திருவருட்பா
ஆறாம் திருமுறை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது தந்தையே திருச்சிற்றம் பலத்தே
கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன் கருதிநின் றுரைக்கும்விண் ணப்பம்
இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே எனக்கருள் புரிகநீ விரைந்தே
இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் இணைமலர்ப் பொன்னடி ஆணை.
2. திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர்
பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பண்பனே பரையிடப் பாகா
பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற பேரருட் சோதியே எனக்கே
உரியநல் தந்தைவள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டருள் இதுவே.
3. தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் தலைவனே திருச்சிற்றம் பலத்தே
வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப வயங்கிய மெய்யின்ப வாழ்வே
ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் உவப்புற இனிக்குந்தெள் ளமுதே
ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டருள் இதுவே.
4. என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்தருள் இறைவா
என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே எனக்கறி வுணர்த்திய குருவே
என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே எனக்கருள் புரிந்தமெய் இன்பே
என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே.
5. கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே கனிந்தசிற் றம்பலக் கனியே
வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தெய்வமே திருவருட்சிவமே
தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே தரித்தருள் திருச்செவிக் கிதுவே.
6. என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த இறைவனே திருச்சிற்றம் பலத்தே
என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் கீகுதும் என்றஎன் குருவே
என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்குபே ரொளியே
என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங் கேற்றருள்திருச்செவிக்கிதுவே.
7. இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் இதயத்தில் எழுந்திருந் தருளி
விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிடவிளக்கியுட் கலந்தே
கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் கலந்தென இனிக்கின்றோய் பொதுவில்
அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே அடைத்தருள் என்மொழி இதுவே.
8. மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி மன்னிய வடிவளித் தறிஞர்
குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் கொடுத்துளே விளங்குசற் குருவே
பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் பலத்திலே அன்பர்தம் அறிவாம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்கஎன் மொழியே.
9. விண்டபோ தகரும் அறிவரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
10. சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது தெய்வமே என்பெருஞ் சிறப்பே
ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால்மெய்யுளம்வெதும்பியவெதுப்பைப்
பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
11. பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் பரமனே அரும்பெரும் பொருளே
தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் நண்பன்என் றவரவர் குறைகள்
உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் உடைந்ததுன் உளம்அறி யாதோ.
12. அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் ஐயனே இவ்வுல கதிலே
பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும்ஆடவர்இவர் களுக்குள்
தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம்ஈ தெனவே
சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த சோபத்தை நீஅறி யாயோ.
13. உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி மேவும்ஓர் அகத்திலே ஒருவர்
ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் றொருவரோ டொருவர்தாம் பேசிக்
கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் குலைநடுங் கியதறிந் திலையோ.
14. காவிநேர் கண்ணாள் பங்கனே தலைமைக் கடவுளே சிற்சபை தனிலே
மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் வீதிஆ திகளிலே மனிதர்
ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத அழுகுரல் கேட்டபோ தெல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் பதைத்ததுன் உளம்அறி யாதோ.
15. நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணிபல அடைந்தே
ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும்
ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்றபேர் ஏக்கமா திகளும்
தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீஅறிந் திலையோ.
16. கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண்ணுதற் கடவுளே என்னைப்
பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கமிக் குடையோர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட தோறும்அப் பிரிவை
உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.
17. என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே
நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டுகேட் டுற்ற
அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் அளவிலை அளவிலை அறிவாய்
இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் எய்திடும் துயரும்நீ அறிவாய்.
18. நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் நெறியலா நெறிகளில் சென்றே
கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் றயலவர் குறித்தபோ தெல்லாம்
உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே உற்றென நடுநடுக் குற்றே
துலைபுரிந் தோடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீஅறிந் ததுவே.
19. ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற ஒருவனே உலகியல் அதிலே
மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல்லொலி கேட்டபோ தெல்லாம்
காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள்நீ யேஅறிந் திடுவாய்
ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
20. மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை வள்ளலே உலகர சாள்வோர்
உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர் உயிரறச் செய்தனர் எனவே
தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் தளர்ந்துள நடுங்கிநின் றயர்ந்தேன்
இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
21. தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் தாய்க்குநால் என்பதை இரண்டாய்
வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன்கலங்கினேன் அதுநினைத் தெந்தாய்.
22. எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் எனநடுக் குற்றேன்
இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.
23. பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் பகரும்நேர் முதற்பல வயினும்
சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் சொல்கின் றவோஎனச் சூழ்ந்தே
மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வெங்குரல் செயுந்தொறும் எந்தாய்
வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல வருந்தினேன் எந்தைநீ அறிவாய்.
24. காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடுங்குரல்கேட்டுளங்குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.
25. வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்யநாய்க் குழுவின்
சீரிய குரலோ டழுகுரல் கேட்டுத் தியங்கினேன் மற்றைவெஞ் சகுனக்
கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் கோள்செயும் ஆடவர் மடவார்
ஊறுசெய்கொடுஞ்சொல் இவைக்கெலாம்உள்ளம்உயங்கினேன்மயங்கினேன்எந்தாய்.
26. நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் நிறைஉடம் பிற்சில உறுப்பும்
உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் உன்னிமற் றவைகளை அந்தோ
பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கிநெஞ் சுடைந்தேன்
நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே நடுங்கினேன் எந்தைநீ அறிவாய்.
27. மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் மயங்கிநாம் இவரொடு முயங்கி
இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே இன்னல்உற் றிடும்நமக் கின்னல்
தங்கிய பிறர்தம் துயர்தனைக் காண்டல் ஆகும்அத் துயருறத் தரியேம்
பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் பயந்ததும் எந்தைநீ அறிவாய்.
28. வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்துவந் தடுத்தபின் நினைந்தே
மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் மயங்கிஉள் மகிழ்ந்தனம் எனிலோ
நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே நடுங்குற வரும்எனப் பயந்தே
மெலிந்துடன் ஒளித்து வீதிவேறொன்றின் மேவினேன் எந்தைநீ அறிவாய்.
29. களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் உண்டகா லத்தும்
நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் நேர்ந்தபல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க அவர்களுக் கன்பினோ டாங்கே
ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய்.
30. இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் இச்சுகத் தால்இனி யாது
துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச்சூழ்வெறுவயிற்றொடும் இருந்தேன்
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம்ஐயகோ தெய்வமே இவற்றால்
வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து வாங்கியுண் டிருந்தனன் எந்தாய்.
31. உற்றதா ரணியில் எனக்குலக் குணர்ச்சி உற்றநாள் முதல்ஒரு சிலநாள்
பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் பேருண வுண்டனன் சிலநாள்
உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் உறுவதற் கஞ்சினேன் உண்டேன்
மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள மனநடுங் கியதுநீ அறிவாய்.
32. தொழுந்தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய தோறும்
அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற் கெய்துமோ பகலில்
விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி
எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என்செய்வேன் என்செய்வேன் என்றே.
33. அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் அரும்பெருஞ் சோதியே அடியேன்
சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்றுநான் எழுந்தபோதெல்லாம்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவதெக் காலம்என் றெழுந்தேன்.
34. உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிதுறும் கனவில்
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ
நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
35. பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் தூக்கமாம் பாவிவந் திடுமே
இகலுறு கனவாம் கொடியவெம் பாவி எய்துமே என்செய்வோம் என்றே
உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன்னுளம் அறியுமே எந்தாய்
நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் நடுங்கிடா நாளும்ஒன் றுளதோ.
36. தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் தொழிலிலே வந்தகோ பத்தில்
சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த தருணம்நான் கலங்கிய கலக்கம்
வகுப்புற நினது திருவுளம் அறியும் மற்றுஞ்சில் உயிர்களில் கோபம்
மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் மெய்யநீ அறிந்ததே அன்றோ.
37. ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய உயிர்கள்பால் தீமைகண் டாங்கே
அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே வெதும்பிய நடுக்கம்நீ அறிவாய்.
38. கோபமே வருமோ காமமே வருமோ கொடியமோ கங்களே வருமோ
சாபமே அனைய தடைமதம் வருமோ தாமதப் பாவிவந் திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ பயனில்மாற் சரியம்வந் திடுமோ
தாபஆங் கார மேஉறு மோஎன் றையநான் தளர்ந்ததும் அறிவாய்.
39. காமமா மதமாங் காரமா திகள்என் கருத்தினில் உற்றபோ தெல்லாம்
நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் நடுங்கிய நடுக்கம்நீ அறிவாய்
சேமமார் உலகில் காமமா திகளைச் செறிந்தவர் தங்களைக் கண்டே
ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐயநின் திருவுளம் அறியும்.
40. கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் காட்சியைக் கண்டபோ தெல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்துநொந் திளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் நெகிழ்ச்சிஇல் லாமையால் நடுங்கிப்
பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் படுத்ததும் ஐயநீ அறிவாய்.
41. புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும்
என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய்
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல்
என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.
42. இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ டியல்கலைத் தருக்கஞ்செய் திடவே
வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் மனம்மிக நடுங்கினேன் அறிவாய்
சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் தமியனேன் மீளவுங் கண்டே
நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் நொந்ததும் ஐயநீ அறிவாய்.
43. முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தெரிந்திலேன் மோகமே லின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள்ஒருத்தியைக்கைதொடச்சார்ந்தேன்
குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் பகர்வதென் எந்தைநீ அறிவாய்.
44. பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் பண்பனே நண்பனே உலகில்
ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே
மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின்வள்ளல்உன்அருளினால்அறிந்தே
விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் மெய்யனே நீஅறிந் ததுவே.
45. அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்புளார் வலிந்தெனக் கீந்த
பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் புழுங்கிய புழுக்கம்நீ அறிவாய்
மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து மனமிகஇளைத்ததும்பொருளால்
இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் எந்தைநின் திருவுளம் அறியும்.
46. பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்
மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதி
வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்
ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.
47. தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் தடித்தஉள் ளத்தொடு களித்தே
நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே நல்லவா கனங்களில் ஏறி
உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போதெலாம் பயந்தேன்
பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.
48. சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும்எனப் பயந்தே
நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும்நண்ணியும் பிறவிடத்தலைந்தும்
பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் பகலன்றி இரவும்அப் படியே
மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பலென் நீஅறிந் ததுவே.
49. உருவுள மடவார் தங்களை நான்கண் ணுற்றபோ துளநடுக் குற்றேன்
ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் உவளகத் தொளித்தயல் இருந்தேன்
கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான்உற்ற கலக்கம்
திருவுளம் அறியும் உரத்தசொல் எனது செவிபுகில் கனல்புகு வதுவே.
50. பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார் தங்களை விழைந்தே இசைந்தனு பவித்தஅப் போதும்
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்றசங் கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் கலங்கிய கலக்கம்நீ அறிவாய்.
51. நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது நண்பினர் உடுத்திய போது
பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலிற் கவிகை
வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் வெருவினேன் கைத்துகில் வீசி
அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி அரைக்குமேல் வீக்கினன் எந்தாய்.
52. கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் மெய்எலாம் ஐயகோ மறைத்தேன்
வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும்
பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் பார்ப்பனேல் பயமிகப் படைப்பேன்.
53. வைகிய நகரில் எழிலுடை மடவார் வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும்
சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் தனித்தெனைப் பலவிசை அறிந்தும்
பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் பொருள்முத லியகொடுத் திசைத்தும்
கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லைநீ அறிவாய்.
54. எளியரை வலியார் அடித்தபோது ஐயோ என்மனம் கலங்கிய கலக்கம்
தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய்
அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார்.
55. இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த இருப்பெலாம் கள்ளர்கள் கூடிக்
கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது காதிலே விழுந்தபோ தெல்லாம்
விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல்போல் வெதும்பினேன் எந்தாய்
உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் டுளம்நடுக் குற்றனன் பலகால்.
56. உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்
கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.
57. மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை மதித்துளம் வருந்திய பிறர்தம்
கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
நண்ணிநின் றொருவர் அசப்பிலே என்னை அழைத்தபோ தடியனேன் எண்ணா
தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.
58. தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்றுளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தைநீ அறிந்தது தானே.
59. என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம்
துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே
வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய்
அன்புடை யவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே.
60. காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
ஏணுறு மாடு முதல்பல விருகம் இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
61. பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி
அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள்
பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர்
முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
62. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.
63. நலிதரு சிறிய தெய்வமென் றையோ நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்திநொந் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் கண்டகா லத்திலும் பயந்தேன்.
64. துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் கண்டகா லத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்டபோ தெல்லாம்
எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தைநின் திருவுளம் அறியும்.
65. நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்
விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.
66. ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய ஒருதனித் தலைவனே என்னைத்
தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்பால்
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்தமை நினைத்தபோ தெல்லாம்
தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
67. காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால்வைக்கப் பயந்தேன்
பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நன்குறக் களித்துக் கால்கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.
68. தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் சார்ந்திட முயலுறா தந்தோ
கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் பொதுஎனக் கண்டிரங் காது
கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் எந்தைநான் கூறுவ தென்னே.
69. இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங் கெய்திய நாளது தொடங்கி
நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க
எவ்வணத் தவர்க்கும் அலகுறா தெனில்யான் இசைப்பதென் இசைத்ததே அமையும்
செவ்வணத் தருணம் இது தலை வாநின் திருவுளம் அறிந்ததே எல்லாம்.
70. தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக்
கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த கடவுள்நீ அல்லையோ எனைத்தான்
இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் எந்தைநீ அல்லையோ நின்பால்
உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீஅறி யாததொன் றுண்டோ.
71. கைதலத் தோங்கும் கனியின் என் னுள்ளே கனிந்தஎன் களைகண்நீ அலையோ
மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா மெய்யன்நீ அல்லையோ எனது
பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ பரிந்துநின் திருமுன்விண் ணப்பம்
செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம்.
72. இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் எய்திநின் றிளைத்தனன் அந்தோ
துன்னஆ ணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும்இங் குனைத்தான்
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என்செய்வேன் எனது
மன்னவா ஞான மன்றவா எல்லாம் வல்லவா இதுதகு மேயோ.
73. எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பெலாம் இங்குநான் ஆற்றிக்
கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் கூடவே அடுத்ததென் அந்தோ
வள்ளலே எனது வாழ்முதற் பொருளே மன்னவா நின்னலால் அறியேன்
உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி உன்னதே என்னதன் றெந்தாய்.
74. என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும் இல்லையே எந்தைஎல் லாம்உன்
தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம் தமியனேன் தனைப்பல துயரும்
வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும்ஆ ணவமும்
இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ இவைக்கெலாம் நான்இலக் கலவே.
75. அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என் அப்பனே நினைமறந் தறியேன்
செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய் தறிந்திலேன் உலகில்
பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும்என்னைக்
குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின் குணப்பெருங் குன்றினுக் கழகோ.
76. ஐயநான் ஆடும் பருவத்திற் றானே அடுத்தநன் னேயனோ டப்பா
பொய்யுல காசை எனக்கிலை உனக்கென் புகல்என அவனும்அங் கிசைந்தே
மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது மெய்யருள் மீட்டிட மீண்டேம்
துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்றுநான் சொல்லுவ தென்னே.
77. தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே தெய்வமே தெய்வமே எனநின்
சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும்நீ என்றேன்
பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர்மதிப் பறியேன்
ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்றுநான் உரைப்பதிங் கென்னே.
78. பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை புரிந்தது போலவே இன்றும்
செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத் தெய்வமும் குருவும்மெய்ப் பொருளும்
நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும் நேயமும் நீஎனப் பெற்றே
குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக் குதித்ததென் கூறுக நீயே.
79. பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை பணிபுரிந் தாங்கிது வரையில்
புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும் பொருளும்என் புணர்ப்பும்என் அறிவும்
விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும் மெய்ம்மையும் யாவும்நீ என்றே
தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த செய்கைஎன் செப்புக நீயே.
80. மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள் வள்ளலே நின்னைஅன் பாலும்
வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின் றோர்தமை வாழ்த்தி
உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால் உன்அருள் அறியநான் வேறு
செய்ததொன் றிலையே செய்தனன் எனினும் திருவுளத் தடைத்திடல் அழகோ.
81. ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் ஆகமம் உரைவரைப் பெல்லாம்
காரண நினது திருவருட் செங்கோல் கணிப்பருங் களிப்பிலே ஓங்கி
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமைநான் அறிந்தும்
தாரணி யிடைஇத் துன்பமா திகளால் தனையனேன் தளருதல் அழகோ.
82. பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் பாலும்அப் பாலும்அப் பாலும்
ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் உரைப்பரும் பெருமையின் ஓங்கிச்
சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் சிறந்தமெய்த் தந்தைநீ இருக்க
வார்கடல் உலகில் அச்சமா திகளால் மகன்மனம் வருந்துதல் அழகோ.
83. ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந் தப்பதி வரையும்அப் பாலும்
தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் செல்லஓர் சிற்சபை இடத்தே
சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும் தந்தையே தனிப்பெருந் தலைவா
பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே பிள்ளைநான் வருந்துதல் அழகோ.
84. சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் திருச்சபை தன்னிலே திகழும்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனிஅருட் செங்கோல்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனிமுதல் தந்தையே தலைவா
பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே பிள்ளைநான் வாடுதல் அழகோ.
85. சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பித்
தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கிஆ னந்த
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும்பெருந் தந்தையே இன்பப்
பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே பிள்ளைநான் பேதுறல் அழகோ.
86. சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ்ஒளி யாய்ஒளி எல்லாம்
பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் பெருவெளி யாய்அதற் கப்பால்
நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் நீதிநல் தந்தையே இனிமேல்
பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் பிள்ளைநான் வாடுதல் அழகோ.
87. எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம் இணையிலாத் தனிநெடுஞ் செங்கோல்
நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே நடத்தும்ஓர் ஞானநா யகனே
தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன்நான் பயத்தினால் துயரால்
அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் ஐயகோ வாடுதல் அழகோ.
88. கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம்
நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய் நிறைவெலாம் விளங்கிடப் பொதுவில்
மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல் வாய்மையான் நடத்தும்ஓர் தனிமைத்
தலைவனே எனது தந்தையே நினது தனையன்நான் தளருதல் அழகோ.
89. ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் வடைவெலாம் இன்றிஒன் றான
சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே தூயபே ரருள்தனிச் செங்கோல்
நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.
90. அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே அரும்பெருஞ் சோதியே அடியார்
பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிதருள் புரிதனித் தலைமைச்
சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே
சுத்தனே நினது தனையன்நான் மயங்கித் துயர்ந்துளம் வாடுதல் அழகோ.
91. உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும் ஒருதனித் தந்தையே நின்பால்
குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில்அக் குற்றம்
இற்றென அறிவித் தறிவுதந் தென்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை வழக்கிது நீஅறி யாயோ.
92. குற்றமோ குணமோ நான்அறி யேன்என் குறிப்பெலாம் திருச்சிற்றம் பலத்தே
உற்றதா தலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்றென தலவே
தெற்றென அருட்கே குற்றம்என் பதுநான் செய்திடில் திருத்தலே அன்றி
மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை மரபிது நீஅறி யாயோ.
93. மாயையால் வினையால் அரிபிர மாதி வானவர் மனமதி மயங்கித்
தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ
ஆயினும் தீய இவைஎன அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி
நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை நெறிக்கழ கல்லவே எந்தாய்.
94. கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
95. கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் கருணையங் கடவுளே நின்பால்
இலங்கிய நேயம் விலங்கிய திலையே எந்தைநின் உளம்அறி யாதோ
மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் மாயையால் வரும்பிழை எல்லாம்
அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ டடிக்கடி அறைந்தனன் ஆண்டே.
96. இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும் என்பிழை அன்றெனப் பலகால்
விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் வேறுநான் செய்ததிங் கென்னே
அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே அப்பனே என்றிருக் கின்றேன்
துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது தூயதாம் திருவுளம் அறியும்.
97. வருமுயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில்என் மனஞ்சென்ற தோறும்
வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் விண்ணப்பஞ் செய்கின்றேன் இன்றும்
உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒன்றதே இரண்டிலை இரக்கம்
ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் தொருவனே நின்பதத் தாணை.
98. தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும்என் உளமும்
மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக வழக்கிலே உயிர்இரக் கத்தால்
இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம் என்னுயிர் என்னவே றிலையே
நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும் நீங்கும்நின் திருவுளம் அறியும்.
99. ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் ஆடலே அன்றிஓர் விடயக்
காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்தெனக் கில்லைஎன் றிடல்இப்
போதலால் சிறிய போதும்உண் டதுநின் புந்தியில் அறிந்தது தானே
ஈதலால் வேறோர் தீதென திடத்தே இல்லைநான் இசைப்பதென் எந்தாய்.
100. என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித் திவ்வுலகில்
மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல்நீ நினக்கிது விடயம்
பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா திருந்ததோர் இறையும்இங்கிலையே.
101. உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும்
சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார் சிறியனேன் ஒருதின மேனும்
மறுகிநின் றாடிஆர்த்ததிங் குண்டோ நின்பணி மதிப்பலால் எனக்குச்
சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின் திருவுளம் அறியுமே எந்தாய்.
102. தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் சழக்குரை யாடிவெங் காமச்
சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒருதின மேனும்
எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட் டிவ்வுல கியலில்அவ் வாறு
தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ திருவுளம் அறியநான் அறியேன்.
103. அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவர் உடனே
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின்பணி விடுத்தே
இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே
வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ மெய்யநின் ஆணைநான் அறியேன்.
104. வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் ஒழுக்கத்தை மறந்தே
கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் கடைதொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்யநின் திருப்பணி விடுத்தே
எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
105. மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர்
குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக் கொடியதீ நெறியிலே மக்கள்
புலைகொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின்பணி விடுத்தே
உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ உண்பதத் தாணைநான் அறியேன்.
106. தனிப்பெருஞ் சோதித் தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும்
இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட் கேற்கவே பயிற்றிடுந் தோறும்
பனிப்புற ஓடிப் பதுங்கிடு கின்றார் பண்பனே என்னைநீ பயிற்றத்
தினைத்தனை யேனும் பதுங்கிய துண்டோ திருவுளம் அறியநான் அறியேன்.
107. தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில் தந்தையர் தங்களை அழைத்தே
சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம் சூழலே போகின்றார் அடியேன்
என்னைநீ உணர்த்தல் யாதது மலையின் இலக்கெனக் கொள்கின்றேன் அல்லால்
பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோபெரியநின் ஆணைநான் அறியேன்.
108. போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர் தமையே
வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா மெல்லிய சரிகைவத் திரந்தா
ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே இரங்குவார் இவைகுறித் தடியேன்
தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ திருவுளம் அறியநான் அறியேன்.
109. குணம்புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள்தந் தையரைப்
பணம்புரி காணி பூமிகள் புரிநற் பதிபுரி ஏற்றபெண் பார்த்தே
மணம்புரி எனவே வருத்துகின் றார்என் மனத்திலே ஒருசிறி தேனும்
எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ எந்தைநின் ஆணைநான் அறியேன்.
110. இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே என்னுயிர்த் தந்தையே இந்தச்
சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே தாழ்ந்தவ ராய்ப்புறங் காட்டி
அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார் ஐயவோ வஞ்சம்நின் அளவில்
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வநின் ஆணைநான் அறியேன்.
111. தன்மைகாண் பரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள்
வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே
என்மனக் கனிவே என்னிரு கண்ணே என்னுயிர்க் கிசைந்தமெய்த் துணையே
நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ நின்பதத் தாணைநான் அறியேன்.
112. ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில் உற்றிடு மக்கள்தந் தையரை
வைப்பில்வே றொருவர் வைதிடக்கேட்டு மனம்பொறுத் திருக்கின்றார் அடியேன்
தப்பிலாய் நினைவே றுரைத்திடக் கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி
வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.
113. இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தைநின் திருப்பணி விடுத்தே
சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான் தெரிந்தநாள் முதல்இது வரையும்
அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத் தாடும்
சித்தனே சிவனே என்றென துளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.
114. பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய்யுல காசைசற் றறியேன்
நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது
கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான் கருதினேன் கருத்தினை முடிக்கச்
செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ தெய்வமே என்றிருக் கின்றேன்.
115. அன்னையே என்றன் அப்பனே திருச்சிற் றம்பலத் தமுதனே எனநான்
உன்னையே கருதி உன்பணி புரிந்திங் குலகிலே கருணைஎன் பதுதான்
என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி இருக்கின்றேன் என்உள மெலிவும்
மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
116. பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய் புண்ணியா கண்ணினுள் மணியே
கைபடாக் கனலே கறைபடா மதியே கணிப்பருங் கருணையங் கடலே
தெய்வமே எனநான் நின்னையே கருதித் திருப்பணி புரிந்திருக் கின்றேன்
மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
117. தன்னிகர் அறியாத் தலைவனே தாயே தந்தையே தாங்குநற் றுணையே
என்னிறு கண்ணே என்னுயிர்க் குயிரே என்னுடை எய்ப்பினில் வைப்பே
உன்னுதற் கினிய வொருவனே எனநான் உன்னையே நினைத்திருக் கின்றேன்
மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
118. திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள் செப்பிய மெய்ம்மொழிப் பொருளும்
உருவளர் திருமந் திரத்திரு முறையால் உணர்த்திய மெய்ம்மொழிப் பொருளும்
கருவளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய்ம்மொழிப் பொருளும்
மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
119. உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் உறுமலை இலக்கென நம்பி
நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப நின்றதும் நிலைத்தமெய்ப் பொருள்இப்
பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே
சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்.
120. ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித்
தேய்ந்துபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை
வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே மனங்களிப் புற்றுமெய் இன்பம்
தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.
121. வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது வாட்டமும் மாயையா திகளின்
ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி என்னைஓர் பொருள்என மதித்தே
தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் செலுத்திய திருச்சிலம் பொலிநான்
கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள் கிலேசமுந் திருவுளம் அறியும்.
122. கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என் காதிலே கிடைத்தபோ தெல்லாம்
மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம் மரபினர் உறவினர் தமக்குள்
உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி ஓடிப்பார்த் தோடிப்பார்த் திரவும்
எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த ஏக்கமுந் திருவுளம் அறியும்.
123. கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் கருத்திலே கலந்ததெள் ளமுதம்
மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல வள்ளல்சிற் றம்பலம் மன்னும்
பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த புண்ணியம் வருகின்ற தருணம்
தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
124. இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற் கரியபே ரின்பம்
தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் தயாநிதி தனிப்பெருந் தந்தை
அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
125. அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் அமுதநின் மேல்வைத்த காதல்
நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
படியஎன் தன்னால் சொலமுடி யாது பார்ப்பறப் பார்த்திருக் கின்றேன்
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளங் கண்டதே எந்தாய்.
126. பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் பகல்வரை அடைந்தவை எல்லாம்
உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால் ஒருசில உரைத்தனன் எனினும்
என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும்நீ அறிந்த வண்ணமே வகுப்பதென் நினக்கே.
127. இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம்
பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் புலையனேன் பொருட்டல இதுநின்
மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய வகுத்தனன் அடியனேன் தனக்கே
எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் இடரும்மற் றிலைஇலை எந்தாய்.
128. என்னள விலையே என்னினும் பிறர்பால் எய்திய கருணையால் எந்தாய்
உன்னுறு பயமும் இடருமென் தன்னை உயிரொடும் தின்கின்ற தந்தோ
இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும் இருந்திடில் என்உயிர் தரியா
தன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்தருள் எனையே.
129. பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப் பற்றொடு வினையும்ஆ ணவமும்
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனிஒரு கணமும்
வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன் மெய்யருள் அளித்திடல் வேண்டும்
உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
130. ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவைஉள் நினைத்திடுந் தோறும்
வெய்யதீ மூட்டிவிடுதல் ஒப் பதுநான் மிகஇவற் றால்இளைத் திட்டேன்
வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க வசமிலேன் இவைஎலாம் தவிர்த்தே
உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடு கின்றனன் இன்றே.
131. பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப் பகைஎலாம் பற்றறத் தவிர்த்தே
நயந்தநின் அருளார் அமுதளித் தடியேன் நாடிஈண் டெண்ணிய எல்லாம்
வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது விண்ணப்பம் நின்திரு உளத்தே
வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே.
132. என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன் இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள் உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம் நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே.
133. பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும் பற்றறத் தவிர்த்தருள் இனிநான்
தரிக்கிலேன் சிறிதும்தரிக்கிலேன் உள்ளம்தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும் பொற்சபை அண்ணலே கருணை
வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே.
திருச்சிற்றம்பலம்
1. தனிப் பெரும் சோதித் தலைவனே எனது தந்தையே திரு_சிற்றம்பலத்தே
கனிப் பெரும் கருணைக் கடவுளே அடியேன் கருதி நின்று உரைக்கும் விண்ணப்பம்
இனிப்புறும் நினது திருவுளத்து அடைத்தே எனக்கு அருள் புரிக நீ விரைந்தே
இனிச் சிறுபொழுதும் தரித்திடேன் உன்றன் இணை மலர்ப் பொன் அடி ஆணை.
2. திரிபு இலாப் பொருளே திரு_சிற்றம்பலத்தே திகழ்கின்ற தெய்வமே அன்பர்
பரிவுறும்-தோறும் விரைந்து வந்து அருளும் பண்பனே பரை இட_பாகா
பெரிய பொன்_சபையில் நடம் புரிகின்ற பேர்_அருள் சோதியே எனக்கே
உரிய நல் தந்தை வள்ளலே அடியேன் உரைக்கின்றேன் கேட்டு அருள் இதுவே.
3. தான் அலாது இறையும் உயிர்க்கு அசைவு இல்லாத் தலைவனே திரு_சிற்றம்பலத்தே
வான் அலால் வேறு ஒன்று இலை என உரைப்ப வயங்கிய மெய் இன்ப வாழ்வே
ஊன் அலால் உயிரும் உளமும் உள் உணர்வும் உவப்புற இனிக்கும் தெள் அமுதே
ஞான நாடகம் செய் தந்தையே அடியேன் நவில்கின்றேன் கேட்டு அருள் இதுவே.
4. என் உயிர்க்குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்து அருள் இறைவா
என் உளத்து இனிக்கும் தீம் சுவைக் கனியே எனக்கு அறிவு உணர்த்திய குருவே
என்னுடை அன்பே திரு_சிற்றம்பலத்தே எனக்கு அருள் புரிந்த மெய் இன்பே
என்னை ஈன்றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்க இ மொழியே.
5. கருணை ஆர் அமுதே என் உயிர்க்குயிரே கனிந்த சிற்றம்பலக் கனியே
வருண மா மறையின் மெய்ப்பொருள் ஆகி வயங்கிய வள்ளலே அன்பர்
தெருள் நிறை உளத்தே திகழ் தனித் தலைமைத் தெய்வமே திரு_அருள் சிவமே
தருணம் என் ஒருமைத் தந்தையே தாயே தரித்து அருள் திரு_செவிக்கு இதுவே.
6. என்னை ஆண்டு அருளி என் பிழை பொறுத்த இறைவனே திரு_சிற்றம்பலத்தே
என்னை ஆண்டு அஞ்சேல் உனக்கு நல் அருள் இங்கு ஈகுதும் என்ற என் குருவே
என்னை வேறு எண்ணாது உள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்கு பேர்_ஒளியே
என்னை ஈன்றளித்த தந்தையே விரைந்து இங்கு ஏற்று அருள் திரு_செவிக்கு இதுவே.
7. இரும்பு நேர் மனத்தேன் பிழை எலாம் பொறுத்து என் இதயத்தில் எழுந்திருந்து அருளி
விரும்பும் மெய்ப்பொருளாம் தன்னியல் எனக்கு விளங்கிட விளக்கி உள் கலந்தே
கரும்பு முக்கனி பால் அமுதொடு செழும் தேன் கலந்து என இனிக்கின்றோய் பொதுவில்
அரும் பெரும் சோதி அப்பனே உளத்தே அடைத்து அருள் என் மொழி இதுவே.
8. மலத்திலே கிடந்தேன்-தனை எடுத்து அருளி மன்னிய வடிவு அளித்து அறிஞர்
குலத்திலே பயிலும் தரமும் இங்கு எனக்குக் கொடுத்து உளே விளங்கு சற்குருவே
பலத்திலே சிற்றம்பலத்திலே பொன்_அம்பலத்திலே அன்பர்-தம் அறிவாம்
தலத்திலே ஓங்கும் தலைவனே எனது தந்தையே கேட்க என் மொழியே.
9. விண்ட போதகரும் அறிவ அரும் பொருளே மெய்யனே ஐயனே உலகில்
தொண்டனேன்-தன்னை அடுத்தவர் நேயர் சூழ்ந்தவர் உறவினர் தாயர்
கொண்டு உடன்பிறந்தோர் அயலவர் எனும் இக் குறிப்பினர் முகங்களில் இளைப்பைக்
கண்ட போது எல்லாம் மயங்கி என் உள்ளம் கலங்கிய கலக்கம் நீ அறிவாய்.
10. சீர்த்த சிற்சபை என் அப்பனே எனது தெய்வமே என் பெரும் சிறப்பே
ஆர்த்த இ உலகில் அம்மையர் துணைவர் அடுத்தவர் உறவினர் நேயர்
வேர்த்த மற்று அயலார் பசியினால் பிணியால் மெய் உளம் வெதும்பிய வெதுப்பைப்
பார்த்த போது எல்லாம் பயந்து எனது உள்ளம் பதைத்தது உன் உளம் அறியாதோ.
11. பரைத் தனி வெளியில் நடம் புரிந்து அருளும் பரமனே அரும் பெரும் பொருளே
தரைத் தலத்து இயன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி
நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனை ஓர் நண்பன் என்று அவரவர் குறைகள்
உரைத்த போது எல்லாம் நடுங்கி என் உள்ளம் உடைந்தது உன் உளம் அறியாதோ.
12. அன்னையே அப்பா திரு_சிற்றம்பலத்து என் ஐயனே இ உலகு-அதிலே
பொன்னையே உடையார் வறியவர் மடவார் புகலும் ஆடவர் இவர்களுக்குள்
தன்னையே அறியாப் பிணியினால் ஆவி தளர்கின்றார் தருணம் ஈது எனவே
சொன்ன போது எல்லாம் பயந்து நான் அடைந்த சோபத்தை நீ அறியாயோ.
13. உண்ட-தோறு எல்லாம் அமுது என இனிக்கும் ஒருவனே சிற்சபை உடையாய்
விண்ட பேர்_உலகில் அம்ம இ வீதி மேவும் ஓர் அகத்திலே ஒருவர்
ஒண்டு உயிர் மடிந்தார் அலறுகின்றார் என்று ஒருவரோடொருவர் தாம் பேசிக்
கொண்ட போது எல்லாம் கேட்டு எனது உள்ளம் குலை_நடுங்கியது அறிந்திலையோ.
14. காவி நேர் கண்ணாள் பங்கனே தலைமைக் கடவுளே சிற்சபை-தனிலே
மேவிய ஒளியே இ உலகு-அதில் ஊர் வீதி ஆதிகளிலே மனிதர்
ஆவி போனது கொண்டு உறவினர் அழுத அழு_குரல் கேட்ட போது எல்லாம்
பாவியேன் உள்ளம் பகீர் என நடுங்கிப் பதைத்தது உன் உளம் அறியாதோ.
15. நாதனே என்னை நம்பிய மாந்தர் ஞாலத்தில் பிணி பல அடைந்தே
ஏதம் நேர்ந்திடக் கண்டு ஐயகோ அடியேன் எய்திய சோபமும் இளைப்பும்
ஓத நேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் உற்ற பேர் ஏக்கம் ஆதிகளும்
தீது_அனேன் இன்று நினைத்திட உள்ளம் திடுக்கிடல் நீ அறிந்திலையோ.
16. கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் கண் நுதல் கடவுளே என்னைப்
பெற்ற தாய் நேயர் உறவினர் துணைவர் பெருகிய பழக்கம் மிக்கு உடையோர்
மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து மறைந்திட்ட-தோறும் அப் பிரிவை
உற்று நான் நினைக்கும்-தோறும் உள் நடுங்கி உடைந்தனன் உடைகின்றேன் எந்தாய்.
17. என்றும் நாடுறுவோர்க்கு இன்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே
நன்று நாடிய நல்லோர் உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டு கேட்டு உற்ற
அன்று நான் அடைந்த நடுக்கமும் துயரும் அளவு இலை அளவு இலை அறிவாய்
இன்று அவர் பிரிவை நினைத்திடும்-தோறும் எய்திடும் துயரும் நீ அறிவாய்.
18. நிலை புரிந்து அருளும் நித்தனே உலகில் நெறி அலா நெறிகளில் சென்றே
கொலை புரிந்திட்ட கொடியவர் இவர் என்று அயலவர் குறித்த போது எல்லாம்
உலை புரிந்திடு வெம் தீ வயிற்று உள்ளே உற்று என நடுநடுக்குற்றே
துலைபுரிந்து ஓடிக் கண்களை மூடித் துயர்ந்ததும் நீ அறிந்ததுவே.
19. ஓர்ந்த உள்ளகத்தே நிறைந்து ஒளிர்கின்ற ஒருவனே உலகியல் அதிலே
மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் வல் ஒலி கேட்ட போது எல்லாம்
காந்தி என் உள்ளம் கலங்கிய கலக்கம் கடவுள் நீயே அறிந்திடுவாய்
ஏந்தும் இ உலகில் இறப்பு எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே.
20. மறை முடி வயங்கும் ஒரு தனித் தலைமை வள்ளலே உலகு அரசாள்வோர்
உறை முடி வாள் கொண்டு ஒருவரையொருவர் உயிர் அறச் செய்தனர் எனவே
தறையுறச் சிறியேன் கேட்ட போது எல்லாம் தளர்ந்து உளம் நடுங்கிநின்று அயர்ந்தேன்
இறையும் இ உலகில் கொலை எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே.
21. தாய் மொழி குறித்தே கணக்கிலே மற்று ஓர் தாய்க்கு நால் என்பதை இரண்டாய்
வாய் மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் நடுங்கினேன் நினைத்ததை மனத்தே
தூய் மொழி நேயர் நம்பினோர் இல்லில் சூழ்ந்தனன் நினைத்தது துயர்ந்தேன்
காய் மொழி புகன்றேன் பொய் மொழி புகன்றேன் கலங்கினேன் அது நினைத்து எந்தாய்.
22. எட்ட அரும் பொருளே திரு_சிற்றம்பலத்தே இலகிய இறைவனே உலகில்
பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே
ஒட்டிய பிறரால் கேட்ட போது எல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன்
இட்ட இ உலகில் பசி எனில் எந்தாய் என் உளம் நடுங்குவது இயல்பே.
23. பல்லிகள் பல வாயிடத்தும் உச்சியினும் பகரும் நேர் முதல் பல வயினும்
சொல்லிய-தோறும் பிறர் துயர் கேட்கச் சொல்கின்றவோ எனச் சூழ்ந்தே
மெல்லிய மனம் நொந்து இளைத்தனன் கூகை வெம் குரல் செயும்-தொறும் எந்தாய்
வல்லியக் குரல் கேட்டு அயர் பசுப் போல வருந்தினேன் எந்தை நீ அறிவாய்.
24. காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் கடும் குரல் கேட்டு உளம் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் சா_குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடும் சகுனம்செய் வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்ட போது உள்ளம் ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்.
25. வேறு பல் விடம் செய் உயிர்களைக் கண்டு வெருவினேன் வெய்ய நாய்க் குழுவின்
சீறிய குரலோடு அழு_குரல் கேட்டுத் தியங்கினேன் மற்றை வெம் சகுனக்
கூறு-அதாம் விலங்கு பறவை ஊர்வன வெம் கோள்செயும் ஆடவர் மடவார்
ஊறு செய் கொடும் சொல் இவைக்கு எலாம் உள்ளம் உயங்கினேன் மயங்கினேன் எந்தாய்.
26. நிறமுறு விழிக் கீழ்ப் புறத்தொடு தோளும் நிறை உடம்பில் சில உறுப்பும்
உறவு தோல் தடித்துத் துடித்திடும்-தோறும் உன்னி மற்று அவைகளை அந்தோ
பிறர் துயர் காட்டத் துடித்தவோ என்று பேதுற்று மயங்கி நெஞ்சு உடைந்தேன்
நறுவிய துகிலில் கறையுறக் கண்டே நடுங்கினேன் எந்தை நீ அறிவாய்.
27. மங்கையர் எனைத் தாம் வலிந்து உறும்-தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி
இங்கு உளம் களித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும் நமக்கு இன்னல்
தங்கிய பிறர்-தம் துயர்-தனைக் காண்டல் ஆகும் அத் துயருறத் தரியேம்
பங்கம் ஈது எனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய்.
28. வலிந்து எனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மறைந்து வந்து அடுத்த பின் நினைந்தே
மலிந்து இவர் காணில் விடுவர் அன்று இவரால் மயங்கி உள் மகிழ்ந்தனம் எனிலோ
நலிந்திடு பிறர்-தம் துயர்-தனைக் கண்டே நடுங்குறவரும் எனப் பயந்தே
மெலிந்து உடன் ஒளித்து வீதி வேறு ஒன்றின் மேவினேன் எந்தை நீ அறிவாய்.
29. களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட காலத்தும் உண்ட காலத்தும்
நெளிப்புறு மனத்தோடு அஞ்சினேன் எனை-தான் நேர்ந்த பல் சுபங்களில் நேயர்
அளிப்புறு விருந்து உண்டு அமர்க என்று அழைக்க அவர்களுக்கு அன்பினோடு ஆங்கே
ஒளிப்புறு வார்த்தை உரைத்து அயல் ஒளித்தே பயத்தொடும் உற்றனன் எந்தாய்.
30. இன்புறும் உணவு கொண்ட போது எல்லாம் இச் சுகத்தால் இனி யாது
துன்புறும்-கொல்லோ என்று உளம் நடுங்கிச் சூழ் வெறுவயிற்றொடும் இருந்தேன்
அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம் ஐயகோ தெய்வமே இவற்றால்
வன்புறச் செய்யேல் என்று உளம் பயந்து வாங்கி உண்டிருந்தனன் எந்தாய்.
31. உற்ற தாரணியில் எனக்கு உலகு உணர்ச்சி உற்ற நாள் முதல் ஒருசில நாள்
பெற்ற தாய் வாட்டம் பார்ப்பதற்கு அஞ்சிப் பேர்_உணவு உண்டனன் சில நாள்
உற்றவர் நேயர் அன்பு_உளார் வாட்டம் உறுவதற்கு அஞ்சினேன் உண்டேன்
மற்று இவை அல்லால் சுக உணாக் கொள்ள மனம் நடுங்கியது நீ அறிவாய்.
32. தொழும் தகை உடைய சோதியே அடியேன் சோம்பலால் வருந்திய-தோறும்
அழுந்த என் உள்ளம் பயந்ததை என்னால் அளவிடற்கு எய்துமோ பகலில்
விழுந்துறு தூக்கம் வர அது தடுத்தும் விட்டிடா வன்மையால் தூங்கி
எழுந்த போது எல்லாம் பயத்தொடும் எழுந்தேன் என் செய்வேன் என் செய்வேன் என்றே.
33. அந்தமோடு ஆதி இல்லதோர் பொதுவில் அரும் பெரும் சோதியே அடியேன்
சொந்தமோ அறியேன் பகல் இரவு எல்லாம் தூக்கமே கண்டனன் தூக்கம்
வந்த போது எல்லாம் பயத்தொடு படுத்தேன் மற்று நான் எழுந்த போது எல்லாம்
தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் தொலைவது எக் காலம் என்று எழுந்தேன்.
34. உடைய அம்பலத்தில் ஒருவனே என்றன் உயிர்க்குயிர் ஆகிய ஒளியே
கடையன் நான் நனவில் நடுங்கிய நடுக்கம் கணக்கிலே சிறிது உறும் கனவில்
இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் எண்ணவும் எழுதவும் படுமோ
நடையுறு சிறியேன் கனவு கண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ.
35. பகல் இரவு அடியேன் படுத்த போது எல்லாம் தூக்கமாம் பாவி வந்திடுமே
இகல் உறு கனவாம் கொடிய வெம் பாவி எய்துமே என் செய்வோம் என்றே
உகல் உற உள்ளே நடுங்கிய நடுக்கம் உன் உளம் அறியுமே எந்தாய்
நகல் உறச் சிறியேன் கனவுகண்டு உள்ளம் நடுங்கிடா நாளும் ஒன்று உளதோ.
36. தொகுப்புறு சிறுவர் பயிலும் கால் பயிற்றும் தொழிலிலே வந்த கோபத்தில்
சகிப்பு இலாமையினால் அடித்தனன் அடித்த தருணம் நான் கலங்கிய கலக்கம்
வகுப்பு உற நினது திருவுளம் அறியும் மற்றும் சில் உயிர்களில் கோபம்
மிகப் புகுந்து அடித்துப் பட்ட பாடு எல்லாம் மெய்ய நீ அறிந்ததே அன்றோ.
37. ஒடித்த இ உலகில் சிறுவர்-பால் சிறிய உயிர்கள்-பால் தீமை கண்டு ஆங்கே
அடித்திடற்கு அஞ்சி உளைந்தனன் என்னால் ஆற்றிடாக் காலத்தில் சிறிதே
பொடித்து நான் பயந்த பயம் எலாம் உனது புந்தியில் அறிந்ததே எந்தாய்
வெடித்த வெம் சினம் என் உளம் உறக் கண்டே வெதும்பிய நடுக்கம் நீ அறிவாய்.
38. கோபமே வருமோ காமமே வருமோ கொடிய மோகங்களே வருமோ
சாபமே அனைய தடை மதம் வருமோ தாமதப் பாவி வந்திடுமோ
பாபமே புரியும் லோபமே வருமோ பயன் இல் மாற்சரியம் வந்திடுமோ
தாப ஆங்காரமே உறுமோ என்று ஐய நான் தளர்ந்ததும் அறிவாய்.
39. காமமாம் மதம் ஆங்காரம் ஆதிகள் என் கருத்தினில் உற்ற போது எல்லாம்
நாமம் ஆர் உளத்தோடு ஐயவோ நான்-தான் நடுங்கிய நடுக்கம் நீ அறிவாய்
சேமம் ஆர் உலகில் காமம் ஆதிகளைச் செறிந்தவர்-தங்களைக் கண்டே
ஆமை போல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் ஐய நின் திருவுளம் அறியும்.
40. கருத்து வேறு ஆகிக் கோயிலில் புகுந்து உன் காட்சியைக் கண்ட போது எல்லாம்
வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி வந்து நொந்து இளைத்தனன் எந்தாய்
நிருத்தனே நின்னைத் துதித்த போது எல்லாம் நெகிழ்ச்சி இல்லாமையால் நடுங்கிப்
பருத்த என் உடம்பைப் பார்த்திடாது அஞ்சிப் படுத்ததும் ஐய நீ அறிவாய்.
41. புன் புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்து நான் இருக்கின்ற புணர்ப்பும்
என் பொலா மணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்
வன் புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கி உள் நடுங்கி ஆற்றாமல்
என்பு எலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐய நீ அறிவாய்.
42. இந்து அவிர் சடை எம் இறைவனே என்னோடு இயல் கலைத் தருக்கம்செய்திடவே
வந்தவர்-தம்மைக் கண்ட போது எல்லாம் மனம் மிக நடுங்கினேன் அறிவாய்
சந்தியுற்று ஒரு கால் படித்த சாத்திரத்தைத் தமியனேன் மீளவும் கண்டே
நொந்ததும் உலகப் படிப்பில் என் உள்ளம் நொந்ததும் ஐய நீ அறிவாய்.
43. முனித்த வெவ் வினையோ நின் அருள் செயலோ தெரிந்திலேன் மோகம் மேல் இன்றித்
தனித்தனி ஒரு சார் மடந்தையர்-தமக்குள் ஒருத்தியைக் கை தொடச் சார்ந்தேன்
குனித்த மற்று அவரைத் தொட்டனன் அன்றிக் கலப்பு_இலேன் மற்று இது குறித்தே
பனித்தனன் நினைத்த-தோறும் உள் உடைந்தேன் பகர்வது என் எந்தை நீ அறிவாய்.
44. பதியனே பொதுவில் பரம நாடகம் செய் பண்பனே நண்பனே உலகில்
ஒதியனேன் பிறர்-பால் உரத்த வார்த்தைகளால் ஒருசில வாதங்கள் புரிந்தே
மதி இலாமையினால் அகங்கரித்ததன் பின் வள்ளல் உன் அருளினால் அறிந்தே
விதியை நான் நொந்து நடுங்கியது எல்லாம் மெய்யனே நீ அறிந்ததுவே.
45. அருளினை அளிக்கும் அப்பனே உலகில் அன்பு_உளார் வலிந்து எனக்கு ஈந்த
பொருளினை வாங்கிப் போன போது எல்லாம் புழுங்கிய புழுக்கம் நீ அறிவாய்
மருளும் அப் பொருளைச் சாலகத்து எறிந்து மனம் மிக இளைத்ததும் பொருளால்
இருளுறும் என நான் உளம் நடுங்கியதும் எந்தை நின் திருவுளம் அறியும்.
46. பொருளிலே உலகம் இருப்பதாதலினால் புரிந்து நாம் ஒருவர்-பால் பல கால்
மருவினால் பொருளின் இச்சையால் பல கால் மருவுகின்றான் எனக் கருதி
வெருவுவர் என நான் அஞ்சி எவ்விடத்தும் மேவிலேன் எந்தை நீ அறிவாய்
ஒருவும் அப் பொருளை நினைத்த போது எல்லாம் உவட்டினேன் இதுவும் நீ அறிவாய்.
47. தகைத்த பேர்_உலகில் ஐயனே அடியேன் தடித்த உள்ளத்தொடு களித்தே
நகைத்த போது எல்லாம் நடுங்கினேன் இங்கே நல்ல வாகனங்களில் ஏறி
உகைத்த போது எல்லாம் நடுங்கினேன் விரைந்தே ஓட்டிய போது எலாம் பயந்தேன்
பகைத்த போது அயலார் பகைகளுக்கு அஞ்சிப் பதுங்கினேன் ஒதுங்கினேன் எந்தாய்.
48. சகப் புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் சஞ்சலம் உறும் எனப் பயந்தே
நகர் புறத்து இருக்கும் தோட்டங்கள்-தோறும் நண்ணியும் பிற இடத்து அலைந்தும்
பகல் பொழுது எல்லாம் நாள்-தொறும் கழித்தேன் பகல் அன்றி இரவும் அப்படியே
மிகப் பல இடத்தும் திரிந்தனன் அடியேன் விளம்பல் என் நீ அறிந்ததுவே.
49. உரு உள மடவார்-தங்களை நான் கண்ணுற்ற போது உளம் நடுக்குற்றேன்
ஒருவுளத்தவரே வலிந்திட வேறு ஓர் உவளகத்து ஒளித்து அயல் இருந்தேன்
கரு உளச் சண்டைக் கூக்குரல் கேட்ட காலத்தில் நான் உற்ற கலக்கம்
திருவுளம் அறியும் உரத்த சொல் எனது செவி புகில் கனல் புகுவதுவே.
50. பண்ணிகாரங்கள் பொசித்த அப்போதும் பராக்கிலே செலுத்திய போதும்
எண்ணிய மடவார்-தங்களை விழைந்தே இசைந்து அனுபவித்த அப்போதும்
நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் நவின்ற சங்கீதமும் நடமும்
கண்ணுறக் கண்டு கேட்ட அப்போதும் கலங்கிய கலக்கம் நீ அறிவாய்.
51. நயந்த பொன் சரிகைத் துகில் எனக்கு எனது நண்பினர் உடுத்திய போது
பயந்த அப் பயத்தை அறிந்தவர் எல்லாம் பயந்தனர் வெய்யிலில் கவிகை
வியந்து மேல் பிடித்த போது எலாம் உள்ளம் வெருவினேன் கைத் துகில் வீசி
அயம் தரு தெருவில் நடப்பதற்கு அஞ்சி அரைக்கு மேல் வீக்கினன் எந்தாய்.
52. கையுற வீசி நடப்பதை நாணிக் கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவி வெண் துகிலால் மெய் எலாம் ஐயகோ மறைத்தேன்
வையம் மேல் பிறர்-தம் கோலமும் நடையும் வண்ணமும் அண்ணலே சிறிதும்
பைய நான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் பார்ப்பனேல் பயம் மிகப் படைப்பேன்.
53. வைகிய நகரில் எழில் உடை மடவார் வலிந்து எனைக் கை பிடித்து இழுத்தும்
சைகை வேறு உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனைப் பல விசை அறிந்தும்
பொய் கரைந்து ஆணை புகன்றும் மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும்
கை கலப்பு அறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லை நீ அறிவாய்.
54. எளியரை வலியார் அடித்த போது ஐயோ என் மனம் கலங்கிய கலக்கம்
தெளிய நான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய்
களியரைக் கண்டு பயந்த என் பயம்-தான் கடலினும் பெரியது கண்டாய்
அளியர்-பால் கொடியர் செய்த வெம் கொடுமை அறிந்த என் நடுக்கம் ஆர் அறிவார்.
55. இரவிலே பிறர்-தம் இடத்திலே இருந்த இருப்பு எலாம் கள்ளர்கள் கூடிக்
கரவிலே கவர்ந்தார் கொள்ளை என்று எனது காதிலே விழுந்த போது எல்லாம்
விரவிலே நெருப்பை மெய்யிலே மூட்டி வெதுப்பல் போல் வெதும்பினேன் எந்தாய்
உரவிலே ஒருவர் திடுக்கென வரக் கண்டு உளம் நடுக்குற்றனன் பல கால்.
56. உரத்து ஒருவருக்கு அங்கு ஒருவர் பேசிய போது உள்ளகம் நடுங்கினேன் பல கால்
கரத்தினால் உரத்துக் கதவு தட்டிய போது ஐயவோ கலங்கினேன் கருத்தில்
புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப் பிறர் புகன்ற சொல் புகுந்தே
தரத்தில் என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தை நீ அறிந்தது தானே.
57. மண்ணில் நீள் நடையில் வந்த வெம் துயரை மதித்து உளம் வருந்திய பிறர்-தம்
கண்ணில் நீர் விடக் கண்டு ஐயவோ நானும் கண்ணில் நீர் விட்டு உளம் கவன்றேன்
நண்ணி நின்று ஒருவர் அசப்பிலே என்னை அழைத்த போது அடியனேன் எண்ணாது
எண்ணி யாது உற்றதோ எனக் கலங்கி ஏன் எனல் மறந்தனன் எந்தாய்.
58. தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும் என்று உளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங்களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்து உற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தை நீ அறிந்தது தானே.
59. என் புடை வந்தார்-தம் முகம் நோக்கி என்-கொலோ என்-கொலோ இவர்-தாம்
துன்பு_உடையவரோ இன்பு_உடையவரோ சொல்லுவது என்னையோ என்றே
வன்பு உடை மனது கலங்கி அங்கு அவரை வா எனல் மறந்தனன் எந்தாய்
அன்பு_உடையவரைக் கண்ட போது எல்லாம் என்-கொலோ என்று அயர்ந்தேனே.
60. காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி கதறிய போது எலாம் பயந்தேன்
ஏணுறு மாடு முதல் பல மிருகம் இளைத்தவை கண்டு உளம் இளைத்தேன்
கோணுறு கோழி முதல் பல பறவை கூவுதல் கேட்டு உளம் குலைந்தேன்
வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல் கண்டு என் என வெருண்டேன்.
61. பிதிர்ந்த மண் உடம்பை மறைத்திட வலியார் பின்_முன் நோக்காது மேல் நோக்கி
அதிர்ந்திட நடந்த போது எலாம் பயந்தேன் அவர் புகன்றிட்ட தீ_மொழிகள்
பொதிந்து இரு செவியில் புகும்-தொறும் பயந்தேன் புண்ணியா நின் துதி எனும் ஓர்
முதிர்ந்த தீம் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்த காய் கண்டு உளம் தளர்ந்தேன்.
62. வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடு-தோறு இரந்தும் பசி அறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்
ஈடு இல் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர்-தமைக் கண்டே இளைத்தேன்.
63. நலி தரு சிறிய தெய்வம் என்று ஐயோ நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள் பலி_கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெம் கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன்.
64. துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத் தொடங்கிய போது எலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக் கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட போது எல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் எந்தை நின் திருவுளம் அறியும்.
65. நடு நிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்
கெடு நிலை நினைக்கும் சிற்றதிகாரக் கேடரைப் பொய் அலால் கிளத்தாப்
படு நிலையவரைப் பார்த்த போது எல்லாம் பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடு நிலை உலக நடை எலாம் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.
66. ஓங்கிய திரு_சிற்றம்பலம் உடைய ஒரு தனித் தலைவனே என்னைத்
தாங்கிய தாயே தந்தையே குருவே தயாநிதிக் கடவுளே நின்-பால்
நீங்கிய மனத்தார் யாவரே எனினும் அவர்-தமை நினைத்த போது எல்லாம்
தேங்கிய உள்ளம் பயந்தனன் அது நின் திருவுளம் அறியுமே எந்தாய்.
67. காட்டு உயர் அணை மேல் இருக்கவும் பயந்தேன் காலின் மேல் கால் வைக்கப் பயந்தேன்
பாட்டு அயல் கேட்கப் பாடவும் பயந்தேன் பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணை மேல் இருந்து நன்குறக் களித்துக் கால் கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய்.
68. தலை நெறி ஞான சுத்த சன்மார்க்கம் சார்ந்திட முயலுறாது அந்தோ
கலை நெறி உலகக் கதியிலே கருத்தைக் கனிவுற வைத்தனர் ஆகிப்
புலை நெறி விரும்பினார் உலகு உயிர்கள் பொது எனக் கண்டு இரங்காது
கொலை நெறி நின்றார் தமக்கு உளம் பயந்தேன் எந்தை நான் கூறுவது என்னே.
69. இவ்வணம் சிறியேற்கு உலகியல் அறிவு இங்கு எய்திய நாள் அது தொடங்கி
நை வணம் இற்றைப் பகல் வரை அடைந்த நடுக்கமும் துன்பமும் உரைக்க
எவ்வணத்தவர்க்கும் அலகுறாது எனில் யான் இசைப்பது என் இசைத்ததே அமையும்
செவ்வணத் தருணம் இது தலைவா நின் திருவுளம் அறிந்ததே எல்லாம்.
70. தரைத் தலத்து எனை நீ எழுமையும் பிரியாத் தம்பிரான் அல்லையோ மனத்தைக்
கரைத்து உளே புகுந்து என் உயிரினுள் கலந்த கடவுள் நீ அல்லையோ எனை-தான்
இரைத்து இவண் அளித்து ஓர் சிற்சபை விளங்கும் எந்தை நீ அல்லையோ நின்-பால்
உரைத்தல் என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் நீ அறியாதது ஒன்று உண்டோ .
71. கைதலத்து ஓங்கும் கனியின் என்னுள்ளே கனிந்த என் களைகண் நீ அலையோ
மெய் தலத்து அகத்தும் புறத்தும் விட்டு அகலா மெய்யன் நீ அல்லையோ எனது
பைதல் தீர்த்து அருளும் தந்தை நீ அலையோ பரிந்து நின் திருமுன் விண்ணப்பம்
செய்தல் என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் திருவுளம் தெரிந்ததே எல்லாம்.
72. இன்னவாறு அடியேன் அச்சமும் துயரும் எய்திநின்று இளைத்தனன் அந்தோ
துன்ன ஆணவமும் மாயையும் வினையும் சூழ்ந்திடும் மறைப்பும் இங்கு உனை-தான்
உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் என்பவால் என் செய்வேன் எனது
மன்னவா ஞான மன்றவா எல்லாம்_வல்லவா இது தகுமேயோ.
73. எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த இளைப்பு எலாம் இங்கு நான் ஆற்றிக்
கொள்ளவே அடுத்தேன் மாயை ஆதிகள் என் கூடவே அடுத்தது என் அந்தோ
வள்ளலே எனது வாழ் முதல் பொருளே மன்னவா நின் அலால் அறியேன்
உள்ளல் வேறு இலை என் உடல் பொருள் ஆவி உன்னதே என்னது அன்று எந்தாய்.
74. என் சுதந்தரம் ஓர் எள்துணையேனும் இல்லையே எந்தை எல்லாம் உன்
றன் சுதந்தரமே அடுத்த இத் தருணம் தமியனேன்-தனைப் பல துயரும்
வன் சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் மாயையும் வினையும் ஆணவமும்
இன் சுவைக் கனி போல் உண்கின்றது அழகோ இவைக்கு எலாம் நான் இலக்கு அலவே.
75. அறிவு ஒருசிறிது இங்கு அறிந்த நாள் முதல் என் அப்பனே நினை மறந்து அறியேன்
செறிவு இலாச் சிறிய பருவத்தும் வேறு சிந்தைசெய்து அறிந்திலேன் உலகில்
பிறிது ஒரு பிழையும் செய்திலேன் அந்தோ பிழைத்தனன் ஆயினும் என்னைக்
குறியுறக் கொண்டே குலம் குறிப்பது நின் குணப் பெரும் குன்றினுக்கு அழகோ.
76. ஐய நான் ஆடும் பருவத்தில்-தானே அடுத்த நல் நேயனோடு அப்பா
பொய் உலகு ஆசை எனக்கு இலை உனக்கு என் புகல் என அவனும் அங்கு இசைந்தே
மெய்யுறத் துறப்போம் என்று போய் நினது மெய் அருள் மீட்டிட மீண்டேம்
துய்ய நின் உள்ளம் அறிந்ததே எந்தாய் இன்று நான் சொல்லுவது என்னே.
77. தேர்வு இலாச் சிறிய பருவத்தில்-தானே தெய்வமே தெய்வமே என நின்
சார்வு கொண்டு எல்லாச் சார்வையும் விடுத்தேன் தந்தையும் குருவும் நீ என்றேன்
பேர்வு இலாது உளத்தே வந்தவா பாடிப் பிதற்றினேன் பிறர் மதிப்பு அறியேன்
ஓர்வு இலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் இன்று நான் உரைப்பது இங்கு என்னே.
78. பொறித்து உனைப் பதியாப் பெற்ற நாள் அடிமை புரிந்தது போலவே இன்றும்
செறித்து நிற்கின்றேன் அன்றி என் உரிமைத் தெய்வமும் குருவும் மெய்ப்பொருளும்
நெறித்த நல் தாயும் தந்தையும் இன்பும் நேயமும் நீ எனப் பெற்றே
குறித்து அறிந்ததன் பின் எந்தை நான் ஏறிக் குதித்தது என் கூறுக நீயே.
79. பரிந்து உனைப் பதியாப் பெற்ற நாள் அடிமை பணி புரிந்து ஆங்கு இது வரையில்
புரிந்து உறுகின்றேன் அன்றி என் உயிரும் பொருளும் என் புணர்ப்பும் என் அறிவும்
விரிந்த என் சுகமும் தந்தையும் குருவும் மெய்ம்மையும் யாவும் நீ என்றே
தெரிந்த பின் அந்தோ வேறு நான் செய்த செய்கை என் செப்புக நீயே.
80. மை தவழ் விழி என் அம்மை ஓர் புடை கொள் வள்ளலே நின்னை அன்பாலும்
வைதவர்-தமை நான் மதித்திலேன் அன்பால் வாழ்த்துகின்றோர்-தமை வாழ்த்தி
உய்தவர் இவர் என்று உறுகின்றேன் அல்லால் உன் அருள் அறிய நான் வேறு
செய்தது ஒன்று இலையே செய்தனன் எனினும் திருவுளத்து அடைத்திடல் அழகோ.
81. ஆரணம் உரைத்த வரைப்பு எலாம் பலவாம் ஆகமம் உரை வரைப்பு எல்லாம்
காரண நினது திரு_அருள் செங்கோல் கணிப்ப அரும் களிப்பிலே ஓங்கி
நாரணர் முதலோர் போற்றிட விளங்கி நடக்கின்ற பெருமை நான் அறிந்தும்
தாரணியிடை இத் துன்பம் ஆதிகளால் தனையனேன் தளருதல் அழகோ.
82. பார் முதல் நாதப் பதி எலாம் கடந்து அப்பாலும் அப்பாலும் அப்பாலும்
ஓர் முதல் ஆகித் திரு_அருள் செங்கோல் உரைப்ப அரும் பெருமையின் ஓங்கிச்
சீர் பெற விளங்க நடத்தி மெய்ப் பொதுவில் சிறந்த மெய்த் தந்தை நீ இருக்க
வார் கடல் உலகில் அச்சம் ஆதிகளால் மகன் மனம் வருந்துதல் அழகோ.
83. ஆர்ந்த வேதாந்தப் பதி முதல் யோகாந்தப் பதி வரையும் அப்பாலும்
தேர்ந்து அருள் ஆணைத் திரு_நெறிச் செங்கோல் செல்ல ஓர் சிற்சபை இடத்தே
சார்ந்த பேர்_இன்பத் தனி அரசு இயற்றும் தந்தையே தனிப் பெருந் தலைவா
பேர்ந்திடேன் எந்தவிதத்திலும் நினக்கே பிள்ளை நான் வருந்துதல் அழகோ.
84. சித்திகள் எல்லாம்_வல்லதோர் ஞானத் திரு_சபை-தன்னிலே திகழும்
சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் தழைத்திடத் தனி அருள் செங்கோல்
சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் தனி முதல் தந்தையே தலைவா
பித்தியல் உடையேன் எனினும் நின்றனக்கே பிள்ளை நான் வாடுதல் அழகோ.
85. சாற்று பேர்_அண்டப் பகுதிகள் அனைத்தும் தனித்தனி அவற்றுளே நிரம்பித்
தோற்று மா பிண்டப் பகுதிகள் அனைத்தும் சோதியால் விளக்கி ஆனந்த
ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் அரும் பெரும் தந்தையே இன்பப்
பேற்றிலே விழைந்தேன் தலைவ நின்றனக்கே பிள்ளை நான் பேதுறல் அழகோ.
86. சிறந்த தத்துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் திகழ் ஒளியாய் ஒளி எல்லாம்
பிறங்கிய வெளியாய் வெளி எலாம் விளங்கும் பெருவெளியாய் அதற்கு அப்பால்
நிறைந்த சிற்சபையில் அருள் அரசு இயற்றும் நீதி நல் தந்தையே இனிமேல்
பிறந்திடேன் இறவேன் நின்னை விட்டு அகலேன் பிள்ளை நான் வாடுதல் அழகோ.
87. எண்ணிய எல்லாம்_வல்ல பேர்_அருளாம் இணை_இலாத் தனி நெடும் செங்கோல்
நண்ணிய திரு_சிற்றம்பலத்து அமர்ந்தே நடத்தும் ஓர் ஞான நாயகனே
தண் அருள் அளிக்கும் தந்தையே உலகில் தனையன் நான் பயத்தினால் துயரால்
அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் ஐயகோ வாடுதல் அழகோ.
88. கலை எலாம் புகலும் கதி எலாம் கதியில் காண்கின்ற காட்சிகள் எல்லாம்
நிலை எலாம் நிலையில் நேர்ந்து அனுபவம்செய் நிறைவு எலாம் விளங்கிடப் பொதுவில்
மலைவு இலாச் சோதி அருள் பெரும் செங்கோல் வாய்மையால் நடத்தும் ஓர் தனிமைத்
தலைவனே எனது தந்தையே நினது தனையன் நான் தளருதல் அழகோ.
89. ஆதியே நடுவே அந்தமே எனும் இ அடைவு எலாம் இன்றி ஒன்றான
சோதியே வடிவாய்த் திரு_சிற்றம்பலத்தே தூய பேர்_அருள் தனிச் செங்கோல்
நீதியே நடத்தும் தனிப் பெரும் தலைமை நிருத்தனே ஒருத்தனே நின்னை
ஓதியே வழுத்தும் தனையன் நான் இங்கே உறுகணால் தளருதல் அழகோ.
90. அத்தனே திரு_சிற்றம்பலத்து அரசே அரும் பெருஞ் சோதியே அடியார்
பித்தனே எனினும் பேயனே எனினும் பெரிது அருள் புரி தனித் தலைமைச்
சித்தனே எல்லாம் செய்திட வல்ல செல்வனே சிறப்பனே சிவனே
சுத்தனே நினது தனையன் நான் மயங்கித் துயர்ந்து உளம் வாடுதல் அழகோ.
91. உற்றதோர் திரு_சிற்றம்பலத்து ஓங்கும் ஒரு தனித் தந்தையே நின்-பால்
குற்றம் நான் புரிந்து இங்கு அறிந்திலேன் குற்றம் குயிற்றினேன் என்னில் அக் குற்றம்
இற்றென அறிவித்து அறிவு தந்து என்னை இன்புறப் பயிற்றுதல் வேண்டும்
மற்று அயலார் போன்று இருத்தலோ தந்தை வழக்கு இது நீ அறியாயோ.
92. குற்றமோ குணமோ நான் அறியேன் என் குறிப்பு எலாம் திரு_சிற்றம்பலத்தே
உற்றதாதலினால் உலகியல் வழக்கில் உற்றன மற்று எனது அலவே
தெற்றென அருட்கே குற்றம் என்பது நான் செய்திடில் திருத்தலே அன்றி
மற்று அயலார் போன்று இருப்பதோ தந்தை மரபு இது நீ அறியாயோ.
93. மாயையால் வினையால் அரி பிரமாதி வானவர் மனம் மதி மயங்கித்
தீய காரியங்கள் செய்திடில் அந்தோ சிறியனேன் செய்வது புதிதோ
ஆயினும் தீய இவை என அறியேன் அறிவித்துத் திருத்துதல் அன்றி
நீ இவண் பிறர் போன்று இருப்பது தந்தை நெறிக்கு அழகு அல்லவே எந்தாய்.
94. கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக மற்று எல்லாம்
மருள் நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்
இருள் நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்தியது என் செய்வேன் எந்தாய்
தெருள் நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறு நெறி பிடித்தது ஒன்று இலையே.
95. கலங்கிய போதும் திரு_சிற்றம்பலத்தில் கருணை அம் கடவுளே நின்-பால்
இலங்கிய நேயம் விலங்கியது இலையே எந்தை நின் உளம் அறியாதோ
மலங்கிய மனத்தேன் புகல்வது என் வினையால் மாயையால் வரும் பிழை எல்லாம்
அலங்கும் என் பிழைகள் அல்ல என்று உன்னோடு அடிக்கடி அறைந்தனன் ஆண்டே.
96. இரும்பினும் கொடிய மனம் செயும் பிழையும் என் பிழை அன்று எனப் பல கால்
விரும்பி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் வேறு நான் செய்தது இங்கு என்னே
அரும் பொனே திரு_சிற்றம்பலத்து அமுதே அப்பனே என்று இருக்கின்றேன்
துரும்பினும் சிறியேன் புகல்வது என் நினது தூயதாம் திருவுளம் அறியும்.
97. வரும் உயிர் இரக்கம் பற்றியே உலக வழக்கில் என் மனம் சென்ற-தோறும்
வெருவி நின் அடிக்கே விண்ணப்பித்திருந்தேன் விண்ணப்பம் செய்கின்றேன் இன்றும்
உருவ என் உயிர்-தான் உயிர் இரக்கம்-தான் ஒன்று அதே இரண்டு இலை இரக்கம்
ஒருவில் என் உயிரும் ஒருவும் என் உள்ளத்து ஒருவனே நின் பதத்து ஆணை.
98. தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் தலைவனே இன்றும் என் உளமும்
மலைவு இல் என் அறிவும் நானும் இ உலக வழக்கிலே உயிர் இரக்கத்தால்
இலகுகின்றனம் நான் என் செய்வேன் இரக்கம் என் உயிர் என்ன வேறு இலையே
நிலைபெறும் இரக்கம் நீங்கில் என் உயிரும் நீங்கும் நின் திருவுளம் அறியும்.
99. ஆதலால் இரக்கம் பற்றி நான் உலகில் ஆடலே அன்றி ஓர் விடயக்
காதலால் ஆடல் கருதிலேன் விடயக் கருத்து எனக்கு இல்லை என்றிடல் இப்
போது அலால் சிறிய போதும் உண்டு அது நின் புந்தியில் அறிந்தது-தானே
ஈதலால் வேறு ஓர் தீது என திடத்தே இல்லை நான் இசைப்பது என் எந்தாய்.
100. என்னையும் இரக்கம்-தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித்து இ உலகில்
மன்னி வாழ்வுறவே வருவித்த கருணை வள்ளல் நீ நினக்கு இது விடயம்
பன்னல் என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய்
இன்னவாறு என நீ சொன்னவாறு இயற்றாது இருந்ததோர் இறையும் இங்கு இலையே.
101. உறு வினை தவிர்க்கும் ஒருவனே உலகில் ஓடியும் ஆடியும் உழன்றும்
சிறுவர்-தாம் தந்தை வெறுப்ப ஆர்க்கின்றார் சிறியனேன் ஒரு தினமேனும்
மறுகி நின்று ஆடி ஆர்த்தது இங்கு உண்டோ நின் பணி மதிப்பு அலால் எனக்குச்
சிறு விளையாட்டில் சிந்தையே இலை நின் திருவுளம் அறியுமே எந்தாய்.
102. தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் பயன் இல் சழக்குரையாடி வெம் காமச்
சிந்தையர் ஆகித் திரிகின்றார் அந்தோ சிறியனேன் ஒரு தினமேனும்
எந்தை நின் உள்ளம் வெறுப்ப நின் பணி விட்டு இ உலகியலில் அவ்வாறு
தெந்தன என்றே திரிந்தது உண்டேயோ திருவுளம் அறிய நான் அறியேன்.
103. அம் புவி-தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவருடனே
வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின் பணி விடுத்தே
இம்பர் இ உலகில் ஒரு தினமேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே
வெம்புறு சண்டை விளைத்தது உண்டேயோ மெய்ய நின் ஆணை நான் அறியேன்.
104. வள்ளல் இ உலகில் தந்தையர் வெறுப்ப மக்கள்-தாம் ஒழுக்கத்தை மறந்தே
கள் அருந்துதல் சூதாடுதல் காமக் கடை-தொறும் மயங்குதல் பொய்யே
விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் மெய்ய நின் திரு_பணி விடுத்தே
எள்ளி அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன்.
105. மலைவு இலாத் திரு_சிற்றம்பலத்து அமர்ந்த வள்ளலே உலகினில் பெற்றோர்
குலை_நடுக்குறவே கடுகடுத்து ஓடிக் கொடிய தீ_நெறியிலே மக்கள்
புலை கொலை களவே புரிகின்றார் அடியேன் புண்ணிய நின் பணி விடுத்தே
உலைய அவ்வாறு புரிந்தது ஒன்று உண்டோ உன் பதத்து ஆணை நான் அறியேன்.
106. தனிப் பெரும் சோதித் தந்தையே உலகில் தந்தையர் பற்பல காலும்
இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட்கு ஏற்கவே பயிற்றிடும்-தோறும்
பனிப்புற ஓடிப் பதுங்கிடுகின்றார் பண்பனே என்னை நீ பயிற்றத்
தினைத்தனையேனும் பதுங்கியது உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன்.
107. தன்னை நேர் இல்லாத் தந்தையே உலகில் தந்தையர்-தங்களை அழைத்தே
சொன்ன சொல் மறுத்தே மக்கள் தம் மனம் போம் சூழலே போகின்றார் அடியேன்
என்னை நீ உணர்த்தல் யாது அது மலையின் இலக்கு எனக் கொள்கின்றேன் அல்லால்
பின்னை ஓர் இறையும் மறுத்தது ஒன்று உண்டோ பெரிய நின் ஆணை நான் அறியேன்.
108. போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் பொருந்து தம் தந்தையர்-தமையே
வேற்று வாழ்வு அடைய வீடு தா பணம் தா மெல்லிய சரிகை வத்திரம் தா
ஏற்ற ஆபரணம் தா எனக் கேட்டே இரங்குவார் இவை குறித்து அடியேன்
தேற்றுவாய் நின்னைக் கேட்டது ஒன்று உண்டோ திருவுளம் அறிய நான் அறியேன்.
109. குணம் புரி எனது தந்தையே உலகில் கூடிய மக்கள் தந்தையரைப்
பணம் புரி காணி பூமிகள் புரி நல் பதி புரி ஏற்ற பெண் பார்த்தே
மணம் புரி எனவே வருத்துகின்றார் என் மனத்திலே ஒருசிறிதேனும்
எணம் புரிந்து உனை நான் வருத்தியது உண்டோ எந்தை நின் ஆணை நான் அறியேன்.
110. இகத்திலே எனை வந்து ஆண்ட மெய்ப்பொருளே என் உயிர்த் தந்தையே இந்தச்
சகத்திலே மக்கள் தந்தையரிடத்தே தாழ்ந்தவராய்ப் புறம் காட்டி
அகத்திலே வஞ்சம் வைத்திருக்கின்றார் ஐயவோ வஞ்சம் நின்அளவில்
முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ முதல்வ நின் ஆணை நான் அறியேன்.
111. தன்மை காண்ப அரிய தலைவனே எனது தந்தையே சகத்திலே மக்கள்
வன்மை வார்த்தைகளால் தந்தையர்-தம்மை வைகின்றார் வள்ளலே மருந்தே
என் மனக் கனிவே என் இரு கண்ணே என் உயிர்க்கு இசைந்த மெய்த் துணையே
நின் மனம் வெறுப்பப் பேசியது உண்டோ நின் பதத்து ஆணை நான் அறியேன்.
112. ஒப்பு இலா மணி என் அப்பனே உலகில் உற்றிடு மக்கள் தந்தையரை
வைப்பில் வேறு ஒருவர் வைதிடக் கேட்டு மனம் பொறுத்து இருக்கின்றார் அடியேன்
தப்பு இலாய் நினை வேறு உரைத்திடக் கேட்டால் தரிப்பனோ தரித்திடேன் அன்றி
வெப்பில் என் உயிர்-தான் தரிக்குமோ யாதாய் விளையுமோ அறிந்திலேன் எந்தாய்.
113. இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் எந்தை நின் திரு_பணி விடுத்தே
சித்தம் வேறு ஆகித் திரிந்ததே இலை நான் தெரிந்த நாள் முதல் இது வரையும்
அத்தனே அரசே ஐயனே அமுதே அப்பனே அம்பலத்து ஆடும்
சித்தனே சிவனே என்று எனது உளத்தே சிந்தித்தே இருக்கின்றேன் இன்றும்.
114. பொய் வகை மனத்தேன் என்னினும் எந்தாய் பொய் உலகு ஆசை சற்று அறியேன்
நை வகை தவிரத் திரு_சிற்றம்பலத்தே நண்ணிய மெய்ப்பொருள் நமது
கைவகைப்படல் எக் கணத்திலோ என நான் கருதினேன் கருத்தினை முடிக்கச்
செய் வகை அறியேன் என் செய்வேன் ஐயோ தெய்வமே என்று இருக்கின்றேன்.
115. அன்னையே என்றன் அப்பனே திரு_சிற்றம்பலத்து அமுதனே என நான்
உன்னையே கருதி உன் பணி புரிந்து இங்கு உலகிலே கருணை என்பது-தான்
என்னையே நிலையாய் இருத்த உள் வருந்தி இருக்கின்றேன் என் உள மெலிவும்
மன்னும் என் உடம்பின் மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
116. பொய்படாப் பயனே பொன்_சபை நடம் செய் புண்ணியா கண்ணினுள் மணியே
கைபடாக் கனலே கறைபடா மதியே கணிப்ப அரும் கருணை அம் கடலே
தெய்வமே என நான் நின்னையே கருதித் திரு_பணி புரிந்து இருக்கின்றேன்
மைபடா உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
117. தன் நிகர் அறியாத் தலைவனே தாயே தந்தையே தாங்கும் நல் துணையே
என் இரு கண்ணே என் உயிர்க்குயிரே என் உடை எய்ப்பினில் வைப்பே
உன்னுதற்கு இனிய ஒருவனே என நான் உன்னையே நினைத்து இருக்கின்றேன்
மன்னும் என் உள்ள மெலிவும் நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
118. திரு வளர் திரு அம்பலத்திலே அ நாள் செப்பிய மெய் மொழிப் பொருளும்
உரு வளர் திருமந்திரத் திருமுறையால் உணர்த்திய மெய் மொழிப் பொருளும்
கரு வளர் அடியேன் உளத்திலே நின்று காட்டிய மெய் மொழிப் பொருளும்
மருவி என் உளத்தே நம்பி நான் இருக்கும் வண்ணமும் திருவுளம் அறியும்.
119. உவந்து எனது உளத்தே உணர்த்திய எல்லாம் உறு மலை இலக்கு என நம்பி
நிவந்த தோள் பணைப்ப மிக உளம் களிப்ப நின்றதும் நிலைத்த மெய்ப்பொருள் இப்
பவம்-தனில் பெறுதல் சத்தியம் எனவே பற்பல குறிகளால் அறிந்தே
சிவந்த பொன்_மலை போல் இருந்ததும் இ நாள் திகைப்பதும் திருவுளம் அறியும்.
120. ஏய்ந்த பொன்_மலை மேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித்
தேய்ந்த போது அடியேன் பயந்த வெம் பயத்தைத் தீர்த்து மேல் ஏற்றிய திறத்தை
வாய்ந்து உளே கருதி மலை எனப் பணைத்தே மனம் களிப்புற்று மெய் இன்பம்
தோய்ந்து நின்று ஆடிச் சுழன்றதும் இ நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்.
121. வாட்டமோடு இருந்த சிறியனேன்-தனது வாட்டமும் மாயை ஆதிகளின்
ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத்து இரங்கி என்னை ஓர் பொருள் என மதித்தே
தீட்ட அரும் புகழ் சேர் திரு_அடித் துணைகள் செலுத்திய திரு_சிலம்பொலி நான்
கேட்ட போது இருந்த கிளர்ச்சியும் இ நாள் கிலேசமும் திருவுளம் அறியும்.
122. கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல் என் காதிலே கிடைத்த போது எல்லாம்
மற்றவர்-தமக்கு என் உற்றதோ அவர்-தம் மரபினர் உறவினர்-தமக்குள்
உற்றது இங்கு எதுவோ என்று உளம் நடுங்கி ஓடிப் பார்த்து ஓடிப் பார்த்து இரவும்
எல் தரு பகலும் ஏங்கி நான் அடைந்த ஏக்கமும் திருவுளம் அறியும்.
123. கருணை அம் பதி நம் கண்ணுள் மா மணி நம் கருத்திலே கலந்த தெள் அமுதம்
மருள் நெறி தவிர்க்கும் மருந்து எலாம் வல்ல வள்ளல் சிற்றம்பலம் மன்னும்
பொருள் நிறை இன்பம் நம்மை ஆண்டு அளித்த புண்ணியம் வருகின்ற தருணம்
தருணம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
124. இமையவர் பிரமர் நாரணர் முதலோர் எய்துதற்கு அரிய பேர்_இன்பம்
தமை அறிந்தவருள் சார்ந்த பேர்_ஒளி நம் தயாநிதி தனிப் பெருந் தந்தை
அமையும் நம் உயிர்க்குத் துணை திரு_பொதுவில் ஐயர் தாம் வருகின்ற சமயம்
சமயம் இப்போது என்று எண்ணி நான் இருக்கும் தன்மையும் திருவுளம் அறியும்.
125. அடியனேன் உள்ளம் திரு_சிற்றம்பலத்து என் அமுத நின் மேல் வைத்த காதல்
நெடிய ஏழ் கடலில் பெரிது எனக்கு இ நாள் நிகழ்கின்ற ஆவலும் விரைவும்
படிய என்றன்னால் சொல முடியாது பார்ப்பு அறப் பார்த்து இருக்கின்றேன்
செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் திருவுளம் கண்டதே எந்தாய்.
126. பன்னிரண்டு ஆண்டு தொடங்கி நான் இற்றைப் பகல் வரை அடைந்தவை எல்லாம்
உன்னி நின்று உரைத்தால் உலப்புறாது அதனால் ஒருசில உரைத்தனன் எனினும்
என் உளத்து அகத்தும் புறத்தும் உட்புறத்தும் இயல்புறப் புறத்தினும் விளங்கி
மன்னிய சோதி யாவும் நீ அறிந்த வண்ணமே வகுப்பது என் நினக்கே.
127. இதுவரை அடியேன் அடைந்த வெம் பயமும் இடர்களும் துன்பமும் எல்லாம்
பொது வளர் பொருளே பிறர் பொருட்டு அல்லால் புலையனேன் பொருட்டு அல இது நின்
மது வளர் மலர்ப் பொன்_பதத் துணை அறிய வகுத்தனன் அடியனேன்-தனக்கே
எதிலும் ஓர் ஆசை இலை இலை பயமும் இடரும் மற்று இலை இலை எந்தாய்.
128. என்னளவு இலையே என்னினும் பிறர்-பால் எய்திய கருணையால் எந்தாய்
உன்னுறு பயமும் இடரும் என்றன்னை உயிரொடும் தின்கின்றது அந்தோ
இன்னும் என்றனக்கு இ இடரொடு பயமும் இருந்திடில் என் உயிர் தரியாது
அன்னையும் குருவும் அப்பனும் ஆன அமுதனே அளித்து அருள் எனையே.
129. பயத்தொடு துயரும் மறைப்பும் மாமாயைப் பற்றொடு வினையும் ஆணவமும்
கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது கருத்திலே இனி ஒரு கணமும்
வியத்திடத் தரியேன் இவை எலாம் தவிர்த்து உன் மெய் அருள் அளித்திடல் வேண்டும்
உயத் தருவாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே.
130. ஐய நான் பயத்தால் துயரினால் அடைந்த அடைவை உள் நினைத்திடும்-தோறும்
வெய்ய தீ மூட்டி விடுதல் ஒப்பது நான் மிக இவற்றால் இளைத்திட்டேன்
வையம் மேல் இனி நான் இவைகளால் இளைக்க வசம் இலேன் இவை எலாம் தவிர்த்தே
உய்யவைப்பாயேல் இருக்கின்றேன் இலையேல் உயிர்விடுகின்றனன் இன்றே.
131. பயம் துயர் இடர் உள் மருட்சி ஆதிய இப் பகை எலாம் பற்று அறத் தவிர்த்தே
நயந்த நின் அருளார் அமுது அளித்து அடியேன் நாடி ஈண்டு எண்ணிய எல்லாம்
வியந்திடத் தருதல் வேண்டும் ஈது எனது விண்ணப்பம் நின் திருவுளத்தே
வயம் தரக் கருதித் தயவு செய்து அருள்க வள்ளலே சிற்சபை வாழ்வே.
132. என் உயிர் காத்தல் கடன் உனக்கு அடியேன் இசைத்த விண்ணப்பம் ஏற்று அருளி
உன்னும் என் உள்ளத்து உறும் பயம் இடர்கள் உறுகண் மற்று இவை எலாம் ஒழித்தே
நின் அருள் அமுதம் அளித்து எனது எண்ணம் நிரப்பி ஆட்கொள்ளுதல் வேண்டும்
மன்னு பொன்_சபையில் வயங்கிய மணியே வள்ளலே சிற்சபை வாழ்வே.
133. பரிக்கிலேன் பயமும் இடரும் வெம் துயரும் பற்று அறத் தவிர்த்து அருள் இனி நான்
தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம் தரிக்கிலேன் தரிக்கிலேன் அந்தோ
புரிக் கிலேசத்தை அகற்றி ஆட்கொள்ளும் பொன்_சபை அண்ணலே கருணை
வரிக் கண் நேர் மடந்தை பாகனே சிவனே வள்ளலே சிற்சபை வாழ்வே.