Vathanaik Kalivu Vallalar Song

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. பொழுது விடிந்தது இனிச் சிறிதும் பொறுத்து முடியேன் என நின்றே
அழுது விழிகள் நீர் துளும்பக் கூவிக்கூவி அயர்கின்றேன்
பழுது தவிர்க்கும் திரு_செவிக்குள் பட்டது இலையோ பல காலும்
உழுது களைத்த மாடு_அனையேன் துணை வேறு அறியேன் உடையானே.

2. உடையாய் திரு அம்பலத்து ஆடல் ஒருவா ஒருவா உலவாத
கொடையாய் என நான் நின்றனையே கூவிக்கூவி அயர்கின்றேன்
தடையாயின தீர்த்து அருளாதே தாழ்க்கில் அழகோ புலை நாயில்
கடையாய்த் திரிந்தேன் கலங்குதல் சம்மதமோ கருணைக் கருத்தினுக்கே.

3. கருணைக் கருத்து மலர்ந்து எனது கலக்கம் அனைத்தும் தவிர்த்தே இத்
தருணத்து அருளாவிடில் அடியேன் தரியேன் தளர்வேன் தளர்வது-தான்
அருணச் சுடரே நின் அருளுக்கு அழகோ அழகு என்று இருப்பாயேல்
தெருள் நல் பதம் சார் அன்பர் எலாம் சிரிப்பார் நானும் திகைப்பேனே.

4. திகைப்பார் திகைக்க நான் சிறிதும் திகையேன் என நின் திரு_அடிக்கே
வகைப் பா_மாலை சூட்டுகின்றேன் மற்றொன்று அறியேன் சிறியேற்குத்
தகைப் பாரிடை இத் தருணத்தே தாராய் எனிலோ பிறர் எல்லாம்
நகைப்பார் நகைக்க உடம்பினை வைத்திருத்தல் அழகோ நாயகனே.

5. நாயில் கடையேன் கலக்கம் எலாம் தவிர்த்து நினது நல் அருளை
ஈயில் கருணைப் பெரும் கடலே என்னே கெடுவது இயற்கையிலே
தாயில் பெரிதும் தயவு_உடையான் குற்றம் புரிந்தோன்-தன்னையும் ஓர்
சேயில் கருதி அணைத்தான் என்று உரைப்பார் உனை-தான் தெரிந்தோரே.

6. தெரிந்த பெரியர்க்கு அருள் புரிதல் சிறப்பு என்று உரைத்த தெய்வ மறை
திரிந்த சிறியர்க்கு அருள் புரிதல் சிறப்பில்_சிறப்பு என்று உரைத்தனவே
புரிந்து அ மறையைப் புகன்றவனும் நீயே என்றால் புண்ணியனே
விரிந்த மனத்துச் சிறியேனுக்கு இரங்கி அருளல் வேண்டாவோ.

7. வேண்டார் உளரோ நின் அருளை மேலோர் அன்றிக் கீழோரும்
ஈண்டு ஆர்வதற்கு வேண்டினரால் இன்று புதிதோ யான் வேண்டல்
தூண்டா விளக்கே திரு_பொதுவில் சோதி மணியே ஆறொடுமூன்று
ஆண்டு ஆவதிலே முன் என்னை ஆண்டாய் கருணை அளித்து அருளே.

8. அருளே வடிவாம் அரசே நீ அருளாவிடில் இ அடியேனுக்கு
இருளே தொலைய அருள் அளிப்பார் எவரே எல்லாம்_வல்லோய் நின்
பொருள் ஏய் வடிவில் கலை ஒன்றே புறத்தும் அகத்தும் புணர்ந்து எங்கும்
தெருளேயுற எத் தலைவருக்கும் சிறந்த அருளாய்த் திகழ்வதுவே.

9. திகழ்ந்து ஆர்கின்ற திரு_பொதுவில் சிவமே நின்னைத் தெரிந்துகொண்டு
புகழ்ந்தார்-தம்மைப் பொறுத்திடவும் புன்மை அறிவால் பொய் உரைத்தே
இகழ்ந்தேன்-தனைக் கீழ் வீழ்த்திடவும் என்னே புவிக்கு இங்கு இசைத்திலை நீ
அகழ்ந்தார்-தமையும் பொறுக்க என அமைத்தாய் எல்லாம் அமைத்தாயே.

10. எல்லாம் வகுத்தாய் எனக்கு அருளில் யாரே தடுப்பார் எல்லாம் செய்
வல்லான் வகுத்த வண்ணம் என மகிழ்வார் என் கண்மணியே என்
சொல்லானவையும் அணிந்துகொண்ட துரையே சோதித் திரு_பொதுவில்
நல்லாய் கருணை நடத்து அரசே தருணம் இது நீ நயந்து அருளே.

11. நயந்த கருணை நடத்து அரசே ஞான அமுதே நல்லோர்கள்
வியந்த மணியே மெய் அறிவாம் விளக்கே என்னை விதித்தோனே
கயந்த மனத்தேன் எனினும் மிகக் கலங்கி நரகக் கடும் கடையில்
பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் அழகோ கடைக்கண் பார்த்து அருளே.

12. பார்த்தார் இரங்கச் சிறியேன் நான் பாவி மனத்தால் பட்ட துயர்
தீர்த்தாய் அ நாள் அது தொடங்கித் தெய்வம் துணை என்று இருக்கின்றேன்
சேர்த்தார் உலகில் இ நாளில் சிறியேன்-தனை வெம் துயர்ப் பாவி
ஈர்த்தால் அது கண்டு இருப்பதுவோ கருணைக்கு அழகு இங்கு எந்தாயே.

13. தாயே எனை-தான் தந்தவனே தலைவா ஞான சபாபதியே
பேயேன் செய்த பெரும் குற்றம் பொறுத்து ஆட்கொண்ட பெரியோனே
நீயே இ நாள் முகம்_அறியார் நிலையில் இருந்தால் நீடு உலகில்
நாயே_அனையேன் எவர் துணை என்று எங்கே புகுவேன் நவிலாயே.

14. ஆயேன் வேதாகமங்களை நன்கு அறியேன் சிறியேன் அவலம் மிகும்
பேயேன் எனினும் வலிந்து என்னைப் பெற்ற கருணைப் பெருமானே
நீயே அருள நினைத்தாயேல் எல்லா நலமும் நிரம்புவன் நான்
காயே எனினும் கனி ஆகும் அன்றே நினது கருணைக்கே.

15. கருணாநிதியே என் இரண்டு கண்ணே கண்ணில் கலந்து ஒளிரும்
தெருள் நாடு ஒளியே வெளியே மெய்ச் சிவமே சித்த சிகாமணியே
இருள் நாடு உலகில் அறிவு இன்றி இருக்கத் தரியேன் இது தருணம்
தருணா அடியேற்கு அருள் சோதி தருவாய் என் முன் வருவாயே.

16. வருவாய் என் கண்மணி நீ என் மனத்தில் குறித்த வண்ணம் எலாம்
தருவாய் தருணம் இதுவே மெய்த் தலைவா ஞான சபாபதியே
உருவாய் சிறிது தாழ்க்கில் உயிர் ஒருவும் உரைத்தேன் என்னுடை வாய்
இரு வாய் அல நின் திரு_அடிப் பாட்டு இசைக்கும் ஒரு வாய் இசைத்தேனே.

17. தேனே திரு_சிற்றம்பலத்தில் தெள் ஆர் அமுதே சிவ ஞான
வானே ஞான சித்த சிகாமணியே என் கண்மணியே என்
ஊனே புகுந்து என் உளம் கலந்த உடையாய் அடியேன் உவந்திட நீ
தானே மகிழ்ந்து தந்தாய் இத் தருணம் கைம்மாறு அறியேனே.

18. அறியேன் சிறியேன் செய்த பிழை அனைத்தும் பொறுத்தாய் அருள் சோதிக்
குறியே குணமே பெற என்னைக் குறிக்கொண்டு அளித்தாய் சன்மார்க்க
நெறியே விளங்க எனைக் கலந்து நிறைந்தாய் நின்னை ஒரு கணமும்
பிறியேன் பிறியேன் இறவாமை பெற்றேன் உற்றேன் பெரும் சுகமே.

19. சுகமே நிரம்பப் பெரும் கருணைத் தொட்டில் இடத்தே எனை அமர்த்தி
அகமே விளங்கத் திரு_அருள் ஆர் அமுதம் அளித்தே அணைத்து அருளி
முகமே மலர்த்திச் சித்தி நிலை முழுதும் கொடுத்து மூவாமல்
சகம் மேல் இருக்கப் புரிந்தாயே தாயே என்னைத் தந்தாயே.

20. தந்தாய் இன்றும் தருகின்றாய் தருவாய் மேலும் தனித் தலைமை
எந்தாய் நினது பெரும் கருணை என் என்று உரைப்பேன் இ உலகில்
சிந்து ஆகுலம் தீர்த்து அருள் என நான் சிறிதே கூவும் முன் என்-பால்
வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் எனது பொழுது வான் பொழுதே.