திருவருட்பா
ஐந்தாம் திருமுறை
நேரிசை வெண்பா
திருச்சிற்றம்பலம்
1. அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான்அருள்வான்
அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் – அஞ்சுமுக
வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர்அரையோ
டஞ்சரையான் கண்கள் அவை.
2. வாதாகா வண்ண மணியேஎம் வல்லபைதன்
நாதாகா வண்ண நலங்கொள்வான் – போதார்
வனங்காத்து நீர்அளித்த வள்ளலே அன்பால்
இனங்காத் தருளாய் எனை.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
3. உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமா முகமும்ஐங் கரமும்
இலகுசெம் மேனிக் காட்சியும் இரண்டோ டிரண்டென ஓங்குதிண் தோளும்
திலகவாள் நுதலார் சித்திபுத் திகளைச் சேர்த்தணைத் திடும்இரு மருங்கும்
விலகுறா தெளியேன் விழைந்தனன் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
4. உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும்நின் தனக்கே
கள்ளமும் கரிசும் நினைந்திடா துதவிக் கழல்இணை நினைந்துநின் கருணை
வெள்ளம்உண் டிரவுபகல்அறி யாத வீட்டினில் இருந்துநின் னோடும்
விள்ளல்இல் லாமல் கலப்பனோ சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
5. நாதமும் கடந்து நிறைந்துநின் மயமே நான்என அறிந்துநான் தானாம்
பேதமும் கடந்த மௌனராச் சியத்தைப் பேதையேன் பிடிப்பதெந் நாளோ
ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும்
வேதமும் தாங்கும் பாதனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
6. சச்சிதானந்த வடிவம்நம் வடிவம் தகும்அதிட் டானம்மற் றிரண்டும்
பொய்ச்சிதா பாசக் கற்பனை இவற்றைப் போக்கியாங் கவ்வடி வாகி
அச்சிதா கார போதமும் அதன்மேல் ஆனந்த போதமும் விடுத்தல்
மெய்ச்சிதாம் வீடென் றுரைத்தனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
7. ஒன்றல இரண்டும் அலஇரண் டொன்றோ டுருஅல அருஅல உவட்ட
நன்றல நன்றல் லாதல விந்து நாதமும் அலஇவை அனைத்தும்
பொன்றல்என் றறிந்துட் புறத்தினும் அகண்ட பூரண மாம்சிவம் ஒன்றே
வென்றல்என் றறிநீ என்றனை சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
8. சத்தசத் தியல்மற் றறிந்துமெய்ப் போதத் தத்துவ நிலைபெற விழைவோர்
சித்தமுற் றகலா தொளித்தநின் கமலச் சேவடி தொழஎனக் கருள்வாய்
சுத்தசற் குணத்தெள் ளமுதெழு கடலே சுகபரி பூரணப் பொருளே
வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
9. மருள்உறு மனமும் கொடியவெங் குணமும் மதித்தறி யாததுன் மதியும்
இருள்உறு நிலையும் நீங்கிநின் அடியை எந்தநாள் அடைகுவன் எளியேன்
அருள்உறும் ஒளியாய் அவ்வொளிக் குள்ளே அமர்ந்தசிற் பரஒளி நிறைவே
வெருள்உறு சமயத் தறியொணாச் சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
10. கேவலசகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவக்கடல் மூழ்கி
ஓவற மயங்கி உழலும்இச் சிறியேன் உன்அருள் அடையும்நாள் உளதோ
பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரமசிற் சுகபரம் பரனே
மேவுறும் அடியார்க் கருளிய சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
11. கானல்நீர் விழைந்த மான்என உலகக் கட்டினை நட்டுழன் றலையும்
ஈனவஞ் சகநெஞ் சகப்புலை யேனை ஏன்றுகொண் டருளும்நாள் உளதோ
ஊனம்ஓன் றில்லா உத்தமர் உளத்தே ஓங்குசீர்ப் பிரணவ ஒளியே
வேல்நவில் கரத்தோர்க் கினியவா சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
12. பெரும்பொருட் கிடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒருதனிப் பேறே
அரும்பொருள் ஆகி மறைமுடிக் கண்ணே அமர்ந்தபே ரானந்த நிறைவே
தரும்பர போக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
விரும்பினோர்க் களிக்கும் வள்ளலே சித்தி விநாயக விக்கினேச் சுரனே.
திருச்சிற்றம்பலம்
1. அஞ்சு_முகத்தான் மகன் மால் அஞ்சும் முகத்தான் அருள்வான்
அஞ்சு முகத்தான் அஞ்சு அணி கரத்தான் அஞ்சு முக
வஞ்சரை யான் காணா வகை வதைத்தான் ஓர் அரையோடு
அஞ்சு_அரையான் கண்கள் அவை
2. வாது ஆகா வண்ண மணியே எம் வல்லபை-தன்
நாதா கா வண்ண நலம் கொள்வான் போது ஆர்
வனம் காத்து நீர் அளித்த வள்ளலே அன்பால்
இனம் காத்து அருளாய் எனை
3. உலகு எலாம் தழைப்ப அருள் மத அருவி ஒழுகும் மா முகமும் ஐங்கரமும்
இலகு செம் மேனிக் காட்சியும் இரண்டோடு இரண்டு என ஓங்கு திண் தோளும்
திலக வாள் நுதலார் சித்திபுத்திகளைச் சேர்த்து அணைத்திடும் இரு மருங்கும்
விலகுறாது எளியேன் விழைந்தனன் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே
4. உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறு பொருள் யாவும் நின்றனக்கே
கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவிக் கழல் இணை நினைந்து நின் கருணை
வெள்ளம் உண்டு இரவு_பகல் அறியாத வீட்டினில் இருந்து நின்னோடும்
விள்ளல் இல்லாமல் கலப்பனோ சித்தி_விநாயக விக்கினேச்சுரனே
5. நாதமும் கடந்து நிறைந்து நின் மயமே நான் என அறிந்து நான் தானாம்
பேதமும் கடந்த மௌனராச்சியத்தைப் பேதையேன் பிடிப்பது எந்நாளோ
ஏதமும் சமய வாதமும் விடுத்தோர் இதயமும் ஏழையேன் சிரமும்
வேதமும் தாங்கும் பாதனே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே
6. சச்சிதானந்த வடிவம் நம் வடிவம் தகும் அதிட்டானம் மற்று இரண்டும்
பொய்ச் சிதாபாசக் கற்பனை இவற்றைப் போக்கி ஆங்கு அ வடிவு ஆகி
அச் சிதாகார_போதமும் அதன் மேல் ஆனந்த_போதமும் விடுத்தல்
மெய்ச் சிதாம் வீடு என்று உரைத்தனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே
7. ஒன்று அல இரண்டும் அல இரண்டொன்றோடு உரு அல அரு அல உவட்ட
நன்று அல நன்றல்லாது அல விந்து நாதமும் அல இவை அனைத்தும்
பொன்றல் என்று அறிந்து உள் புறத்தினும் அகண்ட பூரணமாம் சிவம் ஒன்றே
வென்றல் என்று அறி நீ என்றனை சித்தி_விநாயக விக்கினேச்சுரனே
8. சத். அசத். இயல் மற்று அறிந்து மெய்ப் போதத் தத்துவ நிலை பெற விழைவோர்
சித்தம் முற்று அகலாது ஒளித்த நின் கமலச் சேவடி தொழ எனக்கு அருள்வாய்
சுத்த சற்குணத் தெள் அமுது எழு கடலே சுக பரிபூரணப் பொருளே
வித்தக முக்கண் அத்தனே சித்தி விநாயக விக்கினேச்சுரனே
9. மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும்
இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன்
அருள் உறும் ஒளியாய் அ ஒளிக்கு உள்ளே அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே
வெருள் உறு சமயத்து அறியொணாச் சித்தி_விநாயக விக்கினேச்சுரனே
10. கேவல சகல வாதனை அதனால் கீழ்ப்படும் அவ_கடல் மூழ்கி
ஓவு அற மயங்கி உழலும் இச் சிறியேன் உன் அருள் அடையும் நாள் உளதோ
பாவலர் உளத்தில் பரவிய நிறைவே பரம சிற்சுக பரம்பரனே
மேவுறும் அடியார்க்கு அருளிய சித்தி_விநாயக விக்கினேச்சுரனே
11. கானல்_நீர் விழைந்த மான் என உலகக் கட்டினை நட்டு உழன்று அலையும்
ஈன வஞ்சக நெஞ்சகப் புலையேனை ஏன்றுகொண்டு அருளும் நாள் உளதோ
ஊனம் ஒன்று இல்லா உத்தமர் உளத்தே ஓங்கு சீர்ப் பிரணவ ஒளியே
வேல் நவில் கரத்தோர்க்கு இனியவா சித்தி_விநாயக விக்கினேச்சுரனே
12. பெரும் பொருட்கு இடனாம் பிரணவ வடிவில் பிறங்கிய ஒரு தனிப் பேறே
அரும் பொருள் ஆகி மறை முடி-கண்ணே அமர்ந்த பேர்_ஆனந்த நிறைவே
தரும் பரபோக சித்தியும் சுத்த தருமமும் முத்தியும் சார்ந்து
விரும்பினோர்க்கு அளிக்கும் வள்ளலே சித்தி_விநாயக விக்கினேச்சுரனே