திருவருட்பா
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
1. வாங்கு வில் நுதல் மங்கையர் விழியால்
மயங்கி வஞ்சர்-பால் வருந்தி நாள்-தோறும்
ஏங்குகின்றதில் என் பயன் கண்டாய்
எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
தேன் குலாவு செங்கரும்பினும் இனிதாய்த்
தித்தித்து அன்பர்-தம் சித்தத்துள் ஊறி
ஓங்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.
2. தவம்-அது இன்றி வன் மங்கையர் முயக்கால்
தருமம் இன்று வஞ்சகர் கடும் சார்வால்
இவ்வகையால் மிக வருந்துறில் என்னாம்
எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
பவம்-அது ஓட்டி நல் ஆனந்த உருவாம்
பாங்கு காட்டி நல் பதம் தரும் அடியார்
உவகை ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.
3. மின்னும் நுண் இடைப் பெண் பெரும் பேய்கள்
வெய்ய நீர் குழி விழுந்தது போக
இன்னும் வீழ்கலை உனக்கு ஒன்று சொல்வேன்
எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
பொன் உலாவிய பூ_உடையானும்
புகழ் உலாவிய பூ_உடையானும்
உன்னும் ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.
4. பொன்றும் வாழ்க்கையை நிலை என நினைந்தே
புலைய மங்கையர் புழு நெறி அளற்றில்
என்றும் வீழ்ந்து உழல் மடமையை விடுத்தே
எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
துன்று தீம் பலாச்சுளையினும் இனிப்பாய்த்
தொண்டர்-தங்கள் நாச் சுவை பெற ஊறி
ஒன்றும் ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.
5. வரைக்கு நேர் முலை மங்கையர் மயலால்
மயங்கி வஞ்சரால் வருத்தமுற்று அஞராம்
இரைக்கும் மாக் கடலிடை விழுந்து அயரேல்
எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
கரைக்கும் தெள்ளிய அமுதமோ தேனோ
கனி-கொலோ எனக் கனிவுடன் உயர்ந்தோர்
உரைக்கும் ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.
6. வாதுசெய் மடவார்-தமை விழைந்தாய்
மறலி வந்து உனை வா என அழைக்கில்
ஏது செய்வையோ ஏழை நீ அந்தோ
எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
போது வைகிய நான்முகன் மகவான்
புணரி வைகிய பூ_மகள் கொழுநன்
ஓதும் ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.
7. நண்ணும் மங்கையர் புழு மல_குழியில்
நாளும் வீழ்வுற்று நலிந்திடேல் நிதமாய்
எண்ணும் என் மொழி குரு மொழி ஆக
எண்ணி ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
பண்ணும் இன் சுவை அமுதினும் இனிதாய்ப்
பத்தர் நாள்-தொறும் சித்தம் உள் ஊற
உண்ணும் ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.
8. பந்த வண்ணமாம் மடந்தையர் மயக்கால்
பசை இல் நெஞ்சரால் பரிவுறுகின்றாய்
எந்தவண்ணம் நீ உய் வணம் அந்தோ
எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
சந்தமாம் புகழ் அடியரில் கூடிச்
சனனம் என்னும் ஓர் சாகரம் நீந்தி
உந்த ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.
9. மட்டு இல் மங்கையர் கொங்கையை விழைந்தாய்
மட்டிலாததோர் வன் துயர் அடைந்தாய்
எட்டி_அன்னர்-பால் இரந்து அலைகின்றாய்
எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
தட்டு இலாத நல் தவத்தவர் வானோர்
சார்ந்தும் காண்கிலாத் தற்பரம் பொருளை
ஒட்டி ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.
10. நிலவும் ஒண் மதி_முகத்தியர்க்கு உழன்றாய்
நீச நெஞ்சர்-தம் நெடும் கடை-தனில் போய்
இலவு காத்தனை என்னை நின் மதியோ
எழில் கொள் ஒற்றியூர்க்கு என்னுடன் போந்து
பலவும் ஆய்ந்து நன்கு உண்மையை உணர்ந்த
பத்தர் உள்ளகப் பதுமங்கள்-தோறும்
உலவும் ஓம் சிவ சண்முக சிவ ஓம்
ஓம் சிவாய என்று உன்னுதி மனனே.