திருவருட்பா
ஆறாம் திருமுறை
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1. உலகுபல் கோடி கோடிகள் இடங்கொள்
உவப்பிலா அண்டத்தின் பகுதி
அலகுகாண் பரிய பெரியகூட் டத்த
அவைஎலாம் புறத்திறைச் சார்பில்
விலகுறா அணுவில் கோடியுள் ஒருகூற்
றிருந்தென விருந்தன மிடைந்தே
இலகுபொற் பொதுவில் நடம்புரி தருணத்
தென்பர்வான் திருவடி நிலையே.
2. தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
யேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரமம் உயர்பரா சத்தி
நவில்பர சிவம்எனும் இவர்கள்
இடையுறாத் திருச்சிற் றம்பலத் தாடும்
இடதுகாற் கடைவிரல் நகத்தின்
கடையுறு துகள்என் றறிந்தனன் அதன்மேற்
கண்டனன் திருவடி நிலையே.
3. அடர்மலத் தடையால் தடையுறும் அயன்மால்
அரன்மயேச் சுரன்சதா சிவன்வான்
படர்தரு விந்து பிரணவப் பிரமம்
பரைபரம் பரன்எனும் இவர்கள்
சுடர்மணிப் பொதுவில் திருநடம் புரியும்
துணையடிப் பாதுகைப் புறத்தே
இடர்கெட வயங்கு துகள்என அறிந்தே
ஏத்துவன் திருவடி நிலையே.
4. இகத்துழல் பகுதித் தேவர்இந் திரன்மால்
பிரமன்ஈ சானனே முதலாம்
மகத்துழல் சமய வானவர் மன்றின்
மலரடிப் பாதுகைப் புறத்தும்
புகத்தரம் பொருந்தா மலத்துறு சிறிய
புழுக்கள்என் றறிந்தனன் அதன்மேல்
செகத்தொடர் பிகந்தார் உளத்தமர் ஒளியில்
தெரிந்தனன் திருவடி நிலையே.
5. பொன்வணப் பொருப்பொன் றதுசகு ணாந்தம்
போந்தவான் முடியதாங் கதன்மேல்
மன்வணச் சோதித் தம்பம்ஒன் றதுமா
வயிந்துவாந் தத்ததாண் டதன்மேல்
என்வணச் சோதிக் கொடிபர நாதாந்
தத்திலே இலங்கிய ததன்மேல்
தன்வணம் மணக்கும் ஒளிமல ராகத்
தழுவினன் திருவடி நிலையே.
6. மண்முதல் பகர்பொன் வண்ணத்த வுளவான்
மற்றவற் றுட்புறங் கீழ்மேல்
அண்ணுறு நனந்தர் பக்கம்என் றிவற்றின்
அமைந்தன சத்திகள் அவற்றின்
கண்ணுறு சத்தர் எனும்இரு புடைக்கும்
கருதுரு முதலிய விளங்க
நண்ணுறும் உபயம் எனமன்றில் என்று
நவின்றனர் திருவடி நிலையே.
7. தொகையள விவைஎன் றறிவரும் பகுதித்
தொல்லையின் எல்லையும் அவற்றின்
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
மன்னிஎங் கணும்இரு பாற்குத்
தகையுறு முதலா வணங்கடை யாகத்
தயங்கமற் றதுவது கருவிச்
சிகையுற உபயம் எனமன்றில் ஆடும்
என்பரால் திருவடி நிலையே.
8. மன்றஓங் கியமா மாயையின் பேத
வகைதொகை விரிஎன மலிந்த
ஒன்றின்ஒன் றனந்த கோடிகோ டிகளா
உற்றன மற்றவை எல்லாம்
நின்றஅந் நிலையின் உருச்சுவை விளங்க
நின்றசத் திகளொடு சத்தர்
சென்றதி கரிப்ப நடித்திடும் பொதுவில்
என்பரால் திருவடி நிலையே.
9. பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப்
பெரியஓங் காரமே முதலா
ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம்
என்றவற் றவண்அவண் இசைந்த
மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து
மன்அதி காரம்ஐந் தியற்றத்
தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும்
என்பரால் திருவடி நிலையே.
10. பரைதரு சுத்த நிலைமுதல் அதீதப்
பதிவரை நிறுவிஆங் கதன்மேல்
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்ட
வெறுவெளி எனஉல குணர்ந்த
புரைஅறும் இன்ப அனுபவம் தரற்கோர்
திருவுருக் கொண்டுபொற் பொதுவில்
திரைஅறும் இன்ப நடம்புரி கின்ற
என்பரால் திருவடி நிலையே.
திருச்சிற்றம்பலம்
1. உலகு பல் கோடி கோடிகள் இடம் கொள்
உலப்பு இலா அண்டத்தின் பகுதி
அலகு காண்பு அரிய பெரிய கூட்டத்த
அவை எலாம் புறத்து இறைச் சார்பில்
விலகுறா அணுவில் கோடியுள் ஒரு கூற்று
இருந்து என இருந்தன மிடைந்தே
இலகு பொன் பொதுவில் நடம் புரி தருணத்து
என்பர் வான் திரு_அடி நிலையே.
2. தடையுறாப் பிரமன் விண்டு உருத்திரன்
மாயேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரமம் உயர் பராசத்தி
நவில் பரசிவம் எனும் இவர்கள்
இடை உறாத் திரு_சிற்றம்பலத்து ஆடும்
இடது கால் கடை விரல் நகத்தின்
கடை உறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல்
கண்டனன் திரு_அடி நிலையே.
3. அடர் மலத் தடையால் தடையுறும் அயன் மால்
அரன் மயேச்சுரன் சதாசிவன் வான்
படர்தரு விந்து பிரணவப் பிரமம்
பரை பரம்பரன் எனும் இவர்கள்
சுடர் மணிப் பொதுவில் திரு_நடம் புரியும்
துணை அடிப் பாதுகைப் புறத்தே
இடர் கெட வயங்கு துகள் என அறிந்தே
ஏத்துவன் திரு_வடி நிலையே.
4. இகத்து உழல் பகுதித் தேவர் இந்திரன் மால்
பிரமன் ஈசானனே முதலாம்
மகத்து உழல் சமய வானவர் மன்றின்
மலர்_அடிப் பாதுகைப் புறத்தும்
புகத் தரம் பொருந்தா மலத்து உறு சிறிய
புழுக்கள் என்று அறிந்தனன் அதன் மேல்
செகத் தொடர்பு இகந்தார் உளத்து அமர் ஒளியில்
தெரிந்தனன் திரு_அடி நிலையே.
5. பொன் வணப் பொருப்பு ஒன்று அது சகுணாந்தம்
போந்த வான் முடியது ஆங்கு அதன் மேல்
மன் வணச் சோதித் தம்பம் ஒன்று அது மா
வயிந்துவாந்தத்தது ஆண்டு அதன் மேல்
என் வணச் சோதிக் கொடி பரநாதாந்தத்திலே
இலங்கியது அதன் மேல்
தன் வணம் மணக்கும் ஒளி மலராகத்
தழுவினன் திரு_அடி நிலையே.
6. மண் முதல் பகர் பொன் வண்ணத்த உளவான்
மற்று அவற்று உள் புறம் கீழ் மேல்
அண்ணுறு நனந்தர் பக்கம் என்று இவற்றின்
அமைந்தன சத்திகள் அவற்றின்
கண்ணுறு சத்தர் எனும் இரு புடைக்கும்
கருது உரு முதலிய விளங்க
நண்ணுறும் உபயம் என மன்றில் என்று
நவின்றனர் திரு_அடி நிலையே.
7. தொகை அளவு இவை என்று அறிவரும் பகுதித்
தொல்லையின் எல்லையும் அவற்றின்
வகையொடு விரியும் உளப்பட ஆங்கே
மன்னி எங்கணும் இரு பாற்குத்
தகையுறு முதலா அணங்கு அடையாகத்
தயங்க மற்று அதுஅது கருவிச்
சிகையுற உபயம் என மன்றில் ஆடும்
என்பரால் திரு_அடி நிலையே.
8. மன்ற ஓங்கிய மாமாயையின் பேத
வகை தொகை விரி என மலிந்த
ஒன்றின் ஒன்று அனந்த கோடிகோடிகளா
உற்றன மற்றவை எல்லாம்
நின்ற அ நிலையின் உருச் சுவை விளங்க
நின்ற சத்திகளொடு சத்தர்
சென்று அதிகரிப்ப நடித்திடும் பொதுவில்
என்பரால் திரு_அடி நிலையே.
9. பேசும் ஓங்காரம் ஈறு-அதாப் பேசாப்
பெரிய ஓங்காரமே முதலா
ஏசு அறும் அங்கம் உபாங்கம் வேறு அங்கம்
என்றவற்று அவண்அவண் இசைந்த
மாசு அறு சத்தி சத்தர் ஆண்டு அமைத்து
மன் அதிகாரம் ஐந்து இயற்றத்
தேசு செய்து அணி பொன்_அம்பலத்து ஆடும்
என்பரால் திரு_வடி நிலையே.
10. பரை தரு சுத்த நிலை முதல் அதீதப்
பதி வரை நிறுவி ஆங்கு அதன் மேல்
உரைதர ஒண்ணா வெறுவெளி வெட்டவெறுவெளி
என உலகு உணர்ந்த
புரை அறும் இன்ப அனுபவம் தரற்கு ஓர்
திரு_உருக் கொண்டு பொன் பொதுவில்
திரை அறும் இன்ப நடம் புரிகின்ற
என்பரால் திரு_அடி நிலையே.