Siva Dharisanam

திருவருட்பா

ஆறாம் திருமுறை

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1. திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியே
உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
உன்னுதொறும் என்னுளத்தே ஊறுகின்ற அமுதே
அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய்
அப்பாலு மாய்நிறைந்த அருட்பெருஞ்சோ தியனே
மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா
வந்தருள்க அருட்சோதி தந்தருள்க விரைந்தே.

2. சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே
தூயவனே நேயவனே சோதிஉரு வவனே
நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே
நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை
ஆண்டவனே தாண்டவனே அருட்குருவே எல்லாம்
வல்லவனே சிவகாம வல்லிமண வாளா
மன்னவனே என்னவனே வந்தருள்க விரைந்தே.

3. துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே
சுத்தசிவா னந்தசபைச் சித்தசிகா மணியே
பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே
பேராசைப் படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன்
கண்மணியே நின்திறத்தைக் காணுதல்வல் லேனோ
அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே
அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.

4. மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே
மலைவறியா நிலைநிரம்ப வயங்கியசெம் பொருளே
இறப்பறியாத் திருநெறியில்254 என்னைவளர்த் தருளும்
என்னுடைய நற்றாயே எந்தாயே நினது
சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே
சித்தசிகா மணியேநீ சித்திஎலாம் விளங்கப்
பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய்
பெருங்கருணை அரசேநீ தருந்தருணம் இதுவே.

5. முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின்
முடிவறியேன் எல்லாம்செய் முன்னவனே நீஎன்
தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின்
தனதுசுதந் தரமேஇங் கெனதுசுதந் தரமோ
என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல்
யானார்என் அறிவெதுமேல் என்னைமதிப் பவரார்
பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம்
பொதுநடஞ்செய் புண்ணியநீ எண்ணியவா றாமே.

6. விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல்
விழிகள்விழித் திளைப்பதலால் விளைவொன்றும் இலையே
மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும்
முன்னவநின் பெருங்கருணை முன்னிடல்இன் றெனிலோ
செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.

7. மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே
மண்ணாள வானாள மனத்தில்நினைத் தேனோ
தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ
தீஞ்சுவைகள் விரும்பினனோ தீமைகள்செய் தேனோ
நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது
நாயகனே பொதுவிளங்கும் நடராஜ பதியே
ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ
என்ஒருமை அறியாயோ யாவும்அறிந் தாயே.

8. பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே
பதிவெறுத்தேன் நிதிவெறுத்தேன் பற்றனைத்தும் தவிர்ந்தேன்
ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பே
ராசைமய மாகிஉனை அடுத்துமுயல் கின்றேன்
கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது
குறிப்பறியேன் பற்பலகால் கூறிஇளைக் கின்றேன்
தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா
தெருள்நிறைவான் அமுதளிக்கும் தருணம்இது தானே.

9. கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே
கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான்
சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது
திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல்
விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ
விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம்
தொட்டதுநான் துணைந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே
சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே.

10. காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது
கடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்
கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்
சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே
சித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்
பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே
பலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.

11. சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான்
செத்தாரை எழுப்புகின்ற திருநாள்கள் அடுத்த
இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற்
கேற்றகுறி ஏற்றவிடத் திசைந்தியல்கின் றனநாம்
சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல்
சந்தேகித் தலையாதே சாற்றியஎன் மொழியை
நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ் தமைவாய்
நெஞ்சேநீ அஞ்சேல்உள் அஞ்சேல்அஞ் சேலே.

.

திருச்சிற்றம்பலம்

1. திரு_உடையாய் சிற்சபை வாழ் சிவ பதியே எல்லாம்
செய்ய வல்ல தனித் தலைமைச் சித்த சிகாமணியே
உரு உடை என் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே
உன்னு-தொறும் என் உளத்தே ஊறுகின்ற அமுதே
அரு உடைய பெருவெளியாய் அது விளங்கு வெளியாய்
அப்பாலுமாய் நிறைந்த அருள்_பெரும்_சோதியனே
மரு_உடையாள் சிவகாமவல்லி மணவாளா
வந்து அருள்க அருள் சோதி தந்து அருள்க விரைந்தே.

2. சொல்லவனே பொருளவனே துரிய பதத்தவனே
தூயவனே நேயவனே சோதி உருவவனே
நல்லவனே நல் நிதியே ஞான சபாபதியே
நாயகனே தாயகனே நண்பவனே அனைத்தும்
அல்லவனே ஆனவனே அம்மை அப்பா என்னை
ஆண்டவனே தாண்டவனே அருள் குருவே எல்லாம்
வல்லவனே சிவகாமவல்லி மணவாளா
மன்னவனே என்னவனே வந்து அருள்க விரைந்தே.

3. துரிய நிலை துணிந்தவரும் சொல்ல அரும் மெய்ப்பொருளே
சுத்த சிவானந்த சபைச் சித்த சிகாமணியே
பெரிய சிவபதியே நின் பெருமை அறிந்திடவே
பேர்_ஆசைப்படுகின்றேன் பித்தர்களில் பெரியேன்
கரிய மணித் திறத்தினையும் காண வல்லேன் அல்லேன்
கண்மணியே நின் திறத்தைக் காணுதல் வல்லேனோ
அரிய பெரும் பொருளாம் உன் அருள் சோதி எனக்கே
அளித்தனையேல் அறிந்துகொள்வேன் அளித்திடுக விரைந்தே.

4. மறப்பு அறியாப் பேர்_அறிவில் வாய்த்த பெரும் சுகமே
மலைவு அறியா நிலை நிரம்ப வயங்கிய செம்பொருளே
இறப்பு அறியாத் திரு_நெறியில் என்னை வளர்த்து அருளும்
என்னுடைய நல் தாயே எந்தாயே நினது
சிறப்பு அறியா உலகம் எலாம் சிறப்பு அறிந்துகொளவே
சித்த சிகாமணியே நீ சித்தி எலாம் விளங்கப்
பிறப்பு அறியாப் பெரும் தவரும் வியப்ப வந்து தருவாய்
பெரும் கருணை அரசே நீ தரும் தருணம் இதுவே.

5. முன் உழைப்பால் உறும் எனவே மொழிகின்றார் மொழியின்
முடிவு அறியேன் எல்லாம் செய் முன்னவனே நீ என்
தன் உழைப் பார்த்து அருள்வாயேல் உண்டு அனைத்தும் ஒரு நின்றனது
சுதந்தரமே இங்கு எனது சுதந்தரமோ
என் உழைப்பால் என் பயனோ இரங்கி அருளாயேல்
யான் ஆர் என் அறிவு எது மேல் என்னை மதிப்பவர் ஆர்
பொன் உழைப்பால் பெறலும் அரிது அருள் இலையேல் எல்லாம்
பொது நடம் செய் புண்ணிய நீ எண்ணியவாறு ஆமே.

6. விழித்துவிழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல்
விழிகள் விழித்து இளைப்பது அலால் விளைவு ஒன்றும் இலையே
மொழித் திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும்
முன்னவ நின் பெரும் கருணை முன்னிடல் இன்று எனிலோ
செழித்து உறு நல் பயன் எதுவோ திருவுளம்-தான் இரங்கில்
சிறு துரும்பு ஓர் ஐந்தொழிலும் செய்திடல் சத்தியமே
பழித்து உரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே
பரிந்து எனையும் பாடுவித்துப் பரிசு மகிழ்ந்து அருளே.

7. மா நிருபாதிபர் சூழ மணி முடி-தான் பொறுத்தே
மண் ஆள வான் ஆள மனத்தில் நினைத்தேனோ
தேன் ஒருவா மொழிச்சியரைத் திளைக்க விழைந்தேனோ
தீம் சுவைகள் விரும்பினனோ தீமைகள் செய்தேனோ
நான் ஒரு பாவமும் அறியேன் நல் நிதியே எனது
நாயகனே பொது விளங்கும் நடராச பதியே
ஏன் ஒருமை இலர் போல் நீ இருக்கின்றாய் அழகோ
என் ஒருமை அறியாயோ யாவும் அறிந்தாயே.

8. பாவி மன_குரங்கு ஆட்டம் பார்க்க முடியாதே
பதி வெறுத்தேன் நிதி வெறுத்தேன் பற்று அனைத்தும் தவிர்ந்தேன்
ஆவி உடல் பொருளை உன்-பால் கொடுத்தேன் உன் அருள் பேர்_ஆசை
மயம் ஆகி உனை அடுத்து முயல்கின்றேன்
கூவி எனை ஆட்கொள்ள நினையாயோ நினது
குறிப்பு அறியேன் பற்பல கால் கூறி இளைக்கின்றேன்
தேவி சிவகாமவல்லி மகிழும் மணவாளா
தெருள் நிறை வான் அமுது அளிக்கும் தருணம் இது-தானே.

9. கட்டு அவிழ்ந்த கமலம் எனக் கருத்து அவிழ்ந்து நினையே
கருதுகின்றேன் வேறு ஒன்றும் கருதுகிலேன் இது-தான்
சிட்டர் உளம் திகழ்கின்ற சிவபதியே நினது
திருவுளமே அறிந்து அது நான் செப்புதல் என் புவி மேல்
விட்டகுறை தொட்டகுறை இரண்டும் நிறைந்தனன் நீ
விரைந்து வந்தே அருள் சோதி புரிந்து அருளும் தருணம்
தொட்டது நான் துணிந்து உரைத்தேன் நீ உணர்த்த உணர்ந்தே
சொல்வது அலால் என் அறிவால் சொல்ல வல்லேன் அன்றே.

10. காட்டை எலாம் கடந்துவிட்டேன் நாட்டை அடைந்து உனது
கடி நகர்ப் பொன் மதில் காட்சி கண்குளிரக் கண்டேன்
கோட்டை எலாம் கொடி நாட்டிக் கோலம் இடப் பார்த்தேன்
கோயிலின் மேல் வாயிலிலே குறைகள் எலாம் தவிர்ந்தேன்
சேட்டை அற்றுக் கருவி எலாம் என் வசம் நின்றிடவே
சித்தி எலாம் பெற்றேன் நான் திரு_சிற்றம்பலம் மேல்
பாட்டை எலாம் பாடுகின்றேன் இது தருணம் பதியே
பலம் தரும் என் உளம்-தனிலே கலந்து நிறைந்து அருளே.

11. சித்தி எலாம் வல்ல சிவ சித்தன் உளம் கலந்தான்
செத்தாரை எழுப்புகின்ற திரு_நாள்கள் அடுத்த
இத் தினமே தொடங்கி அழியாத நிலை அடைதற்கு
ஏற்ற குறி ஏற்ற இடத்து இசைந்து இயல்கின்றன நாம்
சத்தியமே பெரு வாழ்வில் பெரும் களிப்புற்றிடுதல்
சந்தேகித்து அலையாதே சாற்றிய என் மொழியை
நித்திய வான் மொழி என்ன நினைந்து மகிழ்ந்து அமைவாய்
நெஞ்சே நீ அஞ்சேல் உள் அஞ்சேல் அஞ்சேலே.