Thirukathavan Thirathal  vallalar songs

திருவருட்பா

ஆறாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

1. திரு_கதவம் திறவாயோ திரைகள் எலாம் தவிர்த்தே
திரு_அருளாம் பெரும் சோதித் திரு_உருக் காட்டாயோ
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு உளமும்
ஒளி மயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ
கருக் கருதாத் தனி வடிவோய் நின்னை என்னுள் கலந்தே
கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச்செய்யாயோ
செருக் கருதாதவர்க்கு அருளும் சித்திபுரத்து அரசே
சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

2. மணிக் கதவம் திறவாயோ மறைப்பை எலாம் தவிர்த்தே
மாற்று அறியாப் பொன்னே நின் வடிவு-அது காட்டாயோ
கணிக்க அறியாப் பெரு நிலையில் என்னொடு நீ கலந்தே
கரை_கடந்த பெரும் போகம் கண்டிடச் செய்யாயோ
தணிக்க அறியாக் காதல் மிகப் பெருகுகின்றது அரசே
தாங்க முடியாது இனி என் தனித் தலைமைப் பதியே
திணிக் கலை ஆதிய எல்லாம் பணிக்க வல்ல சிவமே
சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

3. உரை கடந்த திரு_அருள் பேர்_ஒளி வடிவைக் கலந்தே
உவட்டாத பெரும் போகம் ஓங்கியுறும் பொருட்டே
இரை கடந்து என் உள்ளகத்தே எழுந்து பொங்கித் ததும்பி
என் காதல் பெரு வெள்ளம் என்னை முற்றும் விழுங்கிக்
கரை_கடந்து போனது இனித் தாங்க முடியாது
கண்டு கொள்வாய் நீயே என் கருத்தின் வண்ணம் அரசே
திரை கடந்த குரு மணியே சிவ ஞான மணியே
சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

4. உன்-புடை நான் பிறர் போலே உடுக்க விழைந்தேனோ
உண்ண விழைந்தேனோ வேறு உடைமை விழைந்தேனோ
அன்பு_உடையாய் என்றனை நீ அணைந்திடவே விழைந்தேன்
அந்தோ என் ஆசை வெள்ளம் அணை_கடந்தது அரசே
என்-புடை வந்து அணைக என இயம்புகின்றேன் உலகோர்
என் சொலினும் சொல்லுக என் இலச்சை எலாம் ஒழித்தேன்
தென் புடை ஓர் முகம் நோக்கித் திரு_பொது நிற்கின்றோய்
சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

5. இறந்திறந்தே இளைத்தது எலாம் போதும் இந்த உடம்பே
இயற்கை உடம்பு ஆக அருள் இன் அமுதம் அளித்து என்
புறம் தழுவி அகம் புணர்ந்தே கலந்து கொண்டு எந்நாளும்
பூரணமாம் சிவ போகம் பொங்கியிட விழைந்தேன்
பிறந்து இறந்து போய்க் கதியைப் பெற நினைந்தே மாந்த
பேதையர் போல் எனை நினையேல் பெரிய திரு_கதவம்
திறந்து அருளி அணைந்திடுவாய் சிற்சபை வாழ் அரசே
சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

6. பொய்_உடையார் விழைகின்ற புணர்ச்சி விழைந்தேனோ
பூண விழைந்தேனோ வான் காண விழைந்தேனோ
மெய்_உடையாய் என்னொடு நீ விளையாட விழைந்தேன்
விளையாட்டு என்பது ஞானம் விளையும் விளையாட்டே
பை உடைப் பாம்பு_அனையரொடும் ஆடுகின்றோய் எனது
பண்பு அறிந்தே நண்பு வைத்த பண்பு_உடையோய் இன்னே
செய் உடை என்னொடு கூடி ஆட எழுந்தருள்வாய்
சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

7. கூறுகின்ற சமயம் எலாம் மதங்கள் எலாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டு அறியார் வீணே
நீறுகின்றார் மண் ஆகி நாறுகின்றார் அவர் போல்
நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலை மேல்
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே
இலங்கு திரு_கதவு திறந்து இன் அமுதம் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தி உறப் புரிவாய்
சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

8. வேத நெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள்
விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே
ஏதம் அற உணர்ந்தனன் வீண் போது கழிப்பதற்கு ஓர்
எள்ளளவும் எண்ணம்_இலேன் என்னொடு நீ புணர்ந்தே
தீது அறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய்
சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

9. கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும்
கண்மூடி_வழக்கம் எலாம் மண்மூடிப்போக
மலைவு அறு சன்மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம்
வாழ்ந்து ஓங்கக் கருதி அருள் வழங்கினை என்றனக்கே
உலைவு அறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே
உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை_உரைத்தவனே
சிலை நிகர் வன் மனம்_கரைத்துத் திரு_அமுதம் அளித்தோய்
சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.

10. திருத் தகும் ஓர் தருணம் இதில் திரு_கதவம் திறந்தே
திரு_அருள் பேர்_ஒளி காட்டித் திரு_அமுதம் ஊட்டிக்
கருத்து மகிழ்ந்து என் உடம்பில் கலந்து உளத்தில் கலந்து
கனிந்து உயிரில் கலந்து அறிவில் கலந்து உலகம் அனைத்தும்
உருத்தகவே அடங்குகின்ற ஊழி-தொறும் பிரியாது
ஒன்று ஆகிக் கால வரை உரைப்ப எலாம் கடந்தே
திருத்தியொடு விளங்கி அருள் ஆடல் செய வேண்டும்
சித்த சிகாமணியே என் திரு_நட நாயகனே.