திருவருட்பா
இரண்டாம் திருமுறை
பொது
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. பாடற் கினிய வாக்களிக்கும் பாலும் சோறும் பரிந்தளிக்கும்
கூடற் கினிய அடியவர்தம் கூட்டம் அளிக்கும் குணம்அளிக்கும்
ஆடற் கினிய நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தேடற் கினிய சீர் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
2. கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும்
பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும்
அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
3. வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந்
துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும்
ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே.
4. கோல மலர்த்தாள் துணைவழுத்தும் குலத்தொண் டடையக் கூட்டுவிக்கும்
நீல மணிகண் டப்பெருமான் நிலையை அறிவித் தருளளிக்கும்
ஆல வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சீலம் அளிக்கும் திருஅளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
5. வஞ்சப் புலக்கா டெறியஅருள் வாளும் அளிக்கும் மகிழ்வளிக்கும்
கஞ்சத் தவனும் கரியவனும் காணற் கரிய கழல்அளிக்கும்
அஞ்சில் புகுந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செஞ்சொல் புலவர் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
6. கண்கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டிதனை
விண்கொள் அமுதை நம்அரசை விடைமேல் நமக்குத் தோற்றுவிக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்கொள் முனிவர் சுரர்புகழும் சிவாய நமஎன் றிடுநீறே.
7. நோயை அறுக்கும் பெருமருந்தை நோக்கற் கரிய நுண்மைதனைத்
தூய விடைமேல் வரும்நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
சேய அயன்மால் நாடரிதாம் சிவாய நமஎன் றிடுநீறே.
8. எண்ண இனிய இன்னமுதை இன்பக் கருணைப் பெருங்கடலை
உண்ண முடியாச் செழுந்தேனை ஒருமால் விடைமேல் காட்டுவிக்கும்
அண்ண வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
திண்ண மளிக்கும் திறம்அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
9. சிந்தா மணியை நாம்பலநாள் தேடி எடுத்த செல்வமதை
இந்தார் வேணி முடிக்கனியை இன்றே விடைமேல் வரச்செயும்காண்
அந்தோ வினையால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செந்தா மரையோன் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
10. உள்ளத் தெழுந்த மகிழ்வைநமக் குற்ற துணையை உள்உறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடைமேல் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
தெள்ளக் கடலான் புகழ்ந்தேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே.
11. உற்ற இடத்தில் உதவநமக் குடையோர் வைத்த வைப்பதனைக்
கற்ற மனத்தில் புகுங்கருணைக் கனியை விடைமேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய்
செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நமஎன் றிடுநீறே.
திருச்சிற்றம்பலம்
1. பாடற்கு இனிய வாக்கு அளிக்கும் பாலும் சோறும் பரிந்து அளிக்கும்
கூடற்கு இனிய அடியவர்-தம் கூட்டம் அளிக்கும் குணம் அளிக்கும்
ஆடற்கு இனிய நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
தேடற்கு இனிய சீர் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.
2. கரு மால் அகற்றும் இறப்பு-அதனைக் களையும் நெறியும் காட்டுவிக்கும்
பெரு மால்-அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசை அறுக்கும்
அரு மால் உழந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
திருமால் அயனும் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே.
3. வெய்ய வினையின் வேர் அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டில் அடைந்து
உய்ய அமல நெறி காட்டும் உன்னற்கு அரிய உணர்வு அளிக்கும்
ஐயம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
செய்ய மலர்க் கண் மால் போற்றும் சிவாய நம என்று இடு நீறே.
4. கோல மலர்த் தாள் துணை வழுத்தும் குலத் தொண்டு அடையக் கூட்டுவிக்கும்
நீல மணி_கண்டப் பெருமான் நிலையை அறிவித்து அருள் அளிக்கும்
ஆல வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
சீலம் அளிக்கும் திரு அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.
5. வஞ்சப் புலக் காடு எறிய அருள் வாளும் அளிக்கும் மகிழ்வு அளிக்கும்
கஞ்சத்தவனும் கரியவனும் காணற்கு அரிய கழல் அளிக்கும்
அஞ்சில் புகுந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
செஞ்சொல் புலவர் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே.
6. கண் கொள் மணியை முக்கனியைக் கரும்பைக் கரும்பின் கட்டி-தனை
விண் கொள் அமுதை நம் அரசை விடை மேல் நமக்குத் தோற்றுவிக்கும்
அண்கொள் வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
திண் கொள் முனிவர் சுரர் புகழும் சிவாய நம என்று இடு நீறே.
7. நோயை அறுக்கும் பெரு மருந்தை நோக்கற்கு அரிய நுண்மை-தனைத்
தூய விடை மேல் வரும் நமது சொந்தத் துணையைத் தோற்றுவிக்கும்
ஆய வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
சேய அயன் மால் நாட அரிதாம் சிவாய நம என்று இடு நீறே.
8. எண்ண இனிய இன் அமுதை இன்பக் கருணைப் பெரும்_கடலை
உண்ண முடியாச் செழும் தேனை ஒரு மால் விடை மேல் காட்டுவிக்கும்
அண்ண வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
திண்ணம் அளிக்கும் திறம் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே.
9. சிந்தாமணியை நாம் பல நாள் தேடி எடுத்த செல்வம்-அதை
இந்து ஆர் வேணி முடி கனியை இன்றே விடை மேல் வரச்செயும் காண்
அந்தோ வினையால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
செந்தாமரையோன் தொழுது ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே.
10. உள்ளத்து எழுந்த மகிழ்வை நமக்கு உற்ற_துணையை உள் உறவைக்
கொள்ளக் கிடையா மாணிக்கக் கொழுந்தை விடை மேல் கூட்டுவிக்கும்
அள்ளல் துயரால் நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
தெள்ள_கடலான் புகழ்ந்து ஏத்தும் சிவாய நம என்று இடு நீறே.
11. உற்ற இடத்தில் உதவ நமக்கு உடையோர் வைத்த வைப்பு-அதனைக்
கற்ற மனத்தில் புகும் கருணைக் கனியை விடை மேல் காட்டுவிக்கும்
அற்றம் அடைந்த நெஞ்சே நீ அஞ்சேல் என் மேல் ஆணை கண்டாய்
செற்றம் அகற்றித் திறல் அளிக்கும் சிவாய நம என்று இடு நீறே