thiruvadi-pugazhchi

திருவருட்பா

முதல் திருமுறை

---
0:00
0:00
🔊

நூற்றிருபத்தெட்டு அடியான் மிகுந்து வந்த கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

திருச்சிற்றம்பலம்

1.பரசிவம்சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதா னந்தமெய்ப் பரமவே காந்தநிலயம்
பரமஞா னம்பரம சத்துவம கத்துவம் பரமகை வல்யநிமலம்
பரமதத் துவநிரதி சயநிட்க ளம்பூத பௌதிகா தாரநிபுணம்

2.பவபந்த நிக்ரக வினோதச களம்சிற் பரம்பரா னந்தசொருபம்
பரிசயா தீதம்சு யம்சதோ தயம்வரம் பரமார்த்த முக்தமௌனம்
படனவே தாந்தாந்த மாகமாந் தாந்தநிரு பாதிகம் பரமசாந்தம்
பரநாத தத்துவாந் தம்சகச தரிசனம் பகிரங்க மந்தரங்கம்

3.பரவியோ மம்பரம ஜோதிமயம் விபுலம் பரம்பர மனந்தமசலம்
பரமலோ காதிக்க நித்தியசாம் பிராச்சியம் பரபதம் பரமசூக்ஷ்மம்
பராபர மநாமய நிராதர மகோசரம் பரமதந் திரம்விசித்ரம்
பராமுத நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோ தயமக்ஷயம்

4.பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்ப தித்துவ பரோபரீணம்
பஞ்சகிர்த் தியசுத்த கர்த்தத்து வம்தற்ப ரம்சிதம் பரவிலாசம்
பகர்சுபா வம்புனித மதுலமது லிதமம்ப ராம்பர நிராலம்பனம்
பரவுசா க்ஷாத்கார நிரவய வங்கற்ப னாதீத நிருவிகாரம்

5.பரதுரிய வநுபவம் குருதுரிய பதமம் பகம்பகா தீதவிமலம்
பரமகரு ணாம்பரம் தற்பதம் கனசொற் பதாதீத மின்பவடிவம்
பரோக்ஷஞா னாதீதம் அபரோக்ஷ ஞானானு பவவிலாசப் பிரகாசம்
பாவனா தீதம்கு ணாதீதம் உபசாந்த பதமகா மௌனரூபம்

6.பரமபோ தம்போத ரகிதசகி தம்சம்ப வாதீத மப்பிரமேயம்
பகரனந் தானந்தம் அமலமுசி தம்சிற்ப தம்சதா னந்தசாரம்
பரையாதி கிரணாங்க சாங்கசௌ பாங்கவிம் பாகார நிருவிகற்பம்
பரசுகா ரம்பம்ப ரம்பிரம வித்தம்ப ரானந்த புரணபோகம்

7.பரிமிதா தீதம்ப ரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம்
பரமாற்பு தம்பரம சேதனம் பசுபாச பாவனம் பரமமோக்ஷம்
பரமானு குணநவா தீதம்சி தாகாச பாஸ்கரம் பரமபோகம்
பரிபாக வேதன வரோதயா னந்தபத பாலனம் பரமயோகம்

8.பரமசாத் தியவதீ தானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
பரகேவ லாத்விதா னந்தானு பவசத்த பாதாக்ர சுத்தபலிதம்
பரமசுத் தாத்விதா னந்தவனு பூதிகம் பரிபூத சிற்குணாந்தம்
பரமசித் தாந்தநிக மாந்தசம ரசசுத்த பரமானு பவவிலாசம்

9.தரமிகும் சர்வசா திட்டான சத்தியம் சர்வவா னந்தபோகம்
சார்ந்தசர் வாதார சர்வமங் களசர்வ சத்திதர மென்றளவிலாச்
சகுணநிர்க் குணமுறு சலக்ஷண விலக்ஷணத் தன்மைபல வாகநாடித்
தம்மைநிகர் மறையெலா மின்னுமள விடநின்ற சங்கர னநாதியதி

10.சாமகீ தப்பிரியன் மணிகண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
சயசய வெனுந்தொண்ட ரிதயமலர் மேவிய சடாமகுடன் மதனதகனன்
சந்திரசே கரனிடப வாகனன் கங்கா தரன்சூல பாணியிறைவன்
தனிமுத லுமாபதி புராந்தகன் பசுபதி சயம்புமா தேவனமலன்

11.தாண்டவன் தலைமாலை பூண்டவன் தொழுமன்பர் தங்களுக்கருளாண்டவன்
தன்னிகரில் சித்தெலாம் வல்லவன் வடதிசைச் சைலமெனு மொருவில்வன்
தக்ஷிணா மூர்த்தியருண் மூர்த்திபுண் ணியமூர்த்தி தகுமட்ட மூர்த்தியானோன்
தலைமைபெறு கணநாய கன்குழக னழகன்மெய்ச் சாமிநந் தேவதேவன்

12.சம்புவே தண்டன் பிறப்பிலான் முடிவிலான் தாணுமுக் கண்களுடையான்
சதுரன் கடாசல வுரிப்போர்வை யான்செந் தழற்கரத் தேந்திநின்றோன்
சர்வகா ரணன்விறற் காலகா லன்சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
தகைகொள்பர மேச்சுரன் சிவபிரா னெம்பிரான் தம்பிரான் செம்பொற்பதம்

13.தகவுபெறு நிட்பேத நிட்கம்ப மாம்பரா சத்திவடி வாம்பொற்பதம்
தக்கநிட் காடின்ய சம்வேத நாங்கசிற் சத்திவடி வாம்பொற்பதம்
சாற்றரிய விச்சைஞா னங்கிரியை யென்னுமுச் சத்திவடி வாம்பொற்பதம்
தடையிலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்திவடி வாம்பொற்பதம்

14.தகுவிந்தை மோகினியை மானையசை விக்குமொரு சத்திவடி வாம்பொற்பதம்
தாழ்விலீ சானமுதன் மூர்த்திவரை யைஞ்சத்தி தஞ்சத்தி யாம்பொற்பதம்
சவிகற்ப நிருவிகற் பம்பெறு மனந்தமா சத்திசத் தாம்பொற்பதம்
தடநிருப வவிவர்த்த சாமர்த்திய திருவருட் சத்தியுரு வாம்பொற்பதம்

15.தவாதசாந் தப்பதந் துவாதசாந் தப்பதந் தருமிணை மலர்ப்பூம்பதம்
சகலர்விஞ் ஞானகலர் பிரளயா கலரிதய சாக்ஷியா கியபூம்பதம்
தணிவிலா அணுபக்ஷ சம்புப க்ஷங்களிற் சமரச முறும்பூம்பதம்
தருபரஞ் சூக்குமந் தூலமிவை நிலவிய தமக்குளுயி ராம்பூம்பதம்

16.சரவசர வபரிமித விவிதவான் மப்பகுதி தாங்குந் திருப்பூம்பதம்
தண்டபிண் டாண்டவகி லாண்டபிர மாண்டந் தடிக்கவரு ளும்பூம்பதம்
தத்வதாத் விகசகசி ருட்டிதிதி சங்கார சகலகர்த் துருபூம்பதம்
சகசமல விருளகல நின்மலசு யம்ப்ரகா சங்குலவு நற்பூம்பதம்

17.மரபுறு மதாதீத வெளிநடுவி லானந்த மாநடன மிடுபூம்பதம்
மன்னும்வினை யொப்புமல பரிபாகம் வாய்க்கமா மாயையை மிதிக்கும்பதம்
மலிபிறவி மறலியி னழுந்துமுயிர் தமையருளின் மருவுறவெடுக்கும்பதம்
வளரூர்த்த வீரதாண் டவமுதற் பஞ்சக மகிழ்ந்திட வியற்றும்பதம்

18.வல்லமுய லகன்மீதி னூன்றிய திருப்பதம் வளந்தரத் தூக்கும்பதம்
வல்வினையெ லாந்தவிர்த் தழியாத சுத்தநிலை வாய்த்திட வழங்கும்பதம்
மறைதுதிக் கும்பதம் மறைச்சிலம் பொளிர்பதம் மறைப்பாது கைச்செம்பதம்
மறைமுடி மணிப்பதம் மறைக்குமெட் டாப்பதம் மறைப்பரி யுகைக்கும்பதம்

19.மறையவ னுளங்கொண்ட பதமமித கோடியா மறையவர் சிரஞ்சூழ்பதம்
மறையவன் சிரசிகா மணியெனும் பதம்மலர்கொண் மறையவன் வாழ்த்தும்பதம்
மறையவன் செயவுலக மாக்கின்ற வதிகார வாழ்வையீந் தருளும்பதம்
மறையவன் கனவினுங் காணாத பதமந்த மறையவன் பரவும்பதம்

20.மால்விடை யிவர்ந்திடு மலர்ப்பதந் தெய்வநெடு மாலருச் சிக்கும்பதம்
மால்பரவி நாடொறும் வணங்குபத மிக்கதிரு மால்விழியி லங்கும்பதம்
மால்தேட நின்றபத மோரனந் தங்கோடி மாற்றலை யலங்கற்பதம்
மான்முடிப் பதநெடிய மாலுளப் பதமந்த மாலுமறி வரிதாம்பதம்

21.மால்கொளவ தாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மைபெற நிற்கும்பதம்
மாலுலகு காக்கின்ற வண்மைபெற் றடிமையின் வதிந்திட வளிக்கும்பதம்
வரையுறு முருத்திரர்கள் புகழ்பதம் பலகோடி வயவுருத் திரர்சூழ்பதம்
வாய்ந்திடு முருத்திரற் கியல்கொண்முத் தொழில்செய்யும் வண்மைதந் தருளும்பதம்

22.வானவிந் திரராதி யெண்டிசைக் காவலர்கண் மாதவத் திறனாம்பதம்
மதியிரவி யாதிசுர ரசுரரந் தரர்வான வாசிகள் வழுத்தும்பதம்
மணியுரகர் கருடர்காந் தருவர்விஞ் சையர்சித்தர் மாமுனிவ ரேத்தும்பதம்
மாநிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்துவர மேற்கும்பதம்

23.மன்னுகின் னரர்பூதர் வித்தியா தரர்போகர் மற்றையர்கள் பற்றும்பதம்
வண்மைபெறு நந்திமுதல் சிவகணத் தலைவர்கண் மனக்கோயில்வாழும்பதம்
மாதேவி யெங்கள்மலை மங்கையென் னம்மைமென் மலர்க்கையால் வருடும்பதம்
மறலியை யுதைத்தருள் கழற்பத மரக்கனை மலைக்கீ ழடர்க்கும்பதம்

24.வஞ்சமறு நெஞ்சினிடை யெஞ்சலற விஞ்சுதிறன் மஞ்சுற விளங்கும்பதம்
வந்தனைசெய் புந்தியவர் தந்துயர் தவிர்ந்திடவுண் மந்தணந விற்றும்பதம்
மாறிலொரு மாறனுள மீறின்மகிழ் வீறியிட மாறிநட மாடும்பதம்
மறக்கருணை யுந்தனி யறக்கருணை யுந்தந்துவழ்விக்குமொண்மைப்பதம்

25.இரவுறும் பகலடிய ரிருமருங் கினுமுறுவ ரெனவயங் கியசீர்ப்பதம்
எம்பந்த மறவெமது சம்பந்தவள்ளன்மொழி யியன்மண மணக்கும்பதம்
ஈவரச ரெம்முடைய நாவரசர்சொற்பதிக விசைபரி மளிக்கும்பதம்
ஏவலார் புகழெமது நாவலாரூரர்புக லிசைதிருப் பாட்டுப்பதம்

26.ஏதவூர் தங்காத வாதவூரெங்கோவி னின்சொன்மணி யணியும்பதம்
எல்லூரு மணிமாட நல்லூரி னப்பர்முடி யிடைவைகி யருண்மென்பதம்
எடுமேலெ னத்தொண்டர் முடிமேன் மறுத்திடவு மிடைவலிந் தேறும்பதம்
எழில்பரவை யிசையவா ரூர்மறுகி னருள்கொண்டி ராமுழுது முலவும்பதம்

27.இன்தொண்டர் பசியறக் கச்சூரின் மனைதொறு மிரக்கநடை கொள்ளும்பதம்
இளைப்புற லறிந்தன்பர் பொதிசோ றருந்தமு னிருந்துபி னடக்கும்பதம்
எறிவிறகு விற்கவளர் கூடற் றெருத்தொறு மியங்கிய விரக்கப்பதம்
இறுவைகை யங்கரையின் மண்படப் பல்கா லெழுந்துவிளை யாடும்பதம்

28.எங்கேமெய் யன்பருள ரங்கே நலந்தர வெழுந்தருளும் வண்மைப்பதம்
எவ்வண்ணம் வேண்டுகினு மவ்வண்ண மன்றே யிரங்கியீந் தருளும்பதம்
என்போன்ற வர்க்குமிகு பொன்போன்ற கருணைதந் திதயத் திருக்கும்பதம்
என்னுயிரை யன்னபத மென்னுயிர்க் குயிரா யிலங்குசெம் பதுமப்பதம்

29.என்னறிவெ னும்பதமெ னறிவினுக் கறிவா யிருந்தசெங் கமலப்பதம்
என்னன்பெ னும்பதமெ னன்பிற்கு வித்தா யிசைந்தகோ கனகப்பதம்
என்தவ மெனும்பதமென் மெய்த்தவப் பயனா யியைந்தசெஞ் சலசப்பதம்
என்னிருகண் மணியான பதமென்கண் மணிகளுக் கினியநல் விருந்தாம்பதம்

30.என்செல்வ மாம்பதமென் மெய்ச்செல்வ வருவாயெ னுந்தாம ரைப்பொற்பதம்
என்பெரிய வாழ்வான பதமென்க ளிப்பா மிரும்பதமெ னிதியாம்பதம்
என்தந்தை தாயெனு மிணைப்பதமெ னுறவா மியற்பதமெ னட்பாம்பதம்
என்குருவெ னும்பதமெ னிட்டதெய் வப்பத மெனதுகுல தெய்வப்பதம்

31என்பொறிக ளுக்கெலா நல்விடய மாம்பதமெ னெழுமையும் விடாப்பொற்பதம்
என்குறையெ லாந்தவிர்த் தாட்கொண்ட பதமெனக் கெய்ப்பில்வைப்பாகும்பதம்
எல்லார்க்கு நல்லபத மெல்லாஞ்செய் வல்லபத மிணையிலாத் துணையாம்பதம்
எழுமனமு டைந்துடைந் துருகிநெகிழ் பத்தர்கட் கின்னமுத மாகும்பதம்

32.எண்ணுறிற் பாலினறு நெய்யொடு சருக்கரை யிசைந்தென வினிக்கும்பதம்
ஏற்றமுக் கனிபாகு கன்னல்கற் கண்டுதே னென்னமது ரிக்கும்பதம்
எங்கள்பத மெங்கள்பத மென்றுசம யத்தேவ ரிசைவழக் கிடுநற்பதம்
ஈறிலாப் பதமெலாந் தருதிருப் பதமழிவி லின்புதவு கின்றபதமே.

திருச்சிற்றம்பலம்

1.பரசிவம் சின்மயம் பூரணம் சிவபோக பாக்கியம் பரமநிதியம்
பரசுகம் தன்மயம் சச்சிதானந்தம் மெய்ப் பரம ஏகாந்த நிலயம்
பரம ஞானம் பரம சத்துவ மகத்துவம் பரம கைவல்ய நிமலம்
பரம தத்துவம் நிர்_அதிசயம் நிட்களம் பூத பௌதிகாதார நிபுணம்

2.பவபந்த நிக்ரகம் வினோத சகளம் சிற்பரம் பரானந்த சொருபம்
பரிசயாதீதம் சுயம் சதோதயம் வரம் பரமார்த்தமுக்த மௌனம்
படனவேதாந்தாந்தம் ஆகமாந்தாந்தம் நிருபாதிகம் பரம சாந்தம்
பரநாத தத்துவாந்தம் சகச தரிசனம் பகிரங்கம் அந்தரங்கம்

3.பரவியோமம் பரம ஜோதி மயம் விபுலம் பரம்பரம் அனந்தம் அசலம்
பரம லோகாதிக்கம் நித்திய சாம்பிராச்சியம் பரபதம் பரம சூக்ஷ்மம்
பராபரம் அநாமயம் நிராதரம் அகோசரம் பரம தந்திரம் விசித்ரம்
பராமுதம் நிராகரம் விகாசனம் விகோடணம் பரசுகோதயம் அக்ஷயம்

4.பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம் பதித்துவ பரோபரீணம்
பஞ்ச_கிர்த்திய சுத்தகர்த்தத்துவம் தற்பரம் சிதம்பர விலாசம்
பகர் சுபாவம் புனிதம் அதுலம் அதுலிதம் அம்பராம்பர நிராலம்பனம்
பரவு சாக்ஷாத்கார நிரவயவம் கற்பனாதீதம் நிருவிகாரம்

5.பரதுரிய அநுபவம் குருதுரியபதம் அம்பகம் பகாதீத விமலம்
பரம கருணாம்பரம் தற்பதம் கனசொற்பதாதீதம் இன்ப வடிவம்
பரோக்ஷ ஞானாதீதம் அபரோக்ஷ ஞானானுபவ விலாசப் பிரகாசம்
பாவனாதீதம் குணாதீதம் உபசாந்தபதம் மகா மௌன ரூபம்

6.பரம போதம் போதரகித சகிதம் சம்பவாதீதம் அப்பிரமேயம்
பகரனந்தானந்தம் அமலம் உசிதம் சிற்பதம் சதானந்த சாரம்
பரையாதி கிரணாங்க சாங்க சௌபாங்க விம்பாகாரம் நிருவிகற்பம்
பரசுகாரம்பம் பரம்பிரம வித்தம் பரானந்த புரண போகம்

7.பரிமிதாதீதம் பரோதயம் பரகிதம் பரபரீணம் பராந்தம்
பரமாற்புதம் பரமசேதனம் பசுபாச பாவனம் பரம மோக்ஷம்
பரமானுகுண நவாதீதம் சிதாகாச பாஸ்கரம் பரம போகம்
பரிபாக வேதன வரோ தயானந்த பதபாலனம் பரம யோகம்

8.பரம சாத்திய அதீதானந்த போக்கியம் பரிகதம் பரிவேத்தியம்
பரகேவலாத்து விதானந்தானுப சத்த பாதாக்ர சுத்த பலிதம்
பரம சுத்தாத்விதானந்த அனுபூதிகம் பரிபூத சிற்குணாந்தம்
பரம சித்தாந்த நிகமாந்த சமரச சுத்த பரமானுபவ விலாசம்

9.தரம் மிகும் சர்வ சாதிட்டான சத்தியம் சர்வ ஆனந்த போகம்
சார்ந்த சர்வாதார சர்வ மங்கள சர்வ சத்திதரம் என்ற அளவு_இலாச்
சகுண நிர்க்குணம் உறு சலக்ஷண இலக்ஷணத் தன்மை பலவாக நாடித்
தம்மை நிகர் மறை எலாம் இன்னும் அளவிட நின்ற சங்கரன் அநாதி ஆதி

10.சாமகீதப் பிரியன் மணி_கண்ட சீகண்ட சசிகண்ட சாமகண்ட
சயசய எனும் தொண்டர் இதய_மலர் மேவிய சடா_மகுடன் மதன தகனன்
சந்திரசேகரன் இடப_வாகனன் கங்காதரன் சூல_பாணி இறைவன்
தனி முதல் உமாபதி புராந்தகன் பசுபதி சயம்பு மா தேவன் அமலன்

11.தாண்டவன் தலை மாலை பூண்டவன் தொழும் அன்பர்-தங்களுக்கு அருளாண்டவன்
தன்னிகரில் சித்து எலாம் வல்லவன் வட திசைச் சைலம் எனும் ஒரு வில்லவன்
தக்ஷிணா_மூர்த்தி அருள்_மூர்த்தி புண்ணிய_மூர்த்தி தகும் அட்ட_மூர்த்தி ஆனோன்
தலைமை பெறு கண_நாயகன் குழகன் அழகன் மெய்ச்சாமி நம் தேவதேவன்

12.சம்பு வேதண்டன் பிறப்பு_இலான் முடிவு_இலான் தாணு முக்கண்கள்_உடையான்
சதுரன் கடாசல உரி_போர்வையான் செம் தழல் கரத்து ஏந்திநின்றோன்
சர்வ காரணன் விறல் காலகாலன் சர்வ சம்பிரமன் சர்வேச்சுரன்
தகை கொள் பரமேச்சுரன் சிவபிரான் எம்பிரான் தம்பிரான் செம்பொன்_பதம்

13.தகவு பெறு நிட்பேத நிட்கம்பமாம் பராசத்தி வடிவாம் பொன்_பதம்
தக்க நிட்காடின்ய சம்வேதநாங்க சிற்சத்தி வடிவாம் பொன்_பதம்
சாற்ற அரிய இச்சை ஞானம் கிரியை என்னும் முச்சத்தி வடிவாம் பொன்_பதம்
தடை இலா நிர்விடய சிற்குண சிவாநந்த சத்தி வடிவாம் பொன்_பதம்

14.தகு விந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு சத்தி வடிவாம் பொன்_பதம்
தாழ்வு_இல் ஈசானம் முதல் மூர்த்தி வரை ஐஞ்சத்தி-தம் சத்தியாம் பொன்_பதம்
சவிகற்ப நிருவிகற்பம் பெறும் அனந்த மா சத்தி சத்தாம் பொன்_பதம்
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திரு_அருள் சத்தி உருவாம் பொன்_பதம்

15.தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம் தரும் இணை மலர்ப் பூம்_பதம்
சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய சாக்ஷியாகிய பூம்_பதம்
தணிவு_இலா அணுபக்ஷ சம்புபக்ஷங்களில் சமரசம் உறும் பூம்_பதம்
தருபரம் சூக்குமம் தூலம் இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்_பதம்

16.சர அசர அபரிமித விவித ஆன்மப் பகுதி தாங்கும் திருப் பூம்_பதம்
தண்ட பிண்டாண்ட அகிலாண்ட பிரமாண்டம் தடிக்க அருளும் பூம்_பதம்
தத்வ தாத்விக சக சிருட்டி திதி சங்கார சகல கர்த்துரு பூம்_பதம்
சகச மல இருள் அகல நின்மல சுயம்ப்ரகாசம் குலவு நல் பூம்_பதம்

17.மரபு உறும் மதாதீத வெளி நடுவில் ஆனந்த மா நடனமிடு பூம்_பதம்
மன்னும் வினை ஒப்பு மலபரிபாகம் வாய்க்க மாமாயையை மிதிக்கும் பதம்
மலி பிறவி மறலியின் அழுந்தும் உயிர்-தமை அருளின் மருவுற எடுக்கும் பதம்
வளர் ஊர்த்த வீர தாண்டவம் முதல் பஞ்சகம் மகிழ்ந்திட இயற்றும் பதம்

18.வல்ல முயலகன் மீதில் ஊன்றிய திரு_பதம் வளம் தரத் தூக்கும் பதம்
வல்_வினை எலாம் தவிர்த்து அழியாத சுத்த நிலை வாய்த்திட வழங்கும் பதம்
மறை துதிக்கும் பதம் மறைச் சிலம்பு ஒளிர் பதம் மறைப் பாதுகைச் செம்பதம்
மறை முடி மணி_பதம் மறைக்கும் எட்டாப் பதம் மறைப் பரி உகைக்கும் பதம்

19.மறையவன் உளம்கொண்ட பதம் அமித கோடியாம் மறையவர் சிரம் சூழ் பதம்
மறையவன் சிரசிகாமணி எனும் பதம் மலர் கொள் மறையவன் வாழ்த்தும் பதம்
மறையவன் செய உலகம் ஆக்கின்ற அதிகார வாழ்வை ஈந்து அருளும் பதம்
மறையவன் கனவினும் காணாத பதம் அந்த மறையவன் பரவும் பதம்

20.மால் விடை இவர்ந்திடும் மலர்_பதம் தெய்வ நெடுமால் அருச்சிக்கும் பதம்
மால் பரவி நாள்-தொறும் வணங்கும் பதம் மிக்க திருமால் விழி இலங்கும் பதம்
மால் தேட நின்ற பதம் ஓர் அனந்தம் கோடி மால் தலை அலங்கல் பதம்
மால் முடிப் பதம் நெடிய மால் உளப் பதம் அந்த மாலும் அறி அரிதாம் பதம்

21.மால் கொள் அவதாரங்கள் பத்தினும் வழிபட்டு வாய்மை பெற நிற்கும் பதம்
மால் உலகு காக்கின்ற வண்மை பெற்று அடிமையின் வதிந்திட அளிக்கும் பதம்
வரையுறும் உருத்திரர்கள் புகழ் பதம் பல கோடி வய உருத்திரர்கள் சூழ் பதம்
வாய்ந்திடும் உருத்திரற்கு இயல் கொள் முத்தொழில் செய்யும் வண்மை தந்து அருளும் பதம்

22.வான இந்திரர் ஆதி எண் திசைக் காவலர்கள் மா தவத் திறனாம் பதம்
மதி இரவி ஆதி சுரர் அசுரர் அந்தரர் வானவாசிகள் வழுத்தும் பதம்
மணி உரகர் கருடர் காந்தருவர் விஞ்சையர் சித்தர் மா முனிவர் ஏத்தும் பதம்
மா நிருதர் பைசாசர் கிம்புருடர் யக்ஷர்கள் மதித்து வரம் ஏற்கும் பதம்

23.மன்னு கின்னரர் பூதர் வித்தியாதரர் போகர் மற்றையர்கள் பற்றும் பதம்
வண்மை பெறு நந்தி முதல் சிவ_கணத் தலைவர்கள் மன_கோயில் வாழும் பதம்
மா தேவி எங்கள் மலை_மங்கை என் அம்மை மென் மலர்_கையால் வருடும் பதம்
மறலியை உதைத்து அருள் கழல் பதம் அரக்கனை மலைக் கீழ் அடர்க்கும் பதம்

24.வஞ்சம் அறு நெஞ்சினிடை எஞ்சல் அற விஞ்சு திறல் மஞ்சு உற விளங்கும் பதம்
வந்தனை செய் புந்தியவர்-தம் துயர் தவிர்ந்திட உள் மந்தணம் நவிற்றும் பதம்
மாறு_இல் ஒரு மாறன் உளம் ஈறு_இல் மகிழ் வீறியிட மாறி நடம் ஆடும் பதம்
மறக் கருணையும் தனி அறக் கருணையும் தந்து வாழ்விக்கும் ஒண்மைப் பதம்

25.இரவு உறும் பகல் அடியர் இரு மருங்கினும் உறுவர் என வயங்கிய சீர்ப் பதம்
எம் பந்தம் அற எமது சம்பந்த வள்ளல் மொழி இயல் மணம் மணக்கும் பதம்
ஈவு அரசர் எம்முடைய நாவரசர் சொல் பதிக இசை பரிமளிக்கும் பதம்
ஏவலார் புகழ் எமது நாவல்_ஆரூரர் புகல் இசை திரு_பாட்டுப் பதம்

26.ஏதவூர் தங்காத வாதவூர் எம் கோவின் இன் சொல் மணி அணியும் பதம்
எல் ஊரும் மணி மாட நல்லூரின் அப்பர் முடியிடை வைகி அருள் மென் பதம்
எடும் மேல் எனத் தொண்டர் முடி மேல் மறுத்திடவும் இடை வலிந்து ஏறும் பதம்
எழில் பரவை இசைய ஆரூர் மறுகின் அருள் கொண்டு இரா முழுதும் உலவும் பதம்

27.இன் தொண்டர் பசி அறக் கச்சூரின் மனை-தொறும் இரக்க நடை கொள்ளும் பதம்
இளைப்புறல் அறிந்து அன்பர் பொதி_சோறு அருந்த முன் இருந்து பின் நடக்கும் பதம்
எறி விறகு விற்க வளர் கூடல் தெரு-தொறும் இயங்கிய இரக்கப் பதம்
இறு வைகை அம் கரையின் மண் படப் பல் கால் எழுந்து விளையாடும் பதம்

28.எங்கே மெய்_அன்பர் உளர் அங்கே நலம் தர எழுந்து அருளும் வண்மைப் பதம்
எவ்வண்ணம் வேண்டுகினும் அவ்வண்ணம் அன்றே இரங்கி ஈந்து அருளும் பதம்
என்_போன்றவர்க்கும் மிகு பொன் போன்ற கருணை தந்து இதயத்து இருக்கும் பதம்
என் உயிரை அன்ன பதம் என் உயிர்க்குயிராய் இலங்கு செம் பதுமப் பதம்

29.என் அறிவு எனும் பதம் என் அறிவினுக்கு அறிவாய் இருந்த செங்கமலப் பதம்
என் அன்பு எனும் பதம் என் அன்பிற்கு வித்தாய் இசைந்த கோகனகப் பதம்
என் தவம் எனும் பதம் என் மெய் தவப் பயனாய் இயைந்த செம் சலசப் பதம்
என் இரு கண்மணியான பதம் என் கண்மணிகளுக்கு இனிய நல் விருந்தாம் பதம்

30.என் செல்வமாம் பதம் என் மெய்ச் செல்வ வருவாய் எனும் தாமரைப் பொன்_பதம்
என் பெரிய வாழ்வான பதம் என் களிப்பாம் இரும் பதம் என் நிதியாம் பதம்
என் தந்தை தாய் எனும் இணைப் பதம் என் உறவாம் இயல் பதம் என் நட்பாம் பதம்
என் குரு எனும் பதம் என் இட்ட_தெய்வப் பதம் எனது குல_தெய்வப் பதம்

31.என் பொறிகளுக்கு எலாம் நல் விடயமாம் பதம் என் எழுமையும் விடாப் பொன்_பதம்
என் குறை எலாம் தவிர்த்து ஆட்கொண்ட பதம் எனக்கு எய்ப்பில் வைப்பாகும் பதம்
எல்லார்க்கும் நல்ல பதம் எல்லாம் செய் வல்ல பதம் இணை_இலாத் துணையாம் பதம்
எழு மனம் உடைந்துஉடைந்து உருகி நெகிழ் பத்தர்கட்கு இன் அமுதம் ஆகும் பதம்

32.எண்ணுறில் பாலில் நறு நெய்யொடு சருக்கரை இசைந்து என இனிக்கும் பதம்
ஏற்ற முக்கனி பாகு கன்னல் கற்கண்டு தேன் என்ன மதுரிக்கும் பதம்
எங்கள் பதம் எங்கள் பதம் என்று சமயத் தேவர் இசை வழக்கிடும் நல் பதம்
ஈறு_இலாப் பதம் எலாம் தரு திரு_பதம் அழிவில் இன்பு உதவுகின்ற பதமே.