திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. இனிப் பிரிந்து இறையும் இருக்கலேன் பிரிவை
எண்ணினும் ஐயவோ மயங்கிப்
பனிப்பில் என் உடம்பும் உயிரும் உள் உணர்வும்
பரதவிப்பதை அறிந்திலையோ
தனிப்படு ஞான வெளியிலே இன்பத்
தனி நடம் புரி தனித் தலைவா
கனிப் பயன் தருதற்கு இது தகு தருணம்
கலந்து அருள் கலந்து அருள் எனையே.
2. பிரிந்து இனிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப்
பேசினும் நெய் விடும் தீப் போல்
எரிந்து உளம் கலங்கி மயங்கல் கண்டிலையோ
எங்கணும் கண் உடை எந்தாய்
புரிந்த சிற்பொதுவில் திரு_நடம் புரியும்
புண்ணியா என் உயிர்த் துணைவா
கரந்திடாது உறுதற்கு இது தகு தருணம்
கலந்து அருள் கலந்து அருள் எனையே.
3. மேலை ஏகாந்த வெளியிலே நடம் செய்
மெய்யனே ஐயனே எனக்கு
மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம்_
வல்லனே நல்லனே அருள் செங்
கோலையே நடத்தும் இறைவனே ஓர் எண்_
குணத்தனே இனிச் சகிப்பு அறியேன்
காலையே தருதற்கு இது தகு தருணம்
கலந்து அருள் கலந்து அருள் எனையே.
4. பண்டு கொண்டு எனை-தான் பிழை குறியாத
பண்பனே திரு_சிற்றம்பலத்தே
தொண்டு கொண்டு அடியர் களிக்க நின்று ஆடும்
தூயனே நேயனே பிரமன்
விண்டு கண்டு அறியா முடி அடி எனக்கே
விளங்குறக் காட்டிய விமலா
கண்டுகொண்டு உறுதற்கு இது தகு தருணம்
கலந்து அருள் கலந்து அருள் எனையே.
5. தனித் துணை எனும் என் தந்தையே தாயே
தலைவனே சிற்சபை-தனிலே
இனித்த தெள் அமுதே என் உயிர்க்குயிரே
என் இரு கண்ணுள் மா மணியே
அனித்தமே நீக்கி ஆண்ட என் குருவே
அண்ணலே இனிப் பிரிவு ஆற்றேன்
கனித் துணை தருதற்கு இது தகு தருணம்
கலந்து அருள் கலந்து அருள் எனையே.
6. துன்பு எலாம் தவிர்க்கும் திரு_சிற்றம்பலத்தே
சோதியுள் சோதியே அழியா
இன்பு எலாம் அளிக்கும் இறைவனே என்னை
ஈன்ற நல் தந்தையே தாயே
அன்பு எலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே
அண்ணலே இனிப் பிரிவு ஆற்றேன்
பொன்_பதம் தருதற்கு இது தகு தருணம்
புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.
7. ஏதும் ஒன்று அறியாப் பேதையாம் பருவத்து
என்னை ஆட்கொண்டு எனை உவந்தே
ஓதும் இன் மொழியால் பாடவே பணித்த
ஒருவனே என் உயிர்த் துணைவா
வேதமும் பயனும் ஆகிய பொதுவில்
விளங்கிய விமலனே ஞான
போதகம் தருதற்கு இது தகு தருணம்
புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.
8. எண்ணிய எனது உள் எண்ணமே எண்ணத்து
இசைந்த பேர்_இன்பமே யான்-தான்
பண்ணிய தவமே தவத்து உறும் பலனே
பலத்தினால் கிடைத்த என் பதியே
தண்ணிய மதியே மதி முடி அரசே
தனித்த சிற்சபை நடத்து அமுதே
புண்ணியம் அளித்தற்கு இது தகு தருணம்
புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.
9. மலப் பகை தவிர்க்கும் தனிப் பொது மருந்தே
மந்திரமே ஒளிர் மணியே
நிலைப்பட எனை அன்று ஆண்டு அருள் அளித்த
நேயனே தாய்_அனையவனே
பலப்படு பொன்_அம்பலத்திலே நடம் செய்
பரமனே பரம சிற்சுகம்-தான்
புலப்படத் தருதற்கு இது தகு தருணம்
புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.
10. களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த
கற்பகத் தீம் சுவைக் கனியே
வெளிப் புறத்து ஓங்கும் விளக்கமே அகத்தே
விளங்கும் ஓர் விளக்கமே எனக்கே
ஒளிப்பு இலாது அன்றே அளித்த சிற்பொதுவில்
ஒருவனே இனிப் பிரிவு ஆற்றேன்
புளிப்பு அற இனித்தற்கு இது தகு தருணம்
புணர்ந்து அருள் புணர்ந்து அருள் எனையே.
.