Irangan Malai Vallalar Songs

திருவருட்பா

மூன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. நன்று புரிவார் திருவொற்றி_நாதர் எனது நாயகனார்
மன்றுள் அமர்வார் மால் விடை மேல் வருவார் அவரை மாலையிட்ட
அன்று முதலாய் இன்றளவும் அந்தோ சற்றும் அணைந்து அறியேன்
குன்று நிகர் பூண் முலையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

2. தகை சேர் ஒற்றித் தலத்து அமர்ந்தார் தரியார் புரங்கள் தழலாக்க
நகை சேர்ந்தவரை மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும்
பகை சேர் மதன் பூச் சூடல் அன்றிப் பத_பூச் சூடப் பார்த்து அறியேன்
குகை சேர் இருள் பூங் குழலாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

3. தோடு ஆர் குழையார் ஒற்றியினார் தூயர்க்கு அலது சுகம் அருள
நாடார் அவர்க்கு மாலையிட்ட நாளே முதல் இந்நாள் அளவும்
சூடா மலர் போல் இருந்ததல்லால் சுகம் ஓர் அணுவும் துய்த்து அறியேன்
கோடா ஒல்கும் கொடியே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

4. அண்டர் எவர்க்கும் அறிவொண்ணார் அணியார் ஒற்றியார் நீல_
கண்டர் அவர்க்கு மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
பண்டம் அறியேன் பலன் அறியேன் பரிவோடு அணையப் பார்த்து அறியேன்
கொண்டல் மணக்குங் கோதாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

5. பாடல் கமழும் பதம்_உடையார் பணை சேர் ஒற்றிப் பதி_உடையார்
வாடல் எனவே மாலையிட்ட மாண்பே அன்றி மற்றவரால்
ஆடல் அளி சூழ் குழலாய் உன் ஆணை ஒன்றும் அறியனடி
கூடல் பெறவே வருந்துகின்றேன் குறையை எவர்க்குக் கூறுவனே.

6. துடி சேர் கரத்தார் ஒற்றியில் வாழ் சோதி வெண் நீற்று அழகர் அவர்
கடி சேர்ந்து என்னை மாலையிட்ட கடனே அன்றி மற்றவரால்
பிடி சேர் நடை நேர் பெண்களைப் போல் பின்னை யாதும் பெற்று அறியேன்
கொடி நேர் இடையாய் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

7. ஒற்றி நகர் வாழ் உத்தமனார் உயர் மால் விடையார் உடையார் தாம்
பற்றி என்னை மாலையிட்ட பரிசே அன்றிப் பகை தெரிந்து
வெற்றி மதனன் வீறு அடங்க மேவி அணைந்தார்_அல்லரடி
குற்றம் அணுவும் செய்து அறியேன் குறையை எவர்க்குக் கூறுவனே.

8. வானும் புவியும் புகழ் ஒற்றி_வாணர் மலர்க் கை மழுவினொடு
மானும் உடையார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால்
நானும் அவரும் கூடி ஒருநாளும் கலந்தது இல்லையடி
கோல் நுந்திய வேல் கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

9. தெறித்து மணிகள் அலை சிறக்கும் திரு வாழ் ஒற்றித் தேவர் எனை
வறித்து இங்கு எளியேன் வருந்தாமல் மாலையிட்ட நாள் அலது
மறித்தும் ஒருநாள் வந்து என்னை மருவி அணைய நான் அறியேன்
குறித்து இங்கு உழன்றேன் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

10. மின்னோடு ஒக்கும் வேணியினார் விமலர் ஒற்றி_வாணர் எனைத்
தென்னோடு ஒக்க மாலையிட்டுச் சென்றார் பின்பு சேர்ந்து அறியார்
என்னோடு ஒத்த பெண்கள் எலாம் ஏசி நகைக்க இடர் உழந்தேன்
கொன்னோடு ஒத்த கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

11. உடுத்தும் அதளார் ஒற்றியினார் உலகம் புகழும் உத்தமனார்
தொடுத்து இங்கு எனக்கு மாலையிட்ட சுகமே அன்றி என்னுடனே
படுத்தும் அறியார் எனக்கு உரிய பரிவில் பொருள் ஓர் எள்ளளவும்
கொடுத்தும் அறியார் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

12. உழை ஒன்று அணி கைத்தலம்_உடையார் ஒற்றி_உடையார் என்றனக்கு
மழை ஒன்று அலர் பூ மாலையிட்டார் மறித்தும் வந்தார் அல்லரடி
பிழை ஒன்று அறியேன் பெண்கள் எலாம் பேசி நகைக்கப் பெற்றேன் காண்
குழை ஒன்றிய கண் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

13. ஏடு ஆர் பொழில் சூழ் ஒற்றியினார் என் கண்_அனையார் என் தலைவர்
பீடு ஆர் மாலையிட்டது அன்றிப் பின் ஓர் சுகமும் பெற்று அறியேன்
வாடாக் காதல் பெண்கள் எலாம் வலது பேச நின்றனடி
கோடு ஆர் கொங்கை மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

14. கஞ்சன் அறியார் ஒற்றியினார் கண் மூன்று_உடையார் கனவினிலும்
வஞ்சம் அறியார் என்றனக்கு மாலையிட்டது ஒன்று அல்லால்
மஞ்சம்-அதனில் என்னோடு மருவி இருக்க நான் அறியேன்
கொஞ்சம்_மதி நேர் நுதலாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

15. ஆலம் இருந்த களத்து அழகர் அணி சேர் ஒற்றி ஆலயத்தார்
சால எனக்கு மாலையிட்ட தன்மை ஒன்றே அல்லாது
கால நிரம்ப அவர் புயத்தைக் கட்டி அணைந்தது இல்லையடி
கோல மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

16. நெய்தல் பணை சூழ் ஒற்றியினார் நிருத்தம் பயில்வார் மால் அயனும்
எய்தற்கு அரியார் மாலையிட்டார் எனக்கென்று உரைக்கும் பெருமை அல்லால்
உய்தற்கு அடியேன் மனையின்-கண் ஒருநாளேனும் உற்று அறியார்
கொய்தற்கு அரிதாம் கொடியே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

17. போர்க்கும்_உரியார் மால் பிரமன் போகி முதலாம் புங்கவர்கள்
யார்க்கும் அரியார் எனக்கு எளியர் ஆகி என்னை மாலையிட்டார்
ஈர்க்கும் புகுதா முலை மதத்தை இன்னும் தவிர்த்தார்_அல்லரடி
கூர்க்கும் நெடு வேல் கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

18. இறையார் ஒற்றியூரினிடை இருந்தார் இனியார் என் கணவர்
மறையார் எனக்கு மாலையிட்டார் மருவார் என்னை வஞ்சனையோ
பொறை ஆர் இரக்கம் மிக_உடையார் பொய் ஒன்று உரையார் பொய் அலடி
குறையா_மதி வாள் முகத்தாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

19. உடுப்பார் கரி தோல் ஒற்றி எனும் ஊரார் என்னை உடையவனார்
மடுப்பு ஆர் இன்ப மாலையிட்டார் மருவார் எனது பிழை உரைத்துக்
கெடுப்பார் இல்லை என் சொலினும் கேளார் எனது கேள்வர் அவர்
கொடுப்பார் என்றோ மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

20. எருதில் வருவார் ஒற்றி_உளார் என் நாயகனார் எனக்கு இனியார்
வருதி எனவே மாலையிட்டார் வந்தால் ஒன்றும் வாய்திறவார்
கருதி அவர்-தம் கட்டளையைக் கடந்து நடந்தேன்_அல்லவடி
குருகு உண் கரத்தாய் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

21. மா வென்று உரித்தார் மாலையிட்ட மணாளர் என்றே வந்தடைந்தால்
வா என்று உரையார் போ என்னார் மௌனம் சாதித்திருந்தனர் காண்
ஆ என்று அலறிக் கண்ணீர்விட்டு அழுதால் துயரம் ஆறுமடி
கோ என்று இரு வேல் கொண்டாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

22. நாட்டும் புகழ் ஆர் திருவொற்றி நகர் வாழ் சிவனார் நன்மை எலாம்
காட்டும்படிக்கு மாலையிட்ட கணவர் என ஓர் காசளவில்
கேட்டும் அறியேன் தந்து அறியார் கேட்டால் என்ன விளையுமடி
கோட்டு மணிப் பூண் முலையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

23. வெற்பை வளைத்தார் திருவொற்றி மேவி அமர்ந்தார் அவர் எனது
கற்பை அழித்தார் மாலையிட்டுக் கணவர் ஆனார் என்பது அல்லால்
சிற்ப மணி மேடையில் என்னைச் சேர்ந்தார் என்பது இல்லையடி
கொன் பை அரவின் இடையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

24. என்ன கொடுத்தும் கிடைப்ப அரியார் எழில் ஆர் ஒற்றி நாதர் எனைச்
சின்ன வயதில் மாலையிட்டுச் சென்றார் சென்ற திறன் அல்லால்
இன்னும் மருவ வந்திலர் காண் யாதோ அவர்-தம் எண்ணம்-அது
கொல் நுண் வடி வேல் கண்ணாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

25. கரும்பின் இனியார் கண்_நுதலார் கடி சேர் ஒற்றிக் காவலனார்
இரும்பின் மனத்தேன்-தனை மாலையிட்டார் இட்ட அன்று அலது
திரும்பி ஒருகால் வந்து என்னைச் சேர்ந்து மகிழ்ந்தது இல்லையடி
குரும்பை அனைய முலையாய் என் குறையை எவர்க்குக் கூறுவனே.

26. தீது தவிர்ப்பார் திருவொற்றித் தியாகர் அழியாத் திறத்தர் அவர்
மாது மகிழ்தி என என்னை மாலையிட்டார் மாலையிட்ட
போது கண்ட திரு_முகத்தைப் போற்றி மறித்தும் கண்டு அறியேன்
கோது கண்டேன் மாதே என் குறையை எவர்க்குக் கூறுவனே.

27. வென்றிக் கொடி மேல் விடை உயர்த்தார் மேலார் ஒற்றியூரர் என்-பால்
சென்று இக் குளிர் பூ மாலையிட்டார் சேர்ந்தார்_அல்லர் யான் அவரை
அன்றிப் பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி
குன்றில் துயர்கொண்டு அழும் எனது குறையை எவர்க்குக் கூறுவனே.

28. தோளா மணி நேர் வடிவழகர் சோலை சூழ்ந்த ஒற்றியினார்
மாளா நிலையர் என்றனக்கு மாலையிட்டார் மருவிலர் காண்
கேளாய் மாதே என்னிடையே கெடுதி இருந்தது எனினும் அதைக்
கோள் ஆர் உரைப்பார் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

29. வாடாது இருந்தேன் மழை பொழியும் மலர்க் கா வனம் சூழ் ஒற்றியினார்
ஏடு ஆர் அணி பூ மாலை எனக்கு இட்டார் அவர்க்கு மாலையிட்டேன்
தேடாது இருந்தேன்_அல்லடி யான் தேடி அருகில் சேர்ந்தும் எனைக்
கூடாது இருந்தார் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

30. நலத்தில் சிறந்த ஒற்றி நகர் நண்ணும் எனது நாயகனார்
வலத்தில் சிறந்தார் மாலையிட்டு மறித்தும் மருவார் வாராரேல்
நிலத்தில் சிறந்த உறவினர்கள் நிந்தித்து ஐயோ எனைத் தமது
குலத்தில் சேரார் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.

31. ஈர்ம் தேன் அளி சூழ் ஒற்றி_உளார் என் கண்மணியார் என் கணவர்
வார் தேன் சடையார் மாலையிட்டும் வாழாது அலைந்து மனம் மெலிந்து
சோர்ந்தேன் பதைத்துத் துயர்_கடலைச் சூழ்ந்தேன் இன்னும் துடிக்கின்றேன்
கூர்ம் தேன் குழலாய் என்னடி என் குறையை எவர்க்குக் கூறுவனே.