திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. திடுக்கு அற எனை-தான் வளர்த்திடப் பரையாம்
செவிலி-பால் சேர்த்தனை அவளோ
எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள்
என் செய்வேன் இன்னும் என்னிடை பால்
மடுக்க நல் தாயும் வந்திலள் நீயும்
வந்து எனைப் பார்த்திலை அந்தோ
தடுக்க அரும் கருணைத் தந்தையே தளர்ந்தேன்
தனையனேன் தளர்ந்திடல் அழகோ.
2. தளர்ந்திடேல் மகனே என்று எனை எடுத்து ஓர்
தாய் கையில் கொடுத்தனை அவளோ
வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று
மாயமே புரிந்திருக்கின்றாள்
கிளர்ந்திட எனை-தான் பெற்ற நல் தாயும்
கேட்பதற்கு அடைந்திலன் அந்தோ
உளம் தரு கருணைத் தந்தையே நீயும்
உற்றிலை பெற்றவர்க்கு அழகோ.
3. தாங்க என்றனை ஓர் தாய் கையில் கொடுத்தாய்
தாய்-அவள் நான் தனித்து உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள்
சூதையே நினைத்திருக்கின்றாள்
ஓங்கு நல் தாயும் வந்திலாள் அந்தோ
உளம் தளர்வு உற்றனன் நீயும்
ஈங்கு வந்திலையேல் என் செய்கேன் இது-தான்
எந்தை நின் திரு_அருட்கு அழகோ.
4. அத்த நீ எனை ஓர் தாய் கையில் கொடுத்தாய்
ஆங்கு அவள் மகள் கையில் கொடுத்தாள்
நித்திய மகள் ஓர் நீலி-பால் கொடுத்தாள்
நீலியோ தன் புடை ஆடும்
தத்துவ மடவார்-தம் கையில் கொடுத்தாள்
தனித்தனி அவரவர் எடுத்தே
கத்த வெம் பயமே காட்டினர் நானும்
கலங்கினேன் கலங்கிடல் அழகோ.
5. வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற
மகள் கையில் கொடுத்தனள் எனை-தான்
ஈங்கு இவள் கருத்தில் எது நினைத்தனளோ
என் செய்வேன் என்னையே உணர்ந்து
தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித்
தொட்டிலும் ஆட்டிடுகின்றாள்
ஏங்குறுகின்றேன் பிள்ளை-தன் அருமை
ஈன்றவர் அறிவரே எந்தாய்.
6. வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி
மக்கள்-பால் காட்டிவிட்டிருந்தாள்
மலத்திலே உழைத்துக் கிடந்து அழல் கேட்டும்
வந்து எனை எடுத்திலார் அவரும்
இலத்திலே கூடி ஆடுகின்றனர் நான்
என் செய்வேன் என் உடை அருமை
நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய்
நீயும் இங்கு அறிந்திலையேயோ.
7. தும்மினேன் வெதும்பித் தொட்டிலில் கிடந்தே
சோர்ந்து அழுது இளைத்து மென் குரலும்
கம்மினேன் செவிலி அம்மி போல் அசையாள்
காதுறக் கேட்டிருக்கின்றாள்
செம்மியே மடவார் கொம்மியே பாடிச்
சிரித்திருக்கின்றனர் அந்தோ
இம்மியே எனினும் ஈந்திடார் போல
இருப்பதோ நீயும் எந்தாயே.
8. துரு இலா வயிரத் தொட்டிலே தங்கத்
தொட்டிலே பல இருந்திடவும்
திரு இலாப் பொத்தைத் தொட்டிலில் செவிலி
சிறியனைக் கிடத்தினள் எந்தாய்
பிரிவு இலாத் தனிமைத் தலைவ நீ பெற்ற
பிள்ளை நான் எனக்கு இது பெறுமோ
கரு_இலாய் நீ இத் தருணம் வந்து இதனைக்
கண்டிடில் சகிக்குமோ நினக்கே.
9. காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும்
கனிவு_இலாள் காமம் ஆதிகளாம்
பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப்
பயம் புரிவித்தனள் பல கால்
தேய்ந்திடும் மதி என்று எண்ணினாள் குறையாத்
திரு_மதி என நினைந்து அறியாள்
சாய்ந்த இச் செவிலி கையிலே என்னைத்
தந்தது சாலும் எந்தாயே.
10. ஞான ஆனந்த வல்லியாம் பிரியா
நாயகியுடன் எழுந்து அருளி
ஈனம் ஆர் இடர் நீத்து எடுத்து எனை அணைத்தே
இன் அமுது அனைத்தையும் அருத்தி
ஊனம் ஒன்று இல்லாது ஓங்கும் மெய்த் தலத்தில்
உறப்புரிந்து எனைப் பிரியாமல்
வானமும் புவியும் மதிக்க வாழ்ந்து அருள்க
மா மணி மன்றில் எந்தாயே.
.