திருவருட்பா
ஆறாம் திருமுறை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும்
அறிந்தனம்ஓர் சிறிதுகுரு அருளாலே அந்தச்
செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும்
தெரியாமல் இருப்பம்எனச் சிந்தனைசெய் திருந்தேன்
இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில்
இழுத்துவிடுத் ததுகடவுள் இயற்கைஅருட் செயலோ
மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன்
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
2. கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம்
கண்டுகொண்டேன் சிறிதடியேன் கண்டுகொண்ட படியே
நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே
நாடறியா திருப்பம்என்றே நன்றுநினைந் தொருசார்
உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான்
உன்செயலோ பெருமாயை தன்செயெலோ அறியேன்
வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும்
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
3. இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பே
ரின்பவடி வம்சிறியேன் முன்புரிந்த தவத்தால்
சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட
தரம்நினைந்து பெரிதின்னும் தான்காண்பேம் என்றே
அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான்
ஆண்டவநின் அருட்செயலோ மருட்செயலோ அறியேன்
மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
4. கருங்களிறு போல்மதத்தால் கண்சொருக்கி வீணே
காலம்எலாம் கழிக்கின்ற கடையர்கடைத் தலைவாய்
ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய்
உள்அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும்
பிறர்அறியா வகைபெரிதும் பெறதும்என உள்ளே
மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
5. நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று
நாணிஉரைத் தலமரவே நல்லமணி மன்றில்
ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில்
ஆடும்அன்பர் போல்நமக்கும் அருள்கிடைத்த தெனினும்
வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க
வேண்டும்என இருந்தஎன்னை வெளியில்இழுத் திட்டு
வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
6. நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க
நல்லதிருக் கூத்தாட வல்லதிரு வடிகள்
கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து
கள்ளமற உள்ளபடி காட்டிடக்கண் டின்னும்
பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப்
பரிந்துள்ளே இருந்தஎன்னை வெளியில் இழுத் திட்டு
மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
7. மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம
வல்லிமகிழ் திருமேனி வண்ணமது சிறிதே
நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை
நாடறியா வகைஇன்னும் நீடநினைத் திருந்தேன்
அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி
அலர்தூற்ற அளியஎனை வெளியில்இழுத் திட்டு
வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
8. அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா
தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில்
புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம்
பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா
துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை
உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால்
வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
9. விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த
வினைக்கொடியேம் பொருட்டாக விரும்பிஎழுந் தருளிக்
கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக்
கருணைசெயப் பெற்றனம்இக் கருணைநம்மை இன்னும்
நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து
நின்றஎன்னை வெளியில்இழுத் துலகவியா பார
வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில்நடத் தரசே.
10. அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா
அருள்வடிவைக் காட்டிநம்மை ஆண்டுகொண்ட கருணைக்
கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர்
குறிப்பின்றி இருப்பம்எனக் கொண்டகத்தே இருந்தேன்
படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான்
படுவழக்கிட் டுலகியலாம் வெளியில்இழுத் தலைத்தே
மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ
மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே.
திருச்சிற்றம்பலம்
1. அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர் சற்று எனினும்
அறிந்தனம் ஓர்சிறிது குரு அருளாலே அந்தச்
செவ் வண்ணம் பழுத்த தனித் திரு_உருக் கண்டு எவர்க்கும்
தெரியாமல் இருப்பம் எனச் சிந்தனை செய்திருந்தேன்
இவ்வண்ணம் இருந்த எனைப் பிறர் அறியத் தெருவில்
இழுத்து விடுத்தது கடவுள் இயற்கை அருள் செயலோ
மவ்வண்ணப் பெரு மாயை-தன் செயலோ அறியேன்
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
2. கள் இருந்த மலர் இதழிச் சடைக் கனி நின் வடிவம்
கண்டுகொண்டேன் சிறிது அடியேன் கண்டுகொண்டபடியே
நள் இருந்த வண்ணம் இன்னும் கண்டுகண்டு களித்தே
நாடு அறியாது இருப்பம் என்றே நன்று நினைந்து ஒருசார்
உள் இருந்த எனைத் தெருவில் இழுத்துவிடுத்தது-தான்
உன் செயலோ பெரு மாயை-தன் செயலோ அறியேன்
வள் இருந்த குணக் கடையேன் இதை நினைக்கும்-தோறும்
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
3. இகத்து இருந்த வண்ணம் எலாம் மிகத் திருந்த அருள் பேர்
இன்ப வடிவம் சிறியேன் முன் புரிந்த தவத்தால்
சகத்து_இருந்தார் காணாதே சிறிது கண்டுகொண்ட
தரம் நினைந்து பெரிது இன்னும்-தான் காண்பேம் என்றே
அகத்து இருந்த எனைப் புறத்தே இழுத்துவிடுத்தது-தான்
ஆண்டவ நின் அருள் செயலோ மருள் செயலோ அறியேன்
மகத்து_இருந்தார் என்னளவில் என் நினைப்பார் அந்தோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
4. கரும் களிறு போல் மதத்தால் கண் செருக்கி வீணே
காலம் எலாம் கழிக்கின்ற கடையர் கடைத் தலை-வாய்
ஒருங்கு சிறியேன்-தனை முன் வலிந்து அருளே வடிவாய்
உள் அமர்ந்தே உள்ளதனை உள்ளபடி உணர்த்திப்
பெரும் கருணையால் அளித்த பேறு-அதனை இன்னும்
பிறர் அறியா வகை பெரிதும் பெறுதும் என உள்ளே
மருங்கு இருந்த எனை வெளியில் இழுத்துவிட்டது என்னோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
5. நாடுகின்ற மறைகள் எலாம் நாம் அறியோம் என்று
நாணி உரைத்து அலமரவே நல்ல மணி மன்றில்
ஆடுகின்ற சேவடி கண்டு ஆனந்த_கடலில்
ஆடும் அன்பர் போல் நமக்கும் அருள் கிடைத்தது எனினும்
வீடுகின்ற பிறர் சிறிதும் அறியாமல் இருக்கவேண்டும்
என இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு
வாடுகின்ற வகை புரிந்த விதியை நினைந்து ஐயோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
6. நதி கலந்த சடை அசையத் திரு_மேனி விளங்க
நல்ல திரு_கூத்து ஆட வல்ல திரு_அடிகள்
கதி கலந்துகொளச் சிறியேன் கருத்திடையே கலந்து
கள்ளம் அற உள்ளபடி காட்டிடக் கண்டு இன்னும்
பதி கலந்துகொளும் மட்டும் பிறர் அறியாது இருக்கப்
பரிந்து உள்ளே இருந்த என்னை வெளியில் இழுத்திட்டு
மதி கலந்து கலங்கவைத்த விதியை நினைந்து ஐயோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
7. மஞ்சு அனைய குழல் அம்மை எங்கள் சிவகாமவல்லி
மகிழ் திரு_மேனி வண்ணம்-அது சிறிதே
நஞ்சு அனைய கொடியேன் கண்டிடப் புரிந்த அருளை
நாடு அறியா வகை இன்னும் நீட நினைத்திருந்தேன்
அஞ்சு அனைய பிறர் எல்லாம் அறிந்து பல பேசி
அலர் தூற்ற அளிய எனை வெளியில் இழுத்திட்டு
வஞ்சனைசெய்திட வந்த விதியை நினைந்து ஐயோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
8. அரி பிரமர் உருத்திரரும் அறிந்துகொளமாட்டாது
அலமரவும் ஈது என்ன அதிசயமோ மலத்தில்
புரி புழுவில் இழிந்தேனைப் பொருள் ஆக்கி அருளாம்
பொருள் அளிக்கப்பெற்றனன் இப் புதுமை பிறர் அறியாது
உரிமை பெற இருப்பன் என உள் இருந்த என்னை
உலகு அறிய வெளியில் இழுத்து அலகு_இல் விருத்தியினால்
வரி தலை இட்டு ஆட்டுகின்ற விதியை நினைந்து ஐயோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
9. விழற்கு இறைத்துக் களிக்கின்ற வீணர்களில் சிறந்த
வினைக் கொடியேம் பொருட்டாக விரும்பி எழுந்தருளிக்
கழற்கு இசைந்த பொன் அடி நம் தலை மேலே அமைத்துக்
கருணை செயப்பெற்றனம் இக் கருணை நம்மை இன்னும்
நிழற்கு இசைத்த மேல் நிலையில் ஏற்றும் என மகிழ்ந்து
நின்ற என்னை வெளியில் இழுத்து உலக வியாபார
வழக்கில் வளைத்து அலைக்க வந்த விதியை நினைந்து ஐயோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.
10. அடி பிடித்துத் திரிகின்ற மறைகள் எலாம் காணா
அருள் வடிவைக் காட்டி நம்மை ஆண்டுகொண்ட கருணைக்
கொடி பிடித்த குரு மணியைக் கூடும் மட்டும் வேறு ஓர்
குறிப்பு இன்றி இருப்பம் எனக் கொண்டு அகத்தே இருந்தேன்
படி பிடித்த பலர் பலவும் பகர்ந்திட இங்கு எனை-தான்
படு வழக்கிட்டு உலகியலாம் வெளியில் இழுத்து அலைத்தே
மடி பிடித்துப் பறிக்க வந்த விதியை நினைந்து ஐயோ
மனம் ஆலைபாய்வது காண் மன்றில் நடத்து அரசே.