Thiru Ulaa Peru Vallalar Songs

திருவருட்பா

மூன்றாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. சீர் ஆர் வளம் சேர் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி-தனை
ஊராருடன் சென்று எனது நெஞ்சம் உவகை ஓங்கப் பார்த்தனன் காண்
வார் ஆர் முலைகள் மலைகள் என வளர்ந்த வளைகள் தளர்ந்தனவால்
ஏர் ஆர் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

2. சீர்த் தேன் பொழில் ஆர் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரப்
பார்த்தேன் கண்கள் இமைத்தில காண் பைம்பொன் வளைகள் அமைத்தில காண்
தார்த் தேன் குழலும் சரிந்தன காண் தானை இடையில் பிரிந்தன காண்
ஈர்த்தேன் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

3. சீதப் புனல் சூழ் வயல் ஒற்றித் தியாக_பெருமான் திரு மாட
வீதிப் பவனி வரக் கண்டேன் மென் பூம் துகில் வீழ்ந்தது காணேன்
போதிற்று எனவும் உணர்ந்திலேன் பொன்_அனார் பின் போதுகிலேன்
ஈது அற்புதமே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

4. தென் ஆர் சோலைத் திருவொற்றித் தியாக_பெருமான் பவனி வரப்
பொன் ஆர் வீதி-தனில் பார்த்தேன் புளகம் போர்த்தேன் மயல் பூத்தேன்
மின் ஆர் பலர்க்கும் முன்னாக மேவி அவன்றன் எழில் வேட்டு
என் ஆர் அணங்கே என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

5. சீல_குணத்தோர் புகழ் ஒற்றித் தியாக_பெருமான் பவனி இரா_
காலத்து அடைந்து கண்டேன் என் கண்கள் இரண்டோ ஆயிரமோ
ஞாலத்தவர்கள் அலர் தூற்ற நல் தூசு இடையில் நழுவி விழ
ஏலக் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

6. சேயை அருளும் திருவொற்றித் தியாக_பெருமான் வீதி-தனில்
தூய பவனி வரக் கண்டேன் சூழ்ந்த மகளிர்-தமைக் காணேன்
தாயை மறந்தேன் அன்றியும் என்றனையும் மறந்தேன் தனிப்பட்டேன்
ஏய் என் தோழி என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

7. திங்கள் உலவும் பொழில் ஒற்றித் தியாக_பெருமான் திரு_வீதி
அங்கண் களிக்கப் பவனி வந்தான் அது போய்க் கண்டேன் தாயர் எலாம்
தங்கள் குலத்துக்கு அடாது என்றார் தம்மை விடுத்தேன் தனியாகி
எம் கண்_அனையாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

8. தேசு ஆர் மணி சூழ் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரக்
கூசாது ஓடிக் கண்டு அரையில் கூறை இழந்தேன் கை_வளைகள்
வீசாநின்றேன் தாயர் எலாம் வீட்டுக்கு அடங்காப் பெண் எனவே
ஏசாநிற்க என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

9. தேடார்க்கு அரியான் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரத்
தோடு ஆர் பணைத் தோள் பெண்களொடும் சூழ்ந்து மகிழ்ந்து கண்டதன்றி
வாடாக் காதல் கொண்டு அறியேன் வளையும் துகிலும் சோர்ந்ததுடன்
ஏடு ஆர் கோதை என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.

10. திருமாற்கு அரியான் ஒற்றி நகர்த் தியாக_பெருமான் பவனி வரப்
பெருமான் மனமும் நானும் முன்னும் பின்னும் சென்று கண்டேமால்
பொருமாநின்றேன் தாயர் எலாம் போ என்று ஈர்க்கப் போதுகிலேன்
இருள் மாண் குழலாய் என்னடி நான் இச்சை மயமாய் நின்றதுவே.