Arutperunjothi Agaval

திருவருட்பா

ஆறாம் திருமுறை

---
0:00
0:00
🔊

நிலைமண்டில ஆசிரியப்பா

திருச்சிற்றம்பலம்

1. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

2. அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி

3. ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

4. இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய வருட்பெருஞ் ஜோதி

5. ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

6. உரைமனங் கடந்த வொருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ் ஜோதி

7. ஊக்கமு முணர்ச்சியு மொளிதரு மாக்கையும்
ஆக்கமு மருளிய வருட்பெருஞ் ஜோதி

8. எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

9. ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
ஆறாறு காட்டிய வருட்பெருஞ் ஜோதி

10. ஐயமுந் திரிபு மறுத்தென துடம்பினுள்
ஐயமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

11. ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை
யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி

12. ஓதா துணர்ந்திட வொளியளித் தெனக்கே
ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி

13. ஔவிய மாதியோ ராறுந் தவிர்த்தபேர்
அவ்வியல் வழுத்து மருட்பெருஞ் ஜோதி

14. திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ் ஜோதி

15. சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளியெனும்
அத்தகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

16. சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளியெனு
அத்து விதச்சபை யருட்பெருஞ் ஜோதி

17. தூயக லாந்த சுகந்தரு வெளியெனும்
ஆயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

18. ஞானயோ காந்த நடத்திரு வெளியெனும்
ஆனியில் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

19. விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளியெனும்
அமலசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

20. பெரியநா தாந்தப் பெருநிலை வெளியெனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி

21. சுத்தவே தாந்தத் துரியமேல் வெளியெனும்
அத்தகு சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

22. சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளியெனும்
அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

23. தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளியெனும்
அகர நிலைப்பதி யருட்பெருஞ் ஜோதி

24. தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு வம்பலத் தருட்பெருஞ் ஜோதி

25. சச்சிதா னந்தத் தனிப்பர வெளியெனும்
அச்சிய லம்பலத் தருட்பெருஞ் ஜோதி

26. சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும்
ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி

27. காரண காரியங் காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

28. ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
ஆகமச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

29. வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம்
ஆதார மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

30. என்றா தியசுடர்க் கியனிலை யாயது
வன்றாந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி

31. சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை யருட்பெருஞ் ஜோதி

32. முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
அச்சுட ராஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

33. துரியமுங் கடந்த சுகபூ ரணந்தரும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி

34. எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
அவ்வகைச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

35. இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

36. சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

37. சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

38. நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

39. உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

40. சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

41. மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
அனாதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

42. ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம்
ஆதிசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

43. வாரமு மழியா வரமுந் தருந்திரு
வாரமு தாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

44. இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
அழியாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

45. கற்பம் பலபல கழியினு மழிவுறா
அற்புதந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

46. எனைத்துந் துன்பிலா வியலளித் தெண்ணிய
வனைத்துந் தருஞ்சபை யருட்பெருஞ் ஜோதி

47. பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
ஆணிப்பொ னம்பலத் தருட்பெருஞ் ஜோதி

48. எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி
அம்பலத் தாடல்செய் யருட்பெருஞ் ஜோதி

49. தம்பர ஞான சிதம்பர மெனுமோர்
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி

50. எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
அச்சபை யிடங்கொளு மருட்பெருஞ் ஜோதி

51. வாடுத னீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி

52. நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே
ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி

53. கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்
அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி

54. ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய
வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி

55. இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி

56. எம்மையு மென்னைவிட் டிறையும் பிரியா
தம்மையப் பனுமா மருட்பெருஞ் ஜோதி

57. பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாயென்
னறிவுக் கறிவா மருட்பெருஞ் ஜோதி

58. சாதியு மதமுஞ் சமயமுங் காணா
ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி

59. தநுகர ணாதிக டாங்கடந் தறியுமோர்
அநுபவ மாகிய வருட்பெருஞ் ஜோதி

60. உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
அநுபவா தீத வருட்பெருஞ் ஜோதி

61. பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ் ஜோதி

62. உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி

63. என்னையும் பணிகொண் டிறவா வரமளித்
தன்னையி லுவந்த வருட்பெருஞ் ஜோதி

64. ஓதியோ தாம லுறவெனக் களித்த
ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி

65. படியடி வான்முடி பற்றினுந் தோற்றா
அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி

66. பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி

67. திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்
அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி

68. மதனுற்ற வண்ட வரைப்பினெங் கெங்கும்
அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி

69. எப்பாலு மாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
அப்பாலு மாகிய வருட்பெருஞ் ஜோதி

70. வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் சோதி

71. எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர்மெய் கண்டோர்
அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி

72. தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

73. சத்தர்க ளெல்லாந் தழைத்திட வகம்புறத்
தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி

74. சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்
அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி

75. முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி

76. பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்
அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி

77. காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி

78. இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்
றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

79. இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
அறவாழி யாந்தனி யருட்பெருஞ் ஜோதி

80. நானந்த மில்லா நலம்பெற வெனக்கே
ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி

81. எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி

82. மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி

83. எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி

84. சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி
லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

85. எங்கெங் கிருந்துயி ரேதெது வேண்டினும்
அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி

86. சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம்
அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி

87. சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி

88. உபரச வேதியி னுபயமும் பரமும்
அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி

89. மந்தண மிதுவென மறுவிலா மதியால்
அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி

90. எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய
வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி

91. செடியறுத் தேதிட தேகமும் போகமும்
அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி

92. துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை
அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி

93. பொதுவது சிறப்பது புதியது பழயதென்
றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி

94. சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை
யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி

95. ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்
காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி

96. எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்
கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி

97. எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்
கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி

98. இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்
கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி

99. பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்
ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி

100. தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென
தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி

101. எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

102. வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி

103. சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே
ஆமா றருளிய வருட்பெருஞ் ஜோதி

104. சத்திய மாஞ்சிவ சத்த்’யை யீந்தெனக்
கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி

105. சாவா நிலையிது தந்தன முனக்கே
ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி

106. சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி

107. மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்
அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி

108. தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி

109. காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்
ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி

110. எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா
றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி

111. எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி

112. கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி

113. எண்டர முடியா திலங்கிய பற்பல
அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி

114. சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை
யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி

115. வாழிநீ டூழி வாழியென் றோங்குபே
ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி

116. மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி

117. எச்சநி னக்கிலை யெல்லாம் பெருகவென்று
அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி

118. நீடுக நீயே நீளுல கனைத்தும்நின்
றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி

119. முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு
மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

120. மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

121. கருமசித் திகளின் கலைபல கோடியும்
அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

122. யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

123. ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்
ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

124. புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

125. முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி

126. சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்
அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி

127. ஏகசிற் சித்தியே யியலுற வனேகம்
ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி

128. இன்பசித் தியினிய லேக மனேகம்
அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி

129. எட்டிரண் டென்பன வியலுமுற் படியென
அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி

130. இப்படி கண்டனை யினியுறு படியெலாம்
அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி

131. படிமுடி கடந்தனை பாரிது பாரென
அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி

132. ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

133. இந்தசிற் ஜோதியி னியலுரு வாதி
யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

134. ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி

135. நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

136. கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே
அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

137. கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

138. அருளொளி யென்றனி யறிவினில் விரித்தே
அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி

139. பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே
அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி

140. வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

141. ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்
ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

142. சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி

143. பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்
மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி

144. எஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி

145. மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி

146. பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

147. சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி

148. வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்
ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி

149. எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
யல்லா திலையெனு மருட்பெருஞ் ஜோதி

150. நவையிலா வுளத்தி னாடிய நாடிய
வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி

151. கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்
டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி

152. நன்றறி வறியா நாயினேன் றனையும்
அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி

153. நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்
ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி

154. தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்
ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி

155. எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே
அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி

156. ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்
டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி

157. தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா
ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி

158. மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி

159. உருவமு மருவமு முபயமு மாகிய
அருணிலை தெரித்த வருட்பெருஞ் ஜோதி

160. இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி
அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி

161. தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்துள
அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி

162. பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய
அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி

163. உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை
அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி

164. வெருள்மன மாயை வினையிருணீக்கியுள்
அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி

165. சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே
அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி

166. விருப்போ டிகலுறு வெறுப்புந் தவிர்த்தே
அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி

167. அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட
அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி

168. உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே
அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி

169. விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி

170. விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி

171. காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலி னோங்கு மருட்பெருஞ் ஜோதி

172. காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

173. அனலினு ளனலா யனனடு வனலாய்
அனலுற விளங்கு மருட்பெருஞ் ஜோதி

174. அனலுறு மனலா யனனிலை யனலாய்
அனலுற வயங்கு மருட்பெருஞ் ஜோதி

175. புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி

176. புனலுறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்
அனையெனப் பெருகு மருட்பெஞ் ஜோதி

177. புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி

178. புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி

179. விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

180. வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

181. நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

182. நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

183. புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி
அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

184. மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

185. மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை
யண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

186. மண்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

187. மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை
அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

188. மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்
அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

189. மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

190. மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை
யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

191. மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்
டண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

192. மண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

193. மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

194. மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

195. மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி

196. மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

197. மண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா
அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி

198. மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே
றண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

199. மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

200. மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

201. மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

202. நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

203. நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல
வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

204. நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

205. நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பல்வகை
ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

206. நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

207. நீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

208. நீரிடை யடிநடு நிலையுற வகுத்தன
லார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

209. நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

210. நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

211. நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை
ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

212. நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

213. நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல
ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி

214. நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல
ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

215. நீரியல் பலபல நிரைத்ததிற் பிறவும்
ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

216. தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

217. தீயினில் வெண்மைத் திகழியல் பலவா
வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

218. தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

219. தீயிடை யொளியே திகழுற வமைத்ததில்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

220. தீயிடை யருநிலை திருநிலை கருநிலை
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

221. தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

222. தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

223. தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

224. தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்
ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

225. தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

226. தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல
ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

227. தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

228. தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்
ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி

229. தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

230. தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி

231. காற்றிடை யசையியல் கலையிய லுயிரியல்
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

232. காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்
ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

233. காற்றினி லூறியல் காட்டுறு பலபல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

234. காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

235. காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

236. காற்றினி லிடைநடு கடைநடு வகம்புறம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

237. காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

238. காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில
ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி

239. காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

240. காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல
ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

241. காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

242. காற்றிடை யுணரியல் கருதிய லாதிய
ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

243. காற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

244. காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்
தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

245. காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

246. காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

247. வெளியிடைப் பகுதியின் விரிவிய லணைவியல்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

248. வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

249. வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

250. வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை
அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி

251. வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி

252. வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

253. வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல
அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

254. வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல
அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

255. வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்
அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

256. வெளியி னனைத்தையும் விரித்ததிற் பிறவும்
அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

257. புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

258. புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

259. அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

260. அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி

261. கருதக நடுவொடு கடையணைந் தகமுதல்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

262. தணியக நடுவொடு தலையணைந் தகக்கடை
அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

263. அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்
அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

264. அகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை
அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

265. அகநடு வதனா லகப்புற நடுவை
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

266. அகப்புற நடுவா லணிபுற நடுவை
அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி

267. புறநடு வதனாற் புறப்புற நடுவை
அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

268. புகலரு மகண்ட பூரண நடுவால்
அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி

269. புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

270. புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

271. அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்
அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

272. அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

273. வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

274. நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி

275. நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே லுயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

276. புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

277. பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

278. உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி
அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

279. உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

280. கலைவெளி யதனைக் கலப்பறு சுத்த
அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி

281. சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

282. பரவெளி யதனைப் பரம்பர வெளியில்
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

283. பரம்பர வெளியைப் பராபர வெளியில்
அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

284. பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

285. பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

286. குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

287. மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

288. காலமே முதலிய கருவிகள் கலைவெளி
ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

289. துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

290. இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்
அவ்வயி னமைத்த வருட்பெருஞ் ஜோதி

291. ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

292. சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை
அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

293. காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை
ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

294. அழித்தல்செய் தலைவரை யவரண் டங்களை
அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

295. மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை
அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி

296. தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை
அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

297. விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

298. ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை
ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி

299. சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

300. நாதமாம் பிரமமும் நாதவண் டங்களை
ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

301. பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களும்
அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

302. பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

303. எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

304. அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை
அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

305. உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

306. களவில கடல்வகை கங்கில கரையில
அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி

307. கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற
அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி

308. கடல்களு மலைகளுங் கதிகளு நதிகளும்
அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

309. கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர்
அடலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

310. மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர்
அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

311. ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்
அன்றற வகுத்த வருட்பெஞ் ஜோதி

312. பத்திடை யாயிரம் பகரதிற் கோடி
அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

313. நூற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்
ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

314. கோடியி லனந்த கோடிபல் கோடி
ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

315. வித்திய லொன்றா விளைவியல் பலவா
அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி

316. விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க
அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி

317. வித்தும் பதமும் விளையுப கரிப்பும்
அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி

318. வித்திடை முளையும் முளையிடை விளைவும்
அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி

319. வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

320. விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

321. முளையதின் முளையும் முளையினுண் முளையும்
அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

322. வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

323. பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

324. ஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும்
அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி

325. பொருணிலை யுறுப்பியல் பொதுவகை முதலிய
அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

326. உறவினி லுறவும் உறவினிற் பகையும்
அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

327. பகையினிற் பகையும் பகையினி லுறவும்
அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

328. பாதியு முழுதும் பதிசெயு மந்தமும்
ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

329. துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்
அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

330. உருவதி னுருவும் உருவினுள் ளுருவும்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

331. அருவினுள் ளருவும் மருவதி லருவும்
அருளிய லமைத்த வருட்பெருஞ் ஜோதி

332. கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்
அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

333. உருவதி லருவும் மருவதி லுருவும்
அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

334. வண்ணமு வடிவு மயங்கிய வகைபல
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

335. சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

336. பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்
அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

337. திண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும்
அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

338. மென்மையின் மென்மையும் மென்மையில் வன்மையும்
அன்மையற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி

339. அடியினுள் ளடியும் மடியிடை யடியும்
அடியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

340. நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்
அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

341. முடியினுண் முடியும் முடியினின் முடியும்
அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி

342. அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை
அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி

343. புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட
அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

344. அகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட
அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

345. புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற
அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

346. பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்
ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி

347. ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

348. அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல
அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

349. அறிவொரு வகைமுத லைவகை யறுவகை
அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி

350. வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற
அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி

351. சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

352. பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

353. பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

354. பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

355. பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

356. பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்
அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

357. பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

358. தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணியல்
அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி

359. உனற்கரு முயிருள வுடலுள வுலகுள
வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி

360. ஓவுறா வெழுவகை யுயிர்முத லனைத்தும்
ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி

361. பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்
ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி

362. தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை
ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

363. முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை
அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

364. நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்
அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

365. வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

366. உடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை
அடலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

367. சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை
அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

368. உயிருறு முடலையு முடலுறு முயிரையும்
அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

369. பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை
ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

370. முச்சுட ராதியா லெச்சக வுயிரையும்
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

371. வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயிர்
ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

372. இன்புறு சத்தியா லெழின்மழை பொழிவித்
தன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

373. எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும்
அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

374. அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்
அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

375. தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்
தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

376. அகப்புற வமுதளித் தைவரா திகளை
அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

377. தருமக வமுதாற் சத்திசத் தர்களை
அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி

378. காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்
ஆலுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

379. விச்சையை யிச்சையை விளைவித் துயிர்களை
அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

380. போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி

381. கலையறி வளித்துக் களிப்பினி லுயிரெலாம்
அலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

382. விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்
அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

383. துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை
அன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

384. கரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை
அரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

385. எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

386. எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி

387. ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன
ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி

388. சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை
அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

389. சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்
அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

390. வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்
ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

391. எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின
அவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி

392. அண்டத் துரிசையு மகிலத் துரிசையும்
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

393. பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்
அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

394. உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும்
அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

395. உயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும்
அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

396. காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை
ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

397. பொங்குறு வெகுளிப் புடைப்புக ளெல்லாம்
அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

398. மதம்புரை மோகமு மற்றவு மாங்காங்
கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

399. வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்
அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

400. சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி

401. நால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில்
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

402. நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும்
ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

403. மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி

404. மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி

405. தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி

406. சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை
அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி

407. கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

408. பேருறு நீலப் பெருந்திரை யதனால்
ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

409. பச்சைத் திரையாற் பரவெளி யதனை
அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

410. செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

411. பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

412. வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

413. கலப்புத் திரையாற் கருதனு பவங்களை
அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

414. விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

415. தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

416. திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

417. தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி
னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி

418. சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை
அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி

419. எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி

420. விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

421. சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை
அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி

422. மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே
அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

423. எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

424. கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

425. சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

426. சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

427. படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை
அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி

428. காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி

429. அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்
அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி

430. மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை
அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி

431. தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை
அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி

432. ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
ஐந்தொழி லாதிசெய் யருட்பெருஞ் ஜோதி

433. இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்
அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி

434. செத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல்
அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி

435. இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட
அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

436. செத்தவ ரெழுகெனச் செப்பியாங் கெழுப்பிட
அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி

437. சித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே
அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி

438. ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது
ஒன்றினு ளொன்றது வொன்றெனு மொன்றே

439. ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல
ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே

440. ஒன்றினி லொன்றுள வொன்றினி லொன்றில
ஒன்றற வொன்றிய வொன்றெனு மொன்றே

441. களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி
விளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே

442. மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே

443. எழுநிலை மிசையே யின்புரு வாகி
வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே

444. நவநிலை மிசையே நடுவுறு நடுவே
சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே

445. ஏகா தசநிலை யாததி னடுவே
ஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே

446. திரையோ தசநிலை சிவவெளி நடுவே
வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே

447. ஈரெண் ணிலையென வியம்புமே னிலையிற்
பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே

448. எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே
எல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே

449. மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
அனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே

450. தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே

451. அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

452. இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா
உயலுற விளங்கு மொருதனிப் பொருளே

453. அருவினு ளருவா யருவரு வருவாய்
உருவினுள் விளங்கு மொருபரம் பொருளே

454. அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய்
உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே

455. பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா
யொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே

456. ஆடுறு சித்திக ளறுபத்து நான்கெழு
கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே

457. கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே

458. அறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும்
பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே

459. வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க
ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே

460. பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க
உற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே

461. பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே
பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே

462. பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே
பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே

463. பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே
பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே

464. பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே
தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே

465. வரம்பரா பரமே வணம்பரா பரமே
பரம்பரா பரமே பதம்பரா பரமே

466. சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே

467. தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே சிற்சுக பதமே

468. தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே
அம்பரம் பதமே யருட்பரம் பதமே

469. தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே

470. நவந்தரு பதமே நடந்தரு பதமே
சிவந்தரு பதமே சிவசிவ பதமே

471. பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே
பிரமநிற் குணமே பிரமசிற் குணமே

472. பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
பரமமே பரம பதந்தருஞ் சிவமே

473. அவனோ டவளா யதுவா யலவாய்
நவமா நிலைமிசை நண்ணிய சிவமே

474. எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்
செம்பொரு ளாகிய சிவமே சிவமே

475. ஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு
திருநிலை மேவிய சிவமே சிவமே

476. மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு
தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே

477. புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
சிரமுற நாட்டிய சிவமே சிவமே

478. கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்
செல்வமு மளித்த சிவமே சிவமே

479. அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்
தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே

480. சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே

481. எங்கே கருணை யியற்கையி னுள்ளன
அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே

482. யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
சீரே யளிக்குஞ் சிதம்பர சிவமே

483. பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே

484. கொல்லா நெறியே குருவரு ணெறியெனப்
பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே

485. உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே

486. பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே

487. உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே

488. இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே

489. அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே

490. அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே

491. அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே

492. அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே

493. அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே

494. அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே

495. அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே

496. அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே

497. அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே

498. அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே

499. அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே

500. அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென்ற சிவமே

501. அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென்ற சிவமே

502. அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென்ற சிவமே

503. அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென்ற சிவமே

504. அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென்ற சிவமே

505. அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே

506. அருளே நங்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென்ற சிவமே

507. அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே

508. அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே

509. அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே

510. உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள்
வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே

511. நிகரிலா வின்ப நிலைநடு வைத்தெனைத்
தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே

512. சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைச்
சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே

513. ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்
கைவரப் புரிந்த கதிசிவ பதியே

514. துன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த
இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே

515. சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே

516. கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
வையமேல் வைத்த மாசிவ பதியே

517. இன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ
றன்பொடென் கண்ணுறு மருட்சிவ பதியே

518. பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே

519. உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது
குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே

520. பரமுட னபரம் பகர்நிலை யிவையெனத்
திரமுற வருளிய திருவருட் குருவே

521. மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
றிதிநிலை யனைத்துந் தெரித்தசற் குருவே

522. கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே

523. பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே

524. பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே

525. பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே

526. சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே

527. சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
அத்தகை தெரித்த வருட்சிவ குருவே

528. அறிபவை யெல்லா மறிவித் தென்னுள்ளே
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே

529. கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே

530. காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
மாண்பத மளித்து வயங்குசற் குருவே

531. செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே

532. உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே

533. சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே

534. சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே

535. எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே

536. சீருற வருளாந் தேசுற வழியாப்
பேருற வென்னைப் பெற்றநற் றாயே

537. பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்
பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே

538. ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
ஈன்றமு தளித்த வினியநற் றாயே

539. பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்
வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே

540. தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை
உளந்தெளி வித்த வொருமைநற் றாயே

541. அருளமு தேமுத லைவகை யமுதமும்
தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே

542. இயலமு தேமுத லெழுவகை யமுதமும்
உயலுற வெனக்கரு ளுரியநற் றாயே

543. நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்
பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே

544. மற்றுள வமுத வகையெலா மெனக்கே
உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே

545. கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே
அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே

546. துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்
கெய்ப்பெலாந் தவிர்த்த வின்புடைத் தாயே

547. சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே
சத்தியை யளித்த தயவுடைத் தாயே

548. சத்திநி பாதந் தனையளித் தெனைமேல்
வைத்தமு தளித்த மரபுடைத் தாயே

549. சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்
சித்தியை யளித்த தெய்வநற் றாயே

550. தன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே
என்னைமே லேற்றிய வினியநற் றாயே

551. வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே
யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே

552. எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்
கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே

553. இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந்
தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே

554. என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்
தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே

555. தெரியா வகையாற் சிறியேன் றளர்ந்திடத்
தரியா தணைத்த தயவுடைத் தாயே

556. சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்
கனவினும் பிரியாக் கருணைநற் றாயே

557. தூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்
ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே

558. துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே

559. எல்லா நன்மையு மென்றனக் களித்த
எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே

560. நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய
தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே

561. அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
பிறிவிலா தமர்ந்த பேரருட் டந்தையே

562. புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த
தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே

563. அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி
சகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே

564. இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே
துணையடி சென்னியிற் சூட்டிய தந்தையே

565. ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே

566. எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே

567. தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே

568. தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே

569. தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்
என்வடி வாக்கிய என்றனித் தந்தையே

570. தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்
என்சித் தாக்கிய என்றனித் தந்தையே

571. தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே

572. தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை
என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே

573. தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்
என்னையு மொன்றென வியற்றிய தந்தையே

574. தன்னிய லென்னியல் தன்செய லென்செயல்
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே

575. தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
என்ன வியற்றிய வென்றனித் தந்தையே

576. சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே

577. மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே
இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே

578. உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை
யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே

579. துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே

580. ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே

581. எவ்வகைத் திறத்தினு மெய்துதற் கரிதாம்
அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே

582. இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே

583. பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்
சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே

584. தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்
கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே

585. துறையிது வழியிது துணிவிது நீசெயும்
முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே

586. எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை
கங்குலும் பகலுமெய்க் காவல்செய் துணையே

587. வேண்டிய வேண்டிய விருப்பெலா மெனக்கே
யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே

588. இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா
தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே

589. அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்
னுயிரினுஞ் சிறந்த வொருமையென் னட்பே

590. அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே
இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே

591. நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே
வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே

592. உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்
டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே

593. செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த
குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே

594. குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே

595. பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே

596. சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமும்
கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே

597. களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்
கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே

598. தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா
வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே

599. மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்
எனக்குற வாகிய என்னுயி ருறவே

600. துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா
தென்னுற வாகிய வென்னுயி ருறவே

601. என்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய்
என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே

602. அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்
இனைத்தென வறியா வென்றனிச் சத்தே

603. பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
இதுவெனற் கரிதா மென்றனிச் சத்தே

604. ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்
ஏகுதற் கரிதா மென்றனிச் சத்தே

605. சத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே
இத்தகை வழுத்து மென்றனிச் சத்தே

606. துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென
உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே

607. அன்றத னப்பா லதன்பரத் ததுதான்
என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே

608. என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்
என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே

609. சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே

610. தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே

611. படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்
இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே

612. மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
ஏற்பட விளக்கிடு மென்றனிச் சித்தே

613. உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
இயலுற விளக்கிடு மென்றனிச் சித்தே

614. அறிவவை பலவா யறிவன பலவாய்
எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே

615. நினைவவை பலவாய் நினைவன பலவாய்
இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே

616. காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே

617. செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்
எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே

618. அண்ட சராசர மனைத்தையும் பிறவையும்
எண்டற விளக்கு மென்றனிச் சித்தே

619. எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட
எல்லாம் விளக்கிடு மென்றனிச் சித்தே

620. ஒன்றதி லொன்றன் றுரைக்கவும் படாதாய்
என்றுமோர் படித்தா மென்றனி யின்பே

621. இதுவது வென்னா வியலுடை யதுவாய்
எதிரற நிறைந்த வென்றனி யின்பே

622. ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்
ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே

623. அறிவுக் கறிவினி லதுவது வதுவாய்
எறிவற் றோங்கிய வென்றனி யின்பே

624. விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை
யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே

625. இம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும்
எம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே

626. முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே

627. எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும்
எல்லா வின்புமா மென்றனி யின்பே

628. கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின்
விரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்

629. குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி
மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய

630. உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா
வணமுறு மின்ப மயமே யதுவாய்க்

631. கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்
நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்

632. உள்ளதா யென்று முள்ளதா யென்னுள்
உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்

633. எல்லா மினிப்ப வியலுறு சுவையளித்
தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்

634. சாகா வரமுந் தனித்தபே ரறிவும்
மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்

635. செயற்கரு மனந்த சித்தியு மின்பமும்
மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்

636. பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி
ஆரண முடியுட னாகம முடியுங்

637. கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு
நடந்திகழ் கின்றமெஞ் ஞானவா ரமுதே

638. சத்திய வமுதே தனித்திரு வமுதே
நித்திய வமுதே நிறைசிவ வமுதே

639. சச்சிதா னந்தத் தனிமுத லமுதே
மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே

640. ஆனந்த வமுதே யருளொளி யமுதே
தானந்த மில்லாத் தத்துவ வமுதே

641. நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே
சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே

642. பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே

643. அகம்புற மகப்புற மாகிய புறப்புறம்
உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே

644. பனிமுத னீக்கிய பரம்பர வமுதே
தனிமுத லாய சிதம்பர வமுதே

645. உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே
அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே

646. அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள
பண்டமுங் காட்டிய பரம்பர மணியே

647. பிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள
பண்டமுங் காட்டிய பராபர மணியே

648. நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே

649. விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
கண்பெற நடத்துங் ககனமா மணியே

650. பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்
சார்புற நடத்துஞ் சரவொளி மணியே

651. அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்
கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே

652. சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்
விராவியுள் விளங்கும் வித்தக மணியே

653. மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்
தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே

654. தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா
வாழ்வெனக் களித்த வளரொளி மணியே

655. நவமணி முதலிய நலமெலாந் தருமொரு
சிவமணி யெனுமருட் செல்வமா மணியே

656. வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து
நான்பெற வளித்த நாதமந் திரமே

657. கற்பம் பலபல கழியினு மழியாப்
பொற்புற வளித்த புனிதமந் திரமே

658. அகரமு முகரமு மழியாச் சிகரமும்
வகரமு மாகிய வாய்மைமந் திரமே

659. ஐந்தென வெட்டென வாறென நான்கென
முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே

660. வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
ஓதநின் றுலவா தோங்குமந் திரமே

661. உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே

662. சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே

663. இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே

664. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

665. நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே

666. என்றே யென்னினு மிளமையோ டிருக்க
நன்றே தருமொரு ஞானமா மருந்தே

667. மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே

668. சிற்சபை நடுவே திருநடம் புரியும்
அற்புத மருந்தெனு மானந்த மருந்தே

669. இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்
தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்

670. மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய்
ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க்

671. காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
ஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்

672. கைதவர் கனவினுங் காண்டற் கரிதாய்ச்
செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்

673. உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே

674. புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே

675. மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய்
இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே

676. எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா
தடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே

677. தளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக்
கிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே

678. எண்ணிய தோறு மியற்றுக வென்றனை
யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே

679. நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்
போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே

680. எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப்
பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே

681. விண்ணியற் றலைவரும் வியந்திட வெனக்குப்
புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே

682. நால்வகை நெறியினு நாட்டுக வெனவே
பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே

683. எழுவகை நெறியினு மியற்றுக வெனவே
முழுவகை காட்டி முயங்கிய பொன்னே

684. எண்ணிய படியெலா மியற்றுக வென்றெனைப்
புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே

685. ஊழிதோ றூழி யுலப்புறா தோங்கி
வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே

686. இதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்
குதவினு முலவா தோங்குநன் னிதியே

687. இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற்
றிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே

688. எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை
அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே

689. அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே
கற்பனை கடந்த கருணைமா நிதியே

690. நற்குண நிதியே சற்குண நிதியே
நிற்குண நிதியே சிற்குண நிதியே

691. பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே
வளமெலா நிறைந்த மாணிக்க மலையே

692. மதியுற விளங்கு மரகத மலையே
வதிதரு பேரொளி வச்சிர மலையே

693. உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே

694. புற்புதந் திரைநுரை புரைமுத லிலதோர்
அற்புதக் கடலே யமுதத்தண் கடலே

695. இருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய
அருட்பெருங் கடலே யானந்தக் கடலே

696. பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே

697. என்றுயர்ச் சோடைக ளெல்லாந் தவிர்த்துள
நன்றுற விளங்கிய நந்தனக் காவே

698. சேற்றுநீ ரின்றிநற் றீஞ்சுவை தருமோர்
ஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே

699. கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே
மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே

700. களைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே
இளைப்பற வாய்த்த வின்சுவை யுணவே

701. தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே
தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே

702. நீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே
வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே

703. கட்டுமாம் பழமே கதலிவான் பழமே
இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே

704. புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே
கனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே

705. இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே
பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே

706. சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே
ஏலவே நாவுக் கினியகற் கண்டே

707. உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே
கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே

708. நவையிலா தெனக்கு நண்ணிய நறவே
சுவையெலாந் திரட்டிய தூயதீம் பதமே

709. பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே

710. உலர்ந்திடா தென்று மொருபடித் தாகி
மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே

711. இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்
உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே

712. யாழுறு மிசையே யினியவின் னிசையே
ஏழுறு மிசையே யியலரு ளிசையே

713. திவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே
அவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே

714. நாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே
வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே

715. நன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே

716. நம்புறு மாகம நவிற்றிய பாட்டே
எம்பல மாகிய வம்பலப் பாட்டே

717. என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
என்னிரு கண்ணே யென்கணுண் மணியே

718. என்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே
என்பெருந் திறலே யென்பெருஞ் செயலே

719. என்பெருந் தவமே என்றவப் பலனே
என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே

720. என்பெரு வாழ்வே யென்றென்வாழ் முதலே
என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே

721. என்பெரு நலமே யென்பெருங் குலமே
என்பெரு வலமே யென்பெரும் புலமே

722. என்பெரு வரமே யென்பெருந் தரமே
என்பெரு நெறியே யென்பெரு நிலையே

723. என்பெருங் குணமே என்பெருங் கருத்தே
என்பெருந் தயவே யென்பெருங் கதியே

724. என்பெரும் பதியே யென்னுயி ரியலே
என்பெரு நிறைவே யென்றனி யறிவே

725. தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட

726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட

727. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட

728. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட

729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட

730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட

731. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட

732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட

733. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்த மியைந்து களித்திட

734. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்
சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட

735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்

736. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட

737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட

738. என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்றனி யன்பே

739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே

740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்
என்னைவே தித்த என்றனி யன்பே

741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை யன்பே

742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
என்னுளே கனிந்த வென்னுடை யன்பே

743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
என்னுளே நிறைந்த என்றனி யன்பே

744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
யின்புறு வாக்கிய என்னுடை யன்பே

745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
என்னுளங் கலந்த என்றனி யன்பே

746. தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி
என்வசங் கடந்த என்னுடை யன்பே

747. தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே
என்னுளே பொங்கிய என்றனி யன்பே

748. அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்
இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே

749. துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்
லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே

750. மயலற வழியா வாழ்வுமேன் மேலும்
இயலுற வென்னுளத் தேற்றிய விளக்கே

751. இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே

752. கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட
உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே

753. தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
ஏற்றிய ஞான வியலொளி விளக்கே

754. ஆகம முடிமே லருளொளி விளங்கிட
வேகம தறவே விளங்கொளி விளக்கே

755. ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி
காரியம் விளக்குமோர் காரண விளக்கே

756. தண்ணிய வமுதே தந்தென துளத்தே
புண்ணியம் பலித்த பூரண மதியே

757. உய்தர வமுத முதவியென் னுளத்தே
செய்தவம் பலித்த திருவளர் மதியே

758. பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத
நிதியெலா மளித்த நிறைதிரு மதியே

759. பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று
மேல்வெளி விளங்க விளங்கிய மதியே

760. உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட
வயங்கிய கருணை மழைபொழி மழையே

761. என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப
மன்னிய கருணை மழைபொழி மழையே

762. உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே

763. நலந்தர வுடலுயிர் நல்லறி வெனக்கே
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே

764. தூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல்
வாய்மையாற் கருணை மழைபொழி மழையே

765. வெம்மல விரவது விடிதரு ணந்தனிற்
செம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே

766. திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே
வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே

767. அலகிலாத் தலைவர்க ளரசுசெய் தத்துவ
உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே

768. முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே

769. ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே

770. உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே

771. நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே

772. வேதமு மாகம விரிவும் பரம்பர
நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே

773. எண்ணிய வெண்ணிய வெல்லாந்தர வெனுள்
நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே

774. வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே

775. இரவொடு பகலிலா வியல்பொது நடமிடு
பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே

776. வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி
பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே

777. சமரச சத்தியச் சபையி னடம்புரி
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

778. சபையென துளமெனத் தானமர்ந் தெனக்கே
அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி

779. மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி

780. வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி

781. என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து

782. உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்

783. சிறுநெறி செல்லாத் திறனளித் தழியா
துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து

784. சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும்

785. அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்

786. ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா

787. அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி

788. வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி

789. உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை

790. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

791. மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை

792. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

793. சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை

794. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

795. உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க

796. சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தம னாகுக வோங்குக வென்றனை

797. போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி

798. அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி

திருச்சிற்றம்பலம்

1. அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_சோதி
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி

2. அருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்
அருள் சிவ பதியாம் அருள்_பெரும்_ஜோதி

3. ஆகம முடி மேல் ஆரண முடி மேல்
ஆக நின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி

4. இக நிலைப் பொருளாய்ப் பர நிலைப் பொருளாய்
அகம் அறப் பொருந்திய அருள்_பெரும்_ஜோதி

5. ஈனம் இன்று இக_பரத்து இரண்டின் மேல் பொருளாய்
ஆனலின்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி

6. உரை மனம் கடந்த ஒரு பெருவெளி மேல்
அரைசு செய்து ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி

7. ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருள்_பெரும்_ஜோதி

8. எல்லை_இல் பிறப்பு எனும் எழு_கடல் கடத்தி என்
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி

9. ஏறா நிலை மிசை ஏற்றி என்றனக்கே
ஆறாறு காட்டிய அருள்_பெரும்_ஜோதி

10. ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி

11. ஒன்று என இரண்டு என ஒன்றிரண்டு என இவை
அன்று என விளங்கிய அருள்_பெரும்_ஜோதி

12. ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி

13. ஔவியம் ஆதி ஓர் ஆறும் தவிர்த்த பேர்
அ இயல் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி

14. திரு நிலைத் தனி வெளி சிவ வெளி எனும் ஓர்
அருள் வெளிப் பதி வளர் அருள்_பெரும்_ஜோதி

15. சுத்த சன்மார்க்க சுகத் தனி வெளி எனும்
அத்தகைச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

16. சுத்த மெய்ஞ்ஞான சுகோதய வெளி எனும்
அத்துவிதச் சபை அருள்_பெரும்_ஜோதி

17. தூய கலாந்த சுகம் தரு வெளி எனும்
ஆய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி

18. ஞான யோகாந்த நட திரு_வெளி எனும்
ஆனி_இல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

19. விமல போதாந்த மா மெய்ப்பொருள் வெளி எனும்
அமல சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி

20. பெரிய நாதாந்தப் பெரு நிலை வெளி எனும்
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி

21. சுத்த வேதாந்தத் துரிய மேல் வெளி எனும்
அத் தகு சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

22. சுத்த சித்தாந்த சுகப் பெருவெளி எனும்
அத் தனிச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

23. தகர மெய்ஞ்ஞானத் தனிப் பெருவெளி எனும்
அகர நிலைப் பதி அருள்_பெரும்_ஜோதி

24. தத்துவாதீதத் தனிப் பொருள் வெளி எனும்
அத் திரு_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி

25. சச்சிதானந்தத் தனிப் பர வெளி எனும்
அச்சியல் அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி

26. சாகா_கலை நிலை தழைத்திடு வெளி எனும்
ஆகாயத்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி

27. காரண காரியம் காட்டிடு வெளி எனும்
ஆரணச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

28. ஏகம் அனேகம் எனப் பகர் வெளி எனும்
ஆகமச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

29. வேதாகமங்களின் விளைவுகட்கு எல்லாம்
ஆதாரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி

30. என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலையாய் அது
அன்றாம் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி

31. சமயம் கடந்த தனிப் பொருள் வெளியாய்
அமையும் திரு_சபை அருள்_பெரும்_ஜோதி

32. முச்சுடர்களும் ஒளி முயங்குற அளித்து அருள்
அச் சுடராம் சபை அருள்_பெரும்_ஜோதி

33. துரியமும் கடந்த சுக பூரணம் தரும்
அரிய சிற்றம்பலத்து அருள்_பெரும்_ஜோதி

34. எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்து அருள்
அவ்வகைச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

35. இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமுமாம்
அயர்ப்பு இலாச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

36. சாக்கிராதீதத் தனி வெளியாய் நிறை
வாக்கிய சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

37. சுட்டுதற்கு அரிதாம் சுகாதீத வெளி எனும்
அட்ட மேல் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

38. நவம் தவிர் நிலைகளும் நண்ணும் ஓர் நிலையாய்
அவம் தவிர் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

39. உபய பக்கங்களும் ஒன்று எனக் காட்டிய
அபய சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி

40. சேகரமாம் பல சித்தி நிலைக்கு எலாம்
ஆகரமாம் சபை அருள்_பெரும்_ஜோதி

41. மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம்
அனாதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி

42. ஓதி நின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம்
ஆதி சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி

43. வாரமும் அழியா வரமும் தரும் திரு
ஆர்_அமுதாம் சபை அருள்_பெரும்_ஜோதி

44. இழியாப் பெரு நலம் எல்லாம் அளித்து அருள்
அழியாச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

45. கற்பம் பலபல கழியினும் அழிவுறா
அற்புதம் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி

46. எனைத்தும் துன்பு இலா இயல் அளித்து எண்ணிய
அனைத்தும் தரும் சபை அருள்_பெரும்_ஜோதி

47. பாணிப்பு இலதாய்ப் பரவினோர்க்கு அருள் புரி
ஆணி_பொன்_அம்பலத்து அருள்_பெரும்_ஜோதி

48. எம் பலம் எனத் தொழுது ஏத்தினோர்க்கு அருள் புரி
அம்பலத்து ஆடல் செய் அருள்_பெரும்_ஜோதி

49. தம்பர ஞான சிதம்பரம் எனும் ஓர்
அம்பரத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி

50. எச் சபை பொது என இயம்பினர் அறிஞர்கள்
அச் சபை இடம்கொளும் அருள்_பெரும்_ஜோதி

51. வாடுதல் நீக்கிய மணி மன்றிடையே
ஆடுதல் வல்ல அருள்_பெரும்_ஜோதி

52. நாடகத் திரு_செயல் நவிற்றிடும் ஒரு பேர்
ஆடகப் பொது ஒளிர் அருள்_பெரும்_ஜோதி

53. கற்பனை முழுவதும் கடந்து ஒளிதரும் ஓர்
அற்புதச் சிற்சபை அருள்_பெரும்_ஜோதி

54. ஈன்ற நல் தாயினும் இனிய பெரும் தயவு
ஆன்ற சிற்சபையில் அருள்_பெரும்_ஜோதி

55. இன்புறு நான் உளத்து எண்ணியாங்கு எண்ணியாங்கு
அன்புறத் தரு சபை அருள்_பெரும்_ஜோதி

56. எம்மையும் என்னை விட்டு இறையும் பிரியாது
அம்மை அப்பனுமாம் அருள்_பெரும்_ஜோதி

57. பிரிவுற்று அறியாப் பெரும் பொருளாய் என்
அறிவுக்கு அறிவாம் அருள்_பெரும்_ஜோதி

58. சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அனாதியாம் அருள்_பெரும்_ஜோதி

59. தனுகரணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர்
அனுபவம் ஆகிய அருள்_பெரும்_ஜோதி

60. உனும் உணர்வு உணர்வாய் உணர்வு எலாம் கடந்த
அனுபவாதீத அருள்_பெரும்_ஜோதி

61. பொது உணர்வு உணரும் போது அலால் பிரித்தே
அது எனில் தோன்றா அருள்_பெரும்_ஜோதி

62. உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின்
அளவினில் அளவா அருள்_பெரும்_ஜோதி

63. என்னையும் பணிகொண்டு இறவா_வரம் அளித்து
ன்னையில் உவந்த அருள்_பெரும்_ஜோதி

64. ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த
ஆதி ஈறு இல்லா அருள்_பெரும்_ஜோதி

65. படி அடி வான் முடி பற்றினும் தோற்றா
அடி முடி எனும் ஓர் அருள்_பெரும்_ஜோதி

66. பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கெங்கும்
அவனுக்கு அவனாம் அருள்_பெரும்_ஜோதி

67. திவள் உற்ற அண்டத் திரளின் எங்கெங்கும்
அவளுக்கு அவளாம் அருள்_பெரும்_ஜோதி

68. மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும்
அதனுக்கு அதுவாம் அருள்_பெரும்_ஜோதி

69. எப்பாலுமாய் வெளி எல்லாம் கடந்து மேல்
அப்பாலும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி

70. வல்லதாய் எல்லாம் ஆகி எல்லாமும்
அல்லதாய் விளங்கும் அருள்_பெரும்_சோதி

71. எப் பொருள் மெய்ப்பொருள் என்பர் மெய் கண்டோர்
அப் பொருள் ஆகிய அருள்_பெரும்_ஜோதி

72. தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று
ஆங்குற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி

73. சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம் புறத்து
அத் திசை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி

74. சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும்
அத் தகை விளங்கும் அருள்_பெரும்_ஜோதி

75. முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழில் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி

76. பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருள்_பெரும்_ஜோதி

77. காட்சியும் காணாக் காட்சியும் அது தரும்
ஆட்சியும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி

78. இன்புறு சித்திகள் எல்லாம் புரிக என்று
அன்புடன் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி

79. இறவா_வரம் அளித்து என்னை மேல் ஏற்றிய
அறவாழியாம் தனி அருள்_பெரும்_ஜோதி

80. நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருள்_பெரும்_ஜோதி

81. எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை
அண்ணி உள் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி

82. மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீ அது
ஆயினை என்று அருள் அருள்_பெரும்_ஜோதி

83. எண்ணில் செழும் தேன் இனிய தெள் அமுது என
அண்ணித்து இனிக்கும் அருள்_பெரும்_ஜோதி

84. சிந்தையில் துன்பு ஒழி சிவம் பெறுக எனத் தொழில்
ஐந்தையும் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி

85. எங்கெங்கிருந்து உயிர் ஏதேது வேண்டினும்
அங்கங்கிருந்து அருள் அருள்_பெரும்_ஜோதி

86. சகம் முதல் புறப்புறம் தங்கிய அகப்புறம்
அகம் புறம் முற்றுமாம் அருள்_பெரும்_ஜோதி

87. சிகரமும் வகரமும் சேர் தனி உகரமும்
அகரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி

88. உபரச வேதியின் உபயமும் பரமும்
அபரமும் ஆகிய அருள்_பெரும்_ஜோதி

89. மந்தணம் இது என மறு இலா மதியால்
அந்தணர் வழுத்தும் அருள்_பெரும்_ஜோதி

90. எம் புயக் கனி என எண்ணுவார் இதய
அம்புயத்து அமர்ந்த அருள்_பெரும்_ஜோதி

91. செடி அறுத்தே திட தேகமும் போகமும்
அடியருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி

92. துன்பு அறுத்து ஒரு சிவ துரிய சுகம்-தனை
அன்பருக்கே தரும் அருள்_பெரும்_ஜோதி

93. பொதுவது சிறப்பது புதியது பழயது என்று
அதுஅதுவாய்த் திகழ் அருள்_பெரும்_ஜோதி

94. சேதனப் பெரு நிலை திகழ்தரும் ஒரு பரை
ஆதனத்து ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி

95. ஓம் மயத் திரு_உரு உவப்புடன் அளித்து எனக்கு
ஆமயத் தடை தவிர் அருள்_பெரும்_ஜோதி

96. எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு
அப்படி அருளிய அருள்_பெரும்_ஜோதி

97. எத் தகை விழைந்தன என் மனம் இங்கு எனக்கு
அத் தகை அருளிய அருள்_பெரும்_ஜோதி

98. இங்கு உறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு
அங்கையில் கனியாம் அருள்_பெரும்_ஜோதி

99. பார் உயப் புரிக எனப் பணித்து எனக்கு அருளி என்
ஆர்_உயிர்க்குள் ஒளிர் அருள்_பெரும்_ஜோதி

100. தேவி உற்று ஒளிர்தரு திரு_உருவுடன் எனது
ஆவியில் கலந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி

101. எவ்வழி மெய் வழி என்ப வேதாகமம்
அ வழி எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி

102. வையமும் வானமும் வாழ்த்திட எனக்கு அருள்
ஐயறிவு அளித்த அருள்_பெரும்_ஜோதி

103. சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே
ஆமாறு அருளிய அருள்_பெரும்_ஜோதி

104. சத்தியமாம் சிவ_சத்தியை ஈந்து எனக்கு
அத் திறல் வளர்க்கும் அருள்_பெரும்_ஜோதி

105. சாவா நிலை இது தந்தனம் உனக்கே
ஆ வா என அருள் அருள்_பெரும்_ஜோதி

106. சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருள்_பெரும்_ஜோதி

107. மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல்
அயர்ந்திடேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி

108. தேசு உறத் திகழ்தரு திரு_நெறிப் பொருள் இயல்
ஆசு அறத் தெரித்த அருள்_பெரும்_ஜோதி

109. காட்டிய உலகு எலாம் கருணையால் சித்தியின்
ஆட்டியல் புரியும் அருள்_பெரும்_ஜோதி

110. எம் குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு
அங்குலம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி

111. எம் மதம் எம் இறை என்ப உயிர்த் திரள்
அ மதம் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி

112. கூறிய கரு நிலை குலவிய கீழ் மேல்
ஆறியல் என உரை அருள்_பெரும்_ஜோதி

113. எண் தர முடியாது இலங்கிய பற்பல
அண்டமும் நிறைந்து ஒளிர் அருள்_பெரும்_ஜோதி

114. சார் உயிர்க்கு எல்லாம் தாரகமாம் பரை
ஆர்_உயிர்க்குயிராம் அருள்_பெரும்_ஜோதி

115. வாழி நீடூழி வாழி என்று ஓங்கு பேர்
ஆழியை அளித்த அருள்_பெரும்_ஜோதி

116. மாய்ந்தவர் மீட்டும் வரும் நெறி தந்து இதை
ஆய்ந்திடு என்று உரைத்த அருள்_பெரும்_ஜோதி

117. எச்சம் நினக்கு இலை எல்லாம் பெருக என்று
அச்சம் தவிர்த்த என் அருள்_பெரும்_ஜோதி

118. நீடுக நீயே நீள் உலகு அனைத்தும் நின்று
ஆடுக என்ற என் அருள்_பெரும்_ஜோதி

119. முத்திறல் வடிவமும் முன்னியாங்கு எய்துறும்
அத் திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி

120. மூ வகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி

121. கரும சித்திகளின் கலை பல கோடியும்
அரசு உற எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி

122. யோக சித்திகள் வகை உறு பல கோடியும்
ஆக என்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி

123. ஞான சித்தியின் வகை நல் விரிவு அனைத்தும்
ஆனி_இன்று எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி

124. புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவது என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி

125. முத்தி என்பது நிலை முன் உறு சாதனம்
அத் தகவு என்ற என் அருள்_பெரும்_ஜோதி

126. சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்
அத் திறம் என்ற என் அருள்_பெரும்_ஜோதி

127. ஏக சிற்சித்தியே இயல் உற அனேகம்
ஆகியது என்ற என் அருள்_பெரும்_ஜோதி

128. இன்ப சித்தியின் இயல் ஏகம் அனேகம்
அன்பருக்கு என்ற என் அருள்_பெரும்_ஜோதி

129. எட்டிரண்டு என்பன இயலும் முன் படி என
அட்ட நின்று அருளிய அருள்_பெரும்_ஜோதி

130. இப்படி கண்டனை இனி உறு படி எலாம்
அப்படியே எனும் அருள்_பெரும்_ஜோதி

131. படி முடி கடந்தனை பார் இது பார் என
அடி முடி காட்டிய அருள்_பெரும்_ஜோதி

132. சோதியுள் சோதியின் சொருபமே அந்தம்
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி

133. இந்த சிற்ஜோதியின் இயல் உரு ஆதி
அந்தம் என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி

134. ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதி என்று அருளிய அருள்_பெரும்_ஜோதி

135. நல் அமுது என் ஒரு நா உளம் காட்டி என்
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி

136. கற்பகம் என் உளங்கை-தனில் கொடுத்தே
அற்புதம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி

137. கதிர் நலம் என் இரு கண்களில் கொடுத்தே
அதிசயம் இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி

138. அருள் ஒளி என் தனி அறிவினில் விரித்தே
அருள் நெறி விளக்கு எனும் அருள்_பெரும்_ஜோதி

139. பரை ஒளி என் மனப் பதியினில் விரித்தே
அரசு-அது இயற்று எனும் அருள்_பெரும்_ஜோதி

140. வல்லப சத்திகள் வகை எலாம் அளித்து எனது
அல்லலை நீக்கிய அருள்_பெரும்_ஜோதி

141. ஆர் இயல் அகம் புறம் அகப்புறம் புறப்புறம்
ஆர்_அமுது எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி

142. சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று
ஆரியர் புகழ்தரும் அருள்_பெரும்_ஜோதி

143. பிறிவு ஏது இனி உனைப் பிடித்தனம் உனக்கு நம்
அறிவே வடிவு எனும் அருள்_பெரும்_ஜோதி

144. எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்று அருள் அருள்_பெரும்_ஜோதி

145. மாண்டு உழலா வகை வந்து இளங்காலையே
ஆண்டுகொண்டு அருளிய அருள்_பெரும்_ஜோதி

146. பற்றுகள் அனைத்தையும் பற்று அறத் தவிர்த்து எனது
அற்றமும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி

147. சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருள்_பெரும்_ஜோதி

148. வாய்தற்கு உரித்து எனும் மறை ஆகமங்களால்
ஆய்தற்கு அரிய அருள்_பெரும்_ஜோதி

149. எல்லாம்_வல்ல சித்து எனக்கு அளித்து எனக்கு உனை
அல்லாது இலை எனும் அருள்_பெரும்_ஜோதி

150. நவை இலா உளத்தில் நாடிய நாடிய
அவை எலாம் அளிக்கும் அருள்_பெரும்_ஜோதி

151. கூற்று உதைத்து என்-பால் குற்றமும் குணம் கொண்டு
ஆற்றல் மிக்கு அளித்த அருள்_பெரும்_ஜோதி

152. நன்று அறிவு அறியா நாயினேன்-தனையும்
அன்று வந்து ஆண்ட அருள்_பெரும்_ஜோதி

153. நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருள்_பெரும்_ஜோதி

154. தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்
ஆத்திரம் அளித்த அருள்_பெரும்_ஜோதி

155. எச் சோதனைகளும் இயற்றாது எனக்கே
அச்சோ என்று அருள் அருள்_பெரும்_ஜோதி

156. ஏறா நிலை நடு ஏற்றி என்றனை ஈண்டு
ஆறாறு கடத்திய அருள்_பெரும்_ஜோதி

157. தாபத் துயரம் தவிர்த்து உலகு உறும் எலா
ஆபத்தும் நீக்கிய அருள்_பெரும்_ஜோதி

158. மருள் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே
அருள் குரு ஆகிய அருள்_பெரும்_ஜோதி

159. உருவமும் அருவமும் உபயமும் ஆகிய
அருள் நிலை தெரித்த அருள்_பெரும்_ஜோதி

160. இருள் அறுத்து என் உளத்து எண்ணியாங்கு அருளி
அருள் அமுது அளித்த அருள்_பெரும்_ஜோதி

161. தெருள் நிலை இது எனத் தெருட்டி என் உளத்து இருந்து
அருள் நிலை காட்டிய அருள்_பெரும்_ஜோதி

162. பொருள் பதம் எல்லாம் புரிந்து மேல் ஓங்கிய
அருள் பதம் அளித்த அருள்_பெரும்_ஜோதி

163. உருள் சகடு ஆகிய உளம் சலியா வகை
அருள் வழி நிறுத்திய அருள்_பெரும்_ஜோதி

164. வெருள் மன மாயை வினை இருள் நீக்கி உள்
அருள் விளக்கு ஏற்றிய அருள்_பெரும்_ஜோதி

165. சுருள் விரிவு உடை மனச் சுழல் எலாம் அறுத்தே
அருள் ஒளி நிரப்பிய அருள்_பெரும்_ஜோதி

166. விருப்போடு இகலுறு வெறுப்பும் தவிர்த்தே
அருள் பேறு அளித்த அருள்_பெரும்_ஜோதி

167. அருள் பேர் தரித்து உலகு அனைத்தும் மலர்ந்திட
அருள் சீர் அளித்த அருள்_பெரும்_ஜோதி

168. உலகு எலாம் பரவ என் உள்ளத்து இருந்தே
அலகு_இலா ஒளி செய் அருள்_பெரும்_ஜோதி

169. விண்ணினுள் விண்ணாய் விண் நடு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருள்_பெரும்_ஜோதி

170. விண்ணுறு விண்ணாய் விண் நிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருள்_பெரும்_ஜோதி

171. காற்றினுள் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி

172. காற்றுறு காற்றாய்க் கால் நிலைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி

173. அனலினுள் அனலாய் அனல் நடு அனலாய்
அனலுற விளங்கும் அருள்_பெரும்_ஜோதி

174. அனலுறும் அனலாய் அனல் நிலை அனலாய்
அனலுற வயங்கும் அருள்_பெரும்_ஜோதி

175. புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனை என வயங்கும் அருள்_பெரும்_ஜோதி

176. புனலுறு புனலாய்ப் புனல் நிலைப் புனலாய்
அனை எனப் பெருகும் அருள்_பெரும்_ஜோதி

177. புவியினுள் புவியாய்ப் புவி நடுப் புவியாய்
அவை தர வயங்கும் அருள்_பெரும்_ஜோதி

178. புவியுறு புவியாய்ப் புவி நிலைப் புவியாய்
அவை கொள விரிந்த அருள்_பெரும்_ஜோதி

179. விண் நிலை சிவத்தின் வியன் நிலை அளவி
அண்ணுற அமைந்த அருள்_பெரும்_ஜோதி

180. வளி நிலைச் சத்தியின் வளர் நிலை அளவி
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

181. நெருப்பு-அது நிலை நடு நிலை எலாம் அளவி
அருப்பிட வகுத்த அருள்_பெரும்_ஜோதி

182. நீர் நிலை திரை வளர் நிலை-தனை அளவி
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

183. புவி நிலைச் சுத்தமாம் பொன் பதி அளவி
அவையுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

184. மண்ணினில் திண்மையை வகுத்ததில் கிடக்கை
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

185. மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

186. மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திறம்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

187. மண்ணினில் நாற்றம் வகுத்ததில் பல் வகை
அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி

188. மண்ணினில் பற்பல வகை கரு நில இயல்
அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி

189. மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல் பயன்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

190. மண்ணிடை அடி நிலை வகுத்ததில் பல் நிலை
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

191. மண்ணில் ஐந்தைந்து வகையும் கலந்துகொண்டு
அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி

192. மண்ணியல் சத்திகள் மண் செயல் சத்திகள்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

193. மண்ணுருச் சத்திகள் மண் கலைச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

194. மண் ஒளிச் சத்திகள் மண் கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

195. மண் கணச் சத்திகள் வகை பலபலவும்
அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி

196. மண் நிலைச் சத்தர்கள் வகை பலபலவும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

197. மண் கரு உயிர்த் தொகை வகை விரி பலவா
அண்கொள அமைத்த அருள்_பெரும்_ஜோதி

198. மண்ணினில் பொருள் பல வகை விரி வெவ்வேறு
அண்ணுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி

199. மண்ணுறு நிலை பல வகுத்ததில் செயல் பல
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

200. மண்ணியல் பலபல வகுத்ததில் பிறவும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

201. மண்ணிடைப் பக்குவம் வகுத்ததில் பயன் பல
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

202. நீரினில் தண்மையும் நிகழ் ஊறு ஒழுக்கமும்
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

203. நீரினில் பசுமையை நிறுத்தி அதில் பல
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

204. நீரிடைப் பூ இயல் நிகழுறு திற இயல்
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி

205. நீரினில் சுவை நிலை நிரைத்து அதில் பல் வகை
ஆருறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி

206. நீரினில் கரு நிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

207. நீரிடை நான்கு இயல் நிலவுவித்து அதில் பல
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி

208. நீரிடை அடி நடு நிலையுற வகுத்து அனல்
ஆர்தரப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி

209. நீரிடை ஒளி இயல் நிகழ் பல குண இயல்
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி

210. நீரிடைச் சத்திகள் நிகழ் வகை பலபல
ஆர்தர வகுத்த அருள்_பெரும்_ஜோதி

211. நீரினில் சத்தர்கள் நிறை வகை உறை வகை
ஆர்தரப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி

212. நீரிடை உயிர் பல நிகழுறு பொருள் பல
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

213. நீரிடை நிலை பல நிலையுறு செயல் பல
ஆர்கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி

214. நீர் உறு பக்குவ நிறைவு உறு பயன் பல
ஆருற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

215. நீர் இயல் பலபல நிறைத்து அதில் பிறவும்
ஆர்தரப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி

216. தீயினில் சூட்டு இயல் சேர்தரச் செலவு இயல்
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

217. தீயினில் வெண்மைத் திகழ் இயல் பலவாய்
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

218. தீயிடைப் பூ எலாம் திகழுறு திறம் எலாம்
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

219. தீயிடை ஒளியே திகழுற அமைத்து அதில்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி

220. தீயிடை அரு நிலை திரு நிலை கரு நிலை
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

221. தீயிடை மூ_இயல் செறிவித்து அதில் பல
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி

222. தீயிடை நடு நிலை திகழ் நடு நடு நிலை
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

223. தீயிடைப் பெரும் திறல் சித்திகள் பலபல
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

224. தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும்
ஆயுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

225. தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி

226. தீயிடை உயிர் பல திகழுறு பொருள் பல
ஆய் வகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி

227. தீயிடை நிலை பல திகழ் செயல் பல பயன்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி

228. தீயினில் பக்குவம் சேர் குணம் இயல் குணம்
ஆய் பல வகுத்த அருள்_பெரும்_ஜோதி

229. தீயிடை உருக்கு இயல் சிறப்பு இயல் பொது இயல்
ஆயுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

230. தீ இயல் பலபல செறித்து அதில் பலவும்
ஆயுறப் புரிந்த அருள்_பெரும்_ஜோதி

231. காற்றிடை அசை இயல் கலை இயல் உயிர் இயல்
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி

232. காற்றிடைப் பூ இயல் கருதுறு திற இயல்
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

233. காற்றினில் ஊறு இயல் காட்டுறு பலபல
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி

234. காற்றினில் பெரு நிலை கரு நிலை அளவு இல
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

235. காற்றிடை ஈர் இயல் காட்டி அதில் பல
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

236. காற்றினில் இடை நடு கடை நடு அகப் புறம்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

237. காற்றினில் குணம் பல கணம் பல வணம் பல
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி

238. காற்றிடைச் சத்திகள் கணக்கு_இல உலப்பு_இல
ஆற்றவும் அமைத்த அருள்_பெரும்_ஜோதி

239. காற்றிடைச் சத்தர்கள் கணிதம் கடந்தன
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

240. காற்றிடை உயிர் பல கதி பல கலை பல
ஆற்றலின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி

241. காற்றிடை நால் நிலைக் கருவிகள் அனைத்தையும்
ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

242. காற்றிடை உணர் இயல் கருது இயல் ஆதிய
ஆற்றுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

243. காற்றிடைச் செயல் எலாம் கருதிய பயன் எலாம்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

244. காற்றினில் பக்குவக் கதி எலாம் விளைவித்து
ஆற்றலின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

245. காற்றினில் காலம் கருதுறு வகை எலாம்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

246. காற்று இயல் பலபல கணித்து அதில் பிறவும்
ஆற்றவும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

247. வெளியிடைப் பகுதியின் விரிவு இயல் அணைவு இயல்
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

248. வெளியிடைப் பூ எலாம் வியப்புறு திறன் எலாம்
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

249. வெளியினில் ஒலி நிறை வியன் நிலை அனைத்தும்
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

250. வெளியிடைக் கரு நிலை விரி நிலை அரு நிலை
அளி கொள வகுத்த அருள்_பெரும்_ஜோதி

251. வெளியிடை முடி நிலை விளங்குற வகுத்தே
அளி பெற விளக்கும் அருள்_பெரும்_ஜோதி

252. வெளியினில் சத்திகள் வியப்புறு சத்தர்கள்
அளியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

253. வெளியிடை ஒன்றே விரித்து அதில் பற்பல
அளிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி

254. வெளியிடை பலவே விரித்து அதில் பற்பல
அளிதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி

255. வெளியிடை உயிர் இயல் வித்து இயல் சித்து இயல்
அளி பெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

256. வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும்
அளியுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

257. புறம் நடுவொடு கடை புணர்ப்பித்து ஒரு முதல்
அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

258. புறம் தலை நடுவொடு புணர்ப்பித்து ஒரு கடை
அறம் பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

259. அகப் புற நடுக் கடை அணைவால் புறம் முதல்
அகப்பட வகுத்த அருள்_பெரும்_ஜோதி

260. அகப் புற நடு முதல் அணைவால் புறக் கடை
அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி

261. கருது அகம் நடுவொடு கடை அணைந்து அகம் முதல்
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

262. தணி அகம் நடுவொடு தலை அணைந்து அகக் கடை
அணியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

263. அக நடு புறக் கடை அணைந்து அகப்புறம் முதல்
அகமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

264. அக நடு புறத் தலை அணைந்து அகப்புறக் கடை
அகலிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி

265. அக நடு அதனால் அகப்புற நடுவை
அகம் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

266. அகப்புற நடுவால் அணி புற நடுவை
அகப்பட அமைத்த அருள்_பெரும்_ஜோதி

267. புற நடு அதனால் புறப்புற நடுவை
அறமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

268. புகல அரும் அகண்ட பூரண நடுவால்
அக நடு வகுத்த அருள்_பெரும்_ஜோதி

269. புறப்புறக் கடை முதல் புணர்ப்பால் புறப்புறம்
அறக் கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

270. புறத்து இயல் கடை முதல் புணர்ப்பால் புறத்துறும்
அறக் கணம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

271. அகப்புறக் கடை முதல் அணைவால் அக் கணம்
அகத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

272. அகக் கடை முதல் புணர்ப்பு-அதனால் அகக் கணம்
அகத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி

273. வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
ஆன்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

274. நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த அருள்_பெரும்_ஜோதி

275. நீர் மேல் நெருப்பும் நெருப்பின் மேல் உயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

276. புனல் மேல் புவியும் புவி மேல் புடைப்பும்
அனல் மேல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

277. பகுதி வான் வெளியில் படர்ந்த மா பூத
அகல் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி

278. உயிர் வெளி இடையே உரைக்க அரும் பகுதி
அய வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி

279. உயிர் வெளி-அதனை உணர் கலை வெளியில்
அயல்_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

280. கலை வெளி-அதனைக் கலப்பு_அறு சுத்த
அலர் வெளி வகுத்த அருள்_பெரும்_ஜோதி

281. சுத்த நல் வெளியைத் துரிசு_அறு பர வெளி
அத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி

282. பர வெளி-அதனைப் பரம்பர வெளியில்
அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

283. பரம்பர வெளியைப் பராபர வெளியில்
அரம் தெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

284. பராபர வெளியைப் பகர் பெருவெளியில்
அராவு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

285. பெருவெளி அதனைப் பெரும் சுக வெளியில்
அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

286. குணம் முதல் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

287. மனம் முதல் கருவிகள் மன் உயிர் வெளியிடை
அனமுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

288. காலமே முதலிய கருவிகள் கலை வெளி
ஆலுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

289. துரிசு_அறு கருவிகள் சுத்த நல் வெளியிடை
அரசுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

290. இ வெளி எல்லாம் இலங்க அண்டங்கள்
அ-வயின் அமைத்த அருள்_பெரும்_ஜோதி

291. ஓங்கிய அண்டம் ஒளி பெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி

292. சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண்டங்களை
அருள் திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

293. காவல் செய் தலைவரைக் காவல் அண்டங்களை
ஆவகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி

294. அழித்தல் செய் தலைவரை அவர் அண்டங்களை
அழுக்கு_அற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

295. மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை
அறத்தொடு வகுத்த அருள்_பெரும்_ஜோதி

296. தெளிவு செய் தலைவரைத் திகழும் அண்டங்களை
அளி பெற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

297. விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை
அ திறல் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

298. ஓங்கார சத்திகள் உற்ற அண்டங்களை
ஆங்காக அமைத்த அருள்_பெரும்_ஜோதி

299. சத்தத் தலைவரைச் சாற்றும் அண்டங்களை
அ தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி

300. நாதமாம் பிரமமும் நாத அண்டங்களை
ஆதரம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

301. பகர் பரா சத்தியைப் பதியும் அண்டங்களும்
அகம் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

302. பரசிவ பதியைப் பரசிவாண்டங்களை
அரசு உற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

303. எண்_இல் பல் சத்தியை எண்_இல் அண்டங்களை
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

304. அளவு_இல் பல் சத்தரை அளவு_இல் அண்டங்களை
அளவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

305. உயிர் வகை அண்டம் உலப்பு_இல எண்_இல
அயர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

306. களவு_இல கடல் வகை கங்கு_இல கரை_இல
அளவு_இல வகுத்த அருள்_பெரும்_ஜோதி

307. கடல்-அவை அனைத்தும் கரை இன்றி நிலையுற
அடல் அனல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி

308. கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும்
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

309. கடலிடைப் பல் வளம் கணித்து அதில் பல் உயிர்
அடல் உற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

310. மலையிடைப் பல் வளம் வகுத்து அதில் பல் உயிர்
அலைவு_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

311. ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம்
அன்று_அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

312. பத்திடை ஆயிரம் பகர் அதில் கோடி
அத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

313. நூற்றிடை இலக்கம் நுவல் அதில் அனந்தம்
ஆற்றிடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி

314. கோடியில் அனந்த கோடி பல் கோடி
ஆடுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

315. வித்து இயல் ஒன்றாய் விளைவு இயல் பலவாய்
அத் தகை அமைத்த அருள்_பெரும்_ஜோதி

316. விளைவு இயல் அனைத்தும் வித்திடை அடங்க
அளவு செய்து அமைத்த அருள்_பெரும்_ஜோதி

317. வித்தும் பதமும் விளை உபகரிப்பும்
அத் திறல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி

318. வித்திடை முளையும் முளையிடை விளைவும்
அத் தக அமைத்த அருள்_பெரும்_ஜோதி

319. வித்தினுள் வித்தும் வித்து-அதில் வித்தும்
அத் திறம் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

320. விளைவினுள் விளைவும் விளைவு-அதில் விளைவும்
அளையுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

321. முளை-அதின் முளையும் முளையினுள் முளையும்
அளைதர அமைத்த அருள்_பெரும்_ஜோதி

322. வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

323. பதம்-அதில் பதமும் பதத்தினுள் பதமும்
அதிர்வு அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

324. ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும்
அற்று என வகுத்த அருள்_பெரும்_ஜோதி

325. பொருள் நிலை உறுப்பு இயல் பொது வகை முதலிய
அருளுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

326. உறவினில் உறவும் உறவினில் பகையும்
அறனுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

327. பகையினில் பகையும் பகையினில் உறவும்
அகைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

328. பாதியும் முழுதும் பதி செயும் அந்தமும்
ஆதியும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

329. துணையும் நிமித்தமும் துலங்கு-அதின் அதுவும்
அணைவுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

330. உரு-அதின் உருவும் உருவினுள் உருவும்
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

331. அருவினுள் அருவும் அரு-அதில் அருவும்
அருள் இயல் அமைத்த அருள்_பெரும்_ஜோதி

332. கரணமும் இடமும் கலை முதல் அணையும் ஓர்
அரண் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி

333. உரு-அதில் அருவும் அரு-அதில் உருவும்
அருளுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

334. வண்ணமும் வடிவும் மயங்கிய வகை பல
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

335. சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும்
அறிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி

336. பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்
அருள் நிலை வகுத்த அருள்_பெரும்_ஜோதி

337. திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும்
அண்மையின் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

338. மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும்
அன்மை அற்று அமைத்த அருள்_பெரும்_ஜோதி

339. அடியினுள் அடியும் அடியிடை அடியும்
அடியுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

340. நடுவினுள் நடுவும் நடு-அதில் நடுவும்
அடர்வுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

341. முடியினுள் முடியும் முடியினில் முடியும்
அடர்தர அமைத்த அருள்_பெரும்_ஜோதி

342. அகப்பூ அக உறுப்பு ஆக்க அதற்கு அவை
அகத்தே வகுத்த அருள்_பெரும்_ஜோதி

343. புறப்பூ புறத்தில் புனையுரு ஆக்கிட
அறத்துடன் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

344. அகப்புறப்பூ அகப்புற உறுப்பு இயற்றிட
அகத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி

345. புறப்புறப்பூ-அதில் புறப்புற உறுப்பு உற
அறத்திடை வகுத்த அருள்_பெரும்_ஜோதி

346. பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்
ஆர்_உயிர் அமைக்கும் அருள்_பெரும்_ஜோதி

347. ஊர்வன பறப்பன உறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

348. அசைவு_இல அசைவு_உள ஆர்_உயிர்த் திரள் பல
அசல் அற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

349. அறிவு ஒரு வகை முதல் ஐ வகை அறு வகை
அறிதர வகுத்த அருள்_பெரும்_ஜோதி

350. வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன் உற
அவ்வாறு அமைத்த அருள்_பெரும்_ஜோதி

351. சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத் தகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி

352. பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

353. பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

354. பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

355. பெண் இயல் ஆணும் ஆண் இயல் பெண்ணும்
அண்ணுற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

356. பெண் திறல் புறத்தும் ஆண் திறல் அகத்தும்
அண்டுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

357. பெண் இயல் மனமும் ஆண் இயல் அறிவும்
அண்ணுற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

358. தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல்
அனைத்துற வகுத்த அருள்_பெரும்_ஜோதி

359. உனற்கு அரும் உயிர் உள உடல் உள உலகு உள
அனைத்தையும் வகுத்த அருள்_பெரும்_ஜோதி

360. ஓவுறா எழு வகை உயிர் முதல் அனைத்தும்
ஆவகை வகுத்த அருள்_பெரும்_ஜோதி

361. பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐபெற அமைத்த அருள்_பெரும்_ஜோதி

362. தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை
ஆய்வுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

363. முட்டை-வாய்ப் பயிலும் முழு உயிர்த் திரள்களை
அட்டமே காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

364. நிலம் பெறும் உயிர் வகை நீள் குழு அனைத்தும்
அலம்பெறக் காத்தருள் அருள்_பெரும்_ஜோதி

365. வேர்வுற உதித்த மிகும் உயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

366. உடலுறு பிணியால் உயிர் உடல் கெடா வகை
அடலுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

367. சிசு முதல் பருவச் செயல்களின் உயிர்களை
அசைவு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

368. உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும்
அயர்வு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

369. பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை
ஆடுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

370. முச்சுடர் ஆதியால் எச் சக உயிரையும்
அச்சு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

371. வான் முகில் சத்தியால் மழை பொழிவித்து உயிர்
ஆன் அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

372. இன்புறு சத்தியால் எழில் மழை பொழிவித்து
அன்புறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

373. எண் இயல் சத்தியால் எல்லா உலகினும்
அண் உயிர் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

374. அண்டப் புறப்புற அமுதம் பொழிந்து உயிர்
அண்டுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

375. தேவரை எல்லாம் திகழ் புற அமுது அளித்து
ஆவகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

376. அகப்புற அமுது அளித்து ஐவர் ஆதிகளை
அகப்படக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

377. தரும் அக அமுதால் சத்தி சத்தர்களை
அருளினில் காக்கும் அருள்_பெரும்_ஜோதி

378. காலமும் நியதியும் காட்டி எவ்வுயிரையும்
ஆலுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

379. விச்சையை இச்சையை விளைவித்து உயிர்களை
அச்சு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

380. போகமும் களிப்பும் பொருந்துவித்து உயிர்களை
ஆகமுள் காக்கும் அருள்_பெரும்_ஜோதி

381. கலை அறிவு அளித்துக் களிப்பினில் உயிர் எலாம்
அலைவு அறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

382. விடய நிகழ்ச்சியால் மிகும் உயிர் அனைத்தையும்
அடைவுறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

383. துன்பு அளித்து ஆங்கே சுகம் அளித்து உயிர்களை
அன்புறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

384. கரணேந்தியத்தால் களிப்புற உயிர்களை
அரணேர்ந்து அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி

385. எத் தகை எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு
அத் தகை அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி

386. எப்படி எவ்வுயிர் எண்ணின அ உயிர்க்கு
அப்படி அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி

387. ஏங்காது உயிர்த் திரள் எங்கெங்கு இருந்தன
ஆங்காங்கு அளித்து அருள் அருள்_பெரும்_ஜோதி

388. சொல்லுறும் அசுத்தத் தொல் உயிர்க்கு அவ்வகை
அல்லலில் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

389. சுத்தமும் அசுத்தமும் தோய் உயிர்க்கு இருமையின்
அ தகை காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

390. வாய்ந்திடும் சுத்த வகை உயிர்க்கு ஒருமையின்
ஆய்ந்துறக் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

391. எவை எலாம் எவை எலாம் ஈண்டின ஈண்டின
அவை எலாம் காத்து அருள் அருள்_பெரும்_ஜோதி

392. அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும்
அண்டு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

393. பிண்டத் துரிசையும் பேர்_உயிர்த் துரிசையும்
அண்டு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

394. உயிர் உறு மாயையின் உறு விரிவு அனைத்தும்
அயிர் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

395. உயிர் உறும் இரு_வினை உறு விரிவு அனைத்தும்
அயர்வு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

396. காமப் புடைப்பு உயிர்-கண் தொடரா வகை
ஆம் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

397. பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம்
அங்கு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

398. மதம் புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு
அதம்பெற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

399. வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும்
அடர்பு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

400. சுத்தமும் அசுத்தமும் தோய்ந்த வாதனைகளை
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

401. நால்-வயின் துரிசும் நண்ணு உயிர் ஆதியில்
ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

402. நால்-வயின் படைப்பும் நால்-வயின் காப்பும்
ஆல் அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

403. மூவிடத்து இருமையின் முன்னிய தொழில்களில்
ஆவிடத்து அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

404. மூவிட மும்மையின் முன்னிய தொழில்களில்
ஆவிடம் அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

405. தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும்
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

406. சுத்த மா நிலையில் சூழுறு விரிவை
அத்தகை அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

407. கரைவின் மாமாயைக் கரும் பெரும் திரையால்
அரைசு-அது மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி

408. பேர் உறு நீலப் பெரும் திரை-அதனால்
ஆர்_உயிர் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி

409. பச்சைத் திரையால் பர வெளி-அதனை
அச்சு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி

410. செம்மைத் திரையால் சித்து உறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி

411. பொன்மைத் திரையால் பொருள் உறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி

412. வெண்மைத் திரையால் மெய்ப் பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி

413. கலப்புத் திரையால் கருது அனுபவங்களை
அலப்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி

414. விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்பு உற மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி

415. தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத் திறம் மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி

416. திரை மறைப்பு எல்லாம் தீர்த்து ஆங்காங்கே
அரைசு உறக் காட்டும் அருள்_பெரும்_ஜோதி

417. தோற்ற மாமாயைத் தொடர்பு அறுத்து அருளின்
ஆற்றலைக் காட்டும் அருள்_பெரும்_ஜோதி

418. சுத்த மாமாயைத் தொடர்பு அறுத்து அருளை
அத்தகை காட்டும் அருள்_பெரும்_ஜோதி

419. எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே
அனுக்கிரகம் புரி அருள்_பெரும்_ஜோதி

420. விடய மறைப்பு எலாம் விடுவித்து உயிர்களை
அடைவுறத் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி

421. சொருப மறைப்பு எலாம் தொலைப்பித்து உயிர்களை
அருளினில் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி

422. மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே
அறத்தொடு தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி

423. எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே
அவ்வகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி

424. கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க்கு இன்பம்
அடையுறத் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி

425. சத்திகள் மறைப்பைத் தவிர்த்தவர்க்கு இன்பம்
அத்துறத் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி

426. சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்தவர்க்கு இன்பம்
அத்தகை தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி

427. படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை
அடைப்புறப் படைக்கும் அருள்_பெரும்_ஜோதி

428. காக்கும் தலைவர்கள் கணக்கில் பல் கோடியை
ஆக்குறக் காக்கும் அருள்_பெரும்_ஜோதி

429. அடக்கும் தலைவர்கள் அளவு_இலர்-தம்மையும்
அடர்ப்பு அற அடக்கும் அருள்_பெரும்_ஜோதி

430. மறைக்கும் தலைவர்கள் வகை பல கோடியை
அறத்தொடு மறைக்கும் அருள்_பெரும்_ஜோதி

431. தெருட்டும் தலைவர்கள் சேர் பல கோடியை
அருள் திறம் தெருட்டும் அருள்_பெரும்_ஜோதி

432. ஐந்தொழில் ஆதி செய் ஐவர் ஆதிகளை
ஐந்தொழில் ஆதி செய் அருள்_பெரும்_ஜோதி

433. இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில்
அறம் தலையளித்த அருள்_பெரும்_ஜோதி

434. செத்தவர் எல்லாம் சிரித்தாங்கு எழு திறல்
அத்தகை காட்டிய அருள்_பெரும்_ஜோதி

435. இறந்தவர் எழுக என்று எண்ணியாங்கு எழுப்பிட
அறம் துணை எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி

436. செத்தவர் எழுக எனச் செப்பியாங்கு எழுப்பிட
அத் திறல் எனக்கு அருள் அருள்_பெரும்_ஜோதி

437. சித்து எலாம் வல்ல திறல் அளித்து எனக்கே
அத்தன் என்று ஓங்கும் அருள்_பெரும்_ஜோதி

438. ஒன்று அது இரண்டு அது ஒன்றின் இரண்டு அது
ஒன்றினுள் ஒன்று அது ஒன்று எனும் ஒன்றே

439. ஒன்று அல இரண்டு அல ஒன்றின் இரண்டு அல
ஒன்றினுள் ஒன்று அல ஒன்று எனும் ஒன்றே

440. ஒன்றினில் ஒன்று உள ஒன்றினில் ஒன்று இல
ஒன்றுற ஒன்றிய ஒன்று எனும் ஒன்றே

441. களங்கம் நீத்து உலகம் களிப்புற மெய் நெறி
விளங்க என் உள்ளே விளங்கும் மெய்ப்பொருளே

442. மூவிரு நிலையின் முடி நடு முடி மேல்
ஓ அற விளங்கும் ஒருமை மெய்ப்பொருளே

443. எழு நிலை மிசையே இன்பு உரு ஆகி
வழு நிலை நீக்கி வயங்கு மெய்ப்பொருளே

444. நவ நிலை மிசையே நடுவுறு நடுவே
சிவ மயம் ஆகித் திகழ்ந்த மெய்ப்பொருளே

445. ஏகாதச நிலை யாது அதின் நடுவே
ஏகாதனம் மிசை இருந்த மெய்ப்பொருளே

446. திரையோதச நிலை சிவ வெளி நடுவே
வரையோ தரு சுக வாழ்க்கை மெய்ப்பொருளே

447. ஈர்_எண் நிலை என இயம்பும் மேல் நிலையில்
பூரண சுகமாய்ப் பொருந்தும் மெய்ப்பொருளே

448. எல்லா நிலைகளும் இசைந்து ஆங்காங்கே
எல்லாம் ஆகி இலங்கும் மெய்ப்பொருளே

449. மனாதிகள் பொருந்தா வான் நடு வானாய்
அனாதி உண்மை-அதாய் அமர்ந்த மெய்ப்பொருளே

450. தான் ஒரு தானாய்த் தானே தானாய்
ஊன் உயிர் விளக்கும் ஒரு தனிப் பொருளே

451. அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

452. இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய்
உயலுற விளங்கும் ஒரு தனிப் பொருளே

453. அருவினுள் அருவாய் அரு அரு அருவாய்
உருவினுள் விளங்கும் ஒரு பரம் பொருளே

454. அலகு_இலாச் சித்தாய் அது நிலை அதுவாய்
உலகு எலாம் விளங்கும் ஒரு தனிப் பொருளே

455. பொருளினுள் பொருளாய்ப் பொருள்-அது பொருளாய்
ஒருமையின் விளங்கும் ஒரு தனிப் பொருளே

456. ஆடுறு சித்திகள் அறுபத்துநான்கு எழு
கோடியும் விளங்கக் குலவும் மெய்ப்பொருளே

457. கூட்டுறு சித்திகள் கோடி பல் கோடியும்
ஆட்டுற விளங்கும் அருள் பெரும் பொருளே

458. அறிவுறு சித்திகள் அனந்த கோடிகளும்
பிறிவு அற விளக்கும் பெரும் தனிப் பொருளே

459. வீடுகள் எல்லாம் விதி நெறி விளங்க
ஆடல் செய்து அருளும் அரும் பெரும் பொருளே

460. பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க
உற்று அருளாடல் செய் ஒரு தனிப் பொருளே

461. பரத்தினில் பரமே பரத்தின் மேல் பரமே
பரத்தினுள் பரமே பரம்பரம் பரமே

462. பரம் பெறும் பரமே பரம் தரும் பரமே
பரம் பதம் பரமே பரம் சிதம்பரமே

463. பரம் புகழ் பரமே பரம் பகர் பரமே
பரம் சுக பரமே பரம் சிவ_பரமே

464. பரம் கொள் சிற்பரமே பரம் செய் தற்பரமே
தரம் கொள் பொன் பரமே தனிப் பெரும் பரமே

465. வரம் பராபரமே வணம் பராபரமே
பரம் பராபரமே பதம் பராபரமே

466. சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே

467. தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே சிற்சுக பதமே

468. தம்பரம் பதமே தனிச் சுகம் பதமே
அம்பரம் பதமே அருள் பரம் பதமே

469. தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே

470. நவம் தரு பதமே நடம் தரு பதமே
சிவம் தரு பதமே சிவசிவ பதமே

471. பிரம மெய்க் கதியே பிரம மெய்ப் பதியே
பிரம நிற்குணமே பிரம சிற்குணமே

472. பிரமமே பிரமப் பெரு நிலை மிசை உறும்
பரமமே பரம பதம் தரும் சிவமே

473. அவனோடு அவளாய் அதுவாய் அலவாய்
நவமா நிலை மிசை நண்ணிய சிவமே

474. எம் பொருள் ஆகி எமக்கு அருள் புரியும்
செம்பொருள் ஆகிய சிவமே சிவமே

475. ஒரு நிலை இதுவே உயர் நிலை எனும் ஒரு
திரு நிலை மேவிய சிவமே சிவமே

476. மெய் வைத்து அழியா வெறுவெளி நடுவுறு
தெய்வப் பதியாம் சிவமே சிவமே

477. புரை தவிர்த்து எனக்கே பொன் முடி சூட்டிச்
சிரம் உற நாட்டிய சிவமே சிவமே

478. கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்
செல்வமும் அளித்த சிவமே சிவமே

479. அருள் அமுது எனக்கே அளித்து அருள் நெறி-வாய்
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே

480. சத்து எலாம் ஆகியும் தான் ஒரு தானாம்
சித்து எலாம் வல்லதோர் திரு_அருள் சிவமே

481. எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருள் பெரும் சிவமே

482. ஆரே என்னினும் இரங்குகின்றார்க்குச்
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே

483. பொய் நெறி அனைத்தினும் புகுத்தாது எனை அருள்
செம் நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே

484. கொல்லா நெறியே குரு அருள் நெறி எனப்
பல் கால் எனக்குப் பகர்ந்த மெய்ச் சிவமே

485. உயிர் எலாம் பொதுவின் உளம்பட நோக்குக
செயிர் எலாம் விடுக எனச் செப்பிய சிவமே

486. பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த் திரள் ஒன்று என உரைத்த மெய்ச் சிவமே

487. உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச் சிவமே

488. இயல் அருள் ஒளி ஓர் ஏகதேசத்தினாம்
உயிர் ஒளி காண்க என்று உரைத்த மெய்ச் சிவமே

489. அருள் அலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள் நலம் பரவுக என்று அறைந்த மெய்ச் சிவமே

490. அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை
அருளுற முயல்க என்று அருளிய சிவமே

491. அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எலாம்
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே

492. அருள் பெறில் துரும்பு ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள் இது எனவே செப்பிய சிவமே

493. அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச் சிவமே

494. அருள் சுகம் ஒன்றே அரும்_பெறல் பெரும் சுகம்
மருள் சுகம் பிற என வகுத்த மெய்ச் சிவமே

495. அருள் பேறு-அதுவே அரும்_பெறல் பெரும் பேறு
இருள் பேறு அறுக்கும் என்று இயம்பிய சிவமே

496. அருள் தனி வல்லபம் அதுவே எலாம் செய்
பொருள் தனிச் சித்து எனப் புகன்ற மெய்ச் சிவமே

497. அருள் அறியார் தமை அறியார் எம்மையும்
பொருள் அறியார் எனப் புகன்ற மெய்ச் சிவமே

498. அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெறு நிலை
பொருள் நிலை காண்க எனப் புகன்ற மெய்ச் சிவமே

499. அருள் வடிவு-அதுவே அழியாத் தனி வடிவு
அருள் பெற முயலுக என்று அருளிய சிவமே

500. அருளே நம் இயல் அருளே நம் உரு
அருளே நம் வடிவாம் என்ற சிவமே

501. அருளே நம் அடி அருளே நம் முடி
அருளே நம் நடுவாம் என்ற சிவமே

502. அருளே நம் அறிவு அருளே நம் மனம்
அருளே நம் குணமாம் என்ற சிவமே

503. அருளே நம் பதி அருளே நம் பதம்
அருளே நம் இடமாம் என்ற சிவமே

504. அருளே நம் துணை அருளே நம் தொழில்
அருளே நம் விருப்பாம் என்ற சிவமே

505. அருளே நம் பொருள் அருளே நம் ஒளி
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே

506. அருளே நம் குலம் அருளே நம் இனம்
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே

507. அருளே நம் சுகம் அருளே நம் பெயர்
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே

508. அருள் ஒளி அடைந்தனை அருள் அமுது உண்டனை
அருள் மதி வாழ்க என்று அருளிய சிவமே

509. அருள் நிலை பெற்றனை அருள் வடிவுற்றனை
அருள் அரசு இயற்றுக என்று அருளிய சிவமே

510. உள்ளகத்து அதமர்ந்து எனது உயிரில் கலந்து அருள்
வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே

511. நிகர் இலா இன்ப நிலை நடு வைத்து எனைத்
தகவொடு காக்கும் தனிச் சிவ பதியே

512. சுத்த சன்மார்க்கச் சுக நிலை-தனில் எனைச்
சத்தியன் ஆக்கிய தனிச் சிவ பதியே

513. ஐவரும் காண்டற்கு அரும் பெரும் பொருள் என்
கைவரப் புரிந்த கதி சிவ பதியே

514. துன்பம் தொலைத்து அருள் சோதியால் நிறைந்த
இன்பம் எனக்கு அருள் எழில் சிவ பதியே

515. சித்தமும் வாக்கும் செல்லாப் பெரு நிலை
ஒத்து உறவு ஏற்றிய ஒரு சிவ பதியே

516. கையறவு அனைத்தும் கடிந்து எனைத் தேற்றி
வையம் மேல் வைத்த மா சிவ பதியே

517. இன்புறச் சிறியேன் எண்ணு-தோறு எண்ணு-தோறு
அன்பொடு என் கண்ணுறும் அருள் சிவ பதியே

518. பிழை எலாம் பொறுத்து எனுள் பிறங்கிய கருணை
மழை எலாம் பொழிந்து வளர் சிவ பதியே

519. உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது
குளத்தினும் நிரம்பிய குரு சிவ பதியே

520. பரமுடன் அபரம் பகர் நிலை இவை எனத்
திறமுற அருளிய திரு_அருள் குருவே

521. மதி நிலை இரவியின் வளர் நிலை அனலின்
திதி நிலை அனைத்தும் தெரித்த சற்குருவே

522. கண நிலை அவற்றின் கரு நிலை அனைத்தும்
குணமுறத் தெரித்து உள் குலவு சற்குருவே

523. பதி நிலை பசு நிலை பாச நிலை எலாம்
மதியுறத் தெரித்து உள் வயங்கு சற்குருவே

524. பிரம ரகசியம் பேசி என் உளத்தே
தரமுற விளங்கும் சாந்த சற்குருவே

525. பரம ரகசியம் பகர்ந்து எனது உளத்தே
வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே

526. சிவ ரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே
நவ நிலை காட்டிய ஞான சற்குருவே

527. சத்து இயல் அனைத்தும் சித்து இயல் முழுதும்
அத்தகை தெரித்த அருள் சிவ குருவே

528. அறிபவை எல்லாம் அறிவித்து என் உள்ளே
பிறிவு அற விளங்கும் பெரிய சற்குருவே

529. கேட்பவை எல்லாம் கேட்பித்து என் உளே
வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே

530. காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே
மாண் பதம் அளித்து வயங்கு சற்குருவே

531. செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே
உய்பவை அளித்து எனுள் ஓங்கு சற்குருவே

532. உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள்
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே

533. சாகாக் கல்வியின் தரம் எலாம் கற்பித்து
ஏகாக் கரப் பொருள் ஈந்த சற்குருவே

534. சத்தியமாம் சிவ சித்திகள் அனைத்தையும்
மெய்த் தகை அளித்து எனுள் விளங்கு சற்குருவே

535. எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்து எலாம்
வல்லான் என எனை வைத்த சற்குருவே

536. சீர் உற அருளாம் தேசு உற அழியாப்
பேர் உற என்னைப் பெற்ற நல் தாயே

537. பொருந்திய அருள் பெரும் போகமே உறுக எனப்
பெரும் தயவால் எனைப் பெற்ற நல் தாயே

538. ஆன்ற சன்மார்க்கம் அணி பெற எனை-தான்
ஈன்று அமுது அளித்த இனிய நல் தாயே

539. பசித்திடு-தோறும் என்-பால் அணைந்து அருளால்
வசித்து அமுது அருள் புரி வாய்மை நல் தாயே

540. தளர்ந்த-தோறு அடியேன் சார்பு அணைந்து என்னை
உளம் தெளிவித்த ஒருமை நல் தாயே

541. அருள் அமுதே முதல் ஐ வகை அமுதமும்
தெருளுற எனக்கு அருள் செல்வ நல் தாயே

542. இயல் அமுதே முதல் எழு வகை அமுதமும்
உயலுற எனக்கு அருள் உரிய நல் தாயே

543. நண்புறும் எண் வகை நவ வகை அமுதமும்
பண்புற எனக்கு அருள் பண்பு உடைத் தாயே

544. மற்று உள அமுத வகை எலாம் எனக்கே
உற்று உணவு அளித்து அருள் ஓங்கு நல் தாயே

545. கலக்கமும் அச்சமும் கடிந்து எனது உளத்தே
அலக்கணும் தவிர்த்து அருள் அன்பு உடைத் தாயே

546. துய்ப்பினில் அனைத்தும் சுகம் பெற அளித்து எனக்கு
எய்ப்பு எலாம் தவிர்த்த இன்பு உடைத் தாயே

547. சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே
சத்தியை அளித்த தயவு உடைத் தாயே

548. சத்தினிபாதம்-தனை அளித்து எனை மேல்
வைத்து அமுது அளித்த மரபு உடைத் தாயே

549. சத்தி சத்தர்கள் எலாம் சார்ந்து எனது ஏவல்செய்
சித்தியை அளித்த தெய்வ நல் தாயே

550. தன் நிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே
என்னை மேல் ஏற்றிய இனிய நல் தாயே

551. வெளிப்பட விரும்பிய விளைவு எலாம் எனக்கே
அளித்து அளித்து இன்பு செய் அன்பு உடைத் தாயே

552. எண் அகத்தொடு புறத்து என்னை எஞ்ஞான்றும்
கண் எனக் காக்கும் கருணை நல் தாயே

553. இன் அருள் அமுது அளித்து இறவாத் திறல் புரிந்து
என்னை வளர்த்திடும் இன்பு உடைத் தாயே

554. என் உடல் என் உயிர் என் அறிவு எல்லாம்
தன்ன என்று ஆக்கிய தயவு உடைத் தாயே

555. தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத்
தரியாது அணைத்த தயவு உடைத் தாயே

556. சினம் முதல் அனைத்தையும் தீர்த்து எனை நனவினும்
கனவினும் பிரியாக் கருணை நல் தாயே

557. தூக்கமும் சோம்பும் என் துன்பமும் அச்சமும்
ஏக்கமும் நீக்கிய என் தனித் தாயே

558. துன்பு எலாம் தவிர்த்து உளே அன்பு எலாம் நிரம்ப
இன்பு எலாம் அளித்த என் தனித் தந்தையே

559. எல்லா நன்மையும் என்றனக்கு அளித்த
எல்லாம்_வல்ல சித்து என் தனித் தந்தையே

560. நாயில் கடையேன் நலம் பெறக் காட்டிய
தாயில் பெரிதும் தயவு உடைத் தந்தையே

561. அறிவு இலாப் பருவத்து அறிவு எனக்கு அளித்தே
பிறிவு இலாது அமர்ந்த பேர்_அருள் தந்தையே

562. புல் நிகர் இல்லேன் பொருட்டு இவண் அடைந்த
தன் நிகர் இல்லாத் தனிப் பெரும் தந்தையே

563. அகத்தினும் புறத்தினும் அமர்ந்து அருள் ஜோதி
சகத்தினில் எனக்கே தந்த மெய்த் தந்தையே

564. இணை_இலாக் களிப்புற்று இருந்திட எனக்கே
துணை அடி சென்னியில் சூட்டிய தந்தையே

565. ஆதி ஈறு அறியா அருள் அரசாட்சியில்
சோதி மா மகுடம் சூட்டிய தந்தையே

566. எட்டிரண்டு அறிவித்து எனைத் தனி ஏற்றிப்
பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த் தந்தையே

567. தம் கோல் அளவு-அது தந்து அருள் ஜோதிச்
செங்கோல் செலுத்து எனச் செப்பிய தந்தையே

568. தன் பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில்
என் பொருள் ஆக்கிய என் தனித் தந்தையே

569. தன் வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில்
என் வடிவு ஆக்கிய என் தனித் தந்தையே

570. தன் சித்து அனைத்தையும் தன் சமுகத்தினில்
என் சித்து ஆக்கிய என் தனித் தந்தையே

571. தன் வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும்
என் வசம் ஆக்கிய என் உயிர்த் தந்தையே

572. தன் கையில் பிடித்த தனி அருள் ஜோதியை
என் கையில் கொடுத்த என் தனித் தந்தையே

573. தன்னையும் தன் அருள் சத்தியின் வடிவையும்
என்னையும் ஒன்று என இயற்றிய தந்தையே

574. தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல்
என்ன இயற்றிய என் தனித் தந்தையே

575. தன் உரு என் உரு தன் உரை என் உரை
என்ன இயற்றிய என் தனித் தந்தையே

576. சதுரப் பேர்_அருள் தனிப் பெரும் தலைவன் என்று
எதிர் அற்று ஓங்கிய என் உடைத் தந்தையே

577. மனம் வாக்கு அறியா வரைப்பினில் எனக்கே
இன வாக்கு அருளிய என் உயிர்த் தந்தையே

578. உணர்ந்துணர்ந்து உணரினும் உணராப் பெரு நிலை
அணைந்திட எனக்கே அருளிய தந்தையே

579. துரிய வாழ்வுடனே சுக பூரணம் எனும்
பெரிய வாழ்வு அளித்த பெரும் தனித் தந்தையே

580. ஈறு_இலாப் பதங்கள் யாவையும் கடந்த
பேறு அளித்து ஆண்ட பெருந்தகைத் தந்தையே

581. எவ்வகைத் திறத்தினும் எய்துதற்கு அரிதாம்
அவ்வகை நிலை எனக்கு அளித்த நல் தந்தையே

582. இனிப் பிறவா நெறி எனக்கு அளித்து அருளிய
தனிப் பெரும் தலைமைத் தந்தையே தந்தையே

583. பற்று அயர்ந்து அஞ்சிய பரிவு கண்டு அணைந்து எனைச்
சற்றும் அஞ்சேல் எனத் தாங்கிய துணையே

584. தளர்ந்த அத் தருணம் என் தளர்வு எலாம் தவிர்த்து உள்
கிளர்ந்திட எனக்குக் கிடைத்த மெய்த் துணையே

585. துறை இது வழி இது துணிவு இது நீ செயும்
முறை இது எனவே மொழிந்த மெய்த் துணையே

586. எங்கு உறு தீமையும் எனைத் தொடரா வகை
கங்குலும் பகலும் மெய்க் காவல் செய் துணையே

587. வேண்டிய வேண்டிய விருப்பு எலாம் எனக்கே
ஈண்டு இருந்து அருள் புரி என் உயிர்த் துணையே

588. இகத்தினும் பரத்தினும் எனக்கு இடர் சாராது
அகத்தினும் புறத்தினும் அமர்ந்த மெய்த் துணையே

589. அயர்வு அற எனக்கே அருள் துணை ஆகி என்
உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே

590. அன்பினில் கலந்து எனது அறிவினில் பயின்றே
இன்பினில் அளைந்த என் இன் உயிர் நட்பே

591. நான் புரிவன எலாம் தான் புரிந்து எனக்கே
வான் பதம் அளிக்க வாய்த்த நல் நட்பே

592. உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்டு
எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே

593. செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த
குற்றமும் குணமாக் கொண்ட என் நட்பே

594. குணம் குறி முதலிய குறித்திடாது எனையே
அணங்கு அறக் கலந்த அன்பு உடை நட்பே

595. பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல்
கணக்கும் தீர்த்து எனைக் கலந்த நல் நட்பே

596. சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும்
கவலையும் தவிர்த்து எனைக் கலந்த நல் நட்பே

597. களைப்பு அறிந்து எடுத்துக் கலக்கம் தவிர்த்து எனக்கு
இளைப்பு அறிந்து உதவிய என் உயிர் உறவே

598. தன்னைத் தழுவுறு தரம் சிறிது அறியா
என்னைத் தழுவிய என் உயிர் உறவே

599. மனக் குறை நீக்கி நல் வாழ்வு அளித்து என்றும்
எனக்கு உறவு ஆகிய என் உயிர் உறவே

600. துன்னும் அனாதியே சூழ்ந்து எனைப் பிரியாது
என் உறவு ஆகிய என் உயிர் உறவே

601. என்றும் ஓர் நிலையாய் என்றும் ஓர் இயலாய்
என்றும் உள்ளதுவாம் என் தனிச் சத்தே

602. அனைத்து உலகவைகளும் ஆங்காங்கு உணரினும்
இனைத்து என அறியா என் தனிச் சத்தே

603. பொது மறை முடிகளும் புகல் அவை முடிகளும்
இது எனற்கு அரிதாம் என் தனிச் சத்தே

604. ஆகம முடிகளும் அவை புகல் முடிகளும்
ஏகுதற்கு அரிதாம் என் தனிச் சத்தே

605. சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே
இத்தகை வழுத்தும் என் தனிச் சத்தே

606. துரியமும் கடந்ததோர் பெரிய வான் பொருள் என
உரைசெய் வேதங்கள் உன்னும் மெய்ச் சத்தே

607. அன்று அதன் அப்பால் அதன் பரத்தது-தான்
என்றிட நிறைந்த என் தனிச் சத்தே

608. என்றும் உள்ளதுவாய் எங்கும் ஓர் நிறைவாய்
என்றும் விளங்கிடும் என் தனிச் சித்தே

609. சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே

610. தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே

611. படி நிலை பலவாய்ப் பத நிலை பலவாய்
இடிவு அற விளங்கிடும் என் தனிச் சித்தே

612. மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
ஏற்பட விளக்கிடும் என் தனிச் சித்தே

613. உயிர் வகை பலவாய் உடல் வகை பலவாய்
இயலுற விளக்கிடும் என் தனிச் சித்தே

614. அறிவவை பலவாய் அறிவன பலவாய்
எறிவு அற விளக்கிடும் என் தனிச் சித்தே

615. நினைவவை பலவாய் நினைவன பலவாய்
இனைவு அற விளக்கிடும் என் தனிச் சித்தே

616. காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
ஏட்சியின் விளக்கிடும் என் தனிச் சித்தே

617. செய் வினை பலவாய்ச் செய்வன பலவாய்
எய்வு அற விளக்கிடும் என் தனிச் சித்தே

618. அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும்
எண்தர விளக்கும் என் தனிச் சித்தே

619. எல்லாம்_வல்ல சித்து என மறை புகன்றிட
எல்லாம் விளக்கிடும் என் தனிச் சித்தே

620. ஒன்று-அதில் ஒன்று என்று உரைக்கவும்படாதாய்
என்றும் ஓர் படித்தாம் என் தனி இன்பே

621. இது அது என்னா இயல் உடை அதுவாய்
எதிர் அற நிறைந்த என் தனி இன்பே

622. ஆக்குறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்து மேல்
ஏக்கு அற நிறைந்த என் தனி இன்பே

623. அறிவுக்கு அறிவினில் அது அதுஅதுவாய்
எறிவு அற்று ஓங்கிய என் தனி இன்பே

624. விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை
இடையிடை ஓங்கிய என் தனி இன்பே

625. இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும்
எம்மையும் நிரம்பிடும் என் தனி இன்பே

626. முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத்தவர்க்குமாம் என் தனி இன்பே

627. எல்லா நிலைகளின் எல்லா உயிர் உறும்
எல்லா இன்புமாம் என் தனி இன்பே

628. கரும்புறு சாறும் கனிந்த முக்கனியின்
விரும்புறும் இரதமும் மிக்க தீம் பாலும்

629. குணம் கொள் கோல்_தேனும் கூட்டி ஒன்றாக்கி
மணம்கொளப் பதம் செய் வகையுற இயற்றிய

630. உணவு எனப் பல கால் உரைக்கினும் நிகரா
வணம் உறும் இன்ப மயமே அதுவாய்க்

631. கலந்து அறிவுருவாய்க் கருதுதற்கு அரிதாய்
நலம் தரு விளக்கமும் நவில் அரும் தண்மையும்

632. உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள்
உள்ளதாய் என்றன் உயிர் உளம் உடம்புடன்

633. எல்லாம் இனிப்ப இயலுறு சுவை அளித்து
எல்லாம்_வல்ல சித்து இயற்கையது ஆகிச்

634. சாகா_வரமும் தனித்த பேர்_அறிவும்
மா காதலும் சிவ வல்லப சத்தியும்

635. செயற்கு அரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கு அறத் தரும் திறல் வண்மையது ஆகிப்

636. பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்

637. கடந்து எனது அறிவாம் கன மேல் சபை நடு
நடம் திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆர்_அமுதே

638. சத்திய அமுதே தனித் திரு_அமுதே
நித்திய அமுதே நிறை சிவ அமுதே

639. சச்சிதானந்தத் தனி முதல் அமுதே
மெய்ச் சிதாகாச விளைவு அருள் அமுதே

640. ஆனந்த அமுதே அருள் ஒளி அமுதே
தான் அந்தம் இல்லாத் தத்துவ அமுதே

641. நவ நிலை தரும் ஓர் நல்ல தெள் அமுதே
சிவ நிலை-தனிலே திரண்ட உள் அமுதே

642. பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெரும் சீர்க் கடவுள் வான் அமுதே

643. அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்
உகந்த நான் கிடத்தும் ஓங்கிய அமுதே

644. பனி முதல் நீக்கிய பரம்பர அமுதே
தனி முதல் ஆய சிதம்பர அமுதே

645. உலகு எலாம் கொள்ளினும் உலப்பு_இலா அமுதே
அலகு_இலாப் பெரும் திறல் அற்புத அமுதே

646. அண்டமும் அதன் மேல் அண்டமும் அவற்று உள
பண்டமும் காட்டிய பரம்பர மணியே

647. பிண்டமும் அதில் உறு பிண்டமும் அவற்று உள
பண்டமும் காட்டிய பராபர மணியே

648. நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற
அனைத்தையும் தரும் ஓர் அரும்_பெறல் மணியே

649. விண் பதம் அனைத்தும் மேல் பதம் முழுவதும்
கண்பெற நடத்தும் ககன மா மணியே

650. பார் பதம் அனைத்தும் பகர் அடி முழுவதும்
சார்புற நடத்தும் சர ஒளி மணியே

651. அண்ட கோடிகள் எலாம் அரை_கணத்து ஏகிக்
கண்டுகொண்டிட ஒளிர் கலை நிறை மணியே

652. சராசர உயிர்-தொறும் சாற்றிய பொருள்-தொறும்
விராவி உள் விளங்கும் வித்தக மணியே

653. மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்
தேவரும் மதிக்கும் சித்தி செய் மணியே

654. தாழ்வு எலாம் தவிர்த்துச் சகம் மிசை அழியா
வாழ்வு எனக்கு அளித்த வளர் ஒளி மணியே

655. நவ மணி முதலிய நலம் எலாம் தரும் ஒரு
சிவ மணி எனும் அருள் செல்வ மா மணியே

656. வான் பெறற்கு அரிய வகை எலாம் விரைந்து
நான் பெற அளித்த நாத மந்திரமே

657. கற்பம் பலபல கழியினும் அழியாப்
பொற்பு உற அளித்த புனித மந்திரமே

658. அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்
வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே

659. ஐந்து என எட்டு என ஆறு என நான்கு என
முந்துறு மறை முறை மொழியும் மந்திரமே

660. வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும்
ஓத நின்று உலவாது ஓங்கும் மந்திரமே

661. உடல் பிணி அனைத்தையும் உயிர்ப் பிணி அனைத்தையும்
அடர்ப்பு அறத் தவிர்த்த அருள் சிவ மருந்தே

662. சித்திக்கு மூலமாம் சிவ மருந்து என உளம்
தித்திக்கும் ஞானத் திரு_அருள் மருந்தே

663. இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும்
சிறந்த வல்லபம் உறு திரு_அருள் மருந்தே

664. மரணப் பெரும் பிணி வாரா வகை மிகு
கரணப் பெரும் திறல் காட்டிய மருந்தே

665. நரை திரை மூப்பு அவை நண்ணா வகை தரும்
உரைதரு பெரும் சீர் உடைய நல் மருந்தே

666. என்றே என்னினும் இளமையோடு இருக்க
நன்றே தரும் ஒரு ஞான மா மருந்தே

667. மலப் பிணி தவிர்த்து அருள் வலம் தருகின்றதோர்
நலத் தகை அது என நாட்டிய மருந்தே

668. சிற்சபை நடுவே திரு_நடம் புரியும்
அற்புத மருந்து எனும் ஆனந்த மருந்தே

669. இடையுறப்படாத இயற்கை விளக்கமாய்த்
தடை ஒன்றும் இல்லாத் தகவு உடையதுவாய்

670. மாற்று இவை என்ன மதித்து அளப்ப அரிதாய்
ஊற்றமும் வண்ணமும் ஒருங்கு உடையதுவாய்க்

671. காட்சிக்கு இனிய நல் கலை உடையதுவாய்
ஆட்சிக்கு உரிய பல் மாட்சியும் உடைத்தாய்

672. கைதவர் கனவினும் காண்டற்கு அரிதாய்ச்
செய் தவப் பயனாம் திரு_அருள் வலத்தால்

673. உளம் பெறும் இடம் எலாம் உதவுக எனவே
வளம்பட வாய்த்த மன்னிய பொன்னே

674. புடம் படாத் தரமும் விடம் படாத் திறமும்
வடம் படா நலமும் வாய்த்த செம்பொன்னே

675. மும்மையும் தரும் ஒரு செம்மையை உடைத்தாய்
இம்மையே கிடைத்து இங்கு இலங்கிய பொன்னே

676. எடுத்தெடுத்து உதவினும் என்றும் குறையாது
அடுத்தடுத்து ஓங்கும் மெய் அருள் உடைப் பொன்னே

677. தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடுவேம் எனக்
கிளர்ந்திட உரைத்துக் கிடைத்த செம்பொன்னே

678. எண்ணிய-தோறும் இயற்றுக என்று எனை
அண்ணி என் கரத்தில் அமர்ந்த பைம்பொன்னே

679. நீ கேள் மறக்கினும் நின்னை யாம் விட்டுப்
போகேம் என எனைப் பொருந்திய பொன்னே

680. எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்குப்
பண்ணிய தவத்தால் பழுத்த செம்பொன்னே

681. விண் இயல் தலைவரும் வியந்திட எனக்குப்
புண்ணியப் பயனால் பூத்த செம்பொன்னே

682. நால் வகை நெறியினும் நாட்டுக எனவே
பால் வகை முழுதும் பணித்த பைம்பொன்னே

683. எழு வகை நெறியினும் இயற்றுக எனவே
முழு வகை காட்டி முயங்கிய பொன்னே

684. எண்ணியபடி எலாம் இயற்றுக என்று எனைப்
புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே

685. ஊழி-தோறு ஊழி உலப்பு உறாது ஓங்கி
வாழி என்று எனக்கு வாய்த்த நல் நிதியே

686. இதம் உற ஊழி-தோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு
உதவினும் உலவாது ஓங்கும் நல் நிதியே

687. இரு_நிதி எழு_நிதி இயல் நவ_நிதி முதல்
திரு_நிதி எல்லாம் தரும் ஒரு நிதியே

688. எவ்வகை நிதிகளும் இந்த மா நிதியிடை
அவ்வகை கிடைக்கும் என்று அருளிய நிதியே

689. அற்புதம் விளங்கும் அருள் பெரு நிதியே
கற்பனை கடந்த கருணை மா நிதியே

690. நல் குண நிதியே சற்குண_நிதியே
நிர்க்குண நிதியே சிற்குண நிதியே

691. பளகு இலாது ஓங்கும் பளிக்கு மா மலையே
வளம் எலாம் நிறைந்த மாணிக்க_மலையே

692. மதி உற விளங்கும் மரகத மலையே
வதி தரு பேர்_ஒளி வச்சிர மலையே

693. உரை மனம் கடந்து ஆங்கு ஓங்கு பொன்_மலையே
துரிய மேல் வெளியில் சோதி மா மலையே

694. புற்புதம் திரை நுரை புரை முதல் இலது ஓர்
அற்புதக் கடலே அமுதத் தண் கடலே

695. இருள் கலை தவிர்த்து ஒளி எல்லாம் வழங்கிய
அருள் பெரும் கடலே ஆனந்த_கடலே

696. பவ_கடல் கடந்து நான் பார்த்த போது அருகே
உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே

697. என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்து உளம்
நன்று உற விளங்கிய நந்தனக் காவே

698. சேற்று நீர் இன்றி நல் தீம் சுவை தரும் ஓர்
ஊற்று நீர் நிரம்ப உடைய பூந் தடமே

699. கோடை-வாய் விரிந்த குளிர் தரு நிழலே
மேடை-வாய் வீசிய மெல்லிய காற்றே

700. களைப்பு அறக் கிடைத்த கருணை நல் நீரே
இளைப்பு அற வாய்த்த இன் சுவை உணவே

701. தென்னை-வாய்க் கிடைத்த செவ்விளநீரே
தென்னை வான் பலத்தில் திருகு தீம் பாலே

702. நீர் நசை தவிர்க்கும் நெல்லி அம் கனியே
வேர் விளை பலவின் மென் சுவைச் சுளையே

703. கட்டு மாம்பழமே கதலி வான் பழமே
இட்ட நல் சுவை செய் இலந்தை அம் கனியே

704. புனித வான் தருவில் புதுமையாம் பலமே
கனி எலாம் கூட்டிக் கலந்த தீம் சுவையே

705. இதம் தரு கரும்பில் எடுத்த தீம் சாறே
பதம் தரு வெல்லப் பாகினின் சுவையே

706. சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே
ஏலவே நாவுக்கு இனிய கற்கண்டே

707. உலப்பு உறாது இனிக்கும் உயர் மலை_தேனே
கலப்பு உறா மதுரம் கனிந்த கோல்_தேனே

708. நவை இலாது எனக்கு நண்ணிய நறவே
சுவை எலாம் திரட்டிய தூய தீம் பதமே

709. பதம் பெறக் காய்ச்சிய பசு நறும் பாலே
இதம் பெற உருக்கிய இளம் பசு_நெய்யே

710. உலர்ந்திடாது என்றும் ஒருபடித்து ஆகி
மலர்ந்து நல் வண்ணம் வயங்கிய மலரே

711. இகம் தரு புவி முதல் எவ்வுலகு உயிர்களும்
உகந்திட மணக்கும் சுகந்த நல் மணமே

712. யாழ் உறும் இசையே இனிய இன் இசையே
ஏழ் உறும் இசையே இயல் அருள் இசையே

713. திவள் ஒளிப் பருவம் சேர்ந்த நல்லவளே
அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே

714. நாத நல் வரைப்பின் நண்ணிய பாட்டே
வேத கீதத்தில் விளை திரு_பாட்டே

715. நல் மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே

716. நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே
எம் பலம் ஆகிய அம்பலப் பாட்டே

717. என் மன_கண்ணே என் அருள்_கண்ணே
என் இரு கண்ணே என் கணுள் மணியே

718. என் பெரும் களிப்பே என் பெரும் பொருளே
என் பெரும் திறலே என் பெரும் செயலே

719. என் பெரும் தவமே என் தவப் பலனே
என் பெரும் சுகமே என் பெரும் பேறே

720. என் பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே
என் பெரு வழக்கே என் பெரும் கணக்கே

721. என் பெரு நலமே என் பெரும் குலமே
என் பெரு வலமே என் பெரும் புலமே

722. என் பெரு வரமே என் பெரும் தரமே
என் பெரு நெறியே என் பெரு நிலையே

723. என் பெரும் குணமே என் பெரும் கருத்தே
என் பெரும் தயவே என் பெரும் கதியே

724. என் பெரும் பதியே என் உயிர் இயலே
என் பெரு நிறைவே என் தனி அறிவே

725. தோல் எலாம் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும்
மேல் எலாம் கட்டவை விட்டுவிட்டு இயங்கிட

726. என்பு எலாம் நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திட
மென்பு உடைத் தசை எலாம் மெய் உறத் தளர்ந்திட

727. இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட

728. மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல் எலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட

729. ஒள் நுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட

730. உள் நகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட

731. வாய் துடித்து அலறிட வளர் செவித் துளைகளில்
கூ இசைப் பொறி எலாம் கும்மெனக் கொட்டிட

732. மெய் எலாம் குளிர்ந்திட மென் மார்பு அசைந்திடக்
கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட

733. மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட

734. அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச்
சகம் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட

735. அறிவுரு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப்
பொறியுறும் ஆன்ம தற்போதமும் போயிடத்

736. தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கு ஒழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட

737. உலகு எலாம் விடயம் உள எலாம் மறைந்திட
அலகு_இலா அருளின் ஆசை மேல் பொங்கிட

738. என் உளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட
என் உளத்து ஓங்கிய என் தனி அன்பே

739. பொன் அடி கண்டு அருள் புத்தமுது உணவே
என் உளத்து எழுந்த என் உடை அன்பே

740. தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே

741. என் உளே அரும்பி என் உளே மலர்ந்து
என் உளே விரிந்த என் உடை அன்பே

742. என் உளே விளங்கி என் உளே பழுத்து
என் உளே கனிந்த என் உடை அன்பே

743. தன் உளே நிறைவு உறு தரம் எலாம் அளித்தே
என் உளே நிறைந்த என் தனி அன்பே

744. துன்பு உள அனைத்தும் தொலைத்து எனது உருவை
இன்பு உரு ஆக்கிய என்னுடை அன்பே

745. பொன் உடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என் உளம் கலந்த என் தனி அன்பே

746. தன் வசம் ஆகித் ததும்பி மேல் பொங்கி
என் வசம் கடந்த என் உடை அன்பே

747. தன் உளே பொங்கிய தண் அமுது உணவே
என் உளே பொங்கிய என் தனி அன்பே

748. அருள் ஒளி விளங்கிட ஆணவம் எனும் ஓர்
இருள் அற என் உளத்து ஏற்றிய விளக்கே

749. துன்புறு தத்துவத் துரிசு எலாம் நீக்கி நல்
இன்புற என் உளத்து ஏற்றிய விளக்கே

750. மயல் அற அழியா வாழ்வு மேன்மேலும்
இயல் உற என் உளத்து ஏற்றிய விளக்கே

751. இடு வெளி அனைத்தும் இயல் ஒளி விளங்கிட
நடு வெளி நடுவே நாட்டிய விளக்கே

752. கரு வெளி அனைத்தும் கதிர் ஒளி விளங்கிட
உரு வெளி நடுவே ஒளி தரு விளக்கே

753. தேற்றிய வேதத் திரு_முடி விளங்கிட
ஏற்றிய ஞான இயல் ஒளி விளக்கே

754. ஆகம முடி மேல் அருள் ஒளி விளங்கிட
வேகம்-அது அறவே விளங்கு ஒளி விளக்கே

755. ஆரியர் வழுத்திய அருள் நிலை அனாதி
காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே

756. தண்ணிய அமுதே தந்து எனது உளத்தே
புண்ணியம் பலித்த பூரண மதியே

757. உய் தர அமுதம் உதவி என் உளத்தே
செய் தவம் பலித்த திரு வளர் மதியே

758. பதி எலாம் தழைக்கப் பரம் பெறும் அமுத
நிதி எலாம் அளித்த நிறை திரு_மதியே

759. பால் எனத் தண் கதிர் பரப்பி எஞ்ஞான்றும்
மேல் வெளி விளங்க விளங்கிய மதியே

760. உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட
வயங்கிய கருணை_மழை பொழி மழையே

761. என்னையும் பணிகொண்டு என் உளே நிரம்ப
மன்னிய கருணை_மழை பொழி மழையே

762. உளம்கொளும் எனக்கே உவகை மேல் பொங்கி
வளம் கொளக் கருணை_மழை பொழி மழையே

763. நலம் தர உடல் உயிர் நல் அறிவு எனக்கே
மலர்ந்திடக் கருணை_மழை பொழி மழையே

764. தூய்மையால் எனது துரிசு எலாம் நீக்கி நல்
வாய்மையால் கருணை_மழை பொழி மழையே

765. வெம் மல இரவு-அது விடி தருணம்-தனில்
செம்மையில் உதித்து உளம் திகழ்ந்த செம் சுடரே

766. திரை எலாம் தவிர்த்துச் செவ்வி உற்று ஆங்கே
வரை எலாம் விளங்க வயங்கு செம் சுடரே

767. அலகு_இலாத் தலைவர்கள் அரசு செய் தத்துவ
உலகு எலாம் விளங்க ஓங்கு செம் சுடரே

768. முன்னுறு மல இருள் முழுவதும் நீக்கியே
என் உள வரை மேல் எழுந்த செம் சுடரே

769. ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த
சோதியாய் என் உளம் சூழ்ந்த மெய்ச் சுடரே

770. உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட
வெள் ஒளி காட்டிய மெய் அருள் கனலே

771. நலம் கொளப் புரிந்திடு ஞான யாகத்திடை
வலம்சுழித்து எழுந்து வளர்ந்த மெய்க் கனலே

772. வேதமும் ஆகம விரிவும் பரம்பர
நாதமும் கடந்த ஞான மெய்க் கனலே

773. எண்ணிய எண்ணிய எல்லாம் தர எனுள்
நண்ணிய புண்ணிய ஞான மெய்க் கனலே

774. வலம் உறு சுத்த சன்மார்க்க நிலை பெறு
நலம் எலாம் அளித்த ஞான மெய்க் கனலே

775. இரவொடு பகல் இலா இயல் பொது நடமிடு
பரம வேதாந்தப் பரம்பரம் சுடரே

776. வரம் நிறை பொதுவிடை வளர் திரு_நடம் புரி
பரம சித்தாந்தப் பதி பரம் சுடரே

777. சமரச சத்தியச் சபையில் நடம் புரி
சமரச சத்தியத் தற்சுயம் சுடரே

778. சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருள்_பெரும்_ஜோதி

779. மருள் எலாம் தவிர்த்து வரம் எலாம் கொடுத்தே
அருள் அமுது அருத்திய அருள்_பெரும்_ஜோதி

780. வாழி நின் பேர்_அருள் வாழி நின் பெரும் சீர்
ஆழி ஒன்று அளித்த அருள்_பெரும்_ஜோதி

781. என்னையும் பொருள் என எண்ணி என் உளத்தே
அன்னையும் அப்பனும் ஆகி வீற்றிருந்து

782. உலகியல் சிறிதும் உளம் பிடியா வகை
அலகு_இல் பேர்_அருளால் அறிவது விளக்கிச்

783. சிறுநெறி செல்லாத் திறன் அளித்து அழியாது
உறு நெறி உணர்ச்சி தந்து ஒளியுறப் புரிந்து

784. சாகா_கல்வியின் தரம் எலாம் உணர்த்திச்
சாகா_வரத்தையும் தந்து மேன்மேலும்

785. அன்பையும் விளைவித்து அருள் பேர்_ஒளியால்
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்

786. ஓர் உரு ஆக்கி யான் உன்னியபடி எலாம்
சீர் உறச் செய்து உயிர்த் திறம் பெற அழியா

787. அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருள்_பெரும்_ஜோதி

788. வெல்க நின் பேர்_அருள் வெல்க நின் பெரும் சீர்
அல்கல் இன்று ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி

789. உலகு உயிர்த் திரள் எலாம் ஒளி நெறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை

790. போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி

791. மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை

792. போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி

793. சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே
சத்திய நிலை-தனைத் தயவினில் தந்தனை

794. போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி

795. உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க

796. சுத்த சன்மார்க்கச் சுக நிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

797. போற்றி நின் பேர்_அருள் போற்றி நின் பெரும் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருள்_பெரும்_ஜோதி

798. அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி
அருள்_பெரும்_ஜோதி அருள்_பெரும்_ஜோதி