழி முழுதும்
பல் நிலையில் செறிகின்றோர் பலரும் மனம் உவப்பப்
பழுதுபடா வண்ணம் அருள் பரிந்து அளித்த பதியே
தன்னிலையில் குறைவுபடாத் தத்துவப் பேர்_ஒளியே
தனி மன்றுள் நடம் புரியும் சத்திய தற்பரமே
இ நிலையில் இன்னும் என்றன் மயக்கம் எலாம் தவிர்த்தே
எனை அடிமைகொளல் வேண்டும் இது சமயம் காணே.
27. ஐயறிவில் சிறிதும் அறிந்து அனுபவிக்கக் தெரியாது
அழுது களித்து ஆடுகின்ற அ பருவத்து எளியேன்
மெய்_அறிவில் சிறந்தவரும் களிக்க உனைப் பாடி
விரும்பி அருள் நெறி நடக்க விடுத்தனை நீ அன்றோ
பொய்_அறிவில் புலை மனத்துக் கொடியேன் முன்_பிறப்பில்
புரிந்த தவம் யாதது அனைப் புகன்று அருள வேண்டும்
துய் அறிவுக்கு அறிவு ஆகி மணி மன்றில் நடம் செய்
சுத்த பரிபூரணமாம் சுக ரூபப் பொருளே.
28. அருள் நிறைந்த பெருந்தகையே ஆனந்த அமுதே
அற்புதப் பொன்_அம்பலத்தே ஆடுகின்ற அரசே
தெருள் நிறைந்த சிந்தையிலே தித்திக்கும் தேனே
செங்கனியே மதி அணிந்த செஞ்சடை எம் பெருமான்
மருள் நிறைந்த மனக் கொடியேன் வஞ்சம் எலாம் கண்டு
மகிழ்ந்து இனிய வாழ்வு அளித்த மா கருணைக் கடலே
இருள் நிறைந்த மயக்கம் இன்னும் தீர்த்து அருளல் வேண்டும்
என்னுடைய நாயகனே இது தருணம் காணே.
29. மன்னிய பொன்_அம்பலத்தே ஆனந்த நடம் செய்
மா மணியே என் இரு கண் வயங்கும் ஒளி மணியே
தன் இயல்பின் நிறைந்து அருளும் சத்துவ பூரணமே
தற்பரமே சிற்பரமே தத்துவப் பேர்_ஒளியே
அன்னியம் இல்லாத சுத்த அத்துவித நிலையே
ஆதி அந்தம் ஏதும் இன்றி அமர்ந்த பரம் பொருளே
என் இயல்பின் எனக்கு அருளி மயக்கம் இன்னும் தவிர்த்தே
எனை ஆண்டுகொளல் வேண்டும் இது தருணம் காணே.
30. பூத நிலை முதல் பரம நாத நிலை அளவும்
போந்தவற்றின் இயற்கை முதல் புணர்ப்பு எல்லாம் விளங்க
வேத நிலை ஆகமத்தின் நிலைகள் எலாம் விளங்க
வினையேன்-தன் உளத்து இருந்து விளக்கிய மெய் விளக்கே
போத நிலையாய் அதுவும் கடந்த இன்ப நிலையாய்ப்
பொதுவினில் மெய் அறிவு இன்ப நடம் புரியும் பொருளே
ஏதம் நிலையா வகை என் மயக்கம் இன்னும் தவிர்த்தே
எனைக் காத்தல் வேண்டுகின்றேன் இது தருணம் காணே.
31. செவ் வண்ணத் திரு_மேனி கொண்டு ஒரு பால் பசந்து
திகழ் படிக வண்ணமொடு தித்திக்கும் கனியே
இவ்வண்ணம் என மறைக்கும் எட்டா மெய்ப்பொருளே
என் உயிரே என் உயிர்க்குள் இருந்து அருளும் பதியே
அ வண்ணப் பெருந்தகையே அம்பலத்தே நடம் செய்
ஆர்_அமுதே அடியேன் இங்கு அகம் மகிழ்ந்து புரிதல்
எவ்வண்ணம் அது வண்ணம் இசைத்து அருளல் வேண்டும்
என்னுடைய நாயகனே இது தருணம் காணே.