Thiruvarun Muraiyeedu

திருவருட்பா​

முதல் திருமுறை

திருவருண் முறையீடு
0:00
0:00
🔊

கட்டளைக் கலித்துறை
திருச்சிற்றம்பலம்

1. துனியால் உளந்தளர்ந் தந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
இனியா யினும்இரங் காதோநின் சித்தம்எந் தாய்இதென்ன
அனியாய மோஎன் னளவின்நின் பால்தண் ணருளிலையோ
சனியாம்என் வல்வினைப் போதனை யோஎன்கொல் சாற்றுவதே.

2. என்னே முறையுண் டெனில்கேள்வி உண்டென்பர் என்னளவில்
இன்னே சிறிதும் இலையேநின் பால்இதற் கென்செய்குவேன்
மன்னேமுக் கண்ணுடை மாமணி யேஇடை வைப்பரிதாம்
பொன்னேமின் னேர்சடைத் தன்னே ரிலாப்பரி பூரணனே.

3. தண்டாத சஞ்சலங் கொண்டேன் நிலையைஇத் தாரணியில்
கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கைதிங்கள்
துண்டார் மலர்ச்சடை எந்தாய் இரங்கிலை தூய்மையிலா
அண்டார் பிழையும் பொறுப்போய் இதுநின் அருட்கழகே.

4. பொய்யாம் உலக நடைநின்று சஞ்சலம் பொங்கமுக்கண்
ஐயாஎன் உள்ளம் அழலார் மெழுகொத் தழிகின்றதால்
பையார் அரவ மதிச்சடை யாய்செம் பவளநிறச்
செய்யாய் எனக்கருள் செய்யாய் எனில்என்ன செய்குவனே.

5. விடமிலை யேர்மணி கண்டாநின் சைவ விரதஞ்செய்யத்
திடமிலை யேஉட் செறிவிலை யேஎன்றன் சித்தத்துநின்
நடமிலை யேஉன்றன் நண்பிலை யேஉனை நாடுதற்கோர்
இடமிலை யேஇதை எண்ணிலை யேசற் றிரங்கிலையே.

6. விண்ணுடை யாய்வெள்ளி வெற்புடை யாய்மதி மேவுசடைக்
கண்ணுடை யாய்நெற்றிக் கண்ணுடை யாய்அருட் கண்ணுடையாய்
பண்ணுடை யாய்திசைப் பட்டுடை யாய்இடப் பாலில்அருட்
பெண்ணுடை யாய்வந்திப் பிட்டுடை யாய்என் பெருஞ்செல்வமே.

7. விடையுடை யாய்மறை மேலுடை யாய்நதி மேவியசெஞ்
சடையுடை யாய்கொன்றைத் தாருடை யாய்கரம் தாங்குமழுப்
படையுடை யாய்அருட் பண்புடை யாய்பெண் பரவையின்பால்
நடையுடை யாய்அருள் நாடுடை யாய்பதம் நல்குகவே.

8. கீளுடை யாய்பிறைக் கீற்றுடை யாய்எங் கிளைத்தலைமேல்
தாளுடை யாய்செஞ் சடையுடை யாய்என் தனையுடையாய்
வாளுடை யாய்மலை மானுடை யாய்கலை மானுடையாய்
ஆளுடை யாய்மன்றுள் ஆட்டுடை யாய்என்னை ஆண்டருளே.

9. நான்படும் பாடு சிவனே உலகர் நவிலும்பஞ்சு
தான்படு மோசொல்லத் தான்படு மோஎண்ணத் தான்படுமோ
கான்படு கண்ணியின் மான்படு மாறு கலங்கிநின்றேன்
ஏன்படு கின்றனை என்றிரங் காய்என்னில் என்செய்வனே.

10. பொய்யோ அடிமை உரைத்தல்எந் தாய்என்னுட் போந்திருந்தாய்
ஐயோநின் உள்ளத் தறிந்ததன் றோஎன் அவலமெல்லாம்
கையோட வல்லவர் ஓர்பதி னாயிரங் கற்பநின்று
மெய்யோ டெழுதினுந் தான்அடங் காத வியப்புடைத்தே.

11. தேன்சொல்லும் வாயுமை பாகாநின் தன்னைத் தெரிந்தடுத்தோர்
தான்சொல்லுங் குற்றங் குணமாகக் கொள்ளுந் தயாளுவென்றே
நான்சொல்வ தென்னைபொன் நாண்சொல்லும் வாணிதன் நாண்சொல்லும்அவ்
வான்சொல்லும் எம்மலை மான்சொல்லும் கைம்மலை மான்சொல்லுமே.

12. வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடார்
என்றே உரைப்பரிங் கென்போன்ற மூடர்மற் றில்லைநின்பேர்
நன்றே உரைத்துநின் றன்றே விடுத்தனன் நாணில்என்மட்
டின்றேயக் கட்டுரை இன்றேஎன் சொல்வ திறையவனே.

13. கைக்கின்ற காயும் இனிப்பாம் விடமும் கனஅமுதாம்
பொய்க்கின்ற கானலும் நீராம்வன் பாவமும் புண்ணியமாம்
வைக்கின்ற ஓடுஞ்செம் பொன்னாம்என் கெட்ட மனதுநின்சீர்
துய்க்கின்ற நல்ல மனதாவ தில்லைஎன் சொல்லுவனே.

14. வீணே பொழுது கழிக்கின்ற நான்உன் விரைமலர்த்தாள்
காணேன்கண் டாரையுங் காண்கின்றி லேன்சற்றும் காணற்கன்பும்
பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன்
நாணேன் விலங்கிழி யாணே யெனுங்கடை நாயினனே.

15. நானோர் எளிமை அடிமையென் றோநல்லன் அல்லனென்று
தானோநின் அன்பர் தகாதென்பர் ஈதென்று தானினைத்தோ
ஏனோநின் உள்ளம் இரங்கிலை இன்னு மிரங்கிலையேல்
கானோடு வேன்கொல் கடல்விழு வேன்கொல்முக் கண்ணவனே.

16. மின்போலுஞ் செஞ்சடை வித்தக னேஒளி மேவியசெம்
பொன்போலு மேனிஎம் புண்ணிய னேஎனைப் போற்றிப்பெற்ற
தன்போலுந் தாய்தந்தை ஆயிரம் பேரிருந் தாலும்அந்தோ
நின்போலும் அன்புடை யார்எனக் கார்இந்த நீணிலத்தே.

17. அன்பாலென் தன்னைஇங் காளுடை யாய்இவ் வடியவனேன்
நின்பாலென் துன்ப நெறிப்பால் அகற்றென்று நின்றதல்லால்
துன்பால் இடரைப் பிறர்பால் அடுத்தொன்று சொன்னதுண்டோ
என்பால் இரங்கிலை என்பாற் கடல்பிள்ளைக் கீந்தவனே.

18. என்போன் மனிதரை ஏன்அடுப் பேன்எனக் கெய்ப்பில்வைப்பாம்
பொன்போல் விளங்கும் புரிசடை யான்றனைப் போயடுத்தேன்
துன்போர் அணுவும் பெறேன்இனி யான்என்று சொல்லிவந்தேன்
முன்போல் பராமுகஞ் செய்யேல் அருளுக முக்கணனே.

19. பொன்னுடை யார்தமைப் போய்அடுப் பாய்என்ற புன்மையினோர்க்
கென்னுடை யான்றனை யேஅடுப் பேன்இதற் கெள்ளளவும்
பின்னிடை யேன்அவர் முன்னடை யேன்எனப் பேசிவந்தேன்
மின்னிடை மாதுமை பாகாஎன் சோகம் விலக்குகவே.

20. சாதகத் தோர்கட்குத் தானருள் வேனெனில் தாழ்ந்திடுமா
பாதகத் தோனுக்கு முன்னருள் ஈந்ததெப் பான்மைகொண்டோ
தீதகத் தேன்எளி யேன்ஆ யினும்உன் திருவடியாம்
போதகத் தேநினைக் கின்றேன் கருணை புரிந்தருளே.

21. அருளறி யாச்சிறு தேவருந் தம்மை அடுத்தவர்கட்
கிருளறி யாவிளக் கென்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
மருளறி யாப்பெருந் தேவேநின் தன்னடி வந்தடுத்தேன்
தெருளறி யாச்சிறி யேன்ஆயி னுஞ்செய்க சீரருளே.

22. அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த
பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால்
வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால்
தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே.

23. சரங்கார் முகந்தொடுத் தெய்வது போலென் றனையுலகத்
துரங்கா ரிருட்பெரு வாதனை யால்இடர் ஊட்டுநெஞ்சக்
குரங்கால் மெலிந்துநின் நாமந் துணையெனக் கூறுகின்றேன்
இரங்கார் தமக்கும் இரங்குகின் றோய்எற் கிரங்குகவே.

24. கூறுற்ற குற்றமுந் தானே மகிழ்வில் குணமெனவே
ஆறுற்ற செஞ்சடை அண்ணல்கொள் வான்என்பர் ஆங்கதற்கு
வேறுற்ற தோர்கரி வேண்டுங்கொ லோஎன்னுள் மேவிஎன்றும்
வீறுற்ற பாதத் தவன்மிடற் றேகரி மேவியுமே.

25. சூற்படு மேக நிறத்தோனும் நான்முகத் தோனும்என்னைப்
போற்படும் பாடுநல் லோர்சொலக் கேட்கும் பொழுதுமனம்
வேற்படும் புண்ணில் கலங்கிஅந் தோநம் விடையவன்பூங்
காற்படுந் தூளிநம் மேற்படு மோஒரு கால்என்னுமே.

26. வாளேய் நெடுங்கண்ணி எம்பெரு மாட்டி வருடுமலர்த்
தாளே வருந்த மணிக்கூடற் பாணன் தனக்கடிமை
ஆளே எனவிற கேற்றுவிற் றோய்நின் னருள்கிடைக்கும்
நாளேநன் னாள்அந்த நாட்கா யிரந்தெண்டன் நான்செய்வனே.

27. அடுத்தார் தமைஎன்றும் மேலோர் விடார்கள் அவர்க்குப்பிச்சை
எடுத்தா யினும்இடு வார்கள்என் பார்அதற் கேற்கச்சொற்பூத்
தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரி லேபிச்சைச் சோறெடுத்துக்
கொடுத்தாய்நின் பேரருள் என்சொல்லு கேன்எண் குணக்குன்றமே.

28. நாடிநின் றேநினை நான்கேட்டுக் கொள்வது நண்ணும்பத்துக்
கோடியன் றேஒரு கோடியின் நூற்றொரு கூறுமன்றே
தேடிநின் றேபுதைப் போருந் தருவர்நின் சீர்நினைந்துட்
பாடியந் தோமனம் வாடிநின் றேன்முகம் பார்த்தருளே.

29. தாயாகி னுஞ்சற்று நேரந் தரிப்பள்நந் தந்தையைநாம்
வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்திதுநீ
ஈயாய் எனில்அருள் வான்என் றுனையடுத் தேன்உமையாள்
நேயா மனமிரங் காயாஎன் எண்ணம் நெறிப்படவே.

30. நடும்பாட்டை நாவலன் வாய்த்திருப் பாட்டை நயந்திட்டநீ
குடும்பாட்டை மேற்கொண்ட என்தமிழ்ப் பாட்டையும் கொண்டெனுள்ளத்
திடும்பாட்டை நீக்கிலை என்னினுந் துன்பத் திழுக்குற்றுநான்
படும்பாட்டை யாயினும் பார்த்திரங் காய்எம் பரஞ்சுடரே.

31. ஏட்டாலுங் கேளயல் என்பாரை நான்சிரித் தென்னைவெட்டிப்
போட்டாலும் வேறிடம் கேளேன்என் நாணைப் புறம்விடுத்துக்
கேட்டாலும் என்னை உடையா னிடஞ்சென்று கேட்பனென்றே
நீட்டாலும் வாயுரைப் பாட்டாலுஞ் சொல்லி நிறுத்துவனே.

32. சீர்க்கின்ற கூடலில் பாணனுக் காட்படச் சென்றஅந்நாள்
வேர்க்கின்ற வெம்மணல் என்தலை மேல்வைக்கு மெல்லடிக்குப்
பேர்க்கின்ற தோறும் உறுத்திய தோஎனப் பேசிஎண்ணிப்
பார்க்கின்ற தோறும்என் கண்ணேஎன் உள்ளம் பதைக்கின்றதே.

33. நீயேஎன் தந்தை அருளுடை யாய்எனை நேர்ந்துபெற்ற
தாயேநின் பாலிடத் தெம்பெரு மாட்டிஇத் தன்மையினால்
நாயேன் சிறிதுங் குணமிலன் ஆயினும் நானும்உங்கள்
சேயே எனைப்புறம் விட்டால் உலகஞ் சிரித்திடுமே.

34. தெருளும் பொருளும்நின் சீரரு ளேஎனத் தேர்ந்தபின்யான்
மருளும் புவனத் தொருவரை யேனு மதித்ததுண்டோ
வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்
இருளும் கருமணி கண்டா அறிந்தும் இரங்கிலையே.

35. பெண்ணான் மயங்கும் எளியேனை ஆளப் பெருங்கருணை
அண்ணாநின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
கண்ணார் உலகில்என் துன்பமெல் லாம்வெளி காணிலிந்த
மண்ணா பிலத்தொடு விண்ணாடுங் கொள்ளை வழங்குமென்றே.

36. நெறிகொண்ட நின்னடித் தாமரைக் காட்பட்டு நின்றஎன்னைக்
குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடுங்கலிப்பேய்
முறிகொண் டலைக்க வழக்கோ வளர்த்த முடக்கிழநாய்
வெறிகொண்ட தேனும் விடத்துணி யார்இவ் வியனிலத்தே.

37. மதியாமல் ஆரையும் நான்இறு மாந்து மகிழ்கின்றதெம்
பதியாம் உனது திருவருட் சீருரம் பற்றியன்றோ
எதியார் படினும் இடர்ப்பட் டலையஇவ் வேழைக்கென்ன
விதியா இனிப்பட மாட்டேன் அருள்செய் விடையவனே.

38. கற்கோட்டை நெஞ்சருந் தம்பால் அடுத்தவர் கட்குச்சும்மாச்
சொற்கோட்டை யாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்தடுத்தேன்
அற்கோட்டை நெஞ்சுடை யேனுக் கிரங்கிலை அன்றுலவா
நெற்கோட்டை ஈந்தவன் நீயல்லை யோமுக்கண் நின்மலனே.

39. ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
வாதிக்க நொந்து வருந்துகின் றேன்நின் வழக்கம்எண்ணிச்
சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்குகண்டாய்
போதிக்க வல்லநற் சேய்உமை யோடென்னுள் புக்கவனே.

40. பிறைமுடித் தாண்டொரு பெண்முடித் தோர்பிள்ளைப் பேர்145முடித்த
நிறைமுடித் தாண்டவஞ் செவ்வேணி செய்திட நித்தமன்றின்
மறைமுடித் தாண்டவஞ் செய்வோய்என் பாலருள் வைத்தெளியேன்
குறைமுடித் தாண்டுகொள் என்னே பலமுறை கூறுவதே.

41. நடங்கொண்ட பொன்னடி நீழலில் நான்வந்து நண்ணுமட்டும்
திடங்கொண்ட நின்புகழ் அல்லால் பிறர்புகழ் செப்பவையேல்
விடங்கொண்ட கண்டத் தருட்குன்ற மேஇம வெற்புடையாள்
இடங்கொண்ட தெய்வத் தனிமுத லேஎம் இறையவனே.

42. விழிக்கஞ்ச னந்தரும் மின்னார்தம் வாழ்க்கையில் வீழ்ந்தயலோர்
மொழிக்கஞ்சி உள்ளம் பொறாதுநின் நாம மொழிந்தெளியேன்
குழிக்கஞ்சி போன்மயங் கின்றேன்146அருளக் குறித்திலையேல்
பழிக்கஞ்சி னோய்இன்னும் என்பழிக் கஞ்சப் படுமுனக்கே.

43. சேல்வைக்கும் கண்ணுமை பாகாநின் சித்தம் திருவருள்என்
பால்வைக்கு மேல்இடர் எல்லாம் எனைவிட்டப் பால்நடக்கக்
கால்வைக்கு மேநற் சுகவாழ்வென் மீதினில் கண்வைக்குமே
மால்வைக்கு மாயைகள் மண்வைக்கு மேதங்கள் வாய்தனிலே.

44. ஒருமாது பெற்ற மகன்பொருட் டாக உவந்துமுன்னம்
வருமாம னாகி வழக்குரைத் தோய்என் வழக்குரைத்தற்
கிருமா நிலத்தது போல்வேடங் கட்ட இருத்திகொலோ
திருமால் வணங்கும் பதத்தவ யானுன் சிறுவனன்றே.

45. முன்னஞ்ச முண்ட மிடற்றர சேநின் முழுக்கருணை
அன்னஞ் சுகம்பெற உண்டும்உன் பால்அன் படைந்திலதால்
கன்னெஞ்ச மோகட்டை வன்னெஞ்ச மோஎட்டிக் காய்நெஞ்சமோ
என்னெஞ்சம் என்னெஞ்ச மோதெரி யேன்இதற் கென்செய்வதே.

46. வானம் விடாதுறு கால்போல்என் தன்னை வளைந்துகொண்ட
மானம் விடாதிதற் கென்செய்கு வேன்நின்னை வந்தடுத்தேன்
ஊனம் விடாதுழல் நாயேன் பிழையை உளங்கொண்டிடேல்
ஞானம் விடாத நடத்தோய்நின் தண்ணருள் நல்குகவே.

47. நாயுஞ் செயாத நடையுடை யேனுக்கு நாணமும்உள்
நோயுஞ் செயாநின்ற வன்மிடி நீக்கிநன் நோன்பளித்தாய்
பேயுஞ் செயாத கொடுந்தவத் தால்பெற்ற பிள்ளைக்குநல்
தாயும் செயாள்இந்த நன்றிகண் டாய்செஞ் சடையவனே.

48. உருவத்தி லேசிறி யேனாகி யூகத்தி லொன்றுமின்றித்
தெருவத்தி லேசிறு கால்வீசி யாடிடச் சென்றஅந்தப்
பருவத்தி லேநல் அறிவளித் தேஉனைப் பாடச்செய்தாய்
அருவத்தி லேஉரு வானோய்நின் தண்ணளி யார்க்குளதே.

49. மானெழுந் தாடுங் கரத்தோய்நின் சாந்த மனத்தில்சினந்
தானெழந் தாலும் எழுகஎன் றேஎன் தளர்வைஎல்லாம்
ஊனெழுந் தார்க்கநின் பால்உரைப் பேன்அன்றி ஊர்க்குரைக்க
நானெழுந் தாலும்என் நாஎழு மோமொழி நல்கிடவே.

50. வனமெழுந் தாடுஞ் சடையோய்நின் சித்த மகிழ்தலன்றிச்
சினமெழுந் தாலும் எழுகஎன் றேஎன் சிறுமையைநின்
முனமெழுந் தாற்றுவ தல்லால் பிறர்க்கு மொழிந்திடஎன்
மனமெழுந் தாலும்என் வாய்எழு மோஉள்ள வாறிதுவே.

51. சிற்பர மேஎஞ் சிவமே திருவருள் சீர்மிகுந்த
கற்பக மேஉனைச் சார்ந்தோர்க் களிக்குநின் கைவழக்கம்
அற்பமன் றேபல அண்டங் களின்அடங் காததென்றே
நற்பர ஞானிகள் வாசகத் தால்கண்டு நாடினனே.

52. வருஞ்செல்லுள்148 நீர்மறுத் தாலும் கருணை மறாதஎங்கள்
பெருஞ்செல்வ மேஎஞ் சிவமே நினைத்தொழப் பெற்றும்இங்கே
தருஞ்செல் அரிக்கு மரம்போல் சிறுமைத் தளர்நடையால்
அருஞ்செல்லல் மூழ்கிநிற் கின்றேன் இதுநின் அருட்கழகே.

53. கருமுக நீக்கிய பாணனுக் கேகன கங்கொடுக்கத்
திருமுகம் சேரற் களித்தோய்என் றுன்னைத் தெரிந்தடுத்தென்
ஒருமுகம் பார்த்தருள் என்கின்ற ஏழைக் குதவிலையேல்
உருமுக149 வார்க்கும் விடையோய் எவர்மற் றுதவுவரே.

54. மருப்பா வனத்துற்ற மாணிக்கு மன்னன் மனமறிந்தோர்
திருப்பா சுரஞ்செய்து பொற்கிழி ஈந்தநின் சீர்நினைந்தே
விருப்பா நினையடுத் தேன்எனக் கீந்திட வேஇன்றென்னை
கருப்பாநின் சித்தம் திருப்பாய்என் மீது கறைக்கண்டனே.

55. பீழையை மேவும்இவ் வாழ்க்கையி லேமனம் பேதுற்றஇவ்
ஏழையை நீவிட லாமோ அடிமைக் கிரங்குகண்டாய்
மாழையைப்150 போன்முன்னர்த் தாங்கொண்டு வைத்து வளர்த்தஇள
வாழையைத் தாம்பின்னர் நீர்விட லின்றி மறுப்பதுண்டே.

56. கருத்தறி யாச்சிறி யேன்படுந் துன்பக் கலக்கமெல்லாம்
உருத்தறி யாமை பொறுத்தருள் ஈபவர் உன்னையன்றித்
திருத்தறி யார்பிறர் அன்றேமென் கன்றின் சிறுமைஒன்றும்
எருத்தறி யாதுநற் சேதா அறியும் இரங்குகவே.

57. வான்வேண்டிக் கொண்ட மருந்தோமுக் கண்கொண்ட வள்ளலுன்னை
நான்வேண்டிக் கொண்டது நின்னடி யார்க்கு நகைதருமீ
தேன்வேண்டிக் கொண்டனை என்பார் இதற்கின்னும் ஏனிரங்காய்
தான்வேண்டிக் கொண்ட அடிமைக்குக் கூழிடத் தாழ்ப்பதுண்டே.

58. பையுரைத் தாடும் பணிப்புயத் தோய்தமைப் பாடுகின்றோர்
உய்யுரைத் தாவுள்ள தில்லதென் றில்லதை உள்ளதென்றே
பொய்யுரைத் தாலும் தருவார் பிறர்அது போலன்றிநான்
மெய்யுரைத் தாலும் இரங்காமை நின்னருள் மெய்க்கழகே.

59. மடல்வற்றி னாலும் மணம்வற்று றாத மலரெனஎன்
உடல்வற்றி னாலும்என் உள்வற்று மோதுயர் உள்ளவெல்லாம்
அடல்வற்று றாதநின் தாட்கன்றி ஈங்கய லார்க்குரையேன்
கடல்வற்றி னாலும் கருணைவற் றாதமுக் கண்ணவனே.

60. எள்ளிருக் கின்றதற் கேனுஞ் சிறிதிட மின்றிஎன்பான்
முள்ளிருக் கின்றது போலுற்ற துன்ப முயக்கமெல்லாம்
வெள்ளிருக் கின்றவர் தாமுங்கண் டார்எனில் மேவிஎன்றன்
உள்ளிருக் கின்றநின் தாட்கோதல் என்எம் உடையவனே.

61. பொன்கின்று151 பூத்த சடையாய்இவ் வேழைக்குன் பொன்னருளாம்
நன்கின்று நீதரல் வேண்டும்அந் தோதுயர் நண்ணிஎன்னைத்
தின்கின்ற தேகொடும் பாம்பையும் பாலுணச் செய்துகொலார்
என்கின்ற ஞாலம் இழுக்குரை யாதெற் கிரங்கிடினே.

62. வாய்மூடிக் கொல்பவர் போலேஎன் உள்ளத்தை வன்துயராம்
பேய்மூடிக் கொண்டதென் செய்கேன் முகத்தில் பிறங்குகையைச்
சேய்மூடிக் கொண்டுநற் பாற்கழக் கண்டுந் திகழ்முலையைத்
தாய்மூடிக் கொள்ளுவ துண்டோ அருளுக சங்கரனே.

63. கோள்வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக்கொள்ளித்
தேள்வேண்டு மோசுடத் தீவேண்டு மோவதை செய்திடஓர்
வாள்வேண்டு மோகொடுந் துன்பே அதில்எண் மடங்குகண்டாய்
ஆள்வேண்டு மேல்என்னை ஆள்வேண்டும் என்னுள் அஞர்ஒழித்தே.

64. விடையிலை யோஅதன் மேலேறி என்முன் விரைந்துவரப்
படையிலை யோதுயர் எல்லாம் துணிக்கப் பதங்கொளருட்
கொடையிலை யோஎன் குறைதீர நல்கக் குலவும்என்தாய்
புடையிலை யோஎன் தனக்காகப் பேசஎம் புண்ணியனே.

65. நறையுள தேமலர்க் கொன்றைகொண் டாடிய நற்சடைமேல்
பிறையுள தேகங்கைப் பெண்ணுள தேபிறங் குங்கழுத்தில்
கறையுள தேஅருள் எங்குள தேஇக் கடையவனேன்
குறையுள தேஎன் றரற்றவும் சற்றுங் குறித்திலதே.

66. சினத்தாலும் காமத்தி னாலும்என் தன்னைத் திகைப்பிக்கும்இம்
மனத்தால் உறுந்துயர் போதாமை என்று மதித்துச்சுற்றும்
இனத்தாலும் வாழ்க்கை இடும்பையி னாலும் இளைக்கவைத்தாய்
அனத்தான் புகழும் பதத்தோய் இதுநின் அருட்கழகே.

67. புல்லள வாயினும் ஈயார்தம் வாயில் புகுந்துபுகழ்ச்
சொல்லள வாநின் றிரப்போர் இரக்கநற் சொன்னங்களைக்
கல்லள152 வாத்தரு கின்றோர்தம் பாலுங் கருதிச்சென்றோர்
நெல்லள வாயினும் கேளேன்நின் பாலன்றி நின்மலனே.

68. பிறைசூழ்ந்த வேணி முடிக்கனி யேஎம் பெருஞ்செல்வமே
கறைசூழ்ந்த கண்டத்தெம் கற்பக மேநுதற் கட்கரும்பே
மறைசூழ்ந்த மன்றொளிர் மாமணி யேஎன் மனமுழுதும்
குறைசூழ்ந்து கொண்டதென் செய்கேன் அகற்றக் குறித்தருளே.

69. கண்கட்டி ஆடும் பருவத்தி லேமுலை கண்டஒரு
பெண்கட்டி யாள நினைக்கின்ற ஓர்சிறு பிள்ளையைப்போல்
எண்கட்டி யானுன் அருள்விழைந் தேன்சிவ னேஎன்நெஞ்சம்
புண்கட்டி யாய்அலைக் கின்றது மண்கட்டிப் போலுதிர்ந்தே.

70. மெய்விட்ட வஞ்சக நெஞ்சால் படுந்துயர் வெந்நெருப்பில்
நெய்விட்ட வாறிந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால்
பொய்விட்ட நெஞ்சுறும் பொற்பதத் தைய இப் பொய்யனைநீ
கைவிட் டிடநினை யேல்அருள் வாய்கரு ணைக்கடலே.

71. அருட்கட லேஅக் கடலமு தேஅவ் வமுதத்துற்ற
தெருட்சுவை யேஅச் சுவைப்பய னேமறைச் சென்னிநின்ற
பொருட்பத மேஅப் பதத்தர சேநின் புகழ்நினையா
இருட்குண மாயை மனத்தே னையும்உவந் தேன்றுகொள்ளே.

72. அண்டங்கண் டானும் அளந்தானும் காண்டற் கரியவநின்
கண்டங்கண் டார்க்குஞ் சடைமேல் குறைந்த கலைமதியின்
துண்டங்கண் டார்க்கும் பயமுள தோஎனச் சூழ்ந்தடைந்தேன்
தொண்டன்கண் டாள்பல தெண்டன்கண் டாய்நின் துணையடிக்கே.

73. தேட்டக்கண் டேர்மொழிப் பாகா உலகில் சிலர்குரங்கை
ஆட்டக்கண் டேன்அன்றி அக்குரங் கால்அவர் ஆடச்சற்றும்
கேட்டுக்கண் டேனிலை நானேழை நெஞ்சக் கிழக்குரங்கால்
வேட்டுக்கொண் டாடுகின் றேன்இது சான்ற வியப்புடைத்தே.

74. போகங்கொண் டார்த்த அருளார் அமுதப் புணர்முலையைப்
பாகங்கொண் டார்த்த பரம்பொரு ளேநின் பதநினையா
வேகங்கொண் டார்த்த மனத்தால்இவ் வேழை மெலிந்துமிகச்
சோகங்கொண் டார்த்துநிற் கின்றேன் அருளத் தொடங்குகவே.

75. இன்றல வேநெடு நாளாக ஏழைக் கெதிர்த்ததுன்பம்
ஒன்றல வேபல எண்ணில வேஉற் றுரைத்ததயல்
மன்றல வேபிறர் நன்றல வேயென வந்தகயக்
கன்றல வேபசுங் கன்றடி யேன்றனைக் காத்தருளே.

76. படிபட்ட மாயையின் பாற்பட்ட சாலப் பரப்பிற்பட்டே
மிடிபட்ட வாழ்க்கையின் மேற்பட்ட துன்ப விசாரத்தினால்
அடிபட்ட நானுனக் காட்பட்டும் இன்னும் அலைதல்நன்றோ
பிடிபட்ட நேரிடைப் பெண்பட்ட பாகப் பெருந்தகையே.

77. உடையாய்என் விண்ணப்பம் ஒன்றுண்டு கேட்டருள் உன்னடிச்சீர்
தடையாதும் இன்றிப் புகல்வதல் லால்இச் சகத்திடைநான்
நடையால் சிறுமைகொண் டந்தோ பிறரை நவின்றவர்பால்
அடையா மையுநெஞ் சுடையாமை யுந்தந் தருளுகவே.

78. தஞ்சமென் றேநின்ற நாயேன் குறையைத் தவிர்உனக்கோர்
பஞ்சமின் றேஉல கெல்லாநின் சீரருட் பாங்குகண்டாய்
எஞ்சநின் றேற்குனை யல்லால் துணைபிறி தில்லைஇது
வஞ்சமன் றேநின் பதங்காண்க முக்கண் மணிச்சுடரே.

79. பொறுத்தாலும் நான்செயும் குற்றங்கள் யாவும் பொறாதெனைநீ
ஒறுத்தாலும் நன்றினிக் கைவிட்டி டேல்என் னுடையவன்நீ
வெறுத்தாலும் வேறிலை வேற்றோர் இடத்தை விரும்பிஎன்னை
அறுத்தாலுஞ் சென்றிட மாட்டேன் எனக்குன் அருளிடமே.

80. சேல்வரும் ஏர்விழி மங்கைபங் காஎன் சிறுமைகண்டால்
மேல்வரு நீவரத் தாழ்த்தாலும் உன்றன் வியன்அருட்பொற்
கால்வரு மேஇளங் கன்றழத் தாய்ப்பசுக் காணின்மடிப்
பால்வரு மேமுலைப் பால்வரு மேபெற்ற பாவைக்குமே.

81. வன்பட்ட கூடலில் வான்பட்ட வையை வரம்பிட்டநின்
பொன்பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவிநடையாம்
துன்பட்ட வீரர்அந் தோவாத வூரர்தம் தூயநெஞ்சம்
என்பட்ட தோஇன்று கேட்டஎன் நெஞ்சம் இடிபட்டதே.

82. நீர்சிந்தும் கண்ணும் நிலைசிந்தும் நெஞ்சமும் நீணடையில்
சீர்சிந்து வாழ்க்கையும் தேன்சிந்தி வாடிய செம்மலர்போல்
கூர்சிந்து புந்தியும் கொண்டுநின் றேன்உட் குறைசிந்தும்வா
றோர்சிந்து போலருள் நேர்சிந்தன் ஏத்தும் உடையவனே.

83. கொடிகொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர்முகமும்
துடிகொண்ட கையும் பொடிகொண்ட மேனியும் தோலுடையும்
பிடிகொண்ட பாகமும் பேரருள் நோக்கமும் பெய்கழலும்
குடிகொண்ட நன்மனம் என்மனம் போற்குறை கொள்வதின்றே.

84. விதிக்கும் பதிக்கும் பதிநதி ஆர்மதி வேணிப்பதி
திதிக்கும் பதிக்கும் பதிமேற் கதிக்குந் திகழ்பதிவான்
துதிக்கும் பதிக்கும் பதிஓங்கு மாபதி சொற்கடந்த
பதிக்கும் பதிசிற் பதியெம் பதிநம் பசுபதியே.

85. எனையடைந் தாழ்த்திய துன்பச் சுமையை இறக்கெனவே
நினையடைந் தேன்அடி நாயேற் கருள நினைதிகண்டாய்
வினையடைந் தேமன வீறுடைந் தேநின்று வேற்றவர்தம்
மனையடைந் தேமனம் வாடல்உன் தொண்டர் மரபல்லவே.

86. வனம்போய் வருவது போலேவன் செல்வர் மனையிடத்தே
தினம்போய் வருமிச் சிறியேன் சிறுமைச் செயலதுபோய்ச்
சினம்போய்க் கொடும்பகைக் காமமும் போய்நின் திறநிகழ்த்தா
இனம்போய்க் கொடிய மனம்போய் இருப்பதென் றென்னரசே.

87. பெற்றா ளனையநின் குற்றேவல் செய்து பிழைக்கறியாச்
சிற்றாள் பலரினும் சிற்றா ளெனுமென் சிறுமைதவிர்த்
துற்றாள் கிலைஎனின் மற்றார் துணைஎனக் குன்கமலப்
பொற்றாள் அருட்புகழ்க் கற்றாய்ந்து பாடப் புரிந்தருளே.

88. அந்நாணை யாதுநஞ் சேற்றயன் மால்மனை யாதியர்தம்
பொன்னாணைக் காத்த அருட்கட லேபிறர் புன்மனைபோய்
இந்நாணை யாவகை என்னாணைக் காத்தருள் ஏழைக்குநின்
தன்னாணை ஐயநின் தாளாணை வேறு சரணில்லையே.

89. பவசாத னம்பெறும் பாதகர் மேவும்இப் பாரிடைநல்
சிவசாத னத்தரை ஏன்படைத் தாய்அத் திருவிலிகள்
அவசாத னங்களைக் கண்டிவ ருள்ளம் அழுங்கஎன்றோ
கவசா தனமெனக் கைம்மா னுரியைக் களித்தவனே.

90. நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே
ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற் றேன்எனை ஒப்பவரார்
வான்செய்த நான்முகத் தோனும் திருநெடு மாலுமற்றைத்
தேன்செய்த கற்பகத் தேவனும் தேவருஞ் செய்யரிதே.

91. உற்றா யினுமறைக் கோர்வரி யோய்எனை உற்றுப்பெற்ற
நற்றா யினும்இனி யானேநின் நல்லருள் நல்கில்என்னை
விற்றா யினுங்கொள வேண்டுகின் றேன்என் விருப்பறிந்தும்
சற்றா யினும்இரங் காதோநின் சித்தம் தயாநிதியே.

92. வான்மா றினுமொழி மாறாத மாறன் மனங்களிக்கக்
கான்மாறி யாடிய கற்பக மேநின் கருணையென்மேல்
தான்மா றினும்விட்டு நான்மாறி டேன்பெற்ற தாய்க்குமுலைப்
பான்மாறி னும்பிள்ளை பான்மாறு மோஅதில் பல்லிடுமே.

93. அன்பரி தாமனத் தேழையன் யான்துய ரால்மெலிந்தே
இன்பரி தாமிச் சிறுநடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன்
என்பரி தாப நிலைநீ அறிந்தும் இரங்கிலையேல்
வன்பரி தாந்தண் அருட்கட லேஎன்ன வாழ்வெனக்கே.

94. மைகண்ட கண்டமும் மான்கண்ட வாமமும் வைத்தருளில்
கைகண்ட நீஎங்கும் கண்கண்ட தெய்வம் கருதிலென்றே
மெய்கண்ட நான்மற்றைப் பொய்கண்ட தெய்வங்கள் மேவுவனோ
நெய்கண்ட ஊண்விட்டு நீர்கண்ட கூழுக்கென் நேடுவதே.

95. வேணிக்கு மேலொரு வேணி153 வைத் தோய்முன் விரும்பிஒரு
மாணிக்கு வேதம் வகுத்தே கிழிஒன்று வாங்கித்தந்த
காணிக்குத் தானரைக் காணிமட் டாயினும் காட்டுகண்டாய்
பாணிக்குமோ154 தரும் பாணி155 வந் தேற்றவர் பான்மைகண்டே.

96. மறைக்கொளித் தாய்நெடு மாற்கொளித் தாய்திசை மாமுகங்கொள்
இறைக்கொளித் தாய்இங் கதிலோர் பழியிலை என்றன்மனக்
குறைக்கொளித் தாலும் குறைதீர்த் தருளெனக் கூவிடும்என்
முறைக்கொளித் தாலும் அரசேநின் பால்பழி மூடிடுமே.

97. முன்மழை வேண்டும் பருவப் பயிர்வெயில் மூடிக்கெட்ட
பின்மழை பேய்ந்தென்ன பேறுகண் டாய்அந்தப் பெற்றியைப்போல்
நின்மழை போற்கொடை இன்றன்றி மூப்பு நெருங்கியக்கால்
பொன்மழை பேய்ந்தென்ன கன்மழை பேய்ந்தென்ன பூரணனே.

98. நீளா தரவுகொண் டென்குறை யாவும் நிகழ்த்தவும்நீ
கேளா தவன்என வாளா இருக்கின்ற கேண்மைஎன்னோ
சூளாத முக்கண் மணியே விடேல்உனைச் சூழ்ந்தஎன்னை
ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத் தழுத்தினுமே.

99. வளங்கன்று மாவனத் தீன்றதன் தாயின்றி வாடுகின்ற
இளங்கன்று போல்சிறு வாழ்க்கையில் நின்அருள் இன்றிஅந்தோ
உளங்கன்று நான்செய்வ தென்னே கருணை உதவுகண்டாய்
களங்கன்று பேரருட் காரென்று கூறும் களத்தவனே.

100. காற்றுக்கு மேல்விட்ட பஞ்சாகி உள்ளம் கறங்கச்சென்றே
சோற்றுக்கு மேற்கதி இன்றென வேற்றகந் தோறும்உண்போர்
தூற்றுக்கு மேல்பெருந் தூறிலை ஆங்கென் துயரமெனும்
சேற்றுக்கு மேல்பெருஞ் சேறிலை காண்அருட் செவ்வண்ணனே.

101. அந்தோ துயரில் சுழன்றாடும் ஏழை அவலநெஞ்சம்
சிந்தோத நீரில் சுழியோ இளையவர் செங்கைதொட்ட
பந்தோ சிறுவர்தம் பம்பர மோகொட்டும் பஞ்சுகொலோ
வந்தோ டுழலும் துரும்போஎன் சொல்வதெம் மாமணியே.

102. பொன்வச மோபெண்க ளின்வச மோகடற் பூவசமோ
மின்வச மோஎனும் மெய்வச மோஎன் விதிவசமோ
தன்வச மோமலந் தன்வச மோஎன் சவலைநெஞ்சம்
என்வச மோஇல்லை நின்வசம் நான்எனை ஏன்றுகொள்ளே.

103. நானடங் காதொரு நாட்செயும் குற்ற நடக்கைஎல்லாம்
வானடங் காதிந்த மண்ணடங் காது மதிக்குமண்டம்
தானடங் காதெங்குந் தானடங் காதெனத் தானறிந்தும்
மானடங் காட்டு மணிஎனை ஆண்டது மாவியப்பே.

104. பாம்பா யினும்உணப் பால்கொடுப் பார்வளர்ப் பார்மனைப்பால்
வேம்பாயி னும்வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக்கடாத்
` தாம்பா யினும்156 ஒரு தாம்பாயி னுங்கொடு தாம்பின்செல்வார்
தேம்பாய் மலர்க்குழற் காம்பாக என்னையும் சேர்த்துக்கொள்ளே.

105. நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கிட உப்பையும் நேடிச்செல்வோர்
பருப்புக்கு நெய்யும்ஒண் பாலுக்கு வாழைப் பழமுங்கொள்ளத்
தெருப்புக்கு வாரொடு சேர்கிலென் னாம்இச் சிறுநடையாம்
இருப்புக்கு வேண்டிய நான்சிவ யோகர்பின் எய்திலென்னே.

106. எம்மத மாட்டு மரியோய்என் பாவி இடும்பைநெஞ்சை
மும்மத யானையின் காலிட் டிடறினும் மொய்அனற்கண்
விம்மத மாக்கினும் வெட்டினும் நன்றுன்னை விட்ட அதன்
வெம்மத நீங்கலென் சம்மதங் காண்எவ் விதத்தினுமே.

107. கல்லாத புந்தியும் அந்தோநின் தாளில் கணப்பொழுதும்
நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீண்மதமும்
கொல்லாமல் கொன்றெனைத் தின்னாமல் தின்கின்ற கொள்கையைஇங்
கெல்லாம் அறிந்த உனக்கெளி யேனின் றிசைப்பதென்னே.

108. தெவ்வழி ஓடும் மனத்தேனுக் குன்றன் திருவுளந்தான்
இவ்வழி ஏகென் றிருவழிக் குள்விட்ட தெவ்வழியோ
அவ்வழி யேவழி செவ்வழி பாடநின் றாடுகின்றோய்
வெவ்வழி நீர்ப்புணைக் கென்னே செயல்இவ் வியனிலத்தே.

109. கண்ணார் நுதற்செங் கரும்பேநின் பொன்னருட் கான்மலரை
எண்ணாத பாவிஇங் கேன்பிறந் தேன்நினை ஏத்துகின்றோர்
உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சிசற்றும்
நண்ணாத நெஞ்சமும் கொண்டுல கோர்முன்னர் நாணுறவே.

110. அம்மா வயிற்றெரிக் காற்றேன் எனநின் றழுதலறச்
சும்மாஅச் சேய்முகந் தாய்பார்த் திருக்கத் துணிவள்கொலோ
இம்மா நிலத்தமு தேற்றாயி னுந்தந் திடுவள்முக்கண்
எம்மான்இங் கேழை அழுமுகம் பார்த்தும் இரங்கிலையே.

111. ஓயாக் கருணை முகிலே நுதற்கண் ஒருவநின்பால்
தோயாக் கொடியவெந் நெஞ்சத்தை நான்சுடு சொல்லைச்சொல்லி
வாயால் சுடினுந் தெரிந்தில தேஇனி வல்வடவைத்
தீயால் சுடினுமென் அந்தோ சிறிதுந் தெரிவதன்றே.

112. மாலறி யான்மல ரோன்அறி யான்மக வான்அறியான்
காலறி யான்மற்றை வானோர் கனவினுங் கண்டறியார்
சேலறி யாவிழி மங்கைபங் காநின் திறத்தைமறை
நாலறி யாஎனில் நானறி வேன்எனல் நாணுடைத்தே.

113. ஆறிட்ட வேணியும் ஆட்டிட்ட பாதமும் அம்மைஒரு
கூறிட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலமிக்க
நீறிட்ட மேனியும் நான்காணும் நாள்என் னிலைத்தலைமேல்
ஏறிட்ட கைகள்கண் டாணவப் பேய்கள் இறங்கிடுமே.

114. அல்லுண்ட கண்டத் தரசேநின் சீர்த்தி அமுதமுண்டோர்
கொல்லுண்ட தேவர்தங் கோளுண்ட சீரெனும் கூழுண்பரோ
சொல்லுண்ட157 வாயினர் புல்லுண்ப ரோஇன் சுவைக்கண்டெனும்
கல்லுண்ட பேர்கருங் கல்லுண்ப ரோஇக் கடலிடத்தே.

115. காரே எனுமணி கண்டத்தி னான்பொற் கழலையன்றி
யாரே துணைநமக் கேழைநெஞ் சேஇங் கிருந்துகழு
நீரே எனினுந் தரற்கஞ்சு வாரொடு நீயுஞ்சென்று
சேரேல் இறுகச் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.

116. வலைப்பட்ட மானென வாட்பட்ட கண்ணியர் மையலென்னும்
புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான்மதி போய்ப்புலம்ப
விலைப்பட்ட இம்மனம் அந்தோஇவ் வேழைக்கென் றெங்கிருந்து
தலைப்பட்ட தோஇதற் கென்செய்கு வேன்முக்கட் சங்கரனே.

117. குருந்தாமென் சோக மனமான பிள்ளைக் குரங்குக்கிங்கே
வருந்தா ணவமென்னு மானிடப் பேயொன்று மாத்திரமோ
பெருந்தா மதமென் றிராக்கதப் பேயும் பிடித்ததெந்தாய்
திருந்தா அதன்குதிப் பென்ஒரு வாய்கொண்டு செப்பரிதே.

118. பெண்மணி பாகப் பெருமணி யேஅருட் பெற்றிகொண்ட
விண்மணி யான விழிமணி யேஎன் விருப்புறுநல்
கண்மணி நேர்கட வுண்மணி யேஒரு கால்மணியைத்
திண்மணிக் கூடலில் விற்றோங்கு தெய்வ சிகாமணியே.

119. அலையெழுத் துந்தெறும் ஐந்தெழுத் தாலுன்னைஅர்ச்சிக்கின்றோர்
கலையெழுத் தும்புகழ் காலெழுத் திற்குக் கனிவிரக்கம்
இலையெழுத் தும்பிறப் பீடெழுத் துங்கொண்ட எங்கள்புழுத்
தலையெழுத் துஞ்சரி யாமோ நுதற்கண் தனிமுதலே.

120. ஆட்சிகண் டார்க்குற்ற துன்பத்தைத் தான்கொண் டருளளிக்கும்
மாட்சிகண் டாய்எந்தை வள்ளற் குணமென்பர் மற்றதற்குக்
காட்சிகண் டேனிலை ஆயினும் உன்னருட் கண்டத்திலோர்
சாட்சிகண் டேன்களி கொண்டேன் கருணைத் தடங்கடலே.

121. கண்கொண்ட நெற்றியும் கார்கொண்ட கண்டமும் கற்பளிக்கும்
பெண்கொண்ட பாகமும் கண்டேன்முன் மாறன் பிரம்படியால்
புண்கொண்ட மேனிப் புறங்கண்டி லேன்அப் புறத்தைக்கண்டால்
ஒண்கொண்ட கல்லும் உருகும்என் றோஇங் கொளித்தனையே.

122. வேய்க்குப் பொரும்எழில் தோளுடைத் தேவி விளங்குமெங்கள்
தாய்க்குக் கனிந்தொரு கூறளித் தோய்நின் தயவுமிந்த
நாய்க்குக் கிடைக்கும் எனஒரு சோதிடம் நல்கில்அவர்
வாய்க்குப் பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே.

123. காண்டத்தின் மேவும் உலகீர்இத் தேகம் கரும்பணைபோல்
நீண்டத்தி லென்ன நிலையல வேஇது நிற்றல்பசும்
பாண்டத்தில் நீர்நிற்றல் அன்றோ நமைநம் பசுபதிதான்
ஆண்டத்தில் என்ன குறையோநம் மேற்குறை ஆயிரமே.

124. வேணிக்கண் நீர்வைத்த தேவே மதுரை வியன்தெருவில்
மாணிக்கம் விற்றசெம் மாணிக்க மேஎனை வாழ்வித்ததோர்
ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின் செய்ய அடிமலர்க்குக்
காணிக்கை யாக்கிக்கொண் டாள்வாய் எனது கருத்தினையே.

125. மாகலை வாணர் பிறன்பால் எமக்கும் மனைக்கும்கட்ட
நீகலை தாஒரு மேகலை தாஉண நென்மலைதா
போகலை யாஎனப் பின்தொடர் வார்அவர் போல்மனனீ
ஏகலை ஈகலர் ஏகம்ப வாண ரிடஞ்செல்கவே.

126. ஊர்தரு வார்நல்ல ஊண்தரு வார்உடை யுந்தருவார்
பார்தரு வார்உழற் கேர்தரு வார்பொன் பணந்தருவார்
சோர்தரு வார்உள் ளறிவுகெ டாமல் சுகிப்பதற்கிங்
கார்தரு வார்அம்மை யார்தரு பாகனை யன்றிநெஞ்சே.

127. பண்செய்த சொன்மங்கை பாகாவெண் பாற்கடல் பள்ளிகொண்டோன்
திண்செய்த சக்கரங் கொள்வான் அருச்சனை செய்திட்டநாள்
விண்செய்த நின்னருட் சேவடி மேற்பட வேண்டியவன்
கண்செய்த நற்றவம் யாதோ கருத்தில் கணிப்பரிதே.

128. மாப்பிட்டு நேர்ந்துண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல்உன்வெண்
காப்பிட்டு மேற்பல பாப்பிட்ட மேனியைக் கண்டுதொழக்
கூப்பிட்டு நானிற்க வந்திலை நாதனைக் கூடஇல்லாள்
பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே.

129. என்மேற் பிழையிலை யானென்செய் கேன்என் இடத்திருந்தென்
சொன்மேற் கொளாதெனை இன்மேல் துரும்பெனச் சுற்றுநெஞ்சத்
தின்மேற் பிழையது புன்மேற் பனியெனச் செய்தொழிக்க
நின்மேற் பரம்விடை தன்மேற்கொண் டன்பர்முன் நிற்பவனே.

130. மைவிட்டி டாமணி கண்டாநின் தன்னை வழுத்தும்என்னை
நெய்விட்டி டாஉண்டி போல்இன்பி லான்மெய்ந் நெறியறியான்
பொய்விட்டி டான்வெம் புலைவிட்டி டான்மயல் போகமெலாம்
கைவிட்டி டான்எனக் கைவிட்டி டேல்வந்து காத்தருளே.

131. நல்லமு தம்சிவை தான்தரக் கொண்டுநின் நற்செவிக்குச்
சொல்லமு தந்தந்த எங்கள் பிரான்வளஞ் சூழ்மயிலை
இல்லமு தந்திகழ் பெண்ணாக என்பை எழுப்பியநாள்
சில்லமு தம்பெற்ற தேவரை வானஞ் சிரித்ததன்றே.

132. சொற்றுணைவேதியன் என்னும்பதிகச் சுருதியைநின்
பொற்றுணை வார்கழற் கேற்றியப் பொன்னடிப் போதினையே
நற்றுணை யாக்கரை ஏறிய புண்ணிய நாவரசைக்
கற்றுணை யாதிந்தக் கற்றுணை யாமென் கடைநெஞ்சமே.

133. சடையவ நீமுன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும்
கடையவ னேன்செயுங் கைம்மா றறிந்திலன் கால்வருந்தி
நடையுற நின்னைப் பரவைதன் பாங்கர் நடத்திஅன்பர்
இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான்வெளி யிட்டதற்கே.

134. திருவாத வூரெம் பெருமான் பொருட்டன்று தென்னன்முன்னே
வெருவாத வைதிகப் பாய்பரி மேற்கொண்டு மேவிநின்ற
ஒருவாத கோலத் தொருவாஅக் கோலத்தை உள்குளிர்ந்தே
கருவாத நீங்கிடக் காட்டுகண் டாய்என் கனவினிலே.

135. சீர்தரு நாவுக் கரையரைப் போலிச் சிறியனும்ஓர்
கார்தரு மாயைச் சமணான் மனக்கருங் கல்லிற்கட்டிப்
பார்தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டுழன்றே
ஏர்தரும் ஐந்தெழுத் தோதுகின் றேன்கரை ஏற்றரசே.

136. தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டுவரும்
ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும்விட்ட
நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள்
ஆக்கமும் நின்பதத் தன்பும் தருக அருட்சிவமே.

137. பொய்வந்த வாயும் புலைவந்த செய்கையும் புன்மையெல்லாம்
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனிநற் கனிவுடன்யான்
மெய்வந்த வாயும் விதிவந்த செய்கையும் வீறன்பினால்
தைவந்த நெஞ்சமும் காண்பதென் றோசெஞ் சடைக்கனியே.

138. கங்கைகொண் டாய்மலர் வேணியி லேஅருட் கண்ணிமலை
மங்கைகொண் டாய்இடப் பாகத்தி லேஐய மற்றுமொரு
நங்கைகொண் டால்எங்கு கொண்டருள் வாயென்று நண்ணுமன்பர்
சங்கைகொண் டால்அதற் கென்சொல்லு வாய்முக்கட் சங்கரனே.

139. வாட்கொண்ட கண்ணியர் மாயா விகார வலைபிழைத்துன்
தாட்கொண்ட நீழலில் சார்ந்திடு மாறென் றனக்கருள்வாய்
கீட்கொண்ட கோவணப் பேரழ காஎனைக் கேதமற
ஆட்கொண்ட நீஇன்று வாளா இருப்ப தழகல்லவே.

140. வீட்டுத் தலைவநின் தாள்வணங் கார்தம் விரிதலைசும்
மாட்டுத் தலைபட்டி மாட்டுத் தலைபுன் வராகத்தலை
ஆட்டுத் தலைவெறி நாய்த்தலை பாம்பின் அடுந்தலைகற்
பூட்டுத் தலைவெம் புலைத்தலை நாற்றப் புழுத்தலையே.

141. தெண்­ர் முடியனைக் காணார்தங் கண்இருள் சேர்குருட்டுக்
கண்­ர் சொரிந்தகண் காசக்கண் புன்முலைக் கண்நகக்கண்
புண்­ர் ஒழுகுங் கொடுங்கண் பொறாமைக்கண் புன்கண்வன்கண்
மண்­ர்மை யுற்றகண் மாமணி நீத்தகண் மாலைக்கண்ணே.

142. கண்ணுத லான்புகழ் கேளார் செவிபொய்க் கதைஒலியும்
அண்ணுற மாதரு மைந்தருங் கூடி அழுமொலியும்
துண்ணெனுந் தீச்சொல் ஒலியும்அவ் வந்தகன் தூதர்கண்மொத்
துண்ணுற வாவென் றுரப்பொலி யும்புகும் ஊன்செவியே.

143. மணிகொண்ட கண்டனை வாழ்த்தார்தம் வாய்த்தெரு மண்ணுண்டவாய்
பிணிகொண்ட வாய்விடப் பிச்சுண்ட வாய்வரும் பேச்சற்றவாய்
துணிகொண்ட வாயனற் சூடுண்ட வாய்மலஞ் சோர்ந்திழிவாய்
குணிகொண்ட உப்பிலிக் கூழுண்ட வாய்எனக் கூறுபவே.

144. சகமிலை யேஎன் றுடையானை எண்ணலர் தங்கள்நெஞ்சம்
சுகமிலை யேஉணச் சோறிலை யேகட்டத் தூசிலையே
அகமிலை யேபொரு ளாவிலை யேவள்ள லாரிலையே
இகமிலை யேஒன்றும் இங்கிலை யேஎன் றிரங்குநெஞ்சே.

145. பொங்கரும் பேர்முலை மங்கைக் கிடந்தந்த புத்தமுதே
செங்கரும் பேநறுந் தேனே மதுரச் செழுங்கனியே
திங்களுங் கங்கையுஞ் சேர்ந்தொளிர் வேணிச் சிவக்கொழுந்தே
எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே.

146. வில்லைப்பொன் னாக்கரங் கொண்டோய்வன்தொண்டர் விரும்புறச்செங்
கல்லைப்பொன் னாக்கிக் கொடுத்தோய்நின் பாதங் கருத்தில்வையார்
புல்லைப்பொன் னாக்கொளும் புல்லர்கள் பாற்சென்று பொன்னளிக்க
வல்லைப்பொன் னார்புய என்பார் இஃதென்சொல் வாணர்களே.

147. கூத்துடை யாய்என் னுடையாய்முத் தேவரும் கூறுகின்ற
ஏத்துடை யாய்அன்பர் ஏத்துடை யாய்என்றன் எண்மைமொழிச்
சாத்துடை யாய்நின் தனக்கே பரம்எனைத் தாங்குதற்கோர்
வேத்துடை யார்மற் றிலைஅருள் ஈதென்றன் விண்ணப்பமே.

148. வெப்பிலை யேஎனும் தண்விளக் கேமுக்கண் வித்தகநின்
ஒப்பிலை யேஎனும் சீர்புக லார்புற்கை உண்ணுதற்கோர்
உப்பிலை யேபொரு ளொன்றிலை யேஎன் றுழல்பவர்மேல்
தப்பிலை யேஅவர் புன்தலை ஏட்டில் தவமிலையே.

149. எனைப்பெற்ற தாயினும் அன்புடை யாய்எனக் கின்பநல்கும்
உனைப்பெற்ற உள்ளத் தவர்மலர்ச் சேவடிக் கோங்கும்அன்பு
தனைப்பெற்ற நன்மனம் தாம்பெற்ற மேலவர் சார்பைப்பெற்றால்
வினைப்பெற்ற வாழ்வின் மனைப்பெற்றம் போல மெவிவதின்றே.

150. நிறைமதி யாளர் புகழ்வோய் சடையுடை நீண்முடிமேல்
குறைமதி தானொன்று கொண்டனை யேஅக் குறிப்பெனவே
பொறைமதி யேன்றன் குறைமதி தன்னையும் பொன்னடிக்கீழ்
உறைமதி யாக்கொண் டருள்வாய் உலகம் உவப்புறவே.

151. துடிவைத்த செங்கை அரசேநல் லூரில்நின் தூமலர்ப்பொன்
அடிவைத்த போதெங்கள் அப்பர்தம் சென்னி யதுகுளிர்ந்தெப்
படிவைத்த தோஇன்ப மியான்எணுந் தோறும்இப் பாவிக்குமால்
குடிவைத்த புன்தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே.

152. ஒருமுடி மேல்பிறை வைத்தோய் அரிஅயன் ஒண்மறைதம்
பெருமுடி மேலுற வேண்ட வராதுனைப் பித்தனென்ற
மருமுடி யூரன் முடிமேல் மறுப்பவும் வந்ததவர்
திருமுடி மேலென்ன ஆசைகண் டாய்நின் திருவடிக்கே.

153. வேல்கொண்ட கையுமுந் நு‘ல்கொண்ட மார்பமும் மென்மலர்ப்பொற்
கால்கொண்ட ஒண்கழற் காட்சியும் பன்னிரு கண்ணும்விடை
மேல்கொண்ட செஞ்சுடர் மேனியும் சண்முக வீறுங்கண்டு
மால்கொண்ட நெஞ்சம் மகிழ்வதெந் நாள்என்கண் மாமணியே.

154. விண்பூத்த கங்கையும் மின்பூத்த வேணியும் மென்முகமும்
கண்பூத்த நெற்றியும் பெண்பூத்த பாகமும் கார்மிடறும்
தண்பூத்த பாதமும் பொன்பூத்த மேனியும் சார்ந்துகண்டே
மண்பூத்த வாழ்க்கையை விண்பூத்த பூவின் மதிப்பதென்றே.

155. தண்மதி யோஅதன் தண்ணமு தோஎனச் சார்ந்திரு­த்
துண்மதி யோர்க்கின் புதவுநின் பேரருள் உற்றிடவே
எண்மதி யோடிச்சை எய்தா தலையுமென் ஏழைமதி
பெண்மதி யோஅன்றிப் பேய்மதி யோஎன்ன பேசுவதே.

156. பிட்டுக்கும் வந்துமுன் மண்சுமந் தாயென்பர் பித்தனென்ற
திட்டுக்கும் சீரருள் செய்தளித் தாயென்பர் தீவிறகுக்
கட்டுக்கும் பொன்முடி காட்டிநின் றாயென்பர் கண்டிடஎன்
மட்டுக்கும் வஞ்சகத் தெய்வமென் கோமுக்கண் மாணிக்கமே.

157. மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட வாழ்வின் மதிமயங்கிக்
கையிட்ட நானும்உன் மெய்யிட்ட சீரருள் காண்குவனோ
பையிட்ட பாம்பணி யையிட்ட மேனியும் பத்தருள்ள
மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட வேலுங்கொள் முன்னவனே.

158. தவமே புரியும் பருவமி லேன்பொய்ச் சகநடைக்கண்
அவமே புரியும் அறிவிலி யேனுக் கருளுமுண்டோ
உவமேய மென்னப்ப டாதெங்கு மாகி ஒளிர்ஒளியாம்
சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின் சித்தந் தெரிந்திலனே.

159. மட்டுண்ட கொன்றைச் சடையர சேஅன்று வந்தியிட்ட
பிட்டுண்ட பிச்சைப் பெருந்தகை யேகொடும் பெண்மயலால்
கட்டுண்ட நான்சுகப் பட்டுண்டு வாழ்வன்இக் கன்மனமாம்
திட்டுண்ட பேய்த்தலை வெட்டுண்ட நாளில்என் தீமையற்றே.

160. ஆட்டுக்குக் காலெடுத் தாய்நினைப் பாடலர் ஆங்கியற்றும்
பாட்டுக்குப் பேரென்கொல் பண்ணென்கொல் நீட்டியப் பாட்டெழுதும்
ஏட்டுக்கு மையென்கொல் சேற்றில் உறங்க இறங்குங்கடா
மாட்டுக்கு வீடென்கொல் பஞ்சணை என்கொல் மதித்திடினே.

161. ஒப்பற்ற முக்கட் சுடரேநின் சீர்த்தி உறாதவெறும்
துப்பற்ற பாட்டில் சுவையுள தோஅதைச் சூழ்ந்துகற்றுச்
செப்பற்ற வாய்க்குத் திருவுள தோசிறி தேனும்உண்டேல்
உப்பற்ற புன்கறி உண்டோர்தந் நாவுக் குவப்புளதே.

162. சேல்வருங் கண்ணி இடத்தோய்நின் சீர்த்தியைச் சேர்த்தியந்த
நால்வரும் செய்தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச்சற்றே
கால்வரும் ஆயினும் இன்புரு வாகிக் கனிமனம்அப்
பால்வரு மோஅதன் பாற்பெண் களைவிட்டுப் பார்க்கினுமே.

163. கார்முக மாகப்பொற் கல்வளைத் தோய்இக் கடையவனேன்
சோர்முக மாகநின் சீர்முகம் பார்த்துத் துவளுகின்றேன்
போர்முக மாகநின் றோரையும் காத்தநின் பொன்னருள்இப்
பார்முக மாகஎன் ஓர்முகம் பார்க்கப் பரிந்திலதே.

164. வான்வளர்த் தாய்இந்த மண்வளர்த் தாய்எங்கும் மன்னுயிர்கள்
தான்வளர்த் தாய்நின் தகைஅறி யாஎன் றனைஅரசே
ஏன்வளர்த் தாய்கொடும் பாம்பையெல் லாந்தள் ளிலைவளர்த்தாய்
மான்வளர்த் தாய்கரத் தார்நினைப் போல வளர்ப்பவரே.

165. அற்கண்டம் ஓங்கும் அரசேநின் றன்அடி யார்மதுரச்
சொற்கண்ட போதும்என் புற்கண்ட நெஞ்சம் துணிந்துநில்லா
திற்கண்ட மெய்த்தவர் போலோடு கின்ற தெறிந்ததுதீங்
கற்கண் டெனினும்அக் கற்கண்ட காக்கைநிற் காதென்பரே.

166. சொல்லுகின் றோர்க்கமு தம்போல் சுவைதரும் தொல்புகழோய்
வெல்லுகின் றோரின்றிச் சும்மா அலையுமென் வேடநெஞ்சம்
புல்லுகின் றோர்தமைக் கண்டால்என் னாங்கொல் புகல்வெறும்வாய்
மெல்லுகின் றோர்க்கொரு நெல்லவல் வாய்க்கில் விடுவரன்றே.

167. சீரிடு வார்பொருட் செல்வர்க்க லாமல்இத் தீனர்கட்கிங்
காரிடு வார்பிச்சை ஆயினும் பிச்சன் அசடன்என்றே
பேரிடு வார்வம்புப் பேச்சிடு வார்இந்தப் பெற்றிகண்டும்
போரிடு வார்நினைப் போற்றார்என் னேமுக்கட் புண்ணியனே.

168. சேலுக்கு நேர்விழி மங்கைபங் காஎன் சிறுமதிதான்
மேலுக்கு நெஞ்சையுட் காப்பது போல்நின்று வெவ்விடய
மாலுக்கு வாங்கி வழங்கவுந் தான்சம் மதித்ததுகாண்
பாலுக்குங் காவல்வெம் பூனைக்குந் தோழன்என் பார்இதுவே.

169. இணையேதும் இன்றிய தேவே கனல்இனன் இந்தெனுமுக்
கணையே கொளும்செங் கரும்பே பிறவிக் கடல்கடத்தும்
புணையே திருவருட் பூரண மேமெய்ப் புலமளிக்கும்
துணையேஎன் துன்பந் துடைத்தாண்டு கொள்ளத் துணிந்தருளே.

170. நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி லாதன்பில் நீண்டவன்போல்
புலைகாட் டியமனத் தேன்கொண்ட வேடம் புனைஇடைமேல்
கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை காட்டிப்புன் கந்தைசுற்றி
முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம் காட்டு முறைமையன்றே.

171. விடநாகப் பூணணி மேலோய்என் நெஞ்சம் விரிதல்விட்டென்
உடனாக மெய்அன்பு ளூற்றாக நின்னரு ளுற்றிடுதற்
கிடனாக மெய்ந்நெறிக் கீடாகச் செய்குவ திங்குனக்கே
கடனாக நிற்பது கண்டேன்பின் துன்பொன்றுங் கண்டிலனே.

172. நயப்படும் ஓர்நின் அருளெனக் கின்றெனில் நாய்மனமென்
வயப்படு மோதுயர் மண்படு மோநல்ல வாழ்வைஎன்னால்
செயப்படு மோகுணம் சீர்ப்படு மோபவம் சேரச்சற்றும்
பயப்படு மோமலம் பாழ்படு மோஎம் பசுபதியே.

173. சோபங்கண் டார்க்கருள் செய்வோய் மதிக்கன்றிச் சூழ்ந்திடுவெந்
தீபங்கண் டாலும் இருள்போம்இவ் வேழை தியங்கும்பரி
தாபங்கண் டாய்அருள் செய்யாதென் குற்றந் தனைக்குறித்துக்
கோபங்கண் டாலுநன் றையாஎன் துன்பக் கொதிப்பறுமே.

174. எல்லா முடைய இறையவ னேநினை ஏத்துகின்ற
நல்லார் தமக்கொரு நாளேனும் பூசை நயந்தியற்றிச்
சொல்லால் அவர்புகழ் சொல்லாதிவ் வண்ணம் துயர்வதற்கென்
கல்லாமை ஒன்றுமற் றில்லாமை ஒன்றிரு காரணமே.

175. பிறையாறு கொண்டசெவ் வேணிப் பிரான்பதப் பேறடைவான்
மறையாறு காட்டுநின் தண்ணரு ளேயன்றி மாயைஎன்னும்
நிறையாறு சூழுந் துரும்பாய்ச் சுழலும்என் நெஞ்சினுள்ள
குறையாறு தற்கிடம் வேறில்லை காண்இக் குவலையத்தே.

176. மாலறி யாதவன் அன்றேஅத் தெய்வ வரதனுநின்
காலறி யாதவன் என்றால்அக் காலைஎக் காலைஎமைப்
போலறி யாதவர் காண்பார்முற் கண்டமெய்ப் புண்ணியர்தம்
பாலறி யாதவன் நானிது கேட்டுணர் பாலனன்றே.

177. ஒன்றேஎன் ஆருயிர்க் கோருற வேஎனக் கோரமுதே
நன்றேமுக் கண்ணுடை நாயக மேமிக்க நல்லகுணக்
குன்றே நிறைஅருட் கோவே எனது குலதெய்வமே
மன்றே ஒளிர்முழு மாணிக்க மேஎனை வாழ்விக்கவே.

178. தாழ்வேதும் இன்றிய கோவே எனக்குத் தனித்தபெரு
வாழ்வே நுதற்கண் மணியேஎன் உள்ள மணிவிளக்கே
ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை இடுங்குடும்பப்
பாழ்வே தனைப்பட மாட்டேன் எனக்குன் பதமருளே.

179. வண்டுகொண் டார்நறுங் கொன்றையி னான்றன் மலரடிக்குத்
தொண்டுகொண் டார்தஞ் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலிற்றள்ளும்
பெண்டுகொண் டார்தம் துயருக்கும் ஒப்பின்று பேசில்என்றே
கண்டுகொண் டாய்இனி நெஞ்சேநின் உள்ளக் கருத்தெதுவே.

180. மலங்கவிழ்ந் தார்மனம் வான்கவிழ்ந் தாலும்அவ் வான்புறமாம்
சலங்கவிழ்ந் தாலும் சலியாதென் புன்மனந் தான்கடலில்
கலங்கவிழ்ந் தார்மனம் போலே சலிப்பது காண்குடும்ப
விலங்கவிழ்ந் தாலன்றி நில்லாதென் செய்வல் விடையவனே.

181. மைகொடுத் தார்நெடுங் கண்மலை மானுக்கு வாய்ந்தொருபால்
மெய்கொடுத் தாய்தவர் விட்டவெம் மானுக்கு மேவுறஓர்
கைகொடுத் தாய்மயல் கண்ணியில் வீழ்ந்துட் கலங்குறும்என்
கொய்கொடுத் தாழ்மன மானுக்குக் காலைக் கொடுத்தருளே.

182. உடம்பார் உறுமயிர்க் கால்புழை தோறனல் ஊட்டிவெய்ய
விடம்பாச் சியஇருப் பூசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும்இத்
தடம்பார் சிறுநடைத் துன்பஞ்செய் வேதனைத் தாங்கரிதென்
கடம்பாநற் பன்னிரு கண்ணா இனிஎனைக் காத்தருளே.

183. மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையி னாலும்அவ் வாழ்க்கைக்குற்ற
பெண்ணாலும் நொந்துவந் தாரை எலாம்அருட் பேறெனுமுக்
கண்ணாலும் பார்த்தைந்து கையாலும் ஈயும் கணபதிநின்
பண்ணாலும் மாமறை மேற்றாளை என்னுட் பதித்தருளே.

184. வானாள மாலயன் வாழ்வாள அன்றிஇம் மண்முழுதும்
தானாள நின்பதம் தாழ்பவர் தாழ்கஒண் சங்கையங்கை
மானாள மெய்யிடந் தந்தோய்துன் பற்ற மனமதொன்றே
நானாள எண்ணிநின் தாளேத்து கின்றனன் நல்குகவே.

185. ஈடறி யாதமுக் கண்ணாநின் அன்பர் இயல்பினைஇந்
நாடறி யாதுன் அருளன்றி ஊண்சுவை நாவையன்றி
மேடறி யாதுநற் பாட்டைக்கற் றோரன்றி மேற்சுமந்த
ஏடறி யாதவை யேனறி யாஎன் றிகழ்வரன்றே.

186. சூடுண்ட பூஞைக்குச் சோறுண்ட வாய்பின் துடிப்பதன்றி
ஊடுண்ட பாலிட்ட ஊண்கண்ட தேனும் உணத்துணியா
தீடுண்ட என்மனம் அந்தோ துயரில் இடியுண்டும்இவ்
வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்ட தால்எம் விடையவனே.

187. கரங்காட்டி மையிட்ட கண்காட்டி என்பெருங் கன்மநெஞ்சக்
குரங்காட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டுகல்லார்
உரங்காட்டிக் கோலொன் றுடனீட்டிக் காட்டி உரப்பிஒரு
மரங்காட் டியகுரங் காட்டுகின் றோரென் மணிகண்டனே.

188. களங்கனி போல்மணி கண்டாநின் பொற்கழல் காணற்கென்சிற்
றுளங்கனி யாதுநின் சீர்கேட் கினும்அன் புறஉருகா
வளங்கனி காமஞ் சிறவாமல் சிற்றில் வகுத்துழலும்
இளங்கனி போல்நின்ற தென்செய்கு வேன்எம் இறையவனே.

189. மாமத்தி னால்சுழல் வெண்தயிர் போன்று மடந்தையர்தம்
காமத்தி னால்சுழல் என்றன்நெஞ் சோஉன்றன் காலைஅன்பாம்
தாமத்தி னால்தளை யிட்டநெஞ் சோஇத் தகைஇரண்டின்
நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கெது நல்லநெஞ்சே.

190. ஏற்றிலிட் டார்கொடி கொண்டோய் விளக்கினை ஏற்றபெருங்
காற்றிலிட் டாலும் இடலாம்நெல் மாவைக் கலித்திடுநீர்
ஆற்றிலிட் டாலும் பெறலாம்உட் காலை அடுங்குடும்பச்
சேற்றிலிட் டால்பின் பரிதாம் எவர்க்கும் திருப்புவதே.

191. தேரோங்கு காழிக்கண் மெய்ஞ்ஞானப்பாலுண்ட செம்மணியைச்
சீரோங்கு முத்துச் சிவிகையின் மேல்வைத்த தேவஉன்றன்
பேரோங்கும் ஐந்தெழுத் தன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
ஏரோங்கு காப்பைத் திருநெடு மாலுக்கும் ஈந்ததுவே.

192. வேதனை யாமது சூதனை யாஎன்று வேதனையால்
போதனை யாநின் றுனைக்கூவு மேழையைப் போதனைகேள்
வாதனை யாதிங்கு வாதனை யாவென்றுன் வாய்மலரச்
சோதனை யாயினுஞ் சோதனை யாசிற் சுகப்பொருளே.

193. இன்பற்ற இச்சிறு வாழ்க்கையி லேவெயி லேறவெம்பும்
என்பற்ற புன்புழுப் போல்தளர் ஏழை எனினுமிவன்
அன்பற்ற பாவிஎன் றந்தோ எனைவிடில் ஐயவையத்
தென்பற்ற தாகமற் றில்லைகண் டாய்எனை ஏன்றுகொள்ளே.

194. களங்கொண்ட ஓர்மணிக் காட்சியும் முச்சுடர்க் கண்அருளும்
வளங்கொண்ட தெய்வத் திருமுக மாட்சியும் வாய்ந்தபரி
மளங்கொண்ட கொன்றைச் சடையும்பொற் சேவடி மாண்பும்ஒன்ற
உளங்கொண்ட புண்ணியர் அன்றோஎன் தன்னை உடையவரே.

195. காவிக்கு நேர்மணி கண்டாவண் டார்குழல் கற்பருளும்
தேவிக்கு வாமங் கொடுத்தோய்நின் மாமலர்ச் சேவடிப்பால்
சேவிக்கும் சேவகஞ் செய்வோரை ஆயினுஞ் சேவிக்கஇப்
பாவிக்கு வாய்க்கில்என் ஆவிக்கு நீண்ட பயனதுவே.

196. கொங்கிட்ட கொன்றைச் சடையும்நின் னோர்பசுங் கோமளப்பெண்
பங்கிட்ட வெண்திரு நீற்றொளி மேனியும் பார்த்திடில்பின்
இங்கிட்ட மாயையை எங்கிட்ட வாஎன் றிசைப்பினும்போய்ச்
சங்கிட்ட ஓசையில் பொங்கிட்ட வாய்கொடு தாண்டிடுமே.

197. வெம்பெரு மானுக்குக் கைகொடுத் தாண்ட மிகுங்கருணை
எம்பெரு மானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்பிடியார்
தம்பெரு மானுக்கும் சார்மலை மானுக்கும் சாற்றுமைங்கைச்
செம்பெரு மானுக்கும் எந்தாய்க்கும் நான்பணி செய்யச்செய்யே.

198. சாற்றவ னேகநன் னாவுள்ள தாயினும் சாற்றரிதாம்
வீற்றவ னேவெள்ளி வெற்பவ னேஅருள் மேவியவெண்
நீற்றவ னேநின் னருள்தர வேண்டும் நெடுமுடிவெள்
ஏற்றவ னேபலி ஏற்றவனே அன்பர்க் கேற்றவனே.

199. பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம்
திதியே சரணம் சிவமே சரணம் சிவமுணர்ந்தோர்
கதியே சரணம்என் கண்ணே சரணம்முக் கட்கருணா
நிதியே சரணம் சரணம்என் பால்மெய்ந் நிலையருளே.

200. என்னுற வேஎன் குருவேஎன் உள்ளத் தெழும்இன்பமே
என்னுயி ரேஎன்றன் அன்பே நிலைபெற்ற என்செல்வமே
என்னறி வேஎன்றன் வாழ்வேஎன் வாழ்வுக் கிடுமுதலே
என்னர சேஎன் குலதெய்வ மேஎனை ஏன்றுகொள்ளே.

201. கான்போல் இருண்டஇவ் வஞ்சக வாழ்க்கையில் கன்னெஞ்சமே
மான்போல் குதித்துக்கொண் டோடேல் அமுத மதிவிளங்கும்
வான்போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச்செந்
தேன்போல் இனிக்கும் சிவாய நமஎனச் சிந்தைசெய்யே.

202. வேதனென் கோதற வேண்டுமென் கோஎன விண்ணப்பஞ்செய்
பாதனென் கோகடற் பள்ளிகொண் டான்தொழும் பண்பன்என்கோ
நாதனென் கோபர நாதனென் கோஎங்கள் நம்பிக்குநல்
தூதனென் கோஅவன் தோழனென் கோநினைத் தூய்மணியே.

203. இயங்கா மனமும் கயங்கா நிலையும் இகபரத்தே
மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்தருள்வாய்
வயங்கா நிலத்தின் முயங்கா உயர்தவர் வாழ்த்துகின்ற
புயங்கா துதித்தற் குயங்கா தவருட் புகுந்தவனே.

204. சிவசங்க ராசிவ யோகா சிவகதிச் சீரளிக்கும்
சிவசம்பு வேசிவ லோகா சிவாநந்தச் செல்வநல்கும்
சிவசுந்த ராசிவ போகா சிவாகமச் செந்நெறிசொல்
சிவபுங்க வாசிவ ஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே.

205. மதிதத்து வாந்த அருட்சிவ மேசின் மயசிவமே
துதிசித் தெலாம்வல்ல மெய்ச்சிவ மேசிற் சுகசிவமே
கதிநித்த சுத்தச் சிவமே விளங்குமுக் கட்சிவமே
பதிசச்சி தாநந்த சிற்சிவ மேஎம் பரசிவமே.

206. கடும்புல வேடர்கள் ஓரைவர் இந்தியக் கள்வரைவர்
கொடுங்கர ணத்துட்டர் நால்வர்கள் வன்மலக் கோளரைவர்
அடும்படை கோடிகொண் டுற்றார்மற் றேழையன் யானொருவன்
இடும்படை யாதுமி லேன்வெல்வ தெங்ஙன் இறையவனே.

207. இடைக்கொடி வாமத் திறைவாமெய்ஞ் ஞானிகட் கின்பநல்கும்
விடைக்கொடி ஏந்தும் வலத்தாய்நின் நாமம் வியந்துரையார்
கடைக்கொடி போலக் கதறுகின் றார்பொய்க் கதையவர்தாம்
புடைக்கொடி யாலன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே.

208. உருமத்தி லேபட்ட புன்புழுப் போல்இவ் உலகநடைக்
கருமத்தி லேபட்ட என்மனந் தான்நின் கழலடையும்
தருமத்தி லேபட்ட தின்றேஎன் றெண்ணுந் தனையுமந்தோ
மருமத்தி லேபட்ட வாளியைப் போன்று வருத்துவதே.

209. என்னிறை வாஇமை யோரிறை வாமறை யின்முடிபின்
முன்னிறை வாமலை மின்னிறை வாமலர் முண்டகத்தோன்
தன்னிறை வாதிதித் தானிறை வாமெய்த் தபோதனருள்
மன்னிறை வாஇங்கு வாஎன் றெனக்குநல் வாழ்வருளே.

210. போற்றிஎன் ஆவித் துணையேஎன் அன்பில் புகுஞ்சிவமே
போற்றிஎன் வாழ்வின் பயனேஎன் இன்பப் புதுநறவே
போற்றிஎன் கண்ணுண் மணியேஎன் உள்ளம் புனைஅணியே
போற்றிஎன் ஓர்பெருந் தேவே கருணை புரிந்தருளே.

211. கஞ்சத்தி லேர்முக மஞ்சத்தி லேர்நடைக் கன்னியர்கண்
நஞ்சத்தி லேஅவர் வஞ்சத்தி லேபட்டு நாணுறும்புன்
நெஞ்சத்தி லேஅதன் தஞ்சத்தி லேமுக் கணித்தஎன்போல்
பஞ்சத்தி லேபிர பஞ்சத்தி லேஉழப் பார்எவரே.

212. நான்முகத் தோனும் திருநெடு மாலுமெய்ஞ் ஞானமென்னும்
வான்முகக் கண்கொண்டு காணாமல் தம்உரு மாறியும்நின்
தேன்முகக் கொன்றை முடியும்செந் தாமரைச் சேவடியும்
ஊன்முகக் கண்கொண்டு தேடிநின் றார்சற் றுணர்விலரே.

213. இருவர்க் கறியப் படாதெழுந் தோங்கிநின் றேத்துகின்றோர்
கருவர்க்க நீக்கும் கருணைவெற் பேஎன் கவலையைஇங்
கொருவர்க்கு நான்சொல மாட்டேன் அவரென் னுடையவரோ
வெருவற்க என்றெனை ஆண்டருள் ஈதென்றன் விண்ணப்பமே.

214. ஒண்ணுதல் ஏழை மடவார்தம் வாழ்க்கையின் உற்றிடினும்
பண்ணுத லேர்மறை ஆயிரஞ் சூழுநின் பாதத்தையான்
எண்ணுத லேதொழி லாகச்செய் வித்தென்னை ஏன்றுகொள்வாய்
கண்ணுத லேகரு ணைக்கட லேஎன் கருத்திதுவே.

215. தளைக்கின்ற மாயக் குடும்பப் பெருந்துயர் தாங்கிஅந்தோ
இளைக்கின்ற ஏழைக் கிரங்குகண் டாய்சிறி தேஇறகு
முளைக்கின்ற போதறுப் பார்போல்நின் னாம மொழிந்திடுங்கால்
வளைக்கின்ற மாயைக்கிங் காற்றேன்முக் கண்ணுடை மாமணியே.

216. மஞ்சடை வான நிறத்தோன் அயன்முதல் வானவர்க்கா
நஞ்சடை யாள மிடுமிடற் றோய்கங்கை நண்ணுகின்ற
செஞ்சடை யாய்நின் திருப்பெய ராகச் சிறந்தஎழுத்
தஞ்சடை யார்கண்கள் பஞ்சடை யாமுன் னறிவிலரே.

217. இலங்கா புரத்தன் இராக்கதர் மன்னன் இராவணன்முன்
மலங்காநின் வெள்ளி மலைக்கீ ழிருந்து வருந்தநின்சீர்
கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த
நலங்காணின் தன்மைஇன் றென்னள வியாண்டையின் நண்ணியதே.

218. உடையென்றும் பூணென்றும் ஊணென்றும் நாடி உழன்றிடும்இந்
நடையென்றும் சஞ்சலஞ் சஞ்சலங் காணிதி னான்சிறியேன்
புடையென்று வெய்ய லுறும்புழுப் போன்று புழுங்குகின்றேன்
விடையென்று மாலறங் கொண்டோயென் துன்பம் விலக்குகவே.

219. அருள்அர சேஅருட் குன்றேமன் றாடும் அருளிறையே
அருள்அமு தேஅருட் பேறே நிறைந்த அருட்கடலே
அருள்அணி யேஅருட் கண்ணேவிண் ணோங்கும் அருள்ஒளியே
அருள்அற மேஅருட் பண்பேமுக் கண்கொள் அருட்சிவமே.

220. நிலையறி யாத குடும்பத் துயரென்னும் நீத்தத்திலே
தலையறி யாது விழுந்தேனை ஆண்டருள் தானளிப்பாய்
அலையறி யாத கடலேமுக் கண்கொண்ட ஆரமுதே
விலையறி யாத மணியே விடேலிதென் விண்ணப்பமே.

221. மெய்யகத் தேகணப் போதும் விடாது விரும்புகின்றோர்
கையகத் தேநின் றொளிர்கனி யேநுதற் கட்கரும்பே
வையகத் தேநினை அல்லாமல் நற்றுணை மற்றிலைஇப்
பொய்யகத் தேன்செயும் தீங்கா யிரமும் பொறுத்தருளே.

222. முலைக்கலங் கார மிடுமட வார்மயல் மூடிஅவர்
தலைக்கலங் கார மலர்சூடு வார்நின் றனைவழுத்தார்
இலைக்கலங் காரவ் வியமன்வந் தாலென் இசைப்பர்வெள்ளி
மலைக்கலங் கார மணியேமுக் கண்கொண்ட மாமருந்தே.

223. புரிகின்ற வீட்டகம் போந்தடி பட்டுப் புறங்கடையில்
திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம்என் பாவிச் சிறுபிழைப்பைச்
சொரிகின்ற புண்ணில் கனலிடல் போலெணுந் தோறுநெஞ்சம்
எரிகின்ற தென்செய்கு வேன்பிறை வார்சடை என்னமுதே.

224. மனக்கேத மாற்று மருந்தே பொதுஒளிர் மாணிக்கமே
கனக்கே துறஎன் கருத்தறி யாமல் கழறுகின்ற
தனக்கேளர் பாற்சென் றடியேன் இதயம் தளர்வதெல்லாம்
நினக்கே தெரிந்த தெனக்கே அருள நினைந்தருளே.

225. மோகங் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றுமற்றுத்
தேகங் கலந்த பவந்தீர்க்கும் நின்பதம் சிந்திக்கும்நாள்
போகங் கலந்த திருநாள் மலையற் புதப்பசுந்தேன்
பாகங் கலந்தசெம் பாலே நுதற்கட் பரஞ்சுடரே.

226. கோலொன்று கண்ட இறைமகன் வாழ்வினும் கோடிபங்கு
மேலொன்று கண்டனம் நெஞ்சேஎன் சொல்லை விரும்பினியஞ்
சேலொன்று கண்ட மணியான் வரைப்பசுந் தேன்கலந்த
பாலொன்று கண்டகண் கொண்டுயர் வாழ்வு பலித்ததுவே.

227. புலையள வோஎனும் நெஞ்சக னேன்துயர்ப் போகமெட்டு
மலையள வோஇந்த மண்ணள வோவந்த வானளவோ
அலையள வோவன்று மன்றுணின் றோங்கும் அருமருந்தே
இலையள வோஎனுந் தேவே அறிந்தும் இரங்கிலையே.

228. கல்லென்று வல்லென்று மின்னார் புளகக் கனதனத்தைச்
சொல்லென்று சொல்லுமுன் சொல்லுமந் தோநின் துணையடிக்கண்
நில்லென்று பல்ல நிகழ்த்தினும் என்மனம் நிற்பதன்றே
அல்லென்று வெல்களங் கொண்டோய்என் செய்வ தறிந்திலனே.

229. கள்ளா டியகொன்றைச் செஞ்சடை யோய்நற் கனகமன்றின்
உள்ளா டியமலர்ச் சேவடி யோய்இவ் வுலகியற்கண்
எள்ளா டியசெக் கிடைப்படல் போல்துன் பிடைஇளைத்துத்
தள்ளா டியநடை கொண்டேற்கு நன்னடை தந்தருளே.

230. மருக்கா மலர்க்குழல் மின்னார் மயல்சண்ட மாருதத்தால்
இருக்கா துழலுமென் ஏழைநெஞ் சேஇவ் விடும்பையிலே
செருக்கா துருகிச் சிவாய நமஎனத் தேர்ந்தன்பினால்
ஒருக்கால் உரைக்கில் பெருக்காகும் நல்லின்பம் ஓங்கிடுமே.

231. மதிக்கண்ணி வேணிப் பெருந்தகை யேநின் மலரடிக்குத்
துதிக்கண்ணி சூட்டுமெய்த் தொண்டரில் சேர்ந்துநின் தூயஒற்றிப்
பதிக்கண்ணி நின்னைப் பணிந்தேத்தி உள்ளம் பரவசமாக்
கதிக்கண்ணி வாழும் படிஅரு ளாயென் கருத்திதுவே.

232. இரையேற்று துன்பக் குடும்ப விகார இருட்கடலில்
புரையேற்று நெஞ்சம் புலர்ந்துநின் றேனைப் பொருட்படுத்திக்
கரையேற்ற வேண்டுமென் கண்ணே பவத்தைக் கடிமருந்தே
திரையேற்று செஞ்சடைத் தேவே அமரர் சிகாமணியே.

திருச்சிற்றம்பலம்

1. துனியால் உளம் தளர்ந்து அந்தோ துரும்பில் சுழலுகின்றேன்
இனியாயினும் இரங்காதோ நின் சித்தம் எந்தாய் இது என்ன
அனியாயமோ என்னளவில் நின்-பால் தண் அருள் இலையோ
சனியாம் என் வல்_வினைப் போதனையோ என்-கொல் சாற்றுவதே

2. என்னே முறை உண்டு எனில் கேள்வி உண்டு என்பர் என்னளவில்
இன்னே சிறிதும் இலையே நின்-பால் இதற்கு என் செய்குவேன்
மன்னே முக்கண் உடை மா மணியே இடை வைப்பு அரிதாம்
பொன்னே மின் நேர் சடைத் தன் நேர்_இலாப் பரிபூரணனே

3. தண்டாத சஞ்சலம் கொண்டேன் நிலையை இத் தாரணியில்
கண்டார் இரங்குவர் கேட்டார் உருகுவர் கங்கை திங்கள்
துண்டு ஆர் மலர்ச் சடை எந்தாய் இரங்கிலை தூய்மை இலா
அண்டார் பிழையும் பொறுப்போய் இது நின் அருட்கு அழகே

4. பொய்யாம் உலக நடை நின்று சஞ்சலம் பொங்க முக்கண்
ஐயா என் உள்ளம் அழல் ஆர் மெழுகு ஒத்து அழிகின்றதால்
பை ஆர் அரவ மதி_சடையாய் செம்பவள நிறச்
செய்யாய் எனக்கு அருள்செய்யாய் எனில் என்ன செய்குவனே

5. விடம் மிலை ஏர் மணி_கண்டா நின் சைவ விரதம் செய்யத்
திடம் இலையே உள் செறிவு இலையே என்றன் சித்தத்து நின்
நடம் இலையே உன்றன் நண்பு இலையே உனை நாடுதற்கு ஓர்
இடம் இலையே இதை எண்ணிலையே சற்று இரங்கிலையே

6. விண்_உடையாய் வெள்ளி வெற்பு_உடையாய் மதி மேவு சடை-
கண்_உடையாய் நெற்றிக்கண்_உடையாய் அருள் கண்_உடையாய்
பண்_உடையாய் திசைப் பட்டு_உடையாய் இடப் பாலில் அருள்
பெண்_உடையாய் வந்திப் பிட்டு_உடையாய் என் பெரும் செல்வமே

7. விடை_உடையாய் மறை மேல்_உடையாய் நதி மேவிய செம்
சடை_உடையாய் கொன்றைத் தார்_உடையாய் கரம் தாங்கு மழுப்
படை_உடையாய் அருள் பண்பு_உடையாய் பெண் பரவையின்-பால்
நடை_உடையாய் அருள் நாடு_உடையாய் பதம் நல்குகவே

8. கீள்_உடையாய் பிறைக் கீற்று_உடையாய் எம் கிளைத் தலை மேல்
தாள்_உடையாய் செம் சடை_உடையாய் என்றனை_உடையாய்
வாள்_உடையாய் மலை_மான்_உடையாய் கலை மான்_உடையாய்
ஆள்_உடையாய் மன்றுள் ஆட்டு_உடையாய் என்னை ஆண்டு அருளே

9. நான் படும் பாடு சிவனே உலகர் நவிலும் பஞ்சு
தான் படுமோ சொல்லத்தான் படுமோ எண்ணத்தான் படுமோ
கான் படு கண்ணியின் மான் படு மாறு கலங்கி நின்றேன்
ஏன் படுகின்றனை என்று இரங்காய் என்னில் என் செய்வனே

10. பொய்யோ அடிமை உரைத்தல் எந்தாய் என் உள் போந்து இருந்தாய்
ஐயோ நின் உள்ளத்து அறிந்தது அன்றோ என் அவலம் எல்லாம்
கையோட_வல்லவர் ஓர் பதினாயிரம் கற்பம் நின்று
மெய்யோடு எழுதினும் தான் அடங்காத வியப்பு உடைத்தே

11. தேன் சொல்லும் வாய் உமை_பாகா நின்றன்னைத் தெரிந்து அடுத்தோர்
தான் சொல்லும் குற்றம் குணமாகக் கொள்ளும் தயாளு என்றே
நான் சொல்வது என்னை பொன்_நாண் சொல்லும் வாணி-தன் நாண் சொல்லும் அ
வான் சொல்லும் எம் மலை_மான் சொல்லும் கைம்மலை_மான் சொல்லுமே

12. வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீள விடார்
என்றே உரைப்பர் இங்கு என் போன்ற மூடர் மற்று இல்லை நின் பேர்
நன்றே உரைத்து நின்று அன்றே விடுத்தனன் நாண் இல் என் மட்டு
இன்றே அக் கட்டுரை இன்றே என் சொல்வது இறையவனே

13. கைக்கின்ற காயும் இனிப்பு ஆம் விடமும் கன அமுது ஆம்
பொய்க்கின்ற கானலும் நீர் ஆம் வன் பாவமும் புண்ணியம் ஆம்
வைக்கின்ற ஓடும் செம்பொன் ஆம் என் கெட்ட மனது நின் சீர்
துய்க்கின்ற நல்ல மனது ஆவது_இல்லை என் சொல்லுவனே

14. வீணே பொழுது கழிக்கின்ற நான் உன் விரை மலர்_தாள்
காணேன் கண்டாரையும் காண்கின்றிலேன் சற்றும் காணற்கு அன்பும்
பூணேன் தவமும் புரியேன் அறமும் புகல்கின்றிலேன்
நாணேன் விலங்கு இழி ஆணே எனும் கடை நாயினனே

15. நான் ஓர் எளிமை அடிமை என்றோ நல்லன் அல்லன் என்று
தானோ நின் அன்பர் தகாது என்பர் ஈது என்றுதான் நினைத்தோ
ஏனோ நின் உள்ளம் இரங்கிலை இன்னும் இரங்கிலையேல்
கான் ஓடுவேன்-கொல் கடல் விழுவேன்-கொல் முக்கண்ணவனே

16. மின் போலும் செம் சடை வித்தகனே ஒளி மேவிய செம்
பொன் போலும் மேனி எம் புண்ணியனே எனைப் போற்றிப் பெற்ற
தன் போலும் தாய்_தந்தை ஆயிரம் பேர் இருந்தாலும் அந்தோ
நின் போலும் அன்பு_உடையார் எனக்கு ஆர் இந்த நீள் நிலத்தே

17. அன்பால் என்றன்னை இங்கு ஆள்_உடையாய் இ அடியவனேன்
நின்-பால் என் துன்ப நெறிப்பால் அகற்று என்று நின்றது அல்லால்
துன்பால் இடரைப் பிறர்-பால் அடுத்து ஒன்று சொன்னது உண்டோ
என்-பால் இரங்கிலை என் பாற்கடல் பிள்ளைக்கு ஈந்தவனே

18. என் போல் மனிதரை ஏன் அடுப்பேன் எனக்கு எய்ப்பில் வைப்பாம்
பொன் போல் விளங்கும் புரி சடையான்-தனைப் போய் அடுத்தேன்
துன்பு ஓர் அணுவும் பெறேன் இனி யான் என்று சொல்லி வந்தேன்
முன் போல் பராமுகம் செய்யேல் அருளுக முக்கணனே

19. பொன்_உடையார்-தமைப் போய் அடுப்பாய் என்ற புன்மையினோர்க்கு
என்_உடையான்-தனையே அடுப்பேன் இதற்கு எள்ளளவும்
பின்னிடையேன் அவர் முன் அடையேன் எனப் பேசி வந்தேன்
மின் இடை மாது உமை_பாகா என் சோகம் விலக்குகவே

20. சாதகத்தோர்கட்குத்தான் அருள்வேன் எனில் தாழ்ந்திடு மா
பாதகத்தோனுக்கு முன் அருள் ஈந்தது எப்பான்மை கொண்டோ
தீது_அகத்தேன் எளியேன் ஆயினும் உன் திரு_அடியாம்
போது அகத்தே நினைக்கின்றேன் கருணை புரிந்து அருளே

21. அருள் அறியாச் சிறுதேவரும் தம்மை அடுத்தவர்கட்கு
இருள் அறியா விளக்கு என்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார்
மருள் அறியாப் பெரும் தேவே நின்றன் அடி வந்து அடுத்தேன்
தெருள் அறியாச் சிறியேன் ஆயினும் செய்க சீர் அருளே

22. அரும் பொருளே என் அரசே என் ஆர்_உயிர்க்காக வந்த
பெரும் பொருளே அருள் பேறே சிவானந்தம் பெற்றவர்-பால்
வரும் பொருளே முக்கண் மா மணியே நின் வழி அருளால்
தரும் பொருளே பொருள் என்று வந்தேன் எனைத் தாங்கிக்கொள்ளே

23. சரம் கார்முகம் தொடுத்து எய்வது போல் என்றனை உலகத்து
உரம் கார்_இருள் பெரு வாதனையால் இடர் ஊட்டும் நெஞ்சக்
குரங்கால் மெலிந்து நின் நாமம் துணை எனக் கூறுகின்றேன்
இரங்கார்-தமக்கும் இரங்குகின்றோய் எற்கு இரங்குகவே

24. கூறுற்ற குற்றமும் தானே மகிழ்வில் குணம் எனவே
ஆறு உற்ற செம் சடை அண்ணல் கொள்வான் என்பர் ஆங்கு அதற்கு
வேறு உற்றதோர் கரி வேண்டும்-கொலோ என் உள் மேவி என்றும்
வீறு உற்ற பாதத்தவன் மிடற்றே கரி மேவியுமே

25. சூல் படும் மேக_நிறத்தோனும் நான்முகத்தோனும் என்னைப்
போல் படும் பாடு நல்லோர் சொலக் கேட்கும் பொழுது மனம்
வேல் படும் புண்ணில் கலங்கி அந்தோ நம் விடையவன் பூங்
கால் படும் தூளி நம் மேல் படுமோ ஒரு கால் என்னுமே

26. வாள் ஏய் நெடும்_கண்ணி எம் பெருமாட்டி வருடும் மலர்த்
தாளே வருந்த மணிக் கூடல் பாணன்-தனக்கு அடிமை
ஆளே என விறகு ஏற்று விற்றோய் நின் அருள் கிடைக்கும்
நாளே நல் நாள் அந்த நாட்கு ஆயிரம் தெண்டன் நான் செய்வனே

27. அடுத்தார்-தமை என்றும் மேலோர் விடார்கள் அவர்க்குப் பிச்சை
எடுத்தாயினும் இடுவார்கள் என்பார் அதற்கு ஏற்கச் சொல்_பூத்
தொடுத்தார் ஒருவர்க்குக் கச்சூரிலே பிச்சைச் சோறு எடுத்துக்
கொடுத்தாய் நின் பேர்_அருள் என் சொல்லுகேன் எண்_குணக் குன்றமே

28. நாடி நின்றே நினை நான் கேட்டுக்கொள்வது நண்ணும் பத்துக்
கோடி அன்றே ஒரு கோடியின் நூற்றொரு கூறும் அன்றே
தேடி நின்றே புதைப்போரும் தருவர் நின் சீர் நினைந்து உள்
பாடி அந்தோ மனம் வாடி நின்றேன் முகம் பார்த்து அருளே

29. தாய் ஆகினும் சற்று நேரம் தரிப்பள் நம் தந்தையை நாம்
வாயார வாழ்த்தினும் வையினும் தன்னிடை வந்து இது நீ
ஈயாய் எனில் அருள்வான் என்று உனை அடுத்தேன் உமையாள்_
நேயா மனம் இரங்காயா என் எண்ணம் நெறிப்படவே

30. நடும்பாட்டை நாவலன் வாய்த் திரு_பாட்டை நயந்திட்ட நீ
குடும்ப ஆட்டை மேற்கொண்ட என் தமிழ்ப் பாட்டையும் கொண்டு என் உள்ளத்து
இடும்பாட்டை நீக்கிலை என்னினும் துன்பத்து இழுக்குற்று நான்
படும் பாட்டையாயினும் பார்த்து இரங்காய் எம் பரஞ்சுடரே

31. ஏட்டாலும் கேள் அயல் என்பாரை நான் சிரித்து என்னை வெட்டிப்
போட்டாலும் வேறு இடம் கேளேன் என் நாணைப் புறம்விடுத்துக்
கேட்டாலும் என்னை உடையானிடம் சென்று கேட்பன் என்றே
நீட்டாலும் வாயுரைப் பாட்டாலும் சொல்லி நிறுத்துவனே

32. சீர்க்கின்ற கூடலில் பாணனுக்கு ஆட்படச் சென்ற அ நாள்
வேர்க்கின்ற வெம் மணல் என் தலை மேல் வைக்கும் மெல் அடிக்குப்
பேர்க்கின்ற-தோறும் உறுத்தியதோ எனப் பேசி எண்ணிப்
பார்க்கின்ற-தோறும் என் கண்ணே என் உள்ளம் பதைக்கின்றதே

33. நீயே என் தந்தை அருள்_உடையாய் எனை நேர்ந்து பெற்ற
தாயே நின்-பால் இடத்து எம் பெருமாட்டி இத் தன்மையினால்
நாயேன் சிறிதும் குணம்_இலன் ஆயினும் நானும் உங்கள்
சேயே எனைப் புறம்விட்டால் உலகம் சிரித்திடுமே

34. தெருளும் பொருளும் நின் சீர் அருளே எனத் தேர்ந்த பின் யான்
மருளும் புவனத்து ஒருவரையேனும் மதித்தது உண்டோ
வெருளும் புவியில் துயரால் கலங்கி வெதும்புகின்றேன்
இருளும் கரு மணி_கண்டா அறிந்தும் இரங்கிலையே

35. பெண்ணால் மயங்கும் எளியேனை ஆளப் பெரும் கருணை
அண்ணா நின் உள்ளம் இரங்காத வண்ணம் அறிந்துகொண்டேன்
கண் ஆர் உலகில் என் துன்பம் எல்லாம் வெளி காணில் இந்த
மண்ணா பிலத்தொடு விண்_நாடும் கொள்ளை வழங்கும் என்றே

36. நெறி கொண்ட நின் அடித் தாமரைக்கு ஆட்பட்டு நின்ற என்னைக்
குறிகொண்ட வாழ்க்கைத் துயராம் பெரிய கொடும் கலிப் பேய்
முறி கொண்டு அலைக்க வழக்கோ வளர்த்த முடக் கிழ நாய்
வெறிகொண்டதேனும் விடத் துணியார் இ வியன் நிலத்தே

37. மதியாமல் ஆரையும் நான் இறுமாந்து மகிழ்கின்றது எம்
பதியாம் உனது திரு_அருள் சீர் உரம் பற்றி அன்றோ
எது யார் படினும் இடர்ப்பட்டு அலைய இ ஏழைக்கு என்ன
விதியா இனிப் பட மாட்டேன் அருள்செய் விடையவனே

38. கல்_கோட்டை நெஞ்சரும் தம்-பால் அடுத்தவர்கட்குச் சும்மாச்
சொல்_கோட்டையாயினும் கட்டுவர் நின்னைத் துணிந்து அடுத்தேன்
அல்_கோட்டை நெஞ்சு உடையேனுக்கு இரங்கிலை அன்று உலவா
நெல்_கோட்டை ஈந்தவன் நீ அல்லையோ முக்கண் நின்மலனே

39. ஆதிக்க மாயை மனத்தேன் கவலை அடுத்தடுத்து
வாதிக்க நொந்து வருந்துகின்றேன் நின் வழக்கம் எண்ணிச்
சோதிக்க என்னைத் தொடங்கேல் அருளத் தொடங்கு கண்டாய்
போதிக்க வல்ல நல் சேய் உமையோடு என்னுள் புக்கவனே

40. பிறை முடித்து ஆண்டு ஒரு பெண் முடித்து ஓர் பிள்ளைப்பேர் முடித்த
நிறை முடித்து ஆண்ட அம் செவ் வேணி செய்திட நித்தம் மன்றின்
மறை முடித் தாண்டவம் செய்வோய் என்-பால் அருள்வைத்து எளியேன்
குறை முடித்து ஆண்டுகொள் என்னே பல முறை கூறுவதே

41. நடம் கொண்ட பொன் அடி நீழலில் நான் வந்து நண்ணும் மட்டும்
திடம் கொண்ட நின் புகழ் அல்லால் பிறர் புகழ் செப்பவையேல்
விடம் கொண்ட கண்டத்து அருள்_குன்றமே இம வெற்பு_உடையாள்
இடம் கொண்ட தெய்வத் தனி முதலே எம் இறையவனே

42. விழிக்கு அஞ்சனம் தரும் மின்னார்-தம் வாழ்க்கையில் வீழ்ந்து அயலோர்
மொழிக்கு அஞ்சி உள்ளம் பொறாது நின் நாமம் மொழிந்து எளியேன்
குழி_கஞ்சி போல் மயங்கின்றேன் அருளக் குறித்திலையேல்
பழிக்கு அஞ்சினோய் இன்னும் என் பழிக்கு அஞ்சப்படும் உனக்கே

43. சேல் வைக்கும் கண் உமை_பாகா நின் சித்தம் திரு_அருள் என்-
பால் வைக்குமேல் இடர் எல்லாம் எனை விட்டு அப்பால் நடக்கக்
கால்வைக்குமே நல் சுக வாழ்வு என் மீதினில் கண்வைக்குமே
மால் வைக்கும் மாயைகள் மண்வைக்குமே தங்கள் வாய்-தனிலே

44. ஒரு மாது பெற்ற மகன் பொருட்டாக உவந்து முன்னம்
வரு மாமன் ஆகி வழக்குரைத்தோய் என் வழக்குரைத்தற்கு
இரு மா நிலத்தது போல் வேடம்கட்ட இருத்தி-கொலோ
திருமால் வணங்கும் பதத்தவ யான் உன் சிறுவன் அன்றே

45. முன் நஞ்சம் உண்ட மிடற்று அரசே நின் முழுக் கருணை
அன்னம் சுகம் பெற உண்டும் உன்-பால் அன்பு அடைந்திலதால்
கல்_நெஞ்சமோ கட்டை வன் நெஞ்சமோ எட்டிக்காய் நெஞ்சமோ
என் நெஞ்சம் என் நெஞ்சமோ தெரியேன் இதற்கு என் செய்வதே

46. வானம் விடாது உறு கால் போல் என்றன்னை வளைந்துகொண்ட
மானம் விடாது இதற்கு என் செய்குவேன் நின்னை வந்து அடுத்தேன்
ஊனம் விடாது உழல் நாயேன் பிழையை உளம்கொண்டிடேல்
ஞானம் விடாத நடத்தோய் நின் தண் அருள் நல்குகவே

47. நாயும் செயாத நடை_உடையேனுக்கு நாணமும் உள்
நோயும் செயாநின்ற வன் மிடி நீக்கி நல் நோன்பு அளித்தாய்
பேயும் செயாத கொடும் தவத்தால் பெற்ற பிள்ளைக்கு நல்
தாயும் செயாள் இந்த நன்றி கண்டாய் செஞ்சடையவனே

48. உருவத்திலே சிறியேன் ஆகி யூகத்தில் ஒன்றும் இன்றித்
தெருவத்திலே சிறு கால் வீசி ஆடிடச் சென்ற அந்தப்
பருவத்திலே நல் அறிவு அளித்தே உனைப் பாடச்செய்தாய்
அருவத்திலே உரு_ஆனோய் நின் தண் அளி யார்க்கு உளதே

49. மான் எழுந்து ஆடும் கரத்தோய் நின் சாந்த மனத்தில் சினம்-
தான் எழுந்தாலும் எழுக என்றே என் தளர்வை எல்லாம்
ஊன் எழுந்து ஆர்க்க நின்-பால் உரைப்பேன் அன்றி ஊர்க்கு உரைக்க
நான் எழுந்தாலும் என் நா எழுமோ மொழி நல்கிடவே

50. வனம் எழுந்து ஆடும் சடையோய் நின் சித்தம் மகிழ்தல் அன்றிச்
சினம் எழுந்தாலும் எழுக என்றே என் சிறுமையை நின்
முனம் எழுந்து ஆற்றுவது அல்லால் பிறர்க்கு மொழிந்திட என்
மனம் எழுந்தாலும் என் வாய் எழுமோ உள்ளவாறு இதுவே

51. சிற்பரமே எம் சிவமே திரு_அருள் சீர் மிகுந்த
கற்பகமே உனைச் சார்ந்தோர்க்கு அளிக்கும் நின் கைவழக்கம்
அற்பம் அன்றே பல அண்டங்களின் அடங்காதது என்றே
நல் பர ஞானிகள் வாசகத்தால் கண்டு நாடினனே

52. வரும் செல் உள் நீர் மறுத்தாலும் கருணை மறாத எங்கள்
பெரும் செல்வமே எம் சிவமே நினைத் தொழப்பெற்றும் இங்கே
தரும் செல் அரிக்கும் மரம் போல் சிறுமைத் தளர் நடையால்
அரும் செல்லல் மூழ்கி நிற்கின்றேன் இது நின் அருட்கு அழகே

53. கரு முகம் நீக்கிய பாணனுக்கே கனகம் கொடுக்கத்
திருமுகம் சேரற்கு அளித்தோய் என்று உன்னைத் தெரிந்து அடுத்தென்
ஒரு முகம் பார்த்து அருள் என்கின்ற ஏழைக்கு உதவிலையேல்
உரும் உக ஆர்க்கும் விடையோய் எவர் மற்று உதவுவரே

54. மருப் பா வனத்து உற்ற மாணிக்கு மன்னன் மனம் அறிந்து ஓர்
திரு_பாசுரம் செய்து பொற்கிழி ஈந்த நின் சீர் நினைந்தே
விருப்பா நினை அடுத்தேன் எனக்கு ஈந்திடவே இன்று என்னை
கருப்பா நின் சித்தம் திருப்பாய் என் மீது கறை_கண்டனே

55. பீழையை மேவும் இ வாழ்க்கையிலே மனம் பேதுற்ற இ
ஏழையை நீ விடலாமோ அடிமைக்கு இரங்கு கண்டாய்
மாழையைப் போல் முன்னர்த் தாம் கொண்டு வைத்து வளர்த்த இள
வாழையைத் தாம் பின்னர் நீர்விடல் இன்றி மறுப்பது உண்டே

56. கருத்து அறியாச் சிறியேன் படும் துன்பக் கலக்கம் எல்லாம்
உருத்து அறியாமை பொறுத்து அருள் ஈபவர் உன்னை அன்றித்
திருத்து அறியார் பிறர் அன்றே மென்_கன்றின் சிறுமை ஒன்றும்
எருத்து அறியாது நல் சேதா அறியும் இரங்குகவே

57. வான் வேண்டிக் கொண்ட மருந்தோ முக்கண் கொண்ட வள்ளல் உன்னை
நான் வேண்டிக்கொண்டது நின் அடியார்க்கு நகை தரும் ஈது
ஏன் வேண்டிக்கொண்டனை என்பார் இதற்கு இன்னும் ஏன் இரங்காய்
தான் வேண்டிக்கொண்ட அடிமைக்குக் கூழ் இடத் தாழ்ப்பது உண்டே

58. பை உரைத்து ஆடும் பணிப் புயத்தோய் தமைப் பாடுகின்றோர்
உய் உரைத்தா உள்ளது இல்லது என்று இல்லதை உள்ளது என்றே
பொய் உரைத்தாலும் தருவார் பிறர் அது போல் அன்றி நான்
மெய் உரைத்தாலும் இரங்காமை நின் அருள் மெய்க்கு அழகே

59. மடல் வற்றினாலும் மணம் வற்றுறாத மலர் என என்
உடல் வற்றினாலும் என் உள் வற்றுமோ துயர் உள்ள எல்லாம்
அடல் வற்றுறாத நின் தாட்கு அன்றி ஈங்கு அயலார்க்கு உரையேன்
கடல் வற்றினாலும் கருணை வற்றாத முக்கண்ணவனே

60. எள் இருக்கின்றதற்கேனும் சிறிது இடம் இன்றி என்-பால்
முள் இருக்கின்றது போல் உற்ற துன்ப முயக்கம் எல்லாம்
வெள்_இருக்கின்றவர் தாமும் கண்டார் எனில் மேவி என்றன்
உள் இருக்கின்ற நின் தாட்கு ஓதல் என் எம்_உடையவனே

61. பொன்கு இன்று பூத்த சடையாய் இ ஏழைக்கு உன் பொன் அருளாம்
நன்கு இன்று நீ தரல் வேண்டும் அந்தோ துயர் நண்ணி என்னைத்
தின்கின்றதே கொடும் பாம்பையும் பால் உணச்செய்து கொலார்
என்கின்ற ஞாலம் இழுக்கு_உரை யாது எற்கு இரங்கிடினே

62. வாய் மூடிக் கொல்பவர் போலே என் உள்ளத்தை வன் துயராம்
பேய் மூடிக்கொண்டது என் செய்கேன் முகத்தில் பிறங்கு கையைச்
சேய் மூடிக்கொண்டு நல் பாற்கு அழக் கண்டும் திகழ் முலையைத்
தாய் மூடிக்கொள்ளுவது உண்டோ அருளுக சங்கரனே

63. கோள் வேண்டும் ஏழை மனத்தினை வேறுற்றுக் கொட்டக் கொள்ளித்
தேள் வேண்டுமோ சுடத் தீ வேண்டுமோ வதைசெய்திட ஓர்
வாள் வேண்டுமோ கொடும் துன்பே அதில் எண் மடங்கு கண்டாய்
ஆள் வேண்டுமேல் என்னை ஆள் வேண்டும் என் உள் அஞர் ஒழித்தே

64. விடை இலையோ அதன் மேல் ஏறி என் முன் விரைந்து வரப்
படை இலையோ துயர் எல்லாம் துணிக்கப் பதம் கொள் அருள்
கொடை இலையோ என் குறை தீர நல்கக் குலவும் என் தாய்
புடை இலையோ என்றனக்காகப் பேச எம் புண்ணியனே

65. நறை உள தே மலர்க் கொன்றை கொண்டு ஆடிய நல் சடை மேல்
பிறை உளதே கங்கைப் பெண் உளதே பிறங்கும் கழுத்தில்
கறை உளதே அருள் எங்கு உளதே இக் கடையவனேன்
குறை உளதே என்று அரற்றவும் சற்றும் குறித்திலதே

66. சினத்தாலும் காமத்தினாலும் என்றன்னைத் திகைப்பிக்கும் இ
மனத்தால் உறும் துயர் போதாமை என்று மதித்துச் சுற்றும்
இனத்தாலும் வாழ்க்கை இடும்பையினாலும் இளைக்கவைத்தாய்
அனத்தான் புகழும் பதத்தோய் இது நின் அருட்கு அழகே

67. புல் அளவாயினும் ஈயார்-தம் வாயில் புகுந்து புகழ்ச்
சொல் அளவாநின்று இரப்போர் இரக்க நல் சொன்னங்களைக்
கல் அளவாத் தருகின்றோர்-தம்பாலும் கருதிச் சென்றோர்
நெல் அளவாயினும் கேளேன் நின்-பால் அன்றி நின்மலனே

68. பிறை சூழ்ந்த வேணி முடிக் கனியே எம் பெரும் செல்வமே
கறை சூழ்ந்த கண்டத்து எம் கற்பகமே நுதல்_கண் கரும்பே
மறை சூழ்ந்த மன்று ஒளிர் மா மணியே என் மனம் முழுதும்
குறை சூழ்ந்துகொண்டது என் செய்கேன் அகற்றக் குறித்து அருளே

69. கண் கட்டி ஆடும் பருவத்திலே முலை கண்ட ஒரு
பெண் கட்டி ஆள நினைக்கின்ற ஓர் சிறுபிள்ளையைப் போல்
எண் கட்டி யான் உன் அருள் விழைந்தேன் சிவனே என் நெஞ்சம்
புண்கட்டியாய் அலைக்கின்றது மண்கட்டிப் போல் உதிர்ந்தே

70. மெய் விட்ட வஞ்சக நெஞ்சால் படும் துயர் வெம் நெருப்பில்
நெய் விட்டவாறு இந்த வாழ்க்கையின் வாதனை நேரிட்டதால்
பொய் விட்ட நெஞ்சு உறும் பொன்_பதத்து ஐய இப் பொய்யனை நீ
கைவிட்டிட நினையேல் அருள்வாய் கருணை_கடலே

71. அருள்_கடலே அக் கடல் அமுதே அ அமுதத்து உற்ற
தெருள் சுவையே அச் சுவைப் பயனே மறைச் சென்னி நின்ற
பொருள் பதமே அப் பதத்து அரசே நின் புகழ் நினையா
இருள் குண மாயை மனத்தேனையும் உவந்து ஏன்றுகொள்ளே

72. அண்டம் கண்டானும் அளந்தானும் காண்டற்கு அரியவ நின்
கண்டம் கண்டார்க்கும் சடை மேல் குறைந்த கலை மதியின்
துண்டம் கண்டார்க்கும் பயம் உளதோ எனச் சூழ்ந்து அடைந்தேன்
தொண்டன் கண்டு ஆள் பல தெண்டன் கண்டாய் நின் துணை அடிக்கே

73. தேட்டக் கண்டு ஏர்_மொழி_பாகா உலகில் சிலர் குரங்கை
ஆட்டக் கண்டேன் அன்றி அக் குரங்கால் அவர் ஆடச் சற்றும்
கேட்டுக் கண்டேன்_இலை நான் ஏழை நெஞ்சக் கிழக் குரங்கால்
வேட்டுக் கொண்டு ஆடுகின்றேன் இது சான்ற வியப்பு உடைத்தே

74. போகம் கொண்டு ஆர்த்த அருள் ஆர் அமுதப் புணர் முலையைப்
பாகம் கொண்டு ஆர்த்த பரம்பொருளே நின் பதம் நினையா
வேகம் கொண்டு ஆர்த்த மனத்தால் இ ஏழை மெலிந்து மிகச்
சோகம் கொண்டு ஆர்த்து நிற்கின்றேன் அருளத் தொடங்குகவே

75. இன்று அலவே நெடுநாளாக ஏழைக்கு எதிர்த்த துன்பம்
ஒன்று அலவே பல எண்_இலவே உற்று உரைத்தது அயல்
மன்று அலவே பிறர் நன்று அலவே என வந்த கயக்
கன்று அலவே பசுங்கன்று அடியேன்-தனைக் காத்து அருளே

76. படி பட்ட மாயையின்-பால் பட்ட சாலப் பரப்பில் பட்டே
மிடிபட்ட வாழ்க்கையில் மேல் பட்ட துன்ப விசாரத்தினால்
அடிபட்ட நான் உனக்கு ஆட்பட்டும் இன்னும் அலைதல் நன்றோ
பிடிபட்ட நேர் இடைப் பெண் பட்ட பாகப் பெருந்தகையே

77. உடையாய் என் விண்ணப்பம் ஒன்று உண்டு கேட்டு அருள் உன் அடிச் சீர்
தடை யாதும் இன்றிப் புகல்வது அல்லால் இச் சகத்திடை நான்
நடையால் சிறுமை கொண்டு அந்தோ பிறரை நவின்று அவர்-பால்
அடையாமையும் நெஞ்சு உடையாமையும் தந்து அருளுகவே

78. தஞ்சம் என்றே நின்ற நாயேன் குறையைத் தவிர் உனக்கு ஓர்
பஞ்சம் இன்றே உலகு எல்லாம் நின் சீர் அருள் பாங்கு கண்டாய்
எஞ்ச நின்றேற்கு உனை அல்லால் துணை பிறிது இல்லை இது
வஞ்சம் அன்றே நின் பதம் காண்க முக்கண் மணிச் சுடரே

79. பொறுத்தாலும் நான் செயும் குற்றங்கள் யாவும் பொறாது எனை நீ
ஒறுத்தாலும் நன்று இனிக் கைவிட்டிடேல் என்னுடையவன் நீ
வெறுத்தாலும் வேறு இலை வேற்றோர் இடத்தை விரும்பி என்னை
அறுத்தாலும் சென்றிடமாட்டேன் எனக்கு உன் அருள் இடமே

80. சேல் வரும் ஏர் விழி மங்கை_பங்கா என் சிறுமை கண்டால்
மேல் வரும் நீ வரத் தாழ்த்தாலும் உன்றன் வியன் அருள் பொன்
கால் வருமே இளம் கன்று அழத் தாய்ப்பசுக் காணின் மடிப்
பால் வருமே முலைப் பால் வருமே பெற்ற பாவைக்குமே

81. வன் பட்ட கூடலில் வான் பட்ட வையை வரம்பிட்ட நின்
பொன் பட்ட மேனியில் புண்பட்ட போதில் புவி நடையாம்
துன்பு அட்ட வீரர் அந்தோ வாதவூரர்-தம் தூய நெஞ்சம்
என் பட்டதோ இன்று கேட்ட என் நெஞ்சம் இடிபட்டதே

82. நீர் சிந்தும் கண்ணும் நிலை சிந்தும் நெஞ்சமும் நீள் நடையில்
சீர் சிந்து வாழ்க்கையும் தேன் சிந்தி வாடிய செம்மலர் போல்
கூர் சிந்து புந்தியும் கொண்டு நின்றேன் உள் குறை சிந்தும் வாறு
ஓர் சிந்து போல் அருள் நேர் சிந்தன் ஏத்தும் உடையவனே

83. கொடி கொண்ட ஏற்றின் நடையும் சடையும் குளிர் முகமும்
துடி கொண்ட கையும் பொடி கொண்ட மேனியும் தோல் உடையும்
பிடி கொண்ட பாகமும் பேர்_அருள் நோக்கமும் பெய் கழலும்
குடிகொண்ட நல் மனம் என் மனம் போல் குறை கொள்வது இன்றே

84. விதிக்கும் பதிக்கும் பதி நதி ஆர் மதி வேணிப் பதி
திதிக்கும் பதிக்கும் பதி மேல் கதிக்கும் திகழ் பதி வான்
துதிக்கும் பதிக்கும் பதி ஓங்கு உமா பதி சொல் கடந்த
பதிக்கும் பதி சித். பதி எம் பதி நம் பசுபதியே

85. எனை அடைந்து ஆழ்த்திய துன்பச் சுமையை இறக்கு எனவே
நினை அடைந்தேன் அடி நாயேற்கு அருள நினைதி கண்டாய்
வினை அடைந்தே மன வீறு உடைந்தே நின்று வேற்றவர்-தம்
மனை அடைந்தே மனம் வாடல் உன் தொண்டர் மரபு அல்லவே

86. வனம் போய்வருவது போலே வன் செல்வர் மனையிடத்தே
தினம் போய்வரும் இச் சிறியேன் சிறுமைச் செயல்-அது போய்ச்
சினம் போய்க் கொடும் பகைக் காமமும் போய் நின் திறம் நிகழ்த்தா
இனம் போய்க் கொடிய மனம் போய் இருப்பது என்று என் அரசே

87. பெற்றாள் அனைய நின் குற்றேவல் செய்து பிழைக்க அறியாச்
சிற்றாள் பலரினும் சிற்றாள் எனும் என் சிறுமை தவிர்த்து
உற்று ஆள்கிலை எனின் மற்று ஆர் துணை எனக்கு உன் கமலப்
பொன்_தாள் அருள் புகழ்க் கற்று ஆய்ந்து பாடப் புரிந்து அருளே

88. அ நாள் நையாது நஞ்சு ஏற்று அயன் மால் மனை ஆதியர்-தம்
பொன்_நாணைக் காத்த அருள்_கடலே பிறர் புன் மனை போய்
இ நாள் நையா வகை என் நாணைக் காத்து அருள் ஏழைக்கு நின்
றன் ஆணை ஐய நின் தாள் ஆணை வேறு சரண் இல்லையே

89. பவ சாதனம் பெறும் பாதகர் மேவும் இப் பாரிடை நல்
சிவசாதனத்தரை ஏன் படைத்தாய் அத் திரு_இலிகள்
அவ சாதனங்களைக் கண்டு இவர் உள்ளம் அழுங்க என்றோ
கவசாதனம் எனக் கைம்மான் உரியைக் களித்தவனே

90. நான் செய்த புண்ணியம் யாதோ சிவாயநம எனவே
ஊன் செய்த நாவைக் கொண்டு ஓதப்பெற்றேன் எனை ஒப்பவர் ஆர்
வான் செய்த நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மற்றைத்
தேன் செய்த கற்பக_தேவனும் தேவரும் செய்ய அரிதே

91. உற்று ஆயினும் மறைக்கு ஓர்வு அரியோய் எனை உற்றுப் பெற்ற
நற்றாயினும் இனி யானே நின் நல் அருள் நல்கில் என்னை
விற்றாயினும் கொள வேண்டுகின்றேன் என் விருப்பு அறிந்தும்
சற்றாயினும் இரங்காதோ நின் சித்தம் தயாநிதியே

92. வான் மாறினும் மொழி மாறாத மாறன் மனம் களிக்கக்
கால் மாறி ஆடிய கற்பகமே நின் கருணை என் மேல்
தான் மாறினும் விட்டு நான் மாறிடேன் பெற்ற தாய்க்கு முலைப்
பால் மாறினும் பிள்ளை பால் மாறுமோ அதில் பல் இடுமே

93. அன்பு அரிதாம் மனத்து ஏழையன் யான் துயரால் மெலிந்தே
இன்பு அரிதாம் இச் சிறு நடை வாழ்க்கையில் ஏங்குகின்றேன்
என் பரிதாப நிலை நீ அறிந்தும் இரங்கிலையேல்
வன்பு அரிதாம் தண் அருள்_கடலே என்ன வாழ்வு எனக்கே

94. மை கண்ட கண்டமும் மான் கண்ட வாமமும் வைத்து அருளில்
கைகண்ட நீ எங்கும் கண்கண்ட தெய்வம் கருதில் என்றே
மெய் கண்ட நான் மற்றைப் பொய் கண்ட தெய்வங்கள் மேவுவனோ
நெய் கண்ட ஊண் விட்டு நீர் கண்ட கூழுக்கு என் நேடுவதே

95. வேணிக்கு மேல் ஒரு வேணி வைத்தோய் முன் விரும்பி ஒரு
மாணிக்கு வேதம் வகுத்தே கிழி ஒன்று வாங்கித்தந்த
காணிக்கு-தான் அரைக் காணி மட்டாயினும் காட்டு கண்டாய்
பாணிக்குமோ தரும் பாணி வந்து ஏற்றவர் பான்மை கண்டே

96. மறைக்கு ஒளித்தாய் நெடுமாற்கு ஒளித்தாய் திசை மா முகம் கொள்
இறைக்கு ஒளித்தாய் இங்கு அதில் ஓர் பழி இலை என்றன் மனக்
குறைக்கு ஒளித்தாலும் குறை தீர்த்து அருள் எனக் கூவிடும் என்
முறைக்கு ஒளித்தாலும் அரசே நின்-பால் பழி மூடிடுமே

97. முன்_மழை வேண்டும் பருவப் பயிர் வெயில் மூடிக் கெட்ட
பின் மழை பேய்ந்து என்ன பேறு கண்டாய் அந்தப் பெற்றியைப் போல்
நின் மழை போல் கொடை இன்று அன்றி மூப்பு நெருங்கியக் கால்
பொன் மழை பேய்ந்து என்ன கல் மழை பேய்ந்து என்ன பூரணனே

98. நீள் ஆதரவு கொண்டு என் குறை யாவும் நிகழ்த்தவும் நீ
கேளாதவன் என வாளா இருக்கின்ற கேண்மை என்னோ
சூளாத முக்கண் மணியே விடேல் உனைச் சூழ்ந்த என்னை
ஆளாகக் கொள்ளினும் மீளா நரகத்து அழுத்தினுமே

99. வளம் கன்று மா வனத்து ஈன்ற தன் தாய் இன்றி வாடுகின்ற
இளம் கன்று போல் சிறு வாழ்க்கையில் நின் அருள் இன்றி அந்தோ
உளம் கன்றும் நான் செய்வது என்னே கருணை உதவு கண்டாய்
களங்கு அன்று பேர்_அருள் கார் என்று கூறும் களத்தவனே

100. காற்றுக்கு மேல் விட்ட பஞ்சு ஆகி உள்ளம் கறங்கச் சென்றே
சோற்றுக்கு மேல் கதி இன்று என வேற்று அகம்-தோறும் உண்போர்
தூற்றுக்கு மேல் பெரும் தூறு இலை ஆங்கு என் துயரம் எனும்
சேற்றுக்கு மேல் பெரும் சேறு இலை காண் அருள் செவ் வண்ணனே

101. அந்தோ துயரில் சுழன்று ஆடும் ஏழை அவல நெஞ்சம்
சிந்து ஓத நீரில் சுழியோ இளையவர் செம் கை தொட்ட
பந்தோ சிறுவர்-தம் பம்பரமோ கொட்டும் பஞ்சு-கொலோ
வந்தோடு உழலும் துரும்போ என் சொல்வது எம் மா மணியே

102. பொன் வசமோ பெண்களின் வசமோ கடல் பூ வசமோ
மின் வசமோ எனும் மெய் வசமோ என் விதி வசமோ
தன் வசமோ மலம்-தன் வசமோ என் சவலை நெஞ்சம்
என் வசமோ இல்லை நின் வசம் நான் எனை ஏன்றுகொள்ளே

103. நான் அடங்காது ஒரு நாள் செயும் குற்ற நடக்கை எல்லாம்
வான் அடங்காது இந்த மண் அடங்காது மதிக்கும் அண்டம்-
தான் அடங்காது எங்கும் தான் அடங்காது எனத் தான் அறிந்தும்
மால் நடம் காட்டும் மணி எனை ஆண்டது மா வியப்பே

104. பாம்பு ஆயினும் உணப் பால் கொடுப்பார் வளர்ப்பார் மனை-பால்
வேம்பு ஆயினும் வெட்டல் செய்யார் வளர்த்த வெருட்சிக் கடாத்
தாம் பாயினும் ஒரு தாம்பாயினும் கொடு தாம் பின் செல்வார்
தேம் பாய் மலர்க் குழல் காம்பு ஆக என்னையும் சேர்த்துக்கொள்ளே

105. நெருப்புக்கு முட்டையும் கூழ்க்கு இட உப்பையும் நேடிச் செல்வோர்
பருப்புக்கு நெய்யும் ஒண் பாலுக்கு வாழைப் பழமும் கொள்ளத்
தெருப் புக்குவாரொடு சேர்கில் என் ஆம் இச் சிறுநடையாம்
இருப்புக்கு வேண்டிய நான் சிவயோகர் பின் எய்தில் என்னே

106. எ மதம் மாட்டும் அரியோய் என் பாவி இடும்பை நெஞ்சை
மும்மத யானையின் கால் இட்டு இடறினும் மொய் அனல்-கண்
விம்மதம் ஆக்கினும் வெட்டினும் நன்று உன்னை விட்ட அதன்
வெம் மதம் நீங்கல் என் சம்மதம் காண் எவ்விதத்தினுமே

107. கல்லாத புந்தியும் அந்தோ நின் தாளில் கணப் பொழுதும்
நில்லாத நெஞ்சமும் பொல்லாத மாயையும் நீள் மதமும்
கொல்லாமல்_கொன்று எனைத் தின்னாமல்_தின்கின்ற கொள்கையை இங்கு
எல்லாம் அறிந்த உனக்கு எளியேன் இன்று இசைப்பது என்னே

108. தெவ் வழி ஓடும் மனத்தேனுக்கு உன்றன் திருவுளம்-தான்
இ வழி ஏகு என்று இரு வழிக்குள் விட்டது எவ்வழியோ
அ வழியே வழி செவ்வழி பாட நின்று ஆடுகின்றோய்
வெவ் வழி நீர்ப் புணைக்கு என்னே செயல் இ வியன் நிலத்தே

109. கண் ஆர் நுதல் செங்கரும்பே நின் பொன் அருள் கால்_மலரை
எண்ணாத பாவி இங்கு ஏன் பிறந்தேன் நினை ஏத்துகின்றோர்
உண்ணாத ஊணும் உடுக்கா உடையும் உணர்ச்சி சற்றும்
நண்ணாத நெஞ்சமும் கொண்டு உலகோர் முன்னர் நாண் உறவே

110. அம்மா வயிற்று எரிக்கு ஆற்றேன் என நின்று அழுது அலறச்
சும்மா அச் சேய் முகம் தாய் பார்த்து இருக்கத் துணிவள்-கொலோ
இ மா நிலத்து அமுது ஏற்றாயினும் தந்திடுவள் முக்கண்
எம்மான் இங்கு ஏழை அழு முகம் பார்த்தும் இரங்கிலையே

111. ஓயாக் கருணை முகிலே நுதல்_கண் ஒருவ நின்-பால்
தோயாக் கொடிய வெம் நெஞ்சத்தை நான் சுடு_சொல்லைச் சொல்லி
வாயால் சுடினும் தெரிந்திலதே இனி வல் வடவைத்
தீயால் சுடினும் என் அந்தோ சிறிதும் தெரிவது அன்றே

112. மால் அறியான் மலரோன் அறியான் மகவான் அறியான்
கால் அறியான் மற்றை வானோர் கனவினும் கண்டு அறியார்
சேல் அறியா விழி மங்கை_பங்கா நின் திறத்தை மறை
நால் அறியா எனில் நான் அறிவேன் எனல் நாண் உடைத்தே

113. ஆறு இட்ட வேணியும் ஆட்டு இட்ட பாதமும் அம்மை ஒரு
கூறு இட்ட பாகமும் கோத்திட்ட கொன்றையும் கோலம் மிக்க
நீறு இட்ட மேனியும் நான் காணும் நாள் என் நிலைத் தலை மேல்
ஏறிட்ட கைகள் கண்டு ஆணவப் பேய்கள் இறங்கிடுமே

114. அல் உண்ட கண்டத்து அரசே நின் சீர்த்தி அமுதம் உண்டோர்
கொல் உண்ட தேவர்-தம் கோள் உண்ட சீர் எனும் கூழ் உண்பரோ
சொல் உண்ட வாயினர் புல் உண்பரோ இன் சுவைக் கண்டு எனும்
கல் உண்டபேர் கருங்கல் உண்பரோ இக் கடலிடத்தே

115. காரே எனும் மணி_கண்டத்தினான் பொன் கழலை அன்றி
யாரே துணை நமக்கு ஏழை நெஞ்சே இங்கிருந்து கழு
நீரே எனினும் தரற்கு அஞ்சுவாரொடு நீயும் சென்று
சேரேல் இறுகச் சிவாயநம எனச் சிந்தைசெய்யே

116. வலைப்பட்ட மான் என வாள்பட்ட கண்ணியர் மையல் என்னும்
புலைப்பட்ட பேய்க்கு விலைப்பட்ட நான் மதி போய்ப் புலம்ப
இலைப்பட்ட இ மனம் அந்தோ இ ஏழைக்கு என்று எங்கிருந்து
தலைப்பட்டதோ இதற்கு என் செய்குவேன் முக்கண் சங்கரனே

117. குருந்தாம் என் சோக மனம் ஆன பிள்ளைக் குரங்குக்கு இங்கே
வருந்து ஆணவம் என்னும் மானிடப் பேய் ஒன்று மாத்திரமோ
பெரும் தாமதம் என்று இராக்கதப் பேயும் பிடித்தது எந்தாய்
திருந்தா அதன் குதிப்பு என் ஒரு வாய்கொண்டு செப்ப அரிதே

118. பெண்மணி_பாக பெரு மணியே அருள் பெற்றி கொண்ட
விண் மணி ஆன விழி மணியே என் விருப்புறு நல்
கண்மணி நேர் கடவுள் மணியே ஒருகால் மணியைத்
திண் மணிக் கூடலில் விற்று ஓங்கு தெய்வ சிகாமணியே

119. அலை எழுத்தும் தெறும் ஐந்தெழுத்தால் உன்னை அர்ச்சிக்கின்றோர்
கலை எழுத்தும் புகழ் கால் எழுத்திற்குக் கனிவு இரக்கம்
இலை எழுத்தும் பிறப்பீடு எழுத்தும் கொண்ட எங்கள் புழுத்
தலையெழுத்தும் சரி ஆமோ நுதல்_கண் தனி முதலே

120. ஆட்சிகண்டார்க்கு உற்ற துன்பத்தைத் தான் கொண்டு அருள் அளிக்கும்
மாட்சி கண்டாய் எந்தை வள்ளல் குணம் என்பர் மற்று அதற்குக்
காட்சி கண்டேன்_இலை ஆயினும் உன் அருள் கண்டத்தில் ஓர்
சாட்சி கண்டேன் களி கொண்டேன் கருணைத் தடம் கடலே

121. கண் கொண்ட நெற்றியும் கார் கொண்ட கண்டமும் கற்பு அளிக்கும்
பெண் கொண்ட பாகமும் கண்டேன் முன் மாறன் பிரம்படியால்
புண் கொண்ட மேனிப் புறம் கண்டிலேன் அப் புறத்தைக் கண்டால்
ஒண் கொண்ட கல்லும் உருகும் என்றோ இங்கு ஒளித்தனையே

122. வேய்க்குப் பொரும் எழில் தோள் உடைத் தேவி விளங்கும் எங்கள்
தாய்க்குக் கனிந்து ஒரு கூறு அளித்தோய் நின் தயவும் இந்த
நாய்க்குக் கிடைக்கும் என ஒரு சோதிடம் நல்கில் அவர்
வாய்க்குப் பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே

123. காண்டத்தில் மேவும் உலகீர் இத் தேகம் கரும் பனை போல்
நீண்டத்தில் என்ன நிலை அலவே இது நிற்றல் பசும்
பாண்டத்தில் நீர் நிற்றல் அன்றோ நமை நம் பசுபதி-தான்
ஆண்டத்தில் என்ன குறையோ நம் மேல் குறை ஆயிரமே

124. வேணி-கண் நீர் வைத்த தேவே மதுரை வியன் தெருவில்
மாணிக்கம் விற்ற செம் மாணிக்கமே எனை வாழ்வித்ததோர்
ஆணி_பொன்னே தெள் அமுதே நின் செய்ய அடி_மலர்க்குக்
காணிக்கையாக்கிக்கொண்டு ஆள்வாய் எனது கருத்தினையே

125. மா கலை_வாணர் பிறன்-பால் எமக்கும் மனைக்கும் கட்ட
நீ கலை தா ஒரு மேகலை தா உண நெல்_மலை தா
போகல் ஐயா எனப் பின்தொடர்வார் அவர் போல் மனன் நீ
ஏகலை ஈகலர் ஏகம்பவாணரிடம் செல்கவே

126. ஊர் தருவார் நல்ல ஊண் தருவார் உடையும் தருவார்
பார் தருவார் உழற்கு ஏர் தருவார் பொன் பணம் தருவார்
சோர் தருவார் உள் அறிவு கெடாமல் சுகிப்பதற்கு இங்கு
ஆர் தருவார் அம்மை ஆர்தரு பாகனை அன்றி நெஞ்சே

127. பண் செய்த சொல் மங்கை_பாகா வெண் பாற்கடல் பள்ளிகொண்டோன்
திண் செய்த சக்கரம் கொள்வான் அருச்சனை செய்திட்ட நாள்
விண் செய்த நின் அருள் சேவடி மேல் பட வேண்டி அவன்
கண் செய்த நல் தவம் யாதோ கருத்தில் கணிப்ப அரிதே

128. மா_பிட்டு நேர்ந்து உண்டு வந்தியை வாழ்வித்த வள்ளல் உன் வெண்
காப்பு இட்டு மேல் பல பாப்பு இட்ட மேனியைக் கண்டு தொழக்
கூப்பிட்டு நான் நிற்க வந்திலை நாதனைக் கூட இல்லாள்
பூப்பிட்ட காலத்தில் கூப்பிட்ட போதினும் போவதுண்டே

129. என் மேல் பிழை இலை யான் என் செய்கேன் என்னிடத்து இருந்து என்
சொல் மேற்கொளாது எனை இல் மேல் துரும்பு எனச் சுற்றும் நெஞ்சத்
தின் மேல் பிழை அது புல் மேல் பனி எனச் செய்து ஒழிக்க
நின் மேல் பரம் விடை-தன் மேல் கொண்டு அன்பர் முன் நிற்பவனே

130. மை விட்டிடா மணி_கண்டா நின்றன்னை வழுத்தும் என்னை
நெய் விட்டிடா உண்டி போல் இன்பு_இலான் மெய் நெறி அறியான்
பொய் விட்டிடான் வெம் புலை விட்டிடான் மயல் போகம் எலாம்
கைவிட்டிடான் எனக் கைவிட்டிடேல் வந்து காத்து அருளே

131. நல் அமுதம் சிவை தான் தரக் கொண்டு நின் நல் செவிக்குச்
சொல் அமுதம் தந்த எங்கள் பிரான் வளம் சூழ் மயிலை
இல் அமுதம் திகழ் பெண்ணாக என்பை எழுப்பிய நாள்
சில் அமுதம் பெற்ற தேவரை வானம் சிரித்தது அன்றே

132. சொற்றுணை வேதியன் என்னும் பதிகச் சுருதியை நின்
பொன் துணை வார் கழற்கு ஏற்றி அப் பொன் அடிப் போதினையே
நல் துணையாக் கரை ஏறிய புண்ணிய நாவரசைக்
கற்று நையாது இந்தக் கல் துணையாம் என் கடை நெஞ்சமே

133. சடையவ நீ முன் தடுத்தாண்ட நம்பிக்குச் சற்றெனினும்
கடையவனேன் செயும் கைம்மாறு அறிந்திலன் கால் வருந்தி
நடையுற நின்னைப் பரவை-தன் பாங்கர் நடத்தி அன்பர்
இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான் வெளியிட்டதற்கே

134. திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு அன்று தென்னன் முன்னே
வெருவாத வைதிகப் பாய் பரி மேல் கொண்டு மேவி நின்ற
ஒருவாத கோலத்து ஒருவா அக் கோலத்தை உள் குளிர்ந்தே
கருவாதம் நீங்கிடக் காட்டு கண்டாய் என் கனவினிலே

135. சீர் தரு நாவுக்கரையரைப் போல் இச் சிறியனும் ஓர்
கார் தரு மாயைச் சமணால் மனக் கருங்கல்லில் கட்டிப்
பார் தரு பாவக் கடலிடை வீழ்த்திடப் பட்டு உழன்றே
ஏர்தரும் ஐந்தெழுத்து ஓதுகின்றேன் கரை ஏற்று அரசே

136. தூக்கமும் சோம்பலும் துக்கமும் வாழ்க்கையைத் தொட்டு வரும்
ஏக்கமும் நோயும் இடையூறும் மற்றை இடரும் விட்ட
நீக்கமும் நின்மல நெஞ்சமும் சாந்த நிறைவும் அருள்
ஆக்கமும் நின் பதத்து அன்பும் தருக அருள் சிவமே

137. பொய் வந்த வாயும் புலை வந்த செய்கையும் புன்மை எல்லாம்
கைவந்த நெஞ்சமும் கண்டேன் இனி நல் கனிவுடன் யான்
மெய் வந்த வாயும் விதி வந்த செய்கையும் வீறு அன்பினால்
தைவந்த நெஞ்சமும் காண்பது என்றோ செம் சடைக் கனியே

138. கங்கை கொண்டாய் மலர் வேணியிலே அருள் கண்ணி மலை_
மங்கை கொண்டாய் இடப் பாகத்திலே ஐய மற்றும் ஒரு
நங்கை கொண்டால் எங்கு கொண்டு அருள்வாய் என்று நண்ணும் அன்பர்
சங்கை கொண்டால் அதற்கு என் சொல்லுவாய் முக்கண் சங்கரனே

139. வாள் கொண்ட கண்ணியர் மாயா விகார வலை பிழைத்து உன்
தாள் கொண்ட நீழலில் சார்ந்திடுமாறு என்றனக்கு அருள்வாய்
கீள் கொண்ட கோவணப் பேர்_அழகா எனைக் கேதம் அற
ஆட்கொண்ட நீ இன்று வாளா இருப்பது அழகு அல்லவே

140. வீட்டுத் தலைவ நின் தாள் வணங்கார்-தம் விரி தலை சும்
மாட்டுத் தலை பட்டி_மாட்டுத் தலை புன் வராகத் தலை
ஆட்டுத் தலை வெறி_நாய்த் தலை பாம்பின் அடும் தலை கல்
பூட்டுத் தலை வெம் புலைத் தலை நாற்றப் புழுத் தலையே

141. தெள் நீர்_முடியனைக் காணார்-தம் கண் இருள் சேர் குருட்டுக்
கண் நீர் சொரிந்த கண் காசக் கண் புன் முலைக் கண் நகக் கண்
புண் நீர் ஒழுகும் கொடும் கண் பொறாமைக் கண் புன் கண் வன் கண்
மண் நீர்மை உற்ற கண் மா மணி நீத்த கண் மாலை_கண்ணே

142. கண்_நுதலான் புகழ் கேளார் செவி பொய்க் கதை ஒலியும்
அண்ணுற மாதரும் மைந்தரும் கூடி அழும் ஒலியும்
துண்ணெனும் தீ_சொல் ஒலியும் அ அந்தகன் தூதர்கள் மொத்
துண்ணுற வா என்று உரப்பு ஒலியும் புகும் ஊன் செவியே

143. மணி கொண்ட கண்டனை வாழ்த்தார்-தம் வாய்த் தெரு மண் உண்ட வாய்
பிணி கொண்ட வாய் விடப் பிச்சு உண்ட வாய் வரும் பேச்சு அற்ற வாய்
துணிகொண்ட வாய் அனல் சூடுண்ட வாய் மலம் சோர்ந்து இழி வாய்
குணி கொண்ட உப்பிலிக் கூழ் உண்ட வாய் எனக் கூறுபவே

144. சகம் இலையே என்று உடையானை எண்ணலர்-தங்கள் நெஞ்சம்
சுகம் இலையே உணச் சோறு இலையே கட்டத் தூசு இலையே
அகம் இலையே பொருள் ஆ இலையே வள்ளலார் இலையே
இகம் இலையே ஒன்றும் இங்கு இலையே என்று இரங்கும் நெஞ்சே

145. பொங்கு அரும் பேர் முலை மங்கைக்கு இடம் தந்த புத்தமுதே
செங்கரும்பே நறும் தேனே மதுரச் செழும் கனியே
திங்களும் கங்கையும் சேர்ந்து ஒளிர் வேணிச் சிவ_கொழுந்தே
எங்களை ஆட்கொண்டும் என்னே துயரில் இருத்துவதே

146. வில்லைப் பொன்னாக் கரம் கொண்டோய் வன் தொண்டர் விரும்புறச் செங்
கல்லைப் பொன் ஆக்கிக் கொடுத்தோய் நின் பாதம் கருத்தில்வையார்
புல்லைப் பொன்னாக் கொளும் புல்லர்கள்-பால் சென்று பொன் அளிக்க
வல்லைப் பொன் ஆர் புய என்பார் இஃது என் சொல்_வாணர்களே

147. கூத்து_உடையாய் என்_உடையாய் முத்தேவரும் கூறுகின்ற
ஏத்து_உடையாய் அன்பர் ஏத்து_உடையாய் என்றன் எண்மை மொழிச்
சாத்து_உடையாய் நின்றனக்கே பரம் எனைத் தாங்குதற்கு ஓர்
வேத்து_உடையார் மற்று இலை அருள் ஈது என்றன் விண்ணப்பமே

148. வெப்பு இலையே எனும் தண் விளக்கே முக்கண் வித்தக நின்
ஒப்பு இலையே எனும் சீர் புகலார் புற்கை உண்ணுதற்கு ஓர்
உப்பு இலையே பொருள் ஒன்று இலையே என்று உழல்பவர் மேல்
தப்பு இலையே அவர் புன் தலை ஏட்டில் தவம் இலையே

149. எனைப் பெற்ற தாயினும் அன்பு_உடையாய் எனக்கு இன்பம் நல்கும்
உனைப் பெற்ற உள்ளத்தவர் மலர்ச் சேவடிக்கு ஓங்கும் அன்பு-
தனைப் பெற்ற நல் மனம் தாம் பெற்ற மேலவர் சார்பைப் பெற்றால்
வினைப் பெற்ற வாழ்வின் மனைப் பெற்றம் போல மெலிவது இன்றே

150. நிறைமதியாளர் புகழ்வோய் சடை உடை நீள் முடி மேல்
குறை_மதி தான் ஒன்று கொண்டனையே அக் குறிப்பு எனவே
பொறை மதியேன்-தன் குறை மதி-தன்னையும் பொன் அடிக் கீழ்
உறை மதியாக் கொண்டு அருள்வாய் உலகம் உவப்புறவே

151. துடி வைத்த செங்கை அரசே நல்லூரில் நின் தூ மலர்ப் பொன்
அடி வைத்த போது எங்கள் அப்பர்-தம் சென்னி-அது குளிர்ந்து எப்
படி வைத்ததோ இன்பம் யான் எணும்-தோறும் இப் பாவிக்கு மால்
குடிவைத்த புன் தலை ஒன்றோ மனமும் குளிர்கின்றதே

152. ஒரு முடி மேல் பிறை வைத்தோய் அரி அயன் ஒண் மறை-தம்
பெரு முடி மேல் உற வேண்ட வராது உனைப் பித்தன் என்ற
மரு முடி ஊரன் முடி மேல் மறுப்பவும் வந்தது அவர்
திரு_முடி மேல் என்ன ஆசை கண்டாய் நின் திரு_அடிக்கே

153. வேல் கொண்ட கையும் முந்நூல் கொண்ட மார்பமும் மென் மலர்ப் பொன்
கால் கொண்ட ஒண் கழல் காட்சியும் பன்னிரு கண்ணும் விடை
மேல் கொண்ட செஞ்சுடர் மேனியும் சண் முக வீறும் கண்டு
மால் கொண்ட நெஞ்சம் மகிழ்வது எந்நாள் என் கண் மா மணியே

154. விண் பூத்த கங்கையும் மின் பூத்த வேணியும் மென் முகமும்
கண் பூத்த நெற்றியும் பெண் பூத்த பாகமும் கார் மிடறும்
தண் பூத்த பாதமும் பொன் பூத்த மேனியும் சார்ந்து கண்டே
மண் பூத்த வாழ்க்கையை விண் பூத்த பூவின் மதிப்பது என்றே

155. தண் மதியோ அதன் தண் அமுதோ எனச் சார்ந்து இருள் நீத்து
உள்_மதியோர்க்கு இன்பு உதவும் நின் பேர்_அருள் உற்றிடவே
எண் மதியோடு இச்சை எய்தாது அலையும் என் ஏழை மதி
பெண் மதியோ அன்றிப் பேய் மதியோ என்ன பேசுவதே

156. பிட்டுக்கும் வந்து முன் மண் சுமந்தாய் என்பர் பித்தன் என்ற
திட்டுக்கும் சீர் அருள்செய்து அளித்தாய் என்பர் தீ விறகுக்
கட்டுக்கும் பொன் முடி காட்டி நின்றாய் என்பர் கண்டிட என்
மட்டுக்கும் வஞ்சகத் தெய்வம் என்கோ முக்கண் மாணிக்கமே

157. மை இட்ட கண்ணியர் பொய் இட்ட வாழ்வின் மதி மயங்கிக்
கையிட்ட நானும் உன் மெய் இட்ட சீர் அருள் காண்குவனோ
பை இட்ட பாம்பு அணியை இட்ட மேனியும் பத்தர் உள்ளம்
மொய் இட்ட காலும் செவ்வை இட்ட வேலும் கொள் முன்னவனே

158. தவமே புரியும் பருவம் இலேன் பொய்ச் சக நடை-கண்
அவமே புரியும் அறிவு_இலியேனுக்கு அருளும் உண்டோ
உவமேயம் என்னப்படாது எங்கும் ஆகி ஒளிர் ஒளியாம்
சிவமே முக்கண் உடைத் தேவே நின் சித்தம் தெரிந்திலனே

159. மட்டு உண்ட கொன்றைச் சடை அரசே அன்று வந்தி இட்ட
பிட்டு உண்ட பிச்சைப் பெருந்தகையே கொடும் பெண் மயலால்
கட்டுண்ட நான் சுகப்பட்டு உண்டு வாழ்வன் இக் கல்_மனமாம்
திட்டுண்ட பேய்த் தலை வெட்டுண்ட நாளில் என் தீமை அற்றே

160. ஆட்டுக்குக் கால் எடுத்தாய் நினைப் பாடலர் ஆங்கு இயற்றும்
பாட்டுக்குப் பேர் என்-கொல் பண் என்-கொல் நீட்டி அப் பாட்டு எழுதும்
ஏட்டுக்கு மை என்-கொல் சேற்றில் உறங்க இறங்கும் கடா
மாட்டுக்கு வீடு என்-கொல் பஞ்சணை என்-கொல் மதித்திடினே

161. ஒப்பு அற்ற முக்கண் சுடரே நின் சீர்த்தி உறாத வெறும்
துப்பு அற்ற பாட்டில் சுவை உளதோ அதைச் சூழ்ந்து கற்றுச்
செப்பு அற்ற வாய்க்குத் திரு உளதோ சிறிதேனும் உண்டேல்
உப்பு அற்ற புன் கறி உண்டோர்-தம் நாவுக்கு உவப்பு உளதே

162. சேல் வரும் கண்ணி இடத்தோய் நின் சீர்த்தியைச் சேர்த்தி அந்த
நால்வரும் செய் தமிழ் கேட்டுப் புறத்தில் நடக்கச் சற்றே
கால் வரும் ஆயினும் இன்புருவாகிக் கனி மனம் அப்
பால் வருமோ அதன்-பால் பெண்களை விட்டுப் பார்க்கினுமே

163. கார்முகமாகப் பொன் கல் வளைத்தோய் இக் கடையவனேன்
சோர் முகமாக நின் சீர் முகம் பார்த்துத் துவளுகின்றேன்
போர் முகமாக நின்றோரையும் காத்த நின் பொன் அருள் இப்
பார் முகமாக என் ஓர் முகம் பார்க்கப் பரிந்திலதே

164. வான் வளர்த்தாய் இந்த மண் வளர்த்தாய் எங்கும் மன் உயிர்கள்-
தான் வளர்த்தாய் நின் தகை அறியா என்றனை அரசே
ஏன் வளர்த்தாய் கொடும் பாம்பை எல்லாம் தள்ளிலை வளர்த்தாய்
மான் வளர்த்தாய் கரத்து ஆர் நினைப் போல வளர்ப்பவரே

165. அல் கண்டம் ஓங்கும் அரசே நின்றன் அடியார் மதுரச்
சொல் கண்ட போதும் என் புல் கண்ட நெஞ்சம் துணிந்து நில்லாது
இல் கண்ட மெய்த் தவர் போல் ஓடுகின்றது எறிந்தது தீம்
கற்கண்டு எனினும் அக் கல் கண்ட காக்கை நிற்காது என்பரே

166. சொல்லுகின்றோர்க்கு அமுதம் போல் சுவை தரும் தொல் புகழோய்
வெல்லுகின்றோர் இன்றிச் சும்மா அலையும் என் வேட நெஞ்சம்
புல்லுகின்றோர்-தமைக் கண்டால் என் ஆம்-கொல் புகல் வெறும் வாய்
மெல்லுகின்றோர்க்கு ஒரு நெல் அவல் வாய்க்கில் விடுவர் அன்றே

167. சீர் இடுவார் பொருள் செல்வர்க்கு அலாமல் இத் தீனர்கட்கு இங்கு
ஆர் இடுவார் பிச்சை ஆயினும் பிச்சன் அசடன் என்றே
பேரிடுவார் வம்புப் பேச்சிடுவார் இந்தப் பெற்றி கண்டும்
போரிடுவார் நினைப் போற்றார் என்னே முக்கண் புண்ணியனே

168. சேலுக்கு நேர் விழி மங்கை_பங்கா என் சிறுமதி-தான்
மேலுக்கு நெஞ்சை உள் காப்பது போல் நின்று வெவ் விடய
மாலுக்கு வாங்கி வழங்கவும் தான் சம்மதித்தது காண்
பாலுக்கும் காவல் வெம் பூனைக்கும் தோழன் என்பார் இதுவே

169. இணை ஏதும் இன்றிய தேவே கனல் இனன் இந்து எனும் முக்
கணையே கொளும் செங்கரும்பே பிறவி_கடல் கடத்தும்
புணையே திரு_அருள் பூரணமே மெய்ப் புலம் அளிக்கும்
துணையே என் துன்பம் துடைத்து ஆண்டுகொள்ளத் துணிந்து அருளே

170. நிலை காட்டி ஆண்ட நின் தாட்கு அன்பு இலாது அன்பில் நீண்டவன் போல்
புலை காட்டிய மனத்தேன் கொண்ட வேடம் புனை இடை மேல்
கலை காட்டிக் கட்டு_மயிர்த் தலை காட்டிப் புன் கந்தை சுற்றி
முலை காட்டி ஆண்_மகன் பெண் வேடம் காட்டு முறைமை அன்றே

171. விட நாகப் பூண் அணி மேலோய் என் நெஞ்சம் விரிதல்விட்டு என்
உடனாக மெய் அன்பு உள் ஊற்றாக நின் அருள் உற்றிடுதற்கு
இடனாக மெய் நெறிக்கு ஈடாகச் செய்குவது இங்கு உனக்கே
கடனாக நிற்பது கண்டேன் பின் துன்பு ஒன்றும் கண்டிலனே

172. நயப்படும் ஓர் நின் அருள் எனக்கு இன்று எனில் நாய் மனம் என்
வயப்படுமோ துயர் மண்படுமோ நல்ல வாழ்வை என்னால்
செயப்படுமோ குணம் சீர்ப்படுமோ பவம் சேரச் சற்றும்
பயப்படுமோ மலம் பாழ்படுமோ எம் பசுபதியே

173. சோபம் கண்டார்க்கு அருள்செய்வோய் மதிக்கு அன்றிச் சூழ்ந்திடு வெம்
தீபம் கண்டாலும் இருள் போம் இ ஏழை தியங்கும் பரி
தாபம் கண்டாய் அருள்செய்யாது என் குற்றம்-தனைக் குறித்துக்
கோபம் கண்டாலும் நன்று ஐயா என் துன்பக் கொதிப்பு அறுமே

174. எல்லாம் உடைய இறையவனே நினை ஏத்துகின்ற
நல்லார்-தமக்கு ஒரு நாளேனும் பூசை நயந்து இயற்றிச்
சொல்லால் அவர் புகழ் சொல்லாது இவ்வண்ணம் துயர்வதற்கு என்
கல்லாமை ஒன்று மற்று இல்லாமை ஒன்று இரு காரணமே

175. பிறை ஆறு கொண்ட செவ் வேணிப் பிரான் பதப் பேறு அடைவான்
மறை ஆறு காட்டும் நின் தண் அருளே அன்றி மாயை என்னும்
நிறை ஆறு சூழும் துரும்பாய்ச் சுழலும் என் நெஞ்சின் உள்ள
குறை ஆறுதற்கு இடம் வேறு இல்லை காண் இக் குவலையத்தே

176. மால் அறியாதவன் அன்றே அத் தெய்வ வரதனும் நின்
கால் அறியாதவன் என்றால் அக் காலை எக் காலை எமைப்
போல் அறியாதவர் காண்பார் முன் கண்ட மெய்ப் புண்ணியர்-தம்
பால் அறியாதவன் நான் இது கேட்டு உணர்பாலன் அன்றே

177. ஒன்றே என் ஆர்_உயிர்க்கு ஓர் உறவே எனக்கு ஓர் அமுதே
நன்றே முக்கண் உடை நாயகமே மிக்க நல்ல குணக்
குன்றே நிறை அருள் கோவே எனது குல_தெய்வமே
மன்றே ஒளிர் முழு மாணிக்கமே எனை வாழ்விக்கவே

178. தாழ்வு ஏதும் இன்றிய கோவே எனக்குத் தனித்த பெரு
வாழ்வே நுதல்_கண் மணியே என் உள்ள மணி_விளக்கே
ஏழ் வேலை என்னினும் போதா இடும்பை இடும் குடும்பப்
பாழ் வேதனைப்பட மாட்டேன் எனக்கு உன் பதம் அருளே

179. வண்டு கொண்டு ஆர் நறும் கொன்றையினான்-தன் மலர்_அடிக்குத்
தொண்டுகொண்டார்-தம் சுகத்துக்கும் வாழ்க்கைச் சுழலில் தள்ளும்
பெண்டுகொண்டார்-தம் துயருக்கும் ஒப்பு இன்று பேசில் என்றே
கண்டுகொண்டாய் இனி நெஞ்சே நின் உள்ளக் கருத்து எதுவே

180. மலம் கவிழ்ந்தார் மனம் வான் கவிழ்ந்தாலும் அ வான் புறமாம்
சலம் கவிழ்ந்தாலும் சலியாது என் புன் மனம்-தான் கடலில்
கலம் கவிழ்ந்தார் மனம் போலே சலிப்பது காண் குடும்ப
விலங்கு அவிழ்ந்தால் அன்றி நில்லாது என் செய்வல் விடையவனே

181. மை கொடுத்து ஆர் நெடும் கண் மலை மானுக்கு வாய்ந்து ஒரு பால்
மெய் கொடுத்தாய் தவர் விட்ட வெம் மானுக்கு மேவுற ஓர்
கை கொடுத்தாய் மயல் கண்ணியில் வீழ்ந்து உள் கலங்குறும் என்
கொய் கொடுத்து ஆழ் மன மானுக்குக் காலைக் கொடுத்து அருளே

182. உடம்பார் உறு மயிர்க்கால் புழை-தோறு அனலூட்டி வெய்ய
விடம் பாச்சிய இருப்பு ஊசிகள் பாய்ச்சினும் மெத்தென்னும் இத்
தடம் பார் சிறு நடைத் துன்பம் செய் வேதனை தாங்க அரிது என்
கடம்பா நல் பன்னிரு கண்ணா இனி எனைக் காத்து அருளே

183. மண்ணாலும் மண்ணுற்ற வாழ்க்கையினாலும் அ வாழ்க்கைக்கு உற்ற
பெண்ணாலும் நொந்து வந்தாரை எலாம் அருள் பேறு எனும் முக்
கண்ணாலும் பார்த்து ஐந்து கையாலும் ஈயும் கணபதி நின்
பண் ஆலும் மா மறை மேல் தாளை என் உள் பதித்தருளே

184. வான் ஆள மால் அயன் வாழ்வு ஆள அன்றி இ மண் முழுதும்
தான் ஆள நின் பதம் தாழ்பவர் தாழ்க ஒண் சங்கை அம் கை
மான் ஆள மெய் இடம் தந்தோய் துன்பு அற்ற மனம்-அது ஒன்றே
நான் ஆள எண்ணி நின் தாள் ஏத்துகின்றனன் நல்குகவே

185. ஈடு அறியாத முக்கண்ணா நின் அன்பர் இயல்பினை இ
நாடு அறியாது உன் அருள் அன்றி ஊண் சுவை நாவை அன்றி
மேடு அறியாது நல் பாட்டைக் கற்றோர் அன்றி மேல் சுமந்த
ஏடு அறியாது அவை ஏன் அறியா என்று இகழ்வர் அன்றே

186. சூடுண்ட பூஞைக்குச் சோறு உண்ட வாய் பின் துடிப்பது அன்றி
ஊடுண்ட பால் இட்ட ஊண் கண்டதேனும் உணத் துணியாது
ஈடுண்ட என் மனம் அந்தோ துயரில் இடியுண்டும் இ
வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்டதால் எம் விடையவனே

187. கரம் காட்டி மை இட்ட கண் காட்டி என் பெரும் கன்ம நெஞ்சக்
குரங்கு ஆட்டிச் சேய்மையில் நிற்கின்ற மாதரைக் கொண்டு கல்லார்
உரம் காட்டிக் கோல் ஒன்று உடன் நீட்டிக் காட்டி உரப்பி ஒரு
மரம் காட்டிய குரங்கு ஆட்டுகின்றோர் என் மணி கண்டனே

188. களங்கனி போல் மணி_கண்டா நின் பொன் கழல் காணற்கு என் சிற்
றுளம் கனியாது நின் சீர் கேட்கினும் அன்புற உருகா
வளம் கனி காமம் சிறவாமல் சிற்றில் வகுத்து உழலும்
இளம் கனி போல் நின்றது என் செய்குவேன் எம் இறையவனே

189. மா மத்தினால் சுழல் வெண் தயிர் போன்று மடந்தையர்-தம்
காமத்தினால் சுழல் என்றன் நெஞ்சோ உன்றன் காலை அன்பாம்
தாமத்தினால் தளையிட்ட நெஞ்சோ இத்தகை இரண்டின்
நாமத்தினால் பித்தன் என்போய் நினக்கு எது நல்ல நெஞ்சே

190. ஏற்றில் இட்டார் கொடி கொண்டோய் விளக்கினை ஏற்ற பெரும்
காற்றில் இட்டாலும் இடலாம் நெல் மாவைக் கலித்திடும் நீர்
ஆற்றில் இட்டாலும் பெறலாம் உள் காலை அடும் குடும்பச்
சேற்றில் இட்டால் பின்பு அரிதாம் எவர்க்கும் திருப்புவதே

191. தேர் ஓங்கு காழி-கண் மெய்ஞ்ஞானப் பால் உண்ட செம்மணியைச்
சீர் ஓங்கு முத்துச் சிவிகையின் மேல் வைத்த தேவ உன்றன்
பேர் ஓங்கும் ஐந்தெழுத்து அன்றோ படைப்பைப் பிரமனுக்கும்
ஏர் ஓங்கு காப்பைத் திரு நெடுமாலுக்கும் ஈந்ததுவே

192. வேதனையா மதுசூதனையா என்று வேதனையால்
போதல் நையாநின்று உனைக் கூவும் ஏழையைப் போதனை கேள்
வாதனை யாது இங்கு வா தனையா என்று உன் வாய்_மலரச்
சோதனையாயினும் சோதனை யா சிற்சுகப் பொருளே

193. இன்பு அற்ற இச் சிறு வாழ்க்கையிலே வெயில் ஏற வெம்பும்
என்பு அற்ற புன் புழுப் போல் தளர் ஏழை எனினும் இவன்
அன்பு அற்ற பாவி என்று அந்தோ எனை விடில் ஐய வையத்து
என் பற்று-அது ஆக மற்று இல்லை கண்டாய் எனை ஏன்றுகொள்ளே

194. களம் கொண்ட ஓர் மணிக் காட்சியும் முச்சுடர்க் கண் அருளும்
வளம் கொண்ட தெய்வத் திரு_முக மாட்சியும் வாய்ந்த பரி
மளம் கொண்ட கொன்றைச் சடையும் பொன் சேவடி மாண்பும் ஒன்ற
உளம்கொண்ட புண்ணியர் அன்றோ என்றன்னை உடையவரே

195. காவிக்கு நேர் மணி_கண்டா வண்டு ஆர் குழல் கற்பு அருளும்
தேவிக்கு வாமம் கொடுத்தோய் நின் மா மலர்ச் சேவடி-பால்
சேவிக்கும் சேவகம்செய்வோரை ஆயினும் சேவிக்க இப்
பாவிக்கு வாய்க்கில் என் ஆவிக்கு நீண்ட பயன் அதுவே

196. கொங்கு இட்ட கொன்றைச் சடையும் நின் ஓர் பசும் கோமளப் பெண்
பங்கிட்ட வெண் திரு_நீற்று ஒளி மேனியும் பார்த்திடில் பின்
இங்கு இட்ட மாயையை எம் கிட்ட வா என்று இசைப்பினும் போய்ச்
சங்கு இட்ட ஓசையில் பொங்கிட்ட வாய் கொடு தாண்டிடுமே

197. வெம் பெரு மானுக்குக் கை கொடுத்து ஆண்ட மிகும் கருணை
எம்பெருமானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்_பிடியார்-
தம் பெருமானுக்கும் சார் மலை_மானுக்கும் சாற்றும் ஐங்கைச்
செம்பெருமானுக்கும் எந்தாய்க்கும் நான் பணி செய்யச் செய்யே

198. சாற்ற அனேக நல் நா உள்ளதாயினும் சாற்ற அரிதாம்
வீற்றவனே வெள்ளி வெற்பவனே அருள் மேவிய வெண்
நீற்றவனே நின் அருள்தர வேண்டும் நெடு முடி வெள்
ஏற்றவனே பலி ஏற்றவனே அன்பர்க்கு ஏற்றவனே

199. பதியே சரணம் பரமே சரணம் பரம்பரமாம்
திதியே சரணம் சிவமே சரணம் சிவம் உணர்ந்தோர்
கதியே சரணம் என் கண்ணே சரணம் முக்கண் கருணா
நிதியே சரணம் சரணம் என்-பால் மெய் நிலை அருளே

200. என் உறவே என் குருவே என் உள்ளத்து எழும் இன்பமே
என் உயிரே என்றன் அன்பே நிலைபெற்ற என் செல்வமே
என் அறிவே என்றன் வாழ்வே என் வாழ்வுக்கு இடு முதலே
என் அரசே என் குல_தெய்வமே எனை ஏன்றுகொள்ளே

201. கான் போல் இருண்ட இ வஞ்சக வாழ்க்கையில் கல்_நெஞ்சமே
மான் போல் குதித்துக்கொண்டு ஓடேல் அமுத மதி விளங்கும்
வான் போல் குளிர்ந்த சிவானந்த வாழ்க்கையின் வாழ்வுறச் செந்
தேன் போல் இனிக்கும் சிவாயநம எனச் சிந்தைசெய்யே

202. வேதன் என் கோது அற வேண்டும் என் கோ என விண்ணப்பம்செய்
பாதன் என்கோ கடல் பள்ளிகொண்டான் தொழும் பண்பன் என்கோ
நாதன் என்கோ பரநாதன் என்கோ எங்கள் நம்பிக்கு நல்
தூதன் என்கோ அவன் தோழன் என்கோ நினைத் தூய் மணியே

203. இயங்கா மனமும் கயங்கா நிலையும் இக_பரத்தே
மயங்கா அறிவும் தியங்கா நெறியும் மகிழ்ந்து அருள்வாய்
வயங்கா நிலத்தின் முயங்கா உயர் தவர் வாழ்த்துகின்ற
புயங்கா துதித்தற்கு உயங்காதவர் உள் புகுந்தவனே

204. சிவசங்கரா சிவயோகா சிவகதிச் சீர் அளிக்கும்
சிவசம்புவே சிவலோகா சிவாநந்தச் செல்வம் நல்கும்
சிவசுந்தரா சிவபோகா சிவாகமச் செந்நெறி சொல்
சிவபுங்கவா சிவஞானிகள் வாழ்த்தும் சிவகுருவே

205. மதி தத்துவாந்த அருள் சிவமே சின்மய சிவமே
துதி சித்து எலாம் வல்ல மெய்ச் சிவமே சிற்சுக சிவமே
கதி நித்த சுத்தச் சிவமே விளங்கு முக்கண் சிவமே
பதி சச்சிதாநந்த சிற்சிவமே எம் பரசிவமே

206. கடும் புல வேடர்கள் ஓர் ஐவர் இந்தியக் கள்வர் ஐவர்
கொடும் கரணத் துட்டர் நால்வர்கள் வன் மலக் கோளர் ஐவர்
அடும் படை கோடி கொண்டு உற்றார் மற்று ஏழையன் யான் ஒருவன்
இடும் படை யாதும் இலேன் வெல்வது எங்ஙன் இறையவனே

207. இடை_கொடி வாமத்து இறைவா மெய்ஞ்ஞானிகட்கு இன்பம் நல்கும்
விடைக் கொடி ஏந்தும் வலத்தாய் நின் நாமம் வியந்து உரையார்
கடைக் கொடி போலக் கதறுகின்றார் பொய்_கதையவர்-தாம்
புடைக் கொடியால் அன்றிப் புல்லால் எயிலைப் புனைபவரே

208. உருமத்திலே பட்ட புன் புழுப் போல் இ உலக நடைக்
கருமத்திலே பட்ட என் மனம்-தான் நின் கழல் அடையும்
தருமத்திலே பட்டது இன்றே என்று எண்ணுந்தனையும் அந்தோ
மருமத்திலே பட்ட வாளியைப் போன்று வருத்துவதே

209. என் இறைவா இமையோர் இறைவா மறையின் முடி பின்
முன் இறைவா மலை_மின் இறைவா மலர் முண்டகத்தோன்-
தன் இறைவா திதித்தான் இறைவா மெய்த் தபோதனர் உள்
மன் இறைவா இங்கு வா என்று எனக்கு நல் வாழ்வு அருளே

210. போற்றி என் ஆவித் துணையே என் அன்பில் புகும் சிவமே
போற்றி என் வாழ்வின் பயனே என் இன்பப் புது நறவே
போற்றி என் கண்ணுள் மணியே என் உள்ளம் புனை அணியே
போற்றி என் ஓர் பெரும் தேவே கருணை புரிந்து அருளே

211. கஞ்சத்தில் ஏர் முகம் அஞ்சத்தில் ஏர் நடைக் கன்னியர் கண்
நஞ்சத்திலே அவர் வஞ்சத்திலே பட்டு நாணுறும் புன்
நெஞ்சத்திலே அதன் தஞ்சத்திலே முக்கணித்த என் போல்
பஞ்சத்திலே பிரபஞ்சத்திலே உழப்பார் எவரே

212. நான்முகத்தோனும் திரு நெடுமாலும் மெய்ஞ்ஞானம் என்னும்
வால் முகக் கண் கொண்டு காணாமல் தம் உரு மாறியும் நின்
தேன் முகக் கொன்றை முடியும் செந்தாமரைச் சேவடியும்
ஊன் முகக் கண் கொண்டு தேடி நின்றார் சற்று உணர்வு_இலரே

213. இருவர்க்கு அறியப்படாது எழுந்து ஓங்கி நின்று ஏத்துகின்றோர்
கரு வர்க்கம் நீக்கும் கருணை_வெற்பே என் கவலையை இங்கு
ஒருவர்க்கு நான் சொல மாட்டேன் அவர் என் உடையவரோ
வெருவற்க என்று எனை ஆண்டு அருள் ஈது என்றன் விண்ணப்பமே

214. ஒண் நுதல் ஏழை மடவார்-தம் வாழ்க்கையின் உற்றிடினும்
பண் நுதல் ஏர் மறை ஆயிரம் சூழும் நின் பாதத்தை யான்
எண்ணுதலே தொழிலாகச் செய்வித்து என்னை ஏன்றுகொள்வாய்
கண்_நுதலே கருணை)_கடலே என் கருத்து இதுவே

215. தளைக்கின்ற மாயக் குடும்பப் பெரும் துயர் தாங்கி அந்தோ
இளைக்கின்ற ஏழைக்கு இரங்கு கண்டாய் சிறிதே இறகு
முளைக்கின்றபோது அறுப்பார் போல் நின் நாமம் மொழிந்திடும் கால்
வளைக்கின்ற மாயைக்கு இங்கு ஆற்றேன் முக்கண் உடை மா மணியே

216. மஞ்சு அடைவான நிறத்தோன் அயன் முதல் வானவர்க்கா
நஞ்சு அடையாளம் இடும் மிடற்றோய் கங்கை நண்ணுகின்ற
செஞ்சடையாய் நின் திரு_பெயராகச் சிறந்த எழுத்து
அஞ்சு அடையார் கண்கள் பஞ்சடையா முன் அறிவு_இலரே

217. இலங்காபுரத்தன் இராக்கதர்_மன்னன் இராவணன் முன்
மலங்கா நின் வெள்ளி மலைக் கீழ் இருந்து வருந்த நின் சீர்
கலங்காமல் பாடிடக் கேட்டே இரங்கிக் கருணைசெய்த
நலம் காண் நின் தன்மை இன்று என்னளவு யாண்டையின் நண்ணியதே

218. உடை என்றும் பூண் என்றும் ஊண் என்றும் நாடி உழன்றிடும் இ
நடை என்றும் சஞ்சலம் சஞ்சலம் காண் இதில் நான் சிறியேன்
புடை என்று வெய்யல் உறும் புழுப் போன்று புழுங்குகின்றேன்
விடை என்று மால் அறம் கொண்டோய் என் துன்பம் விலக்குகவே

219. அருள் அரசே அருள்_குன்றே மன்று ஆடும் அருள் இறையே
அருள் அமுதே அருள் பேறே நிறைந்த அருள்_கடலே
அருள் அணியே அருள் கண்ணே விண் ஓங்கும் அருள் ஒளியே
அருள் அறமே அருள் பண்பே முக்கண் கொள் அருள் சிவமே

220. நிலை அறியாத குடும்பத் துயர் என்னும் நீத்தத்திலே
தலை அறியாது விழுந்தேனை ஆண்டு அருள்-தான் அளிப்பாய்
அலை அறியாத கடலே முக்கண் கொண்ட ஆர்_அமுதே
விலை_அறியாத மணியே விடேல் இது என் விண்ணப்பமே

221. மெய் அகத்தே கணப் போதும் விடாது விரும்புகின்றோர்
கையகத்தே நின்று ஒளிர் கனியே நுதல்_கண் கரும்பே
வையகத்தே நினை அல்லாமல் நல் துணை மற்று இலை இப்
பொய்_அகத்தேன் செயும் தீங்கு ஆயிரமும் பொறுத்து அருளே

222. முலைக்கு அலங்காரம் இடும் மடவார் மயல் மூடி அவர்
தலைக்கு அலங்கார மலர் சூடுவார் நின்றனை வழுத்தார்
இலைக் கலங்கார் அ இயமன் வந்தால் என் இசைப்பர் வெள்ளி
மலைக்கு அலங்கார மணியே முக்கண் கொண்ட மா மருந்தே

223. புரிகின்ற வீட்டு அகம் போந்து அடிபட்டுப் புறங்கடையில்
திரிகின்ற நாய்க்கும் சிரிப்பாம் என் பாவிச் சிறு பிழைப்பைச்
சொரிகின்ற புண்ணில் கனல் இடல் போல் எணும்-தோறும் நெஞ்சம்
எரிகின்றது என் செய்குவேன் பிறை வார் சடை என் அமுதே

224. மனக் கேதம் மாற்றும் மருந்தே பொது ஒளிர் மாணிக்கமே
கனக் கேது உற என் கருத்து அறியாமல் கழறுகின்ற
தனக் கேளர்-பால் சென்று அடியேன் இதயம் தளர்வது எல்லாம்
நினக்கே தெரிந்தது எனக்கே அருள நினைந்து அருளே

225. மோகம் கலந்த மனத்தேன் துயரங்கள் முற்றும் அற்றுத்
தேகம் கலந்த பவம் தீர்க்கும் நின் பதம் சிந்திக்கும் நாள்
போகம் கலந்த திரு_நாள் மலை அற்புதப் பசும்_தேன்
பாகம் கலந்த செம்பாலே நுதல்_கண் பரஞ்சுடரே

226. கோல் ஒன்று கண்ட இறை_மகன் வாழ்வினும் கோடி பங்கு
மேல் ஒன்று கண்டனம் நெஞ்சே என் சொல்லை விரும்பு இனி அஞ்
சேல் ஒன்று கண்ட_மணியான் வரைப் பசும் தேன் கலந்த
பால் ஒன்று கண்ட கண் கொண்டு உயர் வாழ்வு பலித்ததுவே

227. புலை அளவோ எனும் நெஞ்சகனேன் துயர்ப் போகம் எட்டு
மலை அளவோ இந்த மண் அளவோ வந்த வான் அளவோ
அலை அளவோ அன்று மன்றுள் நின்று ஓங்கும் அரு_மருந்தே
இலை அளவோ எனும் தேவே அறிந்தும் இரங்கிலையே

228. கல் என்று வல் என்று மின்னார் புளகக் கன தனத்தைச்
சொல் என்று சொல்லும் முன் சொல்லும் அந்தோ நின் துணை அடி-கண்
நில் என்று பல்ல நிகழ்த்தினும் என் மனம் நிற்பது அன்றே
அல் என்று வெல் களம் கொண்டோய் என் செய்வது அறிந்திலனே

229. கள் ஆடிய கொன்றைச் செஞ்சடையோய் நல் கனக மன்றின்
உள் ஆடிய மலர்ச் சேவடியோய் இ உலகியல்-கண்
எள் ஆடிய செக்கு இடைப்படல் போல் துன்பிடை இளைத்துத்
தள்ளாடிய நடை கொண்டேற்கு நல் நடை தந்தருளே

230. மருக் கா மலர்க் குழல் மின்னார் மயல் சண்டமாருதத்தால்
இருக்காது உழலும் என் ஏழை நெஞ்சே இ இடும்பையிலே
செருக்காது உருகிச் சிவாயநம எனத் தேர்ந்து அன்பினால்
ஒரு கால் உரைக்கில் பெருக்காகும் நல் இன்பம் ஓங்கிடுமே

231. மதிக் கண்ணி வேணிப் பெருந்தகையே நின் மலர்_அடிக்குத்
துதி_கண்ணி சூட்டும் மெய்த் தொண்டரில் சேர்ந்து நின் தூய ஒற்றிப்
பதிக்கு அண்ணி நின்னைப் பணிந்து ஏத்தி உள்ளம் பரவசமாக்
கதிக் கண்ணி வாழும்படி அருளாய் என் கருத்து இதுவே

232. இரை ஏற்று துன்பக் குடும்ப விகார இருள்_கடலில்
புரை ஏற்று நெஞ்சம் புலர்ந்து நின்றேனைப் பொருட்படுத்திக்
கரையேற்றவேண்டும் என் கண்ணே பவத்தைக் கடி மருந்தே
திரை ஏற்று செம் சடைத் தேவே அமரர் சிகாமணியே