திருவருட்பா
ஆறாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. வான் இருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும்
மா தவம் பல் நாள் புரிந்து மணி மாடம் நடுவே
தேன் இருக்கும் மலர்_அணை மேல் பளிக்கறையினூடே
திரு_அடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும்
நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே
நல்ல திரு_அருள் அமுதம் நல்கியது அன்றியும் என்
ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன்
உள்ளம் எனும் சிறு குடிசையுள்ளும் நுழைந்தனையே.
2. படி செய் பிரமன் முதலோர் பற்பல நாள் வருந்திப்
பல் மணிகள் ஒளி விளங்கப் பதித்த சிங்காதனத்தே
அடி செய்து எழுந்தருளி எமை ஆண்டு அருளல் வேண்டும்
அரசே என்று அவரவரும் ஆங்காங்கே வருந்த
வடி செய் மறை முடி நடுவே மன்றகத்தே நடிக்கும்
மலர்_அடிகள் சிவப்ப ஒரு வளமும் இலா அசுத்தக்
குடிசை நுழைந்தனையே என்று ஏசுவரே அன்பர்
கூசாமல் என் உளமாம் குடிசை நுழைந்தனையே.
3. உள்ளபடி உள்ளதுவாய் உலகம் எலாம் புகினும்
ஒருசிறிதும் தடை இலதாய் ஒளி-அதுவே மயமாய்
வெள்ள_வெளி நடு உளதாய் இயற்கையிலே விளங்கும்
வேத முடி இலக்கிய மா மேடையிலே அமர்ந்த
வள்ளல் மலர்_அடி சிவப்ப வந்து எனது கருத்தின்
வண்ணம் எலாம் உவந்து அளித்து வயங்கிய பேர்_இன்பம்
கொள்ளைகொளக் கொடுத்தது-தான் போதாதோ அரசே
கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.
4. தடை அறியாத் தகையினதாய்த் தன் நிகர் இல்லதுவாய்த்
தத்துவங்கள் அனைத்தினுக்கும் தாரகமாய் அவைக்கு
விடை அறியாத் தனி முதலாய் விளங்கு வெளி நடுவே
விளங்குகின்ற சத்திய மா மேடையிலே அமர்ந்த
நடை அறியாத் திரு_அடிகள் சிவந்திட வந்து எனது
நலிவு அனைத்தும் தவிர்த்து அருளி ஞான அமுது அளித்தாய்
கொடை இது-தான் போதாதோ என் அரசே அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே.
5. இறையளவும் துரிசு இலதாய்த் தூய்மையதாய் நிறைவாய்
இயற்கையதாய் அனுபவங்கள் எவைக்கும் முதல் இடமாய்
மறை முடியோடு ஆகமத்தின் மணி முடி மேல் முடியாய்
மன்னுகின்ற மெய்ஞ்ஞான மணி மேடை அமர்ந்த
நிறை அருள் சீர் அடி_மலர்கள் சிவந்திட வந்து அடியேன்
நினைத்த எலாம் கொடுத்து அருளி நிலைபெறச் செய்தனையே
குறைவு_இலது இப் பெரு வரம்-தான் போதாதோ அரசே
கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.
6. உருவினதாய் அருவினதாய் உரு_அருவாய் உணர்வாய்
உள்ளதுவாய் ஒரு தன்மை உடைய பெரும் பதியாய்
மருவிய வேதாந்தம் முதல் வகுத்திடும் கலாந்த
வரை-அதன் மேல் அருள் வெளியில் வயங்கிய மேடையிலே
திரு_உறவே அமர்ந்து அருளும் திரு_அடிகள் பெயர்த்தே
சிறியேன்-கண் அடைந்து அருளித் திரு அனைத்தும் கொடுத்தாய்
குருவே என் அரசே ஈது அமையாதோ அடியேன்
குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே.
7. மணம்_உளதாய் ஒளியினதாய் மந்திர ஆதரமாய்
வல்லதுவாய் நல்லதுவாய் மதம் கடந்த வரைப்பாய்
வணம்_உளதாய் வளம்_உளதாய் வயங்கும் ஒரு வெளியில்
மணி மேடை அமர்ந்த திரு_அடி_மலர்கள் பெயர்த்தே
எணம் உள என்-பால் அடைந்து என் எண்ணம் எலாம் அளித்தாய்
இங்கு இது-தான் போதாதோ என் அரசே ஞானக்
குண_மலையே அருள் அமுதே குருவே என் பதியே
கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.
8. சிரம் பெறு வேதாகமத்தின் அடி நடுவும் முடியும்
செல்லாத நிலை-அதுவாய் எல்லாம்_வல்லதுவாய்
பரம்பரமாய்ப் பரம்பரம் மேல் பரவு சிதம்பரமாய்ப்
பதி வெளியில் விளங்குகின்ற மதி சிவ மேடையிலே
தரம் குலவ அமர்ந்த திரு_அடிகள் பெயர்த்து எனது
சார்பு அடைந்து என் எண்ணம் எலாம் தந்தனை என் அரசே
குரங்கு மனச் சிறியேனுக்கு இங்கு இது போதாதோ
கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.
9. பற்றிய பற்று அனைத்தினையும் பற்று அற விட்டு அறிவாம்
பான்மை ஒன்றே வடிவு ஆகிப் பழுத்த பெரியவரும்
உற்று அறிதற்கு அரிய ஒரு பெருவெளி மேல் வெளியில்
ஓங்கு மணி மேடை அமர்ந்து ஓங்கிய சேவடிகள்
பெற்று அறியப் பெயர்த்து வந்து என் கருத்து அனைத்தும் கொடுத்தே
பிறவாமல் இறவாமல் பிறங்கவைத்தாய் அரசே
கொற்றம் உளேன்-தனக்கு இது-தான் போதாதோ கொடியேன்
குடிசையிலும் கோணாதே குலவி நுழைந்தனையே.
10. கருவியொடு கரணம் எலாம் கடந்துகடந்து அதன் மேல்
காட்சி எலாம் கடந்து அதன் மேல் காணாது கடந்து
ஒரு நிலையின் அனுபவமே உரு ஆகிப் பழுத்த
உணர்ச்சியினும் காணாமல் ஓங்கும் ஒரு வெளியில்
மருவியதோர் மேடையிலே வயங்கிய சேவடிகள்
மலர்த்தி வந்து என் கருத்து அனைத்தும் வழங்கினை இன்புறவே
குரு மணியே என் அரசே எனக்கு இது போதாதோ
கொடும் புலையேன் குடிசையிலும் குலவி நுழைந்தனையே.